செவ்வாய், 9 ஜூலை, 2019

மூலவர் : திருமாகறலீஸ்வரர், உடும்பீசர்
உற்சவர் : சோமாஸ்கந்தர், நடராஜர்
அம்மன் : திரிபுவனநாயகி
தல விருட்சம் : எலுமிச்சை
தீர்த்தம் : அக்னி
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருமாகறல்
ஊர் : திருமாகறல்

மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகை யால்இனிது இறைஞ்சி இமை யோரிலெழு மாகறலுளான்
மின்னை விரி புன்சடையின் மேல்மலர்கள் கங்கையொடு திங்களெனவே
உன்னுமவர் தொல்வினைக ளொல்கவுயர் வானுலக மேறலெளிதே -திருஞானசம்பந்தர்!

இராசேந்திரசோழனுக்கு, இறைவன் பொன் உடும்பாகத் (மாகறம் - உடும்பு)தோன்றி, அவன் துரத்த, புற்றில் ஓடி ஒளிந்து பின் சிவலிங்க வடிவமாக வெளிப்பட்ட தலம். இங்கு திங்கள் கிழமை தரிசனம் விசேஷமாக சொல்லப்படுகிறது. இத்தலத்தின் அபிஷேக தீர்த்தத்தை சாப்பிட்டால் ரத்தம் சம்பந்தப்பட்டவை, எலும்பு முறிவு, கண்பார்வை குறைவு, பக்கவாதம் ஆகிய நோய்களின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை. பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும், கிரக தோஷம் விலகவும் பூஜை செய்யலாம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு அங்க பிரதட்சணம் செய்கிறார்கள்.
சம்பந்தரின் இப்பதிகம் 'வினை நீக்கும் பதிகம்' என்னும் சிறப்புடையது. இக்கோயிலில் யானைமீது முருகன் அமர்ந்திருக்கும் அபூர்வ திருமேனி அழகுறக் காட்சித் தருவதைக் காணலாம்.

திருமுறைத்தலங்கள்
தொண்டை நாட்டுத் தலம்

மாகறல்.

தொண்டை நாட்டுத் தலம்.

காஞ்சிபுரத்திலிருந்து செல்லாம். காஞ்சிபுரம் - உத்திரமேரூர் (வழி) ஓரிக்கை - பேருந்துப் பாதையில் உள்ள தலம். காஞ்சிபுரத்திலிருந்து இவ்வூர் வழியாக உத்திரமேரூருக்குப் பேருந்து செல்கிறது. செய்யாற்றின் கரையில் உள்ள ஊர். சாலை ஓரத்திலியே கோயில் உள்ளது. சிறிய அழகான கோயில். நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இந்திரன் வழிபட்ட தலம். இராசேந்திரசோழனுக்கு, இறைவன் பொன் உடும்பாகத் தோன்றி, அவன் துரத்த, புற்றில் ஓடி ஒளிந்து பின் சிவலிங்க வடிவமாக வெளிப்பட்ட தலம். உள்ளது. சுயம்பு மூர்த்தி. ஆவுடையார்தான் கட்டப்பட்டது.

இறைவன் - திருமாகறலீஸ்வரர்.

இறைவி - திரிபுவன நாயகி, புவன நாயகி,

தீர்த்தம் - அக்கினி தீர்த்தம்.

தலமரம் - எலுமிச்சை.

இறைவனுக்கு வழங்கப்படும் வேறுபெயர்கள், அடைக்கலங்காத்த நாதர், மகம் வாழ்வித்தவர், உடும்பீசர், பாரத்தழும்பர்,புற்றிடங்கொண்டார், நிலையிட்ட நாதர், மங்கலங் காத்தவர், பரிந்து காத்தவர், அகத்தீஸ்வரர் முதலியன. மாகறம் - உடும்பு. 'மாகறலீஸ்வரர்' என்ற பெயரே மக்கள் வழக்கில் உள்ளது. மாகறன், மலையன் என்னும் இரு அசுரர்கள் வழிபட்ட தலம். இத்தலத்திற்குரிய பல விநாயகர், பொய்யா விநாயகர் - ஊருக்கப்பால் செய்யாற்றின் கரையில் உள்ள மண்டபத்தில் இவர் உள்ளார்.

இங்குத் திங்கட்கிழமை தரிசனம் விசேஷமாகக் சொல்லப்படுகிறது. மக்கட்பேறு வேண்டுவோர் இங்கு அங்கப்பிரதட்சணம் செய்யும் வழக்கம் முன் காலத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

சம்பந்தர் பாடல் பெற்றது. இப்பதிகம் 'வினை நீக்கும் பதிகம்' என்னும் சிறப்புடையது.

இத்தலம் தொடர்பாகக் கிடைத்த செவி வழிச்செய்தி வருமாறு, இராசேந்திர சோழ மன்னனுக்கு நாடொறும் இங்கிருந்து, கோயிலில் இருந்த பலா மரத்திலிருந்து பலாப்பழம் ஒன்று அனுப்பப்பட்டு, அது வழியில் தில்லையில் நடராசப் பெருமானுக்கு நிவேதனம் செய்யப்பட்டுப் பின்பு மன்னனுக்குப் பிரசாதமாகத் தரப்பட்டு வந்தது. காலப்போக்கில் இக்கோயிலில் பணிசெய்தோர் இம்மரத்தைத் தீயிட்டு அழித்துவிட்டனர்.

பலாப்பழம் வாராதது அறிந்த மன்னன் ஆள் அனுப்பிச் செய்தியறிந்தான், அவர்களைத் தண்டிக்க எண்ணினான். ஆனால் கோயிற் பணியாளரைத் தண்டித்தலாகாது என்றெண்ணி, அவர்கள் அனைவரையும் இரவோடு இரவாக ஊரைவிட்டு அழைத்துச் சென்று, மறுநாள் பொழுது விடியும் இடத்தில் விட்டுவிடுமாறு உத்திரவிட்டான். அவ்வாறே அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு விடப்பட்ட ஊர் (திருத்தணிக்கும் திருவள்ளுருக்கும் இடையில்) 'விடிமாகறல்' என்று வழங்கப்படுகிறது.

கோயிலுக்கு செல்லும், புதியதாகக் கட்டப்பட்டுள்ள ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கிழக்கு நோக்கியிருந்து வரவேற்கிறது. உட்புகுந்தால் விசாலமான இடம். கோயில் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. துவஜஸ்தம்பம் - அதன் முன்னால் உயர்ந்த பலிபீடம். பலிபீடத்தின் முன் விநயாகர் காட்சி தருகிறார். ஆம், எழுந்தருளும் நாற்கால் மண்டபம் உள்ளது. வெளிப்பிரகாரம் விசாலமானது. வலமாக வந்து படிக்கட்டுக்களையேறி, விநாயகரையும், கடந்து உட்புகுந்தால் நேரே மூலவர் காட்சி தருகிறார். வலமா வரத்தொடங்கும் நாம் இடப்பால் உள்ள ஆறுமுகப்பெருமானை - மயிலேறிய மாணிக்கத்தைத் தரிசிக்கலாம். பக்கத்தில் நால்வர் பெருமக்கள் தனியே புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

இப்பிரதிஷ்டை, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன் விழா ஆண்டுப் பணிகளுள் இடம் பெற்று 1985 மார்ச்சில் நிறைவேற்றப்பட்டுக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது .

வலமாக வரும் நாம் கருவறையிலுள்ள கோஷ்டமூர்த்தங்களை - விநாயகர், சிறிய தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை முதலிய திருமேனிகைளத் தரிசித்தவாறே வலம் வரலாம்.

இடப்பால் வரிசையாக அறுபத்துமூவர் திருமேனிகள் விநாயகர் சந்நிதி, சுப்பிரமணியர் சந்நிதிகள். தலமரம் - எலுமிச்சை, தழைத்து உள்ளது.

ஆலய விமானம் 'கஜப்பிரஷ்ட' அமைப்புடையது. நடராசர் சந்நிதியைத் தரிசித்து எதிர்ப்புறம் திரும்பினார் நவக்கிரக சந்நிதி, யானைமீது முருகன் அமர்ந்திருக்கும் ஆபூர்வ திருமேனி அழகுறக் காட்சிதருகின்றது. பள்ளியறை கடந்து, பைரவரை வணங்கி, அம்பாளை வலமாக வந்து படியேறிச் சென்றால் மூலவரைத் தரிசிக்கலாம். சதுர பீடம். உடும்பு வால் போன்ற அமைப்பில் - சிறுத்த வடிவில் சிவலிங்கம்.

உற்சவத் திருமேனிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அம்பாள் சந்நிதி - நின்ற திருக்கோலம். திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடத்துக் கட்டளை 'சிவசிவ ஒலிமண்டபம்' உள்ளது. திரமுறைப் பாராயணக் கட்டளை நித்தம் காலை மாலை நடைபெறுகிறது. கோயில் உள்ளேயும், இக்கோயிற்பதிகம் சலவைக்கல்லில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தினாரால் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளது. வெளிப் பிரகாரத்தில் திருமண மண்டபம், வாகன மண்டபம், யாகசாலை முதலியவைகள் உள்ளன.

ஆண்டுதோறும் மாசி மகத்தில் 10 நாள்களுக்குப் பெருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. இதன் பரம்பரை அறங்காவலராக இருந்துவருபவர் வேலூர் பாங்கர், திரு. எம்.டி. நடராச முதலியார் அவர்கள். சேலம் சுப்பராயப் பிள்ளை என்பவர்தம் உடலில் இடுப்பின் கீழ் செயலற்றுப் போக எல்லாவதி மருத்துவமும் செய்தும் பயனின்றிப் போக, திருமுறையில் கயிறுசார்த்திப் பார்த்து, இத்தலப்பதிகம் வர, இங்கு வந்து தங்கி, நாடொறும் இறைவனை வழிபட்டுத் தலப் பதிகத்தைப் பாராயணம் செய்து சிலகாலம் வாழ்ந்து இப்பெருமானருளால் உடல் பூரணகுணம் பெற்றுத் திரும்பினார். இந்நிகழ்ச்சி அண்மைக் காலத்தில் நடைபெற்றதாகும். இப்பகுதியில் உள்ள சமய அன்பர்கள் அனைவரும் இதை அறிவர்.

1971ல் கும்பாபிஷேகம் நடத்தப் பெற்றுள்ளது. கல்வெட்டில் இத்தலம் சயங்கொண்ட சோழமண்டலத்துப் பொற்கோட்டத்து மாகறல் நாட்டு மாகறல் என்று குறிக்கப்படுகிறது. குலோத்துங்க சோழன், சுந்தரபாண்டியன், விசயகண்ட கோபாலதேவர் காலத்திய கல்வெட்டுக்கள் உள. கோயிலுக்கு நிலங்கள் விடப்பட்ட செய்திகள் இவற்றில் குறிக்கப்பட்டுகின்றன.

"விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம்

மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடு பொழில் மாகறல் உளான்

கொங்குவிரி கொன்றையடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்

செங்கண் விடை அண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள்

தீருமுடனே."

"கடை கொள்நெடு மாடமிகு ஓங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்

அடையும் வகையாற் பரவிஅரனை அடிகூடு (ம்) சம்பந்தன் உரையால் மடைகொள் புனலோடு வயல் கூடுபொழில் மாகறலு ளான் அடியையே

உடையதமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஓல்குமுடனே."

(சம்பந்தர்)

பொய்யா விநாயகர் துதி

வெய்யாக் கதிரவன்முன் இருள்போல வினையகற்றும்

கையானே யான்தொழ முன்நின்று காத்தருள் கற்பகமே

செய்யாற்றின் வடபால் இருக்கின்ற செங்கண் மால்மருகா

பொய்யா விநாயகனே திருமாகறல் புண்ணியனே

(தனிப்பாடல்)

-"தோயுமன

யோகறலிலாத் தவத்தோருன்ன விளங்குதிரு

மாகறலில் அன்பர் அபிமானமே"

(அருட்பா)

அஞ்சல் முகவரி

அ.மி. மாகறலீஸ்வரர் திருக்கோயில்

மாகறல் கிராமம் , அஞ்சல் - 631 603. (வழி) காஞ்சிபுரம்.

உத்திரமேரூர் மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம்.

கருத்துகள் இல்லை: