செவ்வாய், 9 ஜூலை, 2019

சோமப்ப சுவாமிகள்{பகுதி-2}

சோமப்பா சுவாமிகள் 1968 ல் மகா சமாதி அடையும் வரை இந்த அன்பான கவனிப்பை இருளப்ப கோனாரும் அவரது வாரிசுகளும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.

ஒரே காலத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளும் சோமப்பா சுவாமிகளும் திருக்கூடல்மலையில் இருந்து ஆன்மிகப் பணியாற்றி பக்தர்களைத் தங்கள் பக்கம் ஈர்த்தர்கள். மாயாண்டி சுவாமிகளின் காலத்துக்குப் பிறகு அவர் விட்ட இறைப் பணிகளை சோமப்பா சுவாமிகள் தொடர்ந்தார். திருக்கூடல் மலையின் அறிவிக்கப்படாத ஒரு வாட்ச்மேன் போல் மலை எங்கும் திரிந்து உலவுவார் சோமப்பா. ரொம்பவும் எளிமையாக இருப்பார். இரவு நேரங்களில் மாயாண்டி சுவாமிகளின் சமாதிக்கு அருகில் படுத்திருப்பார். பல நேரங்களில் மலையின் பிரமாண்ட பாறைகளிலோ மரங்களின் அடிப் பாகத்திலோ தோதாகக் கால்களை நீட்டிப் படுத்திருப்பார். சில நேரங்களில் தனக்குத் தானே ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்.

சோமப்பாவைப் பொறுத்தவரை படுத்தல் என்பது ஒரு செயல். தூங்க மாட்டார். ஒரு பாயை விரித்து அதில் படுத்திருப்பார். பாய் போட்டு சோமப்பா படுத்திருக்கும் இடத்தைச் சுற்றி கரையான்கள் கூட்டம் கூட்டமாகச் சுற்றிக் கொண்டே இருக்கும். ஆனால் இவர் படுத்துக் கொண்டிருக்கும் இடத்துக்குக் கரையான்கள் வரவே வராது. சோமப்பா தூங்கி எவரும் பார்த்ததில்லை அது போல் குளித்தோ மல ஜலம் கழித்தோ எவரும் பார்த்ததில்லை. விசேஷ நாட்கள் என்றால் மலைக்கு மேல் தண்டாயுத பாணி ஸ்வாமி கோயிலுக்கு போய் அந்த சந்நிதிக்கு அருகில் உடலைச் சுருக்கிப் படுத்துக்கொள்வார். மற்ற வேளைகளில் திருக்கூடல் மலையின் பிற பகுதிகளில் திரிவார். அவர் எங்கு போகிறார் என்ன செய்கிறார் என்பது எவருக்கும் தெரியாது. மலையில் தண்டாயுத பாணி ஸ்வாமியைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் வழியில் பாயில் அமர்ந்திருக்கும் சோமப்பா சுவாமிகளைக் கண்டு கையெடுத்துக் கும்பிட்டு வணங்குவர். அப்போது சோமப்பா சுவாமிகள் சோமப்பா இங்கே இல்லை. மலை மேல் கோயில்ல நிக்குது என்பார். என்னடாது... கண்ணுக்கு நேரே தரிசனம் தருகிறார். பிறகு சோமப்பா மலைக்கு மேலே இருக்கு என்கிறாரே... என்று குழம்பி அவரது பக்தர்கள் மலைக்கு மேலே போவார்கள். பொதுவாக எவரையும் சோமப்பா என்றே அழைத்துப் பழக்கப்பட்டவர் இந்த சித்த புருஷர் என்று  ஏற்கெனவே சொல்லி இருந்தோம். மலைக்கு மேல் குடி கொண்டிருக்கிற ஸ்ரீதண்டாயுத பாணி யையும் சோமப்பா என்பார். மாயாண்டி சுவாமிகளையும் சோமப்பா என்பார்.

நல்ல உள்ளத்தோடு தன்னைத் தரிசிக்க வரும் அன்பர்களிடம் இன்னருள் பொழிவார் சோமப்பா. தூய உள்ளத்துடன் வரும் ஏழை எளியவர்கள் தரும் பழங்கள் திண்பண்டங்கள் போன்றவற்றை ஆர்வத்துடன் சாப்பிட்டு. அவர்களுக்கு மிச்சம் மீதியைத் தருவார். சில வேளைகளில் அவர்களிடம் இருந்து பிடுங்கிக்கூடத் தின்பார் சோமப்பா. அவர்கள் கைகளில் வைத்திருக்கும் மாலைகளை சில நேரம் வெடுக்கெனப் பிடுங்கித் தன் கழுத்தில் போட்டுக்கொண்டு காட்சி கொடுப்பார். இதைக் கண்டு பரவசமாவார்கள் பக்தர்கள். ஆசி வழங்குவார் சோமப்பா. அதே வேளையில் உயர்ந்த அந்தஸ்திலும் பொறுப்பிலும் உள்ள சிலர் சோமப்பாவைத் தரிசிக்க மலர் மாலைகள் ஏராளமான பழங்கள் அடங்கிய தட்டுகளைக் கொண்டுவந்து சுவாமிகளின் முன்னால் வைப்பார்கள். அவர்கள் எத்தகையவர்கள் எதற்காகத் தன்னிடம் வந்திருக்கிறார்கள் என்பதை சோமப்பா அறியாமல் இருப்பாரா?சுவாமிகளை தாஜா செய்து தாங்கள் சில காரியம் சாதித்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்துடன் வந்த இவர்கள் கொண்டு வந்திருக்கும் தட்டுகளைக் காலால் எட்டி உதைப் பார் சோமப்பா. போ... இங்க நிக்கவே நிக்காதே... சோமப் பாவை ஏமாத்த நினைக்காதே... சோமப்பா ஏமாறாது... போயிடு என்று கோபமாகக் கூறிவிட்டு. அந்த இடத்தை விட்டு எங்கேனும் ஒடிப் போய் விடுவார். சோமப்பா சுவாமிகள் நிகழ்த்திய ஸித்து விளையாடல்கள் நிறைய உண்டு.

கட்டிக்குளத்தில் வசித்து வந்த ஆசிரியர் திருவாசகத்தின் உறவினர் பெயர் ராமு. இவருக்கு சோமப்பாவைக் கண்டால் ஏனோ பிடிக்காது. ஆனாலும் ராமுவின் மேல் சோமப்பாவுக்கு அளவு கடந்த  அன்பு உண்டு. ஒரு நாள் ராமுவை நெருங்கி அவரது வலக் கண்ணின் அருகே தன் வலக் கையைக் கொண்டு சென்று ஓங்கிக் குத்தட்டுமா? என்று கேட்டார். சுவாமிகள் அடிக்கடி தன்னிடம் இப்படி விளையாடுவார் என்பதால் ராமு இதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. ஆனால் அடுத்த சில நாட்களிலேயே ராமுவின் வலக் கண் ஓர் அறுவை சிகிச்சைக்கு உள்ளானது. இப்படி நடக்கப் போவதை முன்கூட்டியே குறிப்பால் உணர்த்துவார் சோமப்பா. பஜணைக்கார அம்மா என்று ஒருவர் வசித்து வந்தார். ஒரு நாள் அந்த அம்மாளைத் தேடி அவரது வீட்டுக்குப் போன சோமப்பா அந்த அம்மாவை அழைத்து உன்னைப் பூச்சி கடிக்கும். ஆபத்து சூழும் என்று சொல்லிவிட்டுப் போனார். சுவாமிகள் என்ன சொல்ல வருகிறார்? என்கிற குழப்பத்தில் எதுவும் புரியாமல் தவித்தார். பஜனைக்கார அம்மா. ஆனால் இதை அடுத்த ஒரு சில நாட்களில் பஜனைக்கார அம்மா பாம்பு கடித்து இறந்தே போனார். பூச்சி கடிக்கும் என்று சுவாமிகள் குறிப்பிட்டது பாம்பை.

மாயாண்டி சுவாமிகள் சமாதி ஆகிவிட்டதை (1930 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 11 ஆம் தேதி) அறிந்து எங்கிருந்தோ வந்து சேர்ந்தார். சோமப்பா மாயாண்டி சுவாமிகளின் திருமுகத்தை திருச்சமாதி வைப்பதற்கு முன் ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்கிற ஆவலில் எத்தனையோ பக்தர்கள் எங்கெங்கிருந்தோ வந்து குவிந்திருந்தனர். சமாதி நிலையை எய்து விட்ட சுவாமிகளின் திருமுகத்தையே வைத்த கண் வாங்காமல் வெகு நேரத்துக்குப் பார்த்துக் கொண்டிருந்தார் சோமப்பா. முகம் இறுகிப் போயிருந்த சோமப்பா திடீரென மலர்ந்தார். மாயாண்டி சுவாமிகள் இதழ்களில் ஒரு புன்னகை அரும்பியதை அப்போது சோமப்பா கவனித்து தான் இதற்குக் காரணம். இதை அடுத்து அங்கு நிலவிய நிசப்தத்தைக் கலைக்கும் வகையில் சோமப்பா சாகவில்லை. சோமப்பா சாக மாட்டான் என்று பெருங்குரல் எடுத்துக் கத்திக்கொண்டே மலைக்கு ஓடி விட்டார். அதாவது என் உடல் என்னை விட்டுப் பிரிந்தாலும் நான் என்றென்றும் உன்னுடனும் என் பக்தர்களுடன் இருந்து அருள் பாலிப்பேன் என்கிற செய்தியை சோமப்பா வாயிலாக நமக்கெல்லாம் உணர்த்தி இருக்கிறார் மாயாண்டி சுவாமிகள். சமாதி ஆன பிறகும் மாயாண்டி சுவாமிகள் அருளிய புன்னகை இதைத்தான் நமக்குச் சொல்கிறது. மாயாண்டி சுவாமிகளைப் போலவே தான் திருச்சமாதி ஆகும் தினத்தையும் நேரத்தையும் முன்கூட்டியே சொல்லி விட்டு தான் சோமப்பா சுவாமிகளும் சமாதி ஆனார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி இருந்து. இவரது திரு சமாதி நிகழ்வு நடந்தது. தூய உள்ளமும் நற்சிந்தனைகளும் இருப்பவர்களைத்தான் இன்றைக்கு சோமப்பா தன் ஜீவ சமாதிக்கு வரவழைத்து அருள் புரிகிறார். சித்தர்களை தரிசிப்பதில் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய திருச்சமாதி இது!

தலம்:திருப்பரங்குன்றம் காகபுசுண்டர் மலை.

சிறப்பு : சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதி(மற்றும் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் திருச்சமாதி)

இருப்பிடம் : மதுரை மாநகரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றத்தில் அமைந்திருக்கிறது காகபுசுண்டர் மலை.

செல்லும் வழி : மதுரையில் அமைந்திருக்கும் பெரியார் பேருந்து நிலையம். மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து திருப்பரங்குன்றத்துக்குப் பேருந்து வசதி அடிக்கடி உண்டு. திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லுரி நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டு அங்கிருந்து பத்து நிமிடங்கள் நடந்தால் காகபுசுண்டர் மலை வந்துவிடும்.

தொடர்புக்கு : செயலாளர்; சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம் திருக்கூடல் மலை என்கிற காகபுசுண்டர்மலை திருப்பரங்குன்றம்; மதுரை : 625 005.

கருத்துகள் இல்லை: