செவ்வாய், 9 ஜூலை, 2019

சோமப்ப சுவாமிகள்{பகுதி-1}

திருப்பரங்குன்றத்தில் காகபுசுண்டர் மலை எனப்படும் திருக்கூடல் மலையின் உச்சியில் பிரதான தெய்வமாக ஸ்ரீ தண்டாயுத பாணி பிரதிஷ்டை ஆகி உள்ளார். கீழே அதாவது அடிவாரத்தில் மாயாண்டி சுவாமிகளின் திருச்சமாதியையும் இன்ன பிற தெய்வங்களின் சந்நிதிகளையும் தரிசிக்கலாம்.

மாயாண்டி சுவாமிகள் திருச்சமாதியை வணங்கி விட்டு தண்டாயுதபாணி ஸ்வாமி சந்நிதியைத் தரிசிக்க திருக்கூடல் மலையில் அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் மீது ஏறி நடந்தால் முதலில் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் தரிசனம். இதை அடுத்துச் சிறிது தொலைவு நடந்தால் சோமப்பா சுவாமிகளின் ஜீவ சமாதியைத் தரிசிக்கலாம். மிக அற்புதமான சித்த புருஷர் என்று மாயாண்டி சுவாமிகளால் அடையாளம் காணப்பட்டவர் சோமப்பா சுவாமிகள். தரை மட்டத்தில் இருந்து சுமார் ஐம்பதடி உயரத்தில் சோமப்பாவின் சமாதி அமைந்துள்ளது. அமைதி தவழும் ரம்மியமான சூழ்நிலை. தியானம் செய்பவர்களுக்கு ஏற்ற இடம்.

பலிபீடம் நந்திதேவர் லிங்கத் திருமேனி பிரதிஷ்டை பிராகாரம் என்று சோமப்பா சுவாமிகள் திருச்சமாதி முழுமையான அமைப்புடன் காணப்படுகிறது. கருவறையில் லிங்கத் திருமேனியுடன் சோமப்பா சுவாமிகளின் திருவுருவப் படமும் உள்ளது. சுவாமிகளின் அபிமானத்துக்கும் ஆசிர்வாதத்துக்கும் உள்ளான மதுரை பக்தர்கள். தினமும் இவரது திருச்சமாதிக்கு வந்து தியானம் மேற்கொள்கிறார்கள். தங்கள் குருநாதரைத் தொழுதுவிட்டு அன்றாடப் பணிகளைக் கவனிப்பவர்களும் இருக்கிறார்கள். சோமப்பா சுவாமிகளின் இயற் பெயர் எவருக்கும் தெரியாது. தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்கள் உட்பட அனைவரையும் சோமப்பா... சோமப்பா என்றே அழைப்பார் இவர். இதனாலேயே சோமப்பா சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.

சோமப்பா சுவாமிகளின் ஆசிர்வாதத்தைப் பரிபூரணமாகப் பெற்ற உள்ளூர் பக்தர்கள் பலர். சுதந்திரப் போராட்டக் காலத்தின் போது பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர். மாதம் இரு முறை இந்த மலைக்கு வருவது வழக்கம். சோமப்பா சுவாமிகளின் தீவிர பக்தர் அவர். சுவாமிகளை நேருக்கு நேர் பார்த்துப் பேசி அவரை வணங்கி ஆசி பெற்றவர் தேவர். சோமப்பா சுவாமிகள் பக்தர்களுக்குத் தரிசனம் தந்து கொண்டிருக்கும் இடத்திலேயே ஒரு மூலையில் அமர்ந்து தியானம் மேற்கொள்வார் முத்துராமலிங்கத் தேவர். சோமப்பா போ....போ என்று ஓங்கிய குரலில் சுவாமிகளிடம் இருந்து உத்தரவு வரும் வரையில் கடும் தியானத்தில் இருப்பார் முத்துராமலிங்கத் தேவர். இந்த உத்தரவு சோமப்பாவின் திருவாயில் இருந்து வந்தவுடன் சந்தோஷத்துடன் தியானத்தை முடித்துக்கொண்டு சாஷ்டாங்கமாக அவரை நமஸ்கரிப்பார் தேவர். அதன் பின் சுவாமிகளின் ஆசி தனக்குக் கிடைத்து விட்ட திருப்தியுடன் சந்தோஷமாக அங்கிருந்து நகர்வாராம் முத்துராமலிங்கத் தேவர்.

கலைமாமணி மதுரை சோமு நாதஸ்வரக் கலைஞர் எம்.எஸ்.பொன்னுத்தாயி உட்பட பல மதுரைக் கலைஞர்களும் சோமப்பா சுவாமிகளின் பக்தர்கள். சுவாமிகளின் குரு பூஜையின் போது (ஸித்தி ஆனது 1968 ஆனி மிருகசீரிஷம்) மதுரை நாடகக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்தக் கைங்கர்யத்துக்கு உதவி வருகிறார்கள். சோமப்பா சுவாமிகள் சமாதித் திருக்கோயிலுக்குக் கடந்த 2003-ஆம் ஆண்டு அவரது குருபூஜை தினத்தில் திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.

தினமும் காலை மாலை வேளைகளில் இவருடைய சந்நிதியில் வழிபாடு நடந்து வருகிறது. அமாவாசை பௌர்ணமி மற்றும் பிரதோஷ தினங்களில் சோமப்பா சுவாமிகள் திரு சமாதியில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. திரளான பக்தர்கள் கூடுகிறார்கள்.

எங்கேயோ திரிகால ஞானியாகச் சுற்றிக் கொண்டிருந்த சோமப்பா சுவாமிகளைத் திருக்கூடல் மலைக்கு வரவழைத்ததே மாயண்டி சுவாமிகளின் விளையாடல் என்று தான் சொல்ல வேண்டும். நிரந்தரமாக இந்த மலையில் தங்கி ஸ்ரீ தண்டாயுத பாணி திருக்கோயிலின் திருப்பணிகளை மாயாண்டி சுவாமிகள் மேற்கொண்டிருந்த காலம் அது. 1920 களில் திருக்கூடல் மலைக்கு வந்தார் சோமப்பா. அவர் இங்கு வந்த கதையைப் பார்ப்போம். ஒரு நாள் யாரோ ஆசாமி ஒருவர். அடிவாரத்தில் கொட்டப்பட்டிருக்கும் மணல் மேட்டில் வெகு நேரமாக அமர்ந்திருக்கும் தகவல் மாயாண்டி சுவாமிகளை அடைந்தது. அவருக்குத் தெரியாதா புதியவன் எப்போது வருவான் என்று?சோமப்பாவின் வருகை மாயாண்டி சுவாமிகளை ரொம்பவே பரவசப்படுத்தியது. அவரது முகத்தில் புன்கை ததும்பியது.

இருளப்ப கோனாரை இன்முகத்துடன் அழைத்தார். அப்பு.... திருக்கூடல் மலைக்குள் ஒரு சிவக்கனி வந்தாச்சு. போ உடனே போய் அதைப் பத்திரமா  அழைச்சிட்டு வா என்று உத்தரவு போட்டார் மாயாண்டி சுவாமிகள். சுவாமிகளே இப்படிச் சொல்கிறார் என்றால் வந்திருப்பவர் யாரே ஒரு சித்த புருஷராகத்தான் இருக்கும் என்று தெளிந்த இருளப்ப கோனார் வெளியே வந்தார். அங்கே கட்டட வேலைகளுக்காகக் குவித்து வைக்கப்பட்டிருந்த மணல் மேட்டில் கால்களை நீட்டிக் கொண்டு. கைகளைப் பின் பக்கம் ஊன்றியபடி கெச்சலான முகத்துடனும் மீசை தாடியுடனும் ஒரு ஆசாமி உட்கார்ந்திருந்தார். இவரைத்தான் சுவாமிகள் சொல்லி இருக்கிறார் போலிருக்கிறது என்பதாக அவரை நெருங்கி. ஐயா... ஐயா என்று மெள்ளக் குரல் கொடுத்தார் இருளப்ப கோனார்.

அவ்வளவு தான் அந்த ஆசாமியின் முகத்தில் பிரகாசகளை கட்டியது.  உத்தரவு வந்து விட்டது அவருக்கு. குதியாட்டம் போட்டு மணல் மேட்டில் இருந்து எழுந்தார். மலை உச்சியைப் பார்த்தவாறு சோமப்பா சொல்லி விட்டயா? அப்ப சரிதான் நீ போ சோமப்பா இனிமே இங்கே தான் தங்கப் போவுது என்று இருளப்ப கோனாரைப் பார்த்துச் சொல்லி விட்டு மலை உச்சியை நோக்கி ஒரு குழந்தை போல் குதூகலத்துடன் ஓட ஆரம்பித்தார் அந்த ஆசாமி. அவர் தான் சோமப்ப சுவாமிகள். சோமப்பா சுவாமிகள் யார் என்பதை அடையாளம் கண்டு கொண்டார் மாயாண்டி சுவாமிகள். இனம் தானே இனத்தை அறியும்? எத்தனையோ காலத்துக்குக் காடு மேடு என்று அலைந்து திரிந்து உருண்டு திரண்டு பழுத்துப் பக்குவப் பட்ட ஞானிதாம்ப்பா சோமப்பா என்று இருளப்ப கோனாரிடம் சொன்னார் மாயாண்டி சுவாமிகள்.

சோமப்பா சுவாமிகளை மிகப் பெரிய சித்த புருஷர் என்று அவருடைய பக்தர்கள் சொல்கிறார்கள். இவர் பிறந்த ஊர் கொட்டாம்பட்டி என்றும் பசுமலை என்றும் இரு விதமான தகவல்கள் இருகின்றன. பெற்றோர் எல்லப்பர் எல்லாம்மாள் என்பது செவி வழிச் செய்தி முந்நூறு ஆண்டுகள் வாழ்ந்த சித்தர் இவர் என்று சொல்லப்படுகிறது. சோமப்பாவைக் காணும் போதெல்லாம் மனம் இளகி அவருடன் உரையாடுவார். மாயாண்டி சுவாமிகள். அப்பு... என்னை எப்படி கரிசனத்துடன் பார்த்து கொள்கிறாயோ அது போல் சோமப்பாவையும் நீ கண்ணும் கருத்தமாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். அது சாதாரண ஆள் இல்லை அப்பு. குருநாதரை விடப் பெரியவர் என்று இருளப்ப கோனாரிடம் அவ்வப்போது சொல்வாராம் மாயாண்டி சுவாமிகள்.

இந்த வார்த்தைகளைத் தனக்கு இட்ட உத்தரவாகக் கருதி. சோமப்பாவையும் நன்றாகவே கவனித்து வந்தார் இருளப்ப கோனார். இது குறித்து சோமப்பா சுவாமிகளை நன்கு அறிந்த ஒருவர் நம்மிடம் சொன்னார் இருளப்ப கோனார் மாயாண்டி சுவாமிகளையும் சோமப்பா சுவாமிகளையும் தன் இரு கண் போல் கவனித்து வந்தார். மாயாண்டி சுவாமிகள் ஏதாவது ஒரு உத்தரவிட்டால் தெய்வமே தனக்கு இட்ட பணியாக அதை நினைப்பார் இருளப்ப கோனார்!

தொடரும்...

கருத்துகள் இல்லை: