சனி, 7 செப்டம்பர், 2019

19. பிரகலாதனின் பிரார்த்தனை

இரணியன் தன் புரோகிதர்கள் உண்டாக்கிய கிருத்தியை வீணானதைக் கேட்டுத் திகைத்தான். பிறகு அவன் தன் புத்தரனை அழைத்து, பிரகலாதா! உன் பிரபாவம் அதியற்புதமாக இருக்கிறதே! இதற்குக் காரணம் என்ன? இது மந்திரத்தால் உண்டானதா! இயல்பாகவே உள்ளதா? தெரியச் சொல்! என்றான். பிரகலாதன் தன் தந்தையின் பாதங்களைத் தொட்டு வணங்கி விட்டு, ஐயனே! எனக்கு இந்தப் பிரபாவம் மந்திர தந்திரங்களால் உண்டானதல்ல! இயற்கையாகவே உள்ள சுபாவமுல்ல எவனெவன் இதயத்திலே ஸ்ரீமகாவிஷ்ணு நிலையாகப் பிரகாசிப்பானோ, அவனவனுக்கெல்லாம் இத்தகைய பிரபாவம் உண்டு! யார் ஒருவன் தனக்குக் கேடு நினையாததைப் போலப் பிறருக்கும் கேடு நினைக்காமல் இருப்பானோ அப்படிப்பட்டவனுக்குப் பாவத்தின் காரியமாகிய பாவம் உண்டாவதில்லை. எவன் மனோவாக்குக் காயங்களினால் யாருக்கும் துரோகஞ்செய்யாமல் இருக்கிறேன். இப்படி நல்ல சிந்தையுள்ளவனான எனக்கு ஆத்தியாத் மிகம், ஆதி தெய்வீகம், ஆதி பவுதிகம் என்ற மூலகைத் துக்கமும் எப்படி உண்டாகும்? ஆகையால், விவேகமுள்ளவர்கள் ஸ்ரீஹரியே சர்வாத்துமகனாக இருக்கிறான் என்று நினைத்து, சகல பூதங்களிடமும் சர்வதேச, சர்வ காலங்களிலும் இடைவிடாமல் அன்பு செலுத்த வேண்டும்! என்று பிரகலாதன் சொன்னான். இரணியன் இன்னும் குரோதத்தால் பொங்கி, அங்கிருந்த அசுரகிங்கரர்களைக் கூவியழைத்து இந்த துஷ்டப்பையனான பிரகலாதனை இழுத்துகக் கொண்டு போய் நூறு யோசனை உயரமுள்ள உப்பரிகையின் மேலே இருந்து, கீழே தள்ளுங்கள். அந்த மலையின் மேல் விழுந்து இவனது உடம்பெல்லாம் சின்னாபின்னமடைந்து சிதையட்டும்! என்று கட்டளையிட்டான். அதன் பிரகாரம் கிங்கரர்களும் பிரகலாதனை இழுத்துப்போய் மிகவும் உயரத்திலிருந்து கீழே தள்ளினார்கள். ஆனால் பிரகலாதன் தனது இதயகமலத்தில் புண்டரிதாஷனான ஸ்ரீமந்நாராயணனையே நினைத்துக் கொண்டிருந்ததால் பூமிதேவி வெளிப்பட்டு சர்வபூத ரட்சகனின் பக்தனான பிரகலாதனை தன் கைகளால் ஏந்திக் கொண்டாள்.
அப்படிக் கீழே விழுந்தும் தனது அங்கத்தில் கிஞ்சித்தும் சேதமில்லாமல் சுகமாய் எழுந்துவந்த தன் மகனைப் பார்த்து, இரணியன் மனம் பொறாமல் மகாமாயவியான சம்பராசுரனைக் கூவி அழைத்து, அசுர உத்தமனே! துன்மார்க்கனான இந்தப் பையனைச் சாகடிக்க நான் எத்தனை உபாயம் செய்தும் இவன் சாகாமலே தப்பிவிடுகிறான்! ஆகையால் உமது மாயா சக்தியினால் இந்தத் துராத்மாவைச் சங்கரிக்க வேண்டும்! என்றான்.

அதற்கு சம்பராசுரன் இணங்கி, அசுரேஸ்வரா! எனது மாயாபலத்தைப் பாரும்! சஹஸ்ரகோடி மாயைகளைச் செய்து இந்த பிரகலாதனை நானே சாகடிக்கிறேன்! என்று சொல்லி விட்டு பிரகலாதன் மீது பலவகையான மாயைகளைப் பிரயோகித்தான். ஆனால் பிரகலாதனோ அந்த அசுரன் மீதும் வெறுப்படையாமல் ஸ்ரீமதுசூதனான விஷ்ணுவையே நினைத்துக் கொண்டிருந்தான். அப்போது ஸ்ரீமந்நாராயணனின் நியமனத்தால் அநேகமாயிரம் ஜ்வாலைகளோடு கூடிய திருவாழி புறப்பட்டு, பிரகலாதனை ரட்சிப்பதற்காக அதிவேகமாக வந்து, சம்பராசுரனின் மாயைகளையெல்லாம் தகித்துச் சாம்பலாக்கியது. பிறகு, இரணியன் இன்னும் பிடிவாதமான குரோதம் கொண்டு சம்சோஷகன் என்ற வாயுவைப் பார்த்து, சீக்கிரமாக இந்தத் துஷ்டனை நாசஞ்செய்வாயாக! என்று கட்டளையிட்டான். அந்த வாயு அசுரனும் அதிகுளிர்ச்சியும் அதிஉஷ்ணமும் கொண்டு, பிரகலாதனின் திருமேனியினுள்ளே பிரவேசித்தான். ஆனால் பிரகலாதன் தன் இருதயத்திலே ஸ்ரீமந்நாராயணனைத் தரித்திருந்தபடியால், அங்கு குடிகொண்டிருக்கும் ஸ்ரீமதுசூதனன் ரட்சகமூர்த்தியாய் எழும்பி, அந்தச் சம்சோஷகனை விழுங்கி ஒரே கணத்தில் நாசஞ்செய்தருளினார். அதைக்கண்ட இரணியன் பிரமித்தான். இதுபோல சம்பரனால் ஏவப்பட்ட மாயைகளும் சம்சோஷக வாயுவும் நாசமடைந்ததையறிந்த பிரகலாதன் மீண்டும், குருகுலத்துக்குச் சென்று அங்கே படித்துக் கொண்டிருந்தான். குருகுலத்தில் அவனுடைய ஆசாரியர், அவனுக்குத் தினந்தினம் சுக்கிர நீதியை உபதேசித்து வந்தார். சிலகாலம் சென்ற பிறகு அவர் தம்மிடம் பிரகலாதன் நீதி சாஸ்திரத்தை கற்றறிந்து விட்டதாக நினைத்து, அவனையும் அழைத்துக் கொண்டு, இரணியனிடம் சென்றார். அவர் இரணியனை நோக்கி, அசுரேந்திரனே! உனது புத்திரன் சுக்கிர நீதியை நன்றாகப் பயின்று சகல விஷயங்களிலும் சமர்த்தனாகி விட்டான்! என்றார். இரணியன் சிறிது மனச்சமாதானமடைந்து பிரகலாதனைப் பார்த்து, மகனே! அரசனானவன், நண்பர்களிடமும் பகைவரிடமும், நடுவரிடத்திலும், விருத்தி, சாமியம், க்ஷயம் என்பவை நேரிடும் சமயங்களிலும் எப்படியிருக்க வேண்டும்? புத்திசொல்லும் மந்திரிகளிடமும் காரியசகாயரான அமாத்தியரிடமும் பாகியர் என்னும் வரிவாங்கிச் சேர்க்கும் அதிகாரிகளிடமும், ஆப்பியந்தார் என்று சொல்லப்படும் அந்தப்புர அதிகாரிகளிடமும், தன்னுடைய குடிமக்களிடமும், தன்னால் ஜெயிக்கப்பட்டுத் தன்னிடம் சேவகம் செய்யும் பகைவரிடமும் மன்னன் என்போன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சந்தி, விக்கிரகம் முதலியவற்றில் எங்கே எதையெதைச் செய்ய வேண்டும்? தனக்குள்ளே இருந்து மர்மங்களை அறிந்து, பிறகு பிறராலே பேதப்படுத்திக் கொண்டு போக உடன்பட்டிருக்கும். தன் ஜனங்கள் விரோதமாகாமல் இருக்க அரசன் என்ன செய்ய வேண்டும்? சைலதுர்க்கம், வனதுர்க்கம், ஜலதுர்க்கம் முதலிய துர்க்கங்களை எப்படி அமைப்பது? அசாத்தியர்களால் வனத்தில் வாசஞ்செய்யும் மிலேச்சர்களை வசப்படுத்தும் உபாயம் யாது? திருடர் முதலிய துஷ்டர்களை நிக்ரஹிக்கும் விதம் என்ன? இவற்றையும் சாமதான பேதாதி உபாயங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதையும் நீதி சாஸ்திரத்திலே நீ கற்றிருப்பவைகளையும் சொல்வாயாக உன் மனதில் இருக்கும் கருத்தை நான் அறிய விரும்புகிறேன் என்றான்.

தந்தையே! ஆசாரியர் எனக்குச் சகல சாஸ்திரங்களையும் உபதேசித்தார்; நானும் படித்தேன். ஆயினும் இவையெல்லாம் எனக்கு அர்த்தமற்றதாகவும், அசாரமாகவுமே தோன்றுகின்றன. மித்திராதிகளை வசப்படுத்த, சாம தான பேத தண்டங்களைச் செய்யும்படி நீதி சாஸ்திரத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. ஐயனே கோபிக்க வேண்டாம்! ஜகத்திலே சத்துரு மித்திரர்களை நான் காணவில்லை. ஆகையால் சாமதானாதி உபாயங்கள் வீணானவையே! சாத்தியம் இல்லாதபோது வெறும் சாதனத்தால் பயன் என்ன? சகல பூதங்களையும் சரீரமாகக் கொண்டு, ஜகத் ஸ்வரூபமாகவும் ஜகந்நாதனாகவும் கோவிந்தனே எழுந்தருளியிருக்கும்போது, இந்த ஜகத்தில் சத்துரு மித்துரு என்ற பேச்சுக்கு இடம் ஏது? ஸ்ரீவிஷ்ணுபகவான் உம்மிடமும் என்னிடமும் மற்றுமுள்ள சகல ஜகத்திலேயும் பரிபூரணமாக நிறைந்திருக்கிறாராகையால் சத்துரு மித்திரன் என்ற பேதம் எப்படி உண்டாகும்? இகலோக போகசாதனங்களாய் வீணான சொற்கள் விரிந்து, அவித்தைக்கு உட்பட்டிருக்கும் நீதி சாஸ்திரங்களால் என்ன பயன்? ஐயனே! பந்தங்கள் நீங்கும்படியான பிரமவித்தைப் பயிற்சிக்கே முயற்சி செய்ய வேண்டும். மின்மினிப் பூச்சியைப் பார்த்து அக்கினி என்று பாலகன் பிரமிப்பது போல் சிலர் அஞ்ஞானத்தால் அவித்தையை வித்தையென்று நினைக்கிறார்கள். எது சம்சார பந்தத்துக்குக் காரணமாகாதோ அப்படிப்பட்ட கருமமே கருமமாகும்! எது மோக்ஷத்துக் காரணமாகுமோ அப்படிப்பட்ட வித்தையே வித்தையாகும். மற்ற கருமங்கள் யாவுமே வீணான ஆயாசத்தை யுண்டாக்குமேயொழிய வேறாகாது. ஆகையால், நீதி சாஸ்திரத்தால் வரும் ராஜ்யாதி பயன்களைத் துச்சமாக நினைத்து, உத்தமமான விஷயத்தைச் சொல்கிறேன். பூமியில் ராஜ்ய அபேட்சையில்லாதவனும் தன அபேட்சையில்லாதவனும் உண்டோம். ஆயினும் பூர்வ புண்யவசத்தால் கிடைக்கத் தக்கதே கிடைக்குமேயல்லாது. நினைத்தது கிடைக்காது. கோபாக்கியமுடைய என் தந்தையே! ஜகத்தில் யாவரும் தமக்கு ஐசுவரியம் உண்டாக வேண்டும் என்று முயற்சி செய்கின்றனர். ஆயினும் அது ஜன்மாந்திர பாக்கிய வசத்தாலன்றி முயற்சியால் உண்டாகாது. விவேகமில்லாதவர்களக்கும் முயற்சி செய்யாதவருக்கும் நீதி சாஸ்திர மறியாதவருக்கும் அதிர்ஷ்டவசத்தால் ராஜ்யாதிகள் உண்டாகின்றன. ஆகையால் ஐசுவரியத்தை விரும்புவோரும் புண்ணியத்தையே செய்ய முயலவேண்டும். தேவ மனுஷ்ய, மிருக பட்சி விருட்ச ரூபமுடைய பிரபஞ்சம் யாவும் ஸ்ரீஅனந்தனுடைய ஸ்வரூபமாக இருக்கின்றன. ஆனால் அஞ்ஞானிகளுக்கு அவை வேறு போலத் தோன்றுகின்றன. ஸ்ரீவிஷ்ணு பகவான் விசுவதா ரூபதரன். ஆகையால் தாவர சங்கமாதமகமான பிரபஞ்சத்துக்கு எல்லாம் அந்தர்யாமியாக இருக்கிறான் என்று நினைத்து விவேதியாக இருப்பவன் சகல பூதங்களையும் ஆத்மசமானமாகப் பாவித்திருக்க வேண்டும். இந்த ஞானம் எவனுக்கு இருக்கிறதோ அவனிடத்திலே அனாதியாயும் ஷட்குண ஐசுவரிய சம்பன்னான அந்தப் புரு÷ஷாத்தமன் பிரசன்னமாவான். அவன் பிரசன்னனானால், சகல விதமான கிலேசங்களும் விலகிப் போய்விடும்! என்றான். பிரகலாதன் அதைக்கேட்ட இரணியன், சகிக்கமாட்டாமல் கோபத்துடன் தன் சிங்காதனத்திலிருந்து எழுந்து, தன் குமாரனின் மார்பிலே உதைத்து கையோடு கையை அறைந்து, அருகிலிருந்த அசுரர்களைப் பார்த்து, ஓ விப்ரசித்து! ராகுவே! ஓ பலனே! இந்தப் பயலை நாகபாசங்களினால் கட்டியிழுத்து, சமுத்திரத்திலே தூக்கிப் போடுங்கள் தாமதம் செய்ய வேண்டாம். இல்லையெனில் தைத்தியதானவ சமூகங்கள், மூடனான இந்தப் பாவியின் வழியில் சென்று கெட்டுப் போய்விடும். என்ன சொல்லியும் இவன் மாறவில்லை. இவனை நான் சொன்னபடிச் செய்யுங்கள் என்று கட்டளையிட்டான். தைத்யர்கள் அவனது கட்டளையை ஏற்று, பிரகலாதனை நாகபாசங்களாற் கட்டிக்கடலில் போட்டார்கள்.

பிரகலாதன் அதில் விழுந்து அசைந்ததும் கடல்நீர் எல்லை கடந்து, ஜகமெங்கும் வியாபித்தது. இவ்விதம் கடல்நீர் பொங்கிப்பூமியில் வியாபிப்பதைக் கண்ட இரணியன் தைத்யர்களை அழைத்து சமுத்திரத்தில் மூழ்கியிருக்கும் அந்தத் துஷ்டன் மீது மலைகளை நெருக்கமாக அடுக்குங்கள்! அந்தப் பையன் பிழைப்பதால் யாதொரு பயனும் இல்லை. ஆகையால் ஜலராசியின் நடுவில், மலைகளால் நாலாபுறமும் அமுக்கப்பட்டுக் கொண்டே பல ஆண்டுகள் இருந்தானாகில் அவன் உயிரை விட்டுவிடுவான்! என்றான். பிறகு தைத்ய தானவர்கள் உயர்ந்த மலைகளைப் பறித்துக் கொண்டுவந்து பிரகலாதன் மீது போட்டு, அவனைச் சுற்றிலும் ஆயிரம் யோசனைக்கு மலைகளை அடுக்கினார்கள். இவ்விதம் பிரகலாதாழ்வான் சமுத்திர மத்தியில், அத்தனைத் தொல்லைகளிலும் ஏகாக்கிர சித்தனாய் அச்சுதனையே துதிக்கலானான்! புண்டரிகாக்ஷனே! உனக்கு எனது வணக்கம், புரு÷ஷாத்தமனே உனக்குத் தெண்டனிடுகிறேன். சர்வலோக ஸ்வரூபனே! உனக்கு நமஸ்காரம்! உக்கிரமான சக்கர ஆயுதமுடையவனே உனக்குத் தெண்டனிடுகிறேன். பிரமண்ணியம் என்று சொல்லப்பட்ட தவம் வேதம் முதலியவைகளுக்குத் தேவனாகவும், கோக்களுக்கும், பிராமணருக்கும் இதனாகவும், ஜகத்துக்கெல்லாம் ரக்ஷகனாயும், ஸ்ரீகிருஷ்ணன் என்றும், கோவிந்தன் என்னும் திருநாமமுடைய உனக்கு மேலும் மேலும் தண்டனிடுகிறேன். பிரமரூபமாகி உலகங்களைப் படைத்துக் கொண்டும், தனது சொரூபமாகி ரட்சித்துக் கொண்டும், கல்பாந்தத்திலே ருத்திர ரூபமாகிச் சங்கரித்துக் கொண்டும், திரமூர்த்தியாக விளங்கும் உனக்குத் தெண்டனிடுகிறேன்! ஓ அச்சுதனே! தேவ அசுர கந்த வசித்த கின்னர சாத்திய பன்னக யக்ஷ ராக்ஷச பைசாச மனுஷிய பட்க்ஷ ஸ்தாவர பிபீவிகாதிகளும், பிரித்வி அப்பு, தேயு வாயு ஆகாயங்களுக்கும் சப்த ஸ்பரிச ரச கந்தங்களும், மனோ புத்தி சித்த அகங்காரங்களும், காலமும் அதன் குணங்களும் இவற்றின் பரமார்த்தமான ஆன்மாவும் இவையெல்லாம் நீயே! வித்தை அவித்தை சத்தியம், அசத்தியம் பிரவிர்த்தி, நிவர்த்தி ரோதோக்த்த சர்வகர்மங்களும் நீயே! விஷ்ணுபகவானே! சமஸ்த கர்மபோகத்தை அனுபவிப்பவனும் சர்வகர்ம பயன்களும் நீயே! ஓ மகாப்பிரபுவே! உன்னிடமும் இதரரிடமும் சேஷ பூதங்களான சகல உலகங்களிலே நீ வியாபித்திருப்பதும், உபதான நிமித்தகாரண ரூபமான ஐசுவரியும் அனந்த ஞானசக்தியும் உனது கல்யாண குணங்களைக் குறிக்கின்றன. பரமயோகிகள் உன்னைத் தியானிக்கின்றனர். யாகசீலர் உன்னைக் குறித்து யாகஞ்செய்கின்றனர். நீயே பிதுர் ரூபமும் தேவ ரூபமும் கொண்டு, ஹவ்ய கவ்யங்களைப் புசிக்கிறாய்! ஓ அச்சுதா! மகத்தகங்காரம் முதலான சூட்கமங்களும் பிரித்வி முதலிய பூதங்களும் அவற்றினுள்ளே அதிசூட்சுமமான ஆத்ம தத்துவமாகிய இந்தச் சூட்சும பிரபஞ்சமெல்லாம் எங்கேயிருக்கிறதோ, எங்கே உண்டாகிறதோ, அது சொரூப குணங்களிலே பெருத்த உனது மகாரூபமாக இருக்கிறது! சூக்ஷ்மம் முதலான யாதொரு சிறப்புமில்லாமல், சிந்திப்பதற்கும் அரியதாய் யாதொரு ரூபம் உண்டோ அதுவே உன்னுடைய பரமாத்ம சொரூபம்! இத்தகைய புரு÷ஷாத்தமனான உனக்குத் தெண்டமிடுகிறேன். சர்வாத்மகனே! சகல பூதங்களிலும் சத்வாதி குணங்களைப் பற்றியதாய் யாதொரு பிரகிருத சக்தி இருக்கிறதோ, ஜீவ ஸ்வரூபமான அந்தச் சக்தியை நான் வணங்குகிறேன்; வாக்குக்கும் மனதுக்கும் எது எட்டாததோ, யாதொரு விசேஷத்தினாலும் எது விசேஷப்படுத்தக் கூடாததோ, ஞானிகளுடைய ஞானத்தால் எது நிரூபிக்கப்படக்கூடியதோ அத்தகைய முந்தாத்தும ஸ்வரூபமாக இருக்கிற உனது மேன்மையான சக்திக்குத் தெண்டனிடுகிறேன்!

எவனுக்கு வேறானது ஒன்று இல்லையோ, எவன் எல்லாவற்றுக்கும் வேறாக இருக்கிறானோ, அத்தகைய பகவானான ஸ்ரீவாசுதேவனுக்குத் தெண்டனிடுகிறேன்! கர்மாதீனமான நாம ரூபங்கள் இல்லாமல் விலக்ஷணனாய் இருப்பதாக மட்டும் எவன் காரணப்படுவானோ அத்தகைய மகாத்மாவுக்கு எனது நமஸ்காரம்! சங்கர்ஷணாதி வியூகரூபியானவனுக்கு நமஸ்காரம்! தேவதைகளும் எவனுடைய பராத்பரமான ரூபத்தைக் காணமுடியாமல், மச்சகூர்மாதி அவதார ரூபங்களையே அர்ச்சனை செய்வார்களோ, அந்தப் பரமாத்மாவுக்கு வந்தனம்! எவன் ருத்திராதி சகல பூதங்களுக்கும் அந்தர்மியாகி சுபாசுபங்களை கண்டு கொண்டிருப்பானோ, அந்தச் சர்வசாட்சியும் பரமேஸ்வரனுமான ஸ்ரீவிஷ்ணுதேவருக்குத் தெண்டனிடுகிறேன்! காணப்படும் இந்தச் சகமெல்லாம் எவனோடு பேதமின்றி இருக்கிறதோ அந்த விஷ்ணுவுக்கு வந்தனஞ் செய்கிறேன்! யாவற்றுக்கும் ஆதியான அந்த ஸ்ரீஹரி எனக்குப் பிரசன்னனாகக் கடவன் அட்சரம் என்ற பெயருடையவனாக இருக்கும். எவனிடம் பிரபஞ்சமெல்லாம் நூலில் வஸ்திரம் கலந்திருந்திருப்பது போலக் கலந்தும், நூலில் மணிகள் சேர்க்கப்பட்டிருப்பது போலச் சேர்க்கப்பட்டும் இருக்கிறதோ, அந்தத் தியானசம்யனான அச்சுதன் என்னிடம் தோன்றக்கடவன்! சர்வ ஸ்வாமியாய் சர்வ சேஷயாய் இருக்கிற அந்த ஸ்ரீமகாவிஷ்ணுவுக்குத் தெண்டமிடுகிறேன்! எவனிடம் சகலமும் படைப்புக் காலத்தில் உண்டாகுமோ, எவன் சகல சரீரனாகவும், சகல ஆதாரமாகவும் இருக்கிறானோ, அந்த சுவாமிக்குப் பலமுறைகள் தெண்டனிடுகிறேன். யாவுமே எம்பெருமானது விபூதியாய், அவனைப் பற்றியே நிற்பதும் இயல்வதுமாய் சற்றேனும் சுதந்திரமில்லாமல் இருப்பதைப் பற்றியே எம்பெருமானை யாவும் என்றும் அவனன்றி வேறொன்றுமில்லை என்றும் அவனுள்ளேயே சொருகித் தன்னையும் அனுசந்தித்தபடியாகும். இதுவே விசிஷ்õத்துவைதம். ஸ்ரீஅனந்தன் எங்கும் ஆன்மாவாய், அகமும், புறமும் வியாபித்து ஞானானந்தமயனாய் நிறைந்திருப்பதால், நானும் அவனாகவே இருக்கிறேன். ஆகையால் என்னிடத்திலிருந்தே யாவும் உண்டாயிற்று. நானே யாவுமாக இருக்கிறேன். எப்போதும் இருக்கிற என்னிடத்திலே எல்லாம் இருக்கின்றன. நானே அவ்யயனாயும், நித்தியனாயும் வேறொரு ஆதாரமின்றி தன்னிலேயே தானாக இருக்கும் பரமாத்மாவாக இருக்கிறேன். நான் படைக்கும் முன்பு பிரமம் என்ற பெயரையுடையவனாக இருந்தேன். அப்படியே பிரளய காலத்திலும் எல்லாம் உள்ளே ஒடுங்கும்படியான பரமபுருஷனாக இருப்பேன்! என்று பிரகலாதன் தியானித்துக் கொண்டிருந்தான்.
18. அசுரப்புரோகிதர்களைக் காத்தல்!

பிரகலாதனின் உபதேசங்களைக் கேட்டதும் அசுரகுமாரர்கள் மிகவும் யோசித்துவிட்டு, இரணியனின் கட்டாயத்துக்குப் பயந்து, பிரகலாதன் சொன்னவற்றையெல்லாம் அந்த அசுரேஸ்வரனிடம் கூறிவிட்டார்கள். அதனால் இரணியன் அதிகக் கோபமும் அகங்காரமும் கொண்டு தன் சமையற்காரனைக் கூப்பிட்டு, பரிசாரகர்களே! மந்தபுத்தி படைத்தவன் தான் என் குமாரன் பிரகலாதன் அவன் கெட்டதுமல்லாமல், மற்றவருக்கும் துன்மார்க்கமான உபதேசங்களைச் சொல்லி, அவர்களையும் கெடுத்துக் கொண்டிருக்கிறான். ஆகையால் பிரகலாதனைத் தாமதமின்றி அழித்தொழிக்க வேண்டும். அவனறியாத வண்ணம் அவனுடைய ஆகாரங்களிலெல்லாம் ஆலகாலம் என்ற கொடிய விஷத்தைக் கலந்து அவனுக்குக் கொடுங்கள். இந்தக் காரியத்தில் சந்தேகம் வேண்டாம்! என்று கட்டளையிட்டான். பரிசாரகர்களும் அப்படியே விஷங்கலந்த அன்னத்தை பிரகலாதனுக்கு கொடுத்தார்கள். அதையறிந்த பிரகலாதன், தன் மனதில் யாதொரு மாறுபாடும் இல்லாமல், அனந்தன் என்ற திவ்யநாமதே யத்தினால் அந்த அன்னங்களையெல்லாம் வாங்கி மகிழ்ச்சியுடன் அமுது செய்தான். ஸ்ரீஅனந்தனின் நாமத்தை உச்சரணை செய்த பெருமையால் அன்னத்தில் கலந்துள்ள விஷமெல்லாம் தன் வீரியத்தை இழந்து பிரகலாதனின் ரத்தத்திலேயே ஜீரணமாகிவிட்டது. அந்த மகாவிஷம் பிரகலாதனுக்கு ஜீரணமானதைப் பார்த்ததும் சமையற்காரர்கள் மகாபயம் பிடித்தவர்களாய் இரணியனிடம் ஓடி நடந்தவற்றைக் கூறினார்கள். அதனால் இரணியன் இன்னும் கோபங்கொண்டு, புரோகிதர்களான சண்டாமர்க்கர்களைக் கூப்பிட்டு, புரோகிதர்களே, விரைவில் அந்த துன்மார்க்கப்பையலைக் கட்டியிழுத்துச் சென்று உங்கள் மந்திர பலத்தால் பயங்கரமான கிருத்தியை உண்டாக்கி, அவனை அழித்து விடுங்கள் என்று கட்டளையிட்டான். புரோகிதர்களான பிராமணர்கள் அசுரேஸ்வரனின் ஆக்ஞையை ஏற்று பிரகலாதனை அணுகினார்கள். வணக்கமாக நின்று கொண்டிருக்கும் பிரகலாதனைப் பார்த்து, சிறுவனே! திரிலோக விக்கியாததமான பிரமகுலத்தில் உதித்து, இரணியனின் மகனான உனக்கு எந்தத் தேவதைகளால் என்ன ஆகவேண்டும்? விஷ்ணுவான அந்த அனந்தனாலே தான் உனக்கு என்ன பயன்? உன் பிதாவான இரணியகசிபோ சகல உலகங்களுக்கும் அதிபதியாக இருப்பதால் நீயும் அப்படியே அதிபதியாக இருக்கலாம். ஆகையால் சத்துருபட்ச ஸ்தோத்திரத்தை விட்டுவிடுவாயாக: சகல உலகங்களுக்கும் உன் தந்தையே பூஜிக்கத்தக்கவராகவும் பரமகுருவாகவும் இருக்கிறார். ஆகையால் இப்போது நீ அவரது கட்டளையை ஏற்று நடப்பதே நியாயம்! என்று புத்திமதி கூறினார்கள்.

மகாத்மாக்களே! நீங்கள் சொல்வது மெய்தான். மூன்று உலகங்களிலும் பிரமபுத்திரனான மரீசியின் வமிசம் மேலானது தான். என் தந்தை மேன்மையானவர், தேஜோ பல பராக்கிரமங்களையுடையவர் என்பதும் உண்மைதான். அவரே பரமகுரு என்பதும் நியாயமே! அத்தகைய என் தந்தைக்கு நான் சிறிதாவது அபராதம் செய்யவில்லை. அப்படியிருக்கும்போது, அனந்தனாலே பயன் என்ன என்று நீங்கள் சொன்னீர்களே, அந்த வசனம் ஒன்றுதான் பொருள் அற்றது! என்றான் பிரகலாதன். பிறகு மரியாதைக்காக ஒன்றும் சொல்லாமல், புன்னகையுடன் பிரகலாதன் அவர்களைப் பார்த்து, புரோகிதர்களே! விஷ்ணுவான அந்த அனந்தனால் என்ன பயன் என்ற உங்களது வாக்கியம் நேர்த்தியாக இருக்கிறது. அனந்தனாலே காரியம் என்னவென்று நீங்கள் கேட்டது மிகவும் நன்றாக இருக்கிறது. நான் சொல்லுகிறேனே என்று மனதில் கிலேசங்கொள்ள வேண்டாம். அனந்தனாலே உண்டாகும் பயனை நான் சொல்கிறேன் கேளுங்கள். தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்று சொல்லப்படும் நால்வகை புருஷார்த்தங்களும் எவனால் உண்டாகுமோ, அந்த அனந்தனாலே பிரயோசனமென்ன என்று நீங்கள் சொல்வதை நான் எப்படி அங்கீகரிப்பேன்? மரீசி முதலியவர்கள் அனந்தனை ஆராதித்தே, அவனது கிருபையினாலே தாம் விரும்பியதையெல்லாம் பெற்றார்கள். தத்துவ ஞானிகளான பரமாத்மாக்கள் ஞானநிஷ்டையினாலே அந்த பரமாத்மாவை ஆராதித்து, சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடைந்தார்கள். சம்பத்து ஐசுவரியம், பெருமை, சந்தானபலம் ஆகிய நல்ல காரியத்துக்கும் மோட்சத்துக்கும் ஒன்றாலேயே பெறத்தக்க காரணம் எதுவென்றால் அது ஸ்ரீஹரியினுடைய ஆராதனையேயாகும். இப்படித் தருமார்த்த காம மோட்சங்கள் எவனிடமிருந்து பெறப்படுமோ, அப்படிப்பட்ட அனந்தனாலே என்ன பயன் என்று நீங்கள் கேட்டீர்கள்? பிராமணர்களே! இதுவென்ன நியாயம்? மேலும் நான் பல வார்த்தைகளைச் சொல்லி பயன் என்ன? நீங்களோ எனது ஆசிரியர்கள். ஆகையால் சந்தேகமின்றி நல்லதாயினும் பொல்லாததாயினும் என்னிடம் சொல்லுங்கள். இதனால் சிறப்பிராது அற்ப விவேகம் தான் இருக்கும். இனி என்னுடைய முடிவான சித்தாந்தத்தைக் கூறுகிறேன். கர்த்தாவும், வளர்ப்பவனும், சங்கரிப்பவனும் உலகநாதனும் எல்லோருடைய இதயத்திலிருப்பவனும், யாவற்றையும் அனுபவிப்பவனும், அனுபவிக்கப்படுபவனும் அந்த ஸ்ரீமந்நாராயணனே யல்லாமல் வேறு ஒருவனுமல்ல; பாலியனான நான் இப்படிச் சொல்வதைக் கேட்டுப் பொறுத்தருள வேண்டும்! என்று பிரகலாதன் கூறினான்.

பாலகனே! இனிமேல் நீ இப்படிச் சத்துருபக்ஷ ஸ்தோத்திரமான வார்த்தைகளைச் சொல்லமாட்டாய் என்று எண்ணித்தான், நெருப்பின் மத்தியிலே தகிக்கப்பட்டிருந்த உன்னை வெளியே இழுக்கச் செய்தோம். மூடனாகையால் அதையே நீ மறுபடியும் பேசுகிறாய். இனியும் உன் பிடிவாத்தை விடாமல் இருப்பாயானால், கிருத்தியை உண்டாக்கி ஒரு கணத்தில் உன்னை நாசமாக்குவோம்! என்றார்கள் புரோகிதர்கள். பிராமணர்களே! ஒருவனால் ஒருவன் ரட்சிக்கப்படுவதுமில்லை அழிக்கப்படுவதுமில்லை. அவனவன் தனது சதாகாரத்தினாலேயே தன்னைத் தற்காத்துக் கொள்கிறான். நற்செயல்களால், சகல பயன்களும் நற்கதியும் உண்டாகின்றன. ஆகையால் எப்போதும் நல்லவற்றையே செய்யவேண்டும்! என்றான் பிரகலாதன். அசுரப் புரோகிதர்கள் கோபம் அடைந்து மந்திரங்களை உச்சாடனம் செய்து, மிகவும் பயங்கர முகத்துடன் தீச்சுவாலை வீசும்படியான ஒரு கிருத்தியை உண்டாக்கி அதைப் பிரகலாதன் மீது ஏவினார்கள். அது பூமிநடுங்க தன் பாதங்களை எடுத்து வைத்து மிகவும் கோபத்துடன் தனது சூலத்தினாலே, பிரகலாதனின் மார்பைத் தாக்கியது. அந்தச் சூலம் பிரகலாதனின் மார்பிலே பட்டவுடனேயே சடசடவென ஒடிந்து தரையில் விழுந்து பொடிப்பொடியாயிற்று! பகவானும் ஜகதீஸ்வரனுமான ஸ்ரீஹரி எங்கே பிரியாமல் இருப்பானோ, அங்கே வஜ்ராயுதமானாலும் பொடியாய்ப் போகும் என்றால் சூலத்தின் கதியை பற்றிச் சொல்லவா வேண்டும்? இவ்விதமாக அந்த கிருத்தியையினால் ஒன்றும் செய்யமுடியாமற் போகவே, அது தன்னைக் குற்றமில்லாத இடத்திற்கு ஏவிய புரோகிதர்கள் மீதே திரும்பி விழுந்து அவர்களைத் தகிக்கத் துவங்கியது. அதனால் தவிக்கிற ஆசிரியர்களைக் கண்டதும் பிரகலாதன் மிகவும் பரிவு கொண்டு அவர்களை ரக்ஷிக்கும் பொருட்டு, ஸ்ரீகிருஷ்ணா! ஸ்ரீஅனந்தா! இவர்களைக் காப்பாயாக! என்று சொல்லிக் கொண்டே அவர்களிடம் ஓடிச்சென்று, சுவாமியைத் துதிக்கலானான்.

ஓ சர்வ வியாபகனே! ஜகத்ரூபனே! ஜகத்கர்த்தாவே! ஜனார்த்தனனே! கடினமான மந்திர அக்னியால் தகிக்கப்படும் இந்தப் பூசுரர்களைக் காப்பாயாக. சர்வ பூதங்களிடத்திலும் ஜகத் குருவான ஸ்ரீவிஷ்ணுவே வியாபித்திருக்கிறார் என்பது சத்தியமானால் இந்தப் புரோகிதர்கள் பிழைப்பார்களாக. ஸ்ரீவிஷ்ணு யாவரிடத்திலும் பிரியமாய் இருப்பவன் என்று நான் நினைத்து, சத்துரு பக்ஷத்திலும் துவேஷமில்லாமல் நான் இருப்பேனேயானால், இந்தப் பிராமணர்கள் பிழைக்கவேண்டும். என்னைச் சங்கரிக்க வந்த க்ஷத்திரிய அசுரர்களிடமும் எனக்கு விஷம் இட்ட சமையற்காரர்களிடமும், அக்கினியை மூட்டிய தானவர்களிடமும் தந்தங்களாலே என்னைப் பிடித்துப் பிடித்துக் குத்திய திக்கு கஜங்களிடத்திலும்; விஷங்கக்கி என்னைக் கடித்த பாம்புகளிடமும் என் சிநேகிதர்களிடமும் நான் சமமான புத்தியுடையவனாக இருந்து, எங்கும் ஒரு தீங்கும் நினைக்காமல் இருந்தேன் என்றால் அந்தச் சத்தியத்தினாலேயே இந்த அசுரப்புரோகிதர்கள் பிழைத்து சுகமாக இருக்கவேண்டும்! என்று பிரகலாதன் பிரார்த்தித்தான். அதனால் அப்புரோகிதர்களின் வேதனை ஒழிந்தது. அவர்கள் மகிழ்ச்சியுடன், பிரகலாதாழ்வானைப் பார்த்து, குழந்தாய்! நீ தீர்க்காயுளுடன் எதிரற்ற வீரிய பலபராக்கிரமங்களும், புத்திர பவுத்திர தனாதி ஐசுவரியங்களும் பெற்றுச் சுகமாக இருப்பாயாக! என்று ஆசிர்வதித்துவிட்டு, இரணியனிடம் சென்று நடந்தவற்றைக் கூறினார்கள்.
17. பிரகலாதன் சரிதம்

பரமஞானியும் உதார சரிதராயும் விளங்கும் பிரகலாதரின் பிரபாவத்தை பராசர முனிவர் சொல்லலானார். பூர்வத்திலே மிகவும் பராக்கிரமமுடையவனும் அதிதியின் மகனுமான இரணியகசிபு என்ற ஓர் அரக்கன் இருந்தான். அந்த அரக்கன் கோரமான தவங்களினால் பிரம்மாவை மகிழச்செய்து, தனக்குத்தேவர்களாலோ, மிருகங்களாலோ மரணம் விளையக்கூடாது என்பது போன்ற அநேகவரங்களைப் பெற்றான். அதனால் அவன் கர்வம் மிகுந்து, மூன்று உலகங்களையும் தீனப்படுத்திக் கொண்டான். இந்திரன், வருணன், ஆதித்தன், வாயு, அக்கினி, சந்திரன், யமன் முதலியோரது அதிகாரங்களைத் தனது கைவசப்படுத்திக் கொண்டான். வேள்விகளில் அவர்களுக்குரிய அவிர்ப்பாகங்களையும் தானே கைக்கொண்டான் மூன்று உலகங்களையும் சாதிதேச்காரமாய் ஆண்டு வந்தான். அப்போது இந்திரன் முதலிய தேவர்கள் அவனுக்குப் பயந்து சுவர்க்கலோகத்தை விட்டு, மானிட வேடம் பூண்டு பூவுலகில் சஞ்சரித்தார்கள். இந்தவிதமாக இரணியகசிபு மூன்று உலகங்களையும் ஏகச்சக்கிராதிபதியாக மிகவும் அகங்காரத்தோடு ஆண்டு வந்தான். கந்தர்வர்கள் கீதம் பாட, சித்தசாரணர் மிருதங்கம் முதலிய வாத்தியங்களை, வாசிக்க தேவலோகத்து அப்சர மங்கையர் நடனமாட, ஸ்படிக மயமும் அப்ரகசிலா மயமுமான அதிவுன்னதமான அழகிய உப்பரிகையில் இரணியகசிபு மிகவும் மகிழ்ச்சியோடு, மதுபானம் அருந்திய வண்ணம், மனதுக்கிச்சையான சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருந்தான். அவன் அனைவருக்கும் தானே தலைவன் தானே எல்லாம் தானே சர்வ வல்லமை பொருந்திய ஈசுவரன் என்று அகப்பாவம் கொண்டு தன்னைத் தவிர வேறு எதையும் வணங்கக்கூடாதென்றும் கட்டளை பிறப்பித்திருந்தான். அவனுக்குப் பிரகலாதன் என்று ஒரு குமாரன் இருந்தான். அவன் பாலியத்தில் உபாத்தியாயரின் வீட்டிலிருந்து, பாலர் படிக்கவேண்டிய படிப்பைப் படித்துக் கொண்டிருந்தான்.

ஒருநாள் பிரகலாதன் தன் ஆசிரியரோடு, தன் தந்தையிடம் வந்து, வணங்கி நின்றான்; அப்போது மிகவும் தேஜஸோடு விளங்கும் தன் குமாரனை அசுர மன்னன் இரணியகசிபு வாரியணைத்துக் கொண்டு மனம் மகிழ்ந்து, குழந்தாய்! உன் குருநாதர் இத்தனை நாட்களாய் அதிக முயற்சியுடன் உனக்குச் சொல்லிக் கொடுத்த விஷயங்களின் சாராம்சத்தைச் சொல் பார்க்கலாம் என்றான். உடனே பிரகலாதன் பக்திச்சிரத்தையோடு, என் மனதில் இருக்கும் சாராம்சத்தைக் கூறுகிறேன் கேளுங்கள். ஆதிமத்தியாந்தரகிதனும் அஜனுமாகி விருத்தியும் க்ஷயமும் இல்லாமல், சர்வபூத அந்தராத்மாவாய் சிருஷ்டியாதிகளுக்கு காரணங்களான யாவற்றுக்குமே காரணமாய், எப்பொழுதுமே ஆனந்தசொரூபமாய் விளங்குகிற ஸ்ரீவிஷ்ணுவான அச்சுதனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன்! என்றான். குமாரனின் அந்த வார்த்தையைக் கேட்டதும் இரணியகசிபுவுக்குக் கோபம் மூண்டது. அவன் கண்கள் சிவந்தன, உதடுகள் துடிதுடித்தன. அவன் பயங்கரமான ரூபமடைந்து தன் புத்திரனின் குருவைப் பார்த்து, ஏ தர்ப்புத்தியுள்ளவனே! நிசாரமும் சத்துரு பட்ச துதியுமான இந்த சுலோகத்தை என் பாலகனுக்குச் சொல்லிக் கொடுத்த, என்னை அவமானஞ் செய்யலாமா? என்று கேட்டான். அதனால் ஆசிரியர் பயந்து நடுங்கி இரணியகசிபை நோக்கி, தைத்ய ஈசுவரா! கோபிக்க வேண்டாம். உமது குமாரன் நான் உபதேசித்த விதமாகப் படிக்கவில்லை! என்றார். உடனே இரணியகசிபு தன் பாலகனை நோக்கி, பிரகலாதா! உன் உபாத்தியாயர் இப்படி உனக்கு உபதேசிக்கவில்லை என்று சொல்கிறாரே, இப்படி யார் உனக்குப் போதித்தார்கள்? என்று சினத்துடன் கேட்டான். பிரகலாதனோ புன்முறுவலுடன் தன் தந்தையைப் பார்த்து ஐயா எவன் சர்வ பூதங்களின் இதயத்திலே இருக்கிறானோ, அந்த ஸ்ரீவிஷ்ணுவே சகல ஜனங்களுக்கும் புத்தியைக் கற்பிப்பவன் பரமாத்வான அந்தத் தேவனையன்றி வேறு யார் கற்பிப்பவன் இருக்கிறான்? என்றான்.

இரணியனுக்குக் கோபம் முற்றியது. அவன் தன் சின்னஞ்சிறு பாலகனான பிரகலாதனைக் கடிந்து நோக்கி, துர்புத்தியுள்ளவனே! உலகத்திற்கே ஈசுவரனான என் கண் முன்னாலேயே பயமின்றி நின்று வேறு எவனையோ அடிக்கடி பயமில்லாமல் துதிக்கிறாயே, அந்த விஷ்ணு என்பவன் யார்? என்று கேட்டான். எவனுடைய பரமார்த்த ஸ்வரூபம் இன்னதன்மையதென்று சொல்லக்கூடாமல் யோகீந்திரர்களுக்கும் தியான கம்மியமாக இருக்குமோ, எவனால் உலகமெல்லாம் உண்டாயிற்றோ எவன் விஸ்வமயனாக இருக்கிறனோ அந்தப் பரமேஸ்வரனே ஸ்ரீவிஷ்ணு என்று அறிவீராக! என்றான் பிரகலாதன். அதை எதிர்க்கும் விதமாக இரணியகசிபு துள்ளிச் சினந்து, மூடனே! யோகீஸ்வரனாக நான் இருக்கப் பரமேசுவரன் என்ற பெயர் வேறு ஒருவனுக்கும் உண்டோ? நீ நாசமடையப் போவதால் தான் என் முன்னாலேயே துணிந்து நின்று பலவிதமாக அன்னியனைத் துதிக்கிறாய்? என்று குமுறினான். பிரகலாதனோ அமைதியாக, தைத்யேசுவரனே! பரப்ரம்ம பூதனான ஸ்ரீவிஷ்ணுவே எனக்கும் உமக்கும் சகல பிரஜைகளுக்கும் நிலைப்படுத்துவோனும் சிருஷ்டிப்பவனுமாக இருக்கிறான். ஆகையால் நீங்கள் ஏன் கோபிக்கிறீர்கள்? கோபத்தை விட்டுச் சாந்தமாக இருங்கள் என்றான். அதை இரணியகசிபால் பொறுக்கமுடியவில்லை. துர்புத்தியுடைய இந்தச் சிறுவனின், இதயத்தில் எவனோ ஒரு பாபகர்மமுடையவன் பிரவேசித்து மோகத்தையுண்டாக்கியிருக்கிறான். அதனால்தான் இவன் இப்படிப்பட்ட கெட்ட வார்த்தைகளைப் பலவாறாகச் சொல்கிறான்! என்று உறுமினான். சர்வலோக வியாபகனான அந்த ஸ்ரீமகாவிஷ்ணு என் இதயத்தில் மட்டுமல்ல; சகல உலகங்களிலும் வியாபித்திருக்கிறார். அதனால் என்னையும், உம்மையும் மற்றுமுள்ள சகலரையும் அந்த விஷ்ணுவே அந்தந்தக் காரியங்களில் பிரவேசிக்கச் செய்கிறார் என்றான் பிரகலாதன். அவன் சின்னஞ்சிறு பையன் என்றே; தன் புத்திரன் என்றோ பாராமல் இரணியன் மிகவும் குரோதம் கொண்டு; தன் அருகில் இருந்த அசுரர்களை அழைத்து துராத்மாவான இந்த மூடனைக் குருவின் வீட்டிற்குக் கொண்டு போய் நன்றாகத் தண்டிக்கச் சொல்லுங்கள்! ஒரு துராத்மா இவனுக்குப் பகைவனை துதிக்கும்படிப் போதித்திருக்கிறேன்! என்று கட்டளையிட்டான். அதன் பிரகாரம் அசுரர்கள் பிரகலாதனைக் குருவின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கேயே அவனைத் தள்ளிவிட்டுப் போனார்கள். அங்கே பிரகலாதன் தன் குருவுக்குப் பணிவிடைகள் புரிந்து; கல்வி பயின்று வந்தான்.

சிறிது காலஞ்சென்ற பிறகு இரணியன் தனது மகனை அழைப்பித்து; மகனே பிரகலாதா! ஏதேனும் ஒரு சுலோகத்தைச் சொல்! என்றான். அதனால் பிரகலாதன் தன் தந்தையை நோக்கி, எவனிடத்திலிருந்து மூலப்பிரகிருதியும் சமஷ்டி ரூபமான ÷க்ஷத்ரக்ஞனும் உண்டானார்களோ; எவனிடத்திலிருந்து சராசரத்மகமான சகல பிரபஞ்சமும் ஜனித்தனவோ; அப்படிப்பட்ட சர்வதாரனப் பூதனான ஸ்ரீவிஷ்ணுதேவன் நமக்குப் பிரத்யட்சமாகக் கடவன்! என்றான். அதைக்கேட்டதும் இரணியன் அளவிலாத கோபங்கொண்டு அங்கிருந்த அசுரரை நோக்கி; இந்தத் துராத்மாவைச் சித்திரவதை செய்து கொல்லுங்கள்! இவன் பிழைத்திருப்பதால் யாதொரு பயனுமில்லை. இவன் தன் சார்புடைய இனத்தவருக்குத் தீங்கு செய்யத் தலைப்பட்டதால் இக்குலத்துக்கு நெருப்பு போல இருக்கிறான் என்று கட்டளை பிறப்பித்தான். உடனே அசுரர்கள் அநேகர் கூடி, பலவிதமான ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு, பிரகலாதனைத் தாக்கி வதைக்க முயன்றார்கள். அப்பொழுது பிரகலாதன் புன்முறுவலுடன், அசுரர்களே உங்களிடமும் என்னிடமும் உங்களுடைய ஆயுதங்களிலுங்கூட ஸ்ரீமந்நாராயணனே பரிபூரணமாய் நிறைந்திருக்கிறான் என்பது சத்தியம்! இந்தச் சத்தியத்தினாலே உங்கள் ஆயுதங்கள் என்மீது பாயாதிருக்கட்டும்! என்று சொன்னான். அப்படி அவன் சொல்லியுங்கூட அசுரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தடி, கத்தி, சூலசக்கரம் முதலிய ஆயுதங்களால் பிரகலாதனை வதைக்கலானார்கள். ஆயினும் பிரகலாதன் அவற்றால் சிறிதும் வேதனையடையாமல் விசேஷ காந்தியுடனே பிரகாசித்தான். அப்போது அவனது தந்தை இரணியன் அவனைப் பார்த்து, அடா துர்புத்தியுடையவனே! இனியேனும் எனது பகைவனைத் துதி செய்யாமல் இருந்தால் உனக்கு அபயங்கொடுக்கிறேன். அதிக மூடத்தன்மையை அடையாமல் சன்மார்க்கனாக இரு என்று புத்தி புகட்ட முயன்றான். அதை பிரகலாதன் ஏற்றுக்கொள்ளாமல், பிதாவே! எவனைச் சிந்திதகதவுடன் பிறப்பு, இறப்பு, மூப்பு முதலிய சமஸ்த பயங்களும் ஓடிப்போகுமோ, அத்தகைய பயங்களையெல்லாம் போக்கடிக்கும் அனந்தனான ஸ்ரீமகாவிஷ்ணு, எனது இதயத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும்போது எனக்குப் பயம் என்பது ஏது? என்று நிமிர்ந்து நின்றான்.

அதைப் பார்த்து இரணியன் அளவிலாத ஆங்காரம் கொண்டு மகா நாகங்களை அழைத்து, ஓ கொடிய பாம்புகளே! மிகவும் துர்புத்தியும் துர்நடத்தையுமுள்ள இந்தப் பையனை விஷச்சுவாலைகள் மிக்க உங்கள் பற்களால் கடித்து இப்போதே இவனை நாசமடையச் செய்யுங்கள்! என்று கட்டளையிட்டான்; உடனே தக்ஷகன் முதலான கொடிய பாம்புகளெல்லாம் உக்கிரமான விஷங்களைக் கக்கிக் கொண்டு பிரகலாதனின் சகல அவயவங்களிலும் கடித்தன. ஆனால் அந்தப் பாலகனோ ஸ்ரீவிஷ்ணுவிடம் தன் சிந்தை முழுவதையும் நிலைநிறுத்தியிருந்ததால் ஆனந்தப் பரவசமாகி அக்கொடிய பாம்புகள் தனது அறியாமல் இருந்தான். பிறகு விஷசர்ப்பங்களெல்லாம் தோல்வியடைந்து இரணியனிடம் சென்று அரசே எங்களுடைய பற்கள் ஒடிந்துவிட்டன. முடியிலிருக்கும் இரத்தினங்கள் வெடித்தன. படங்களிலே மகத்தான தூபம் ஒன்று உண்டாயிற்று. இதயம் நடுங்கியது. இவையெல்லாமல் அந்தப் பாலகனின் தேகத்தில் சிறிதும் சேதம் உண்டாகவில்லை. ஆகையால் எங்களிடத்தில் நீங்கள் கோபிக்காமல், இந்தக் காரியத்தை ஒழித்து வேறு ஒரு காரியத்தைக் கட்டளையிடுங்கள்! என்று கெஞ்சி விழுந்தன. இரணியன் அப்போதும் குரோதம் அடங்காமல் திக் கஜங்களைக் கூப்பிட்டு, ஓ! திசை யானைகளே! உங்களுடைய தந்தங்கள் ஒன்றோடு ஒன்று நெருங்கி மிகக் கெட்டியாகவும் உக்கிரமாயும் விளங்குகின்றன. அத்தந்தங்களினால்; அந்தத் துராத்மாவான பிரகலாதன் மீது பாய்ந்து, அவனைக் கொன்றொழியுங்கள். அரணியில் பிறந்த அக்கினியே அந்த அரணியை தகிப்பதுபோல தைத்திய குலத்தில் பிறந்த இந்த அதமன் தன் குலத்தையே நாசஞ்செய்பவனாக இருக்கிறான்! என்றான். உடனே திக்கஜங்கள் பிரகலாதனை பூமியிலே வீழ்த்தி பருவத சிகரங்களைப் போன்ற தங்களுடைய தந்தங்களை பிரகலாதன் மீது பாயவைத்து இடித்தன. அப்படி அவை பாயும் போது; கோவிந்த சரணாவிந்தங்களையே பிரகலாதன் தியானித்துக் கொண்டிருந்தானாகையால் அந்தப் பாலகனது மார்பிலே யானைகளின் தந்தங்கள் பட்டதும்; அவை முறிந்து பொடிப்பொடியாய்ப் போயின.

அப்போது பாலகன் பிரகலாதன் தன் தந்தை இரணியனைப் பார்த்து; தந்தையே! வைரத்தைவிட உறுதியான திசையானைகளின் தந்தங்கள் என் மீது பட்டுப் பொடிப்பொடியானது என்னுடைய பலத்தால் அல்ல. பாபங்களையெல்லாம் நாசஞ்செய்யவல்ல ஸ்ரீஜனார்த்தனருடைய ஸ்மரண மகிமையினால் தான் என்பதை நினைப்பீராக! என்று சொன்னான். அதைக்கேட்டதும் இரணியன் அதிக ஆத்திரமடைந்து திக்கஜங்களை அப்பால் விரட்டிவிட்டுத் தன் அசுரர்களை நோக்கி, தைத்தியர்களே! பாபகர்மனான இந்தப் பாலகனைக் கொன்றொழிக்காமல் விடக்கூடாது. காலாக்கினிக்கு ஈடான மஹா அக்கினியை வளர்த்து அதிலே இவனைப் போட்டு எரியுங்கள் என்று சொல்லிவிட்டு; வாயுதேவனான காற்றைக் கூப்பிட்டு மாருதனே! அந்தப் பெரு நெருப்பை உனது காற்றால் ஜ்வலிக்கச் செய்! என்று கட்டளையிட்டான். அசுரர்களோ மலைபோல் விறகுகளைக் குவித்து; அந்தக் குவியலுக்குள் பாலகனான பிரகலாதன் மறையும்படி அவற்றினுள்ளே அமுக்கி மூடிவைத்து, நெருப்பை மூட்டிக் கொளுத்தினார்கள். அப்போது பிரகலாதன் தன் தந்தையை நோக்கி, பிதாவே! பிராண்ட மாருதத்தால் ஜ்வலிக்கப்பட்டும்; இந்த அக்கினி சிறிதளவுகூட என்னைத் தகிக்கவில்லை. மேலும் நான் கிடக்கும் இந்த நெருப்பு மயமான விறகுக் குவியலோ, பத்துத் திசைகளிலும் நல்ல தாமரை மலர்களை நிறைவித்து அதிகக் குளிர்ச்சியாகச் செய்யப்பட்டவை போலிருப்பதையே நான் உணர்கிறேன்! என்று சிரித்தான்.

இது இப்படியிருக்கும்போது, இரணியனுக்குப் புரோகிதர்களும், சுக்கிரனுடைய குமாரர்களுமான சண்டாமர்க்கர் என்பவர்கள் இரண்யனை நல்வார்த்தைகளால் துதித்து; அசுர ஈஸ்வரனே உமக்கு விரோதிகளான தேவர்கள் மீது உமது கோபத்தைச் செலுத்த வேண்டுமே தவிர உமது சொந்த மகனான இந்தப் பாலகனிடம் உமது கோபத்தையெல்லாம் செலுத்துவது முறையல்ல! இவன் இனிமேலும் சத்துருபட்ச ஸ்துதி செய்யாமல் இருக்கும்படி நாங்கள் இவனுக்குக் கற்பிக்கிறோம்! பாலியப்பருவம் சகல துர்க்குணங்களுக்கும் இருப்பிடமானபடியால் பாலகனான இந்தக் குமாரனிடத்தில் கோபிக்க வேண்டாம். நாங்கள் போதிப்பதாலும் இவன் ஹரிபக்தியை விடாமல் இருப்பானாயின் இவனை வதைப்பதற்கான துர்ச்செயல்களை நாங்களே செய்கிறோம்! என்று வேண்டிக்கொண்டார்கள். அதனால் இரணியன் சிறிது மனமிளகித் தன்னுடைய அசுரர்களை ஏவி மகாக்கினியின் மத்தியில் போட்டிருந்த பிரகலாதனை வெளியே இழுத்துவரச் செய்தான். மறுபடியும் குருகுலத்துக்கே போகும்படி பிரகலாதனுக்கு இரணியன் கட்டளையிட்டான். அதன்பிறகு, குருகுலத்தில் பிரகலாதன் வசித்துக் கொண்டிருந்தான். அங்கே அவனுடைய குருவானவர் பாடம் போதிக்காத சமயங்களில் பிரகலாதன் தன்னோடு படிக்கும் தைத்ரிய பாலர்களான அசுரச் சிறுவர்களைக் கூப்பிட்டு உட்காரவைத்துக் கொண்டு அவர்களுக்கு விஷ்ணு பக்தியையும், உண்மையான ஞானமார்க்கத்தையும் உபதேசித்து வரலானான். ஓ தைத்திய பாலர்களே! பரமார்த்தமான விஷயத்தை உங்களுக்கு உபதேசிக்கிறேன் கேளுங்கள். என் வசனங்களைப் பொய்யாக என்ன வேண்டாம். ஏனென்றால் நான் பொருள்மீது ஆசை வைத்து இதை உங்களுக்கு உபதேசிக்க வந்தவனல்ல. ஆகையால் நான் சொல்வதை நம்பிக் கேளுங்கள். மனிதன் பிறந்தவுடன் பாலியமும், யவனமும், அதற்குப் பிறகு தடுக்கமுடியாத கிழத்தன்மையும் வந்து, கடைசியில் மிருத்யுவான மரணத்திற்கே வசமாவான். தைத்ய பாலர்களே! மனிதர்களிடம் இவையெல்லாம் உண்டாவதை நீங்களும் நானும் கண்ணெதிரில் கண்டிருக்கிறோம். இதுமட்டுமல்ல. மரணமடைந்தவனுக்கு மீண்டும் பிறவியுண்டாவதும் மெய்யேயாகும். இதற்கு சுருதி ஸ்மிருதி முதலிய சாஸ்திரங்களே பிரமாணங்களாம்! அவற்றை நீங்களும் கற்றறிந்திருக்கிறீர்கள். இந்தத் தேகம் பிறப்பதற்குக் காரணம், பூர்வ ஜன்மத்தில் செய்த பாவ புண்ணியங்களோடு கூடிய ஸ்திரமான ஆன்மாவேயல்லாமல் வேறு காரணம் அகப்படாமையால் சுக்கில சுரோணிதங்களுக்கு ஆளாவதான ஆன்மாவே முக்கிய காரணம். ஆகையால் மனிதனுக்கு கர்ப்பவாசம் முதல் சரீரம் விழும் வரையிலும், சர்வ அவஸ்தையிலும் துக்கம் ஒன்று தான் நிச்சயம்! அன்னபானாதிகளாலே பசியும் தாகமும் தீருவதும், அந்தந்த உபாயங்களாலே சீத உஷ்ணாதி உபத்திரவங்கள் விலகுவதையுங் கொண்டு அதையே சுகம் என்று நினைப்பது உண்மையில் அவிவேகமே ஆகும்!

அது எப்படியெனில், அன்னபானாதிகளைச் சம்பாதிப்பதற்காகச் செய்யும் பிரயாசையினால் உண்டாகும் துக்கங்கள் சொல்லத்தரமல்ல. இந்த அன்னாதிகளால் அஜீர்ணமாகும்போது எத்தனை துக்க ஹேதுவாகின்றன? இதற்கு உதாரணம் கேளுங்கள், வாத தோஷங்களால் மரத்திருக்கிற அங்கங்களையுடைவர்களுக்கும், வதைப்பதாலேயே தேகசுகத்தை விரும்புகிறவர்களுக்கும், அவர்களுடைய உடம்பைக் குத்துவதும், கசக்குவதும், பிசைவதும், மிதிப்பதும், அடிப்பதுமே சுகமாகத் தோன்றுகின்றன; காமமோகிகளாக இருப்பவர்களுக்கோ ஊடலும் கூடலும் காமினீ சரண தாடனமுமே சுகமாகத் தோன்றும் இப்படியாகத் துக்க ஏதுக்களில் சுகப்பிராந்தி உண்டாயிருப்பதைக் காண்பீர்கள். இதுபோலவே, மாமிச சிலேஷ்ம, மலமூத்திராதி மயமான உடலில் சவுந்தர்ய, சவுகுமார்ய, சவுரப்பிய காந்தி முதலான குணங்கள் உண்டென்று நினைப்பதும் வெறும் மனப்பிராந்தியே தவிர வேறல்ல. ரத்தமாமிச, சிலேஷ்ம மலமூத்திர மச்சஸ்நாயு அஸ்திகளின் சமூகமாக இருக்கும் தேகத்தின் மீது பிரியம் வைப்பவன் நரகத்திலேயும் பிரியம் வைக்கலாம். குளிரினால் நெருப்பும், தாகத்தினால் தண்ணீரும், பசியினால் அன்னமும் சுகமாகத் தோன்றுகின்றன. குளிரும் தாகமும் பசியும் இல்லாதபோது அக்கினியும் தண்ணீரும் அன்னமும் துக்க ஏதுக்களாகவே இருக்கும். பிள்ளைகளே! மனிதன் எவ்வளவு தனதானிய ரத்னாதிகளைக் கிரகித்துக் கொள்கிறானோ அவ்வளவையும் துக்கம் என்று நினைக்க வேண்டும். மனிதனின் மனத்துக்குப் பிரியமான புத்திர, மித்திர களத்திராதி சம்பந்தங்கள் எத்தனை சம்பாதிக்கிறானோ அத்தனையும் இதயத்தில் தைத்த ஆணிகளைப் போலவே இருக்கும்! மனிதன் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவனுடைய இதயத்தில் இருக்கிற தனதானிய ரத்னாதிகளை நாசமும், அக்கினியுபாதையும் கோரபயமுமில்லாமல் ஸ்திரமாய்ப் பாதித்துக்கொண்டேயுள்ளன. வீட்டில் கள்வர் பயமில்லாமல் இருந்தாலும், இருதயத்தில் பொருள்களிடத்துள்ள ஆசையால், அவை உண்டாகிக்கொண்டே இருக்கின்றன. மேலும் பிறக்கும்போது அனுபவிக்கிற துக்கத்தைப் போலவே மரணத்திலும் துக்கம் உண்டாகிறது. பிறகு, யமவாதனையிலும் மகாதுக்கமே உண்டாகும். கர்ப்பவாசத்தில் கொஞ்சமேனும் சுகம் இருக்குமா என்று நீங்களே சொல்லுங்கள். எனவே எங்குமே சுகமில்லை ஆகையால் ஜகம் எங்கும் துக்கமயமாகவே இருக்கிறது.

இப்படியாகச் சகல துக்கங்களுக்கும் இருப்பிடமான சம்சார சாகரத்தை ஸ்ரீமந்நாராயணன் ஒருவனே கடக்கச் செய்பவன் உங்களுக்கு நான் உண்மையையே சொல்கிறேன். நாம் பால்யரானதால் விரகதி மார்க்கத்திற்குத் தகுதியற்றவர்கள் என்று நினைக்கவேண்டாம். பால்ய, யௌவன ஜரா, மரணாதி அவஸ்தைகள் உடலுக்கேயன்றி ஆத்மாவுக்கு இல்லை. உடலில் ஆன்மாதான் ஜனன மரணாதி ரகிதனாய், சாஸ்வதனாக இருக்கிறான். உலகத்தில் மனிதன், தன்னுடைய பாலப்பருவம் கடந்த பிறகு யவ்வன வயதிலே ஆன்மாவுக்கு இதஞ்செய்து கொள்கிறேன் என்றும், யவ்வனத்தை அடைந்தபோது வயோதிகத்திலே உயர்ந்த ஞானத்தைப் பெற்றுக்கொள்கிறேன் என்றும் நினைப்பான். பிறகு வயது முதிர்ந்து, மூப்புவந்து இந்திரியங்கள் பலவீனப்பட்டுப் போகும் போது, இனிமேல் என்ன செய்வேன்? திடமாக இருந்தபோதே ஆத்தும இதஞ்செய்துகொள்ளாமல் மூடனாகப் போனேனே! என்று கவலைப்படுவான். இதுவுமல்லாமல் துராசார மோகங்கொண்டு, ஒருநாளும் உயர்வான மார்க்கத்துக்கு உரியவனாக மாட்டான். எப்படியென்றால், பலவித கிரீடா விளையாடல் விசேஷங்களால் பாலியத்தையும், சந்தன குசுமவனிதையர்களின் பரவசத்தினாலே வாலிபத்தையும், அசக்தியினாலேயே வயோதிகத்தையும் போக்கிக் கொண்டு, அஞ்ஞானிகள் தங்கள் வாழ்நாளை வீணாக்கிக் கொள்கிறார்கள். ஆகையால் கங்கை நதியின் அருகிலிருந்தும் வண்ணான் தனக்குத் தாகமெடுத்தவுடன் தண்ணீரைக் குடிக்காமல், இந்தத் துணியைத் துவைத்தாகட்டும் இந்த ஆடையைத் துவைத்தாகட்டும் என்ற காலத்தைப் போக்குவதைப் போலவும், செம்படவன் இந்த மீனைப் பிடித்தாகட்டும் என்று பொழுதைப் போக்குவதைப் போலவும், எதிர்காலத்தை நினைத்து தற்காலப் பருவத்தைப் போக்கக்கூடாது. பாலிய, யவ்வன, ஜரா மரணாதி அவஸ்தைகள் உடலுக்கு உண்டே தவிர ஆன்மாவுக்கு இல்லை என்று நினைத்து விவேகமுடையவர்களாய், நீங்கள் உஜ்ஜீவிக்கும்படியான முயற்சிகளைச் செய்யுங்கள். இதுவே விரக்திமார்க்கம்! இது அசத்தியம் என்று நினைக்காதீர்கள் எப்போதும் சம்சார பந்த நிவாரணியான ஸ்ரீமந்நாராயணனையே நினையுங்கள். அந்த எம்பெருமானை நினைப்பதில் என்ன கஷ்டம் இருக்கிறது? அந்தத் திருப்பெயரை ஸ்மரித்தவுடனேயே சகல பாபங்களும் நாசமாய் சகல சுபங்களும் உண்டாகும். ஆகையால் அந்த மகாவிஷ்ணுவையே நினைத்து மகாத்துமாக்கள் உஜ்ஜீவிப்பார்கள். சர்வபூதந்தர் பாமியான நாராயணனிடத்தில் உங்களுக்கு நட்புணர்வு உண்டாகட்டும்! அவனது லீலா சாதனங்களான சேதனங்களிடத்தில் சினேகஞ்செய்யுங்கள். அதனால் மோகம் முதலிய சகல கிலேசங்களும் விலகும் ஆத்தியாத்து மாகாதி, தாபத்ரயத்தினால் ஜகம் யாவும் துன்பப்படுபவை. ஆகையால் மிகவும் பரிதாபப்பட வேண்டிய பிராணிகளிடத்தில் எவன்தான் துவேஷத்தை வைப்பான்? ஒருவேளை செல்வம், கல்வி, பலம் முதலியவற்றில் தன்னைவிட சகல ஜீவர்களும் சகல பிராணிகளும் செழிப்பாக இருப்பதாகவும், தான் ஒருவனே அப்படியில்லாமல் சக்தியீனனாக இருப்பதாகவும் மனிதன் நினைத்தானானால் அப்போதும் துவேஷம் பாராட்டாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். துவேஷஞ் செய்வதால் ஹானியே ஏற்படும் ஆகையால்; மயித்திரி; கருணை; முதிதை; உபேஷை என்ற மனத்தெளிவின் காரணங்களை மந்திமாதிகாரிகளின் மதத்தை அனுசரித்து உங்களுக்குச் சொன்னேன். மந்திமாதிகாரிகள் என்போர் உலகத்தைப் பகவானின் சொரூபமாக நினைக்காமல் வேறாக நினைக்கிற சாங்கியராவர். இனி உத்தமாதிகாரிகளின் கருத்தைக் கூறுகிறேன் கேளுங்கள்.

சகல பிரபஞ்சமும் சர்வாத்மாவான ஸ்ரீமந்நாராயணருடைய சொரூபம் என்று நினைத்து, ஞானமுள்ளவர்கள் சகல பூதங்களையும் உன்னைப்போலவே அபேதமாக நினைக்கவேண்டும். ஆகையால், நானும் நீங்களும் அசுர சுபாவத்தை விட்டுவிட்டு, பெரும் ஆனந்தத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்வோமாக. சூரியன், சந்திரன், வருணன், இந்திரன், வாயு, அக்கினி முதலானவர்களாலே ஒருபேறுமில்லை. இதற்கு என்ன செய்வது என்றால், தேவ, அசுர; யக்ஷ;ராக்ஷச, கின்னர பன்னகாதிகளாலும் மனுஷ்ய; பசு; பக்ஷி; மிருகங்களாலும் அதிகாரம்; ஜ்வரம், குன்மம், முதலிய மகாரோகங்களாலும் ராக, துவேஷ, லோப, மோக மதமாச்சாரியங்களாலும் எது நாசஞ்செய்யப்படாததோ அப்படிப்பட்ட பரமானந்தத்தைப் பெறுவதற்கு ஸ்ரீகேசவனது திருவடிகளில் இதயத்தை நிலைநிறுத்த வேண்டும். இதனால் சுகமடையலாம். ஆகையால் அசாரமான சம்சார மார்க்கத்தில் உண்டாகும் தேவ மனுஷ்யாதி சரீரங்களுக்கு உரிய ஸ்வர்க்க போகங்களுக்கு ஆசைப்பட வேண்டாம். உங்களுக்கு நான் வலுவில் வந்து நன்மையானவற்றையே சொல்கிறேன். சர்வபூதங்களிடத்திலும் சமத்துவ புத்தியுடன் இருங்கள். சர்வபூத சமத்துவந்தான் அச்சுதனுக்குச் செய்யும் ஆராதனையாகும். சர்வ நாதனான விஷ்ணுபெருமான் பிரசன்னமானானேயாகில் துர்லபமான பொருள்கள் என்னதான் இருக்கமுடியும்? ஆனாலும் தர்மார்த்த கர்மங்களைப் பிரார்த்திப்பது நல்லதன்று. அவை அற்பங்கள்! அவைகளினால் பயன் என்ன? மோட்சத்தையும் விரும்பவேண்டாம். ஏனென்றால் நன்றாய்ப் பழுத்த மாமரத்தின் அருகே சென்றவனுக்கு தற்செயலாய்ப் பழங்கிடைப்பது போல பரப்பிரமமான அனந்தன் என்ற மகாகல்ப விருட்சத்தை அணுகியவனுக்கு மோக்ஷõனந்தம் என்கிற பலன் தற்செயலாகவே கிடைத்துவிடும், இதில் சந்தேகமில்லை என்று பாலகன் பிரகலாதன் கூறினான்.
16. பிரகலாத சரித்திரப் பிரச்னை

பராசரரே! மனு வமிசத்தில் பிறந்த உத்தானபாதன், துருவன் முதலிய மாமன்னர்களின் வரலாறுகளையும் அனாதி புருஷனான ஸ்ரீவிஷ்ணுவே ஜகத் காரணமான பிரமம் என்ற பொருளையும் தங்களிடம் விளக்கமாகக் கேட்டறிந்தேன். ஆனால் தைத்ய புங்கவனான பிரகலாதனே; அக்னியும் ஆயுதங்களும் அழிக்கமாட்டாமற் போயின என்றும் சமாகித சித்தனான அந்தத் தைத்திய உத்தமன் மலைகளினால் அமுக்கப்பட்ட போதிலும் மரணமடையாதிருந்தான் என்றும் அந்தப் பிரகலாதாழ்வானின் பெருமைகளையெல்லாம் நீங்களே புகழ்ந்து கூறினீர்கள்! ஆகையால் தத்துவஞானமும் பகவத் பக்தியுமுடைய பிரகலாத மகானுபாவனின் ஒப்பற்ற சரித்திரத்தை நான் கேட்க விரும்புகிறேன். அந்த மகதர்மிஷ்டனை; அசுரர்கள் ஏன் ஆயுதத்தால் புடைத்தார்கள்? பாரங்களால் கட்டிச் சமுத்திரத்தில் ஏன் போட்டார்கள்? திக்கஜங்களைக் கொண்டு அவனை ஏன் அவர்கள் துன்புறுத்த வேண்டும்? அவனை ஏன் உயரத்திலிருந்து கீழே தள்ளினார்கள்? அவனை ஏன் அக்கினியில் போட்டு எரித்தார்கள்? அவன் மீது ஏன் சர்ப்பங்களை கடிக்கவிட்டார்கள்? இரணியகசிபுவின் சமையற்காரர், அன்னத்தில் விஷத்தை ஏன் கலந்து வைத்தார்கள்? இவையெல்லாம் ஏன் நிகழ்ந்தன? அந்தப் பரமபாகவதரான பிரகலாத ஆழ்வான் சரித்திரத்தை நான் கேட்க விரும்புகிறேன். இந்தச் செய்கைகள் எதனாலும் பிரகலாதன் மரணமடையாமல் இருந்தது ஆச்சரியமல்ல! ஏனென்றால் ஸ்ரீவிஷ்ணுவின் சரணாவிந்தங்களிலே சித்தத்தை நிலைபெற வைத்தவனை நிக்கிரகிக்க வல்லவன் இந்த ஜகத்திலேயே இல்லையே? ஆனால் தங்கள் குலத்தில் பிறந்த பிரகலாதன், ஸ்ரீகேசவனை ஆராதனை செய்து அசுரரிடையே பகைமை ஏற்படுத்தியதா? அதுவும் விஷ்ணு பக்தரான பிரகலாதாழ்வானுக்கு அசுரர்கள் ஏன் அத்தகைய கொடுமைகளைச் செய்தார்கள்? இவற்றையும் பிரகலாதாழ்வானின் பிரபாவங்களையும் கேட்பதற்கு நான் மிகவும் ஆவல் கொண்டிருக்கிற÷ன். தாங்கள் கிருபை கூர்ந்து அதைக் கூறியருள வேண்டும்! என்று மைத்ரேயர் கேட்டார்.
விஷ்ணு புராணம் முதல் அம்சம்(பகுதி-3)

15. கண்டு மகரிஷியின் காதலும் தக்ஷ வமிசமும்
பராசர முனிவர் தொடர்ந்து கூறலானார் : மைத்ரேயரே கேளும்! பிரசேதசர்கள் கடல் நீரில் மூழ்கிக் கடுந்தவஞ் செய்துவந்த காலத்தில் அவர்களது தந்தையான பிராசீனபரிஹி, நாரத முனிவரின் உபதேசத்தைப் பெற்று அரசாட்சியைத் துறந்து, யோக நிஷ்டை புரியலானார். அதனால் அராஜகமாகி ஜனங்கள் பயிர்த்தொழிலைக் கைவிட்டனர். ஆகையால் பூமியில் உண்டான விருட்சங்களில் கிளைகள் அதிகமாகி மிகவும் நெருங்கிப் பூமியையும் வானத்தையும் மூடிக்கொண்டன. அதனால் காற்றுக்கூட வீச முடியாமற் போயிற்று. இவ்விதமாக மரங்கள் எல்லாம் வானளாவ இருந்ததால், பதினாயிரம் ஆண்டுகள் காற்றுஞ் சஞ்சரிக்க இடமில்லாமல் இருந்தது. சகல ஜனங்களும் அசையவும் முடியாமல் நாசமடைந்தனர். பிறகு பிரசேதசர்கள் ஜலத்திலிருந்து வெளிப்பட்டு வந்து, மரங்கள் வளர்ந்து உலகை மூடியிருப்பதால் பிரஜாக்ஷயமுண்டானதைக் கண்டு மிகவும் கோபங்கொண்டார்கள். உடனே, தங்கள் முகங்களிலிருந்து வாயுவையும், அக்கினியையும் உண்டாக்கினார்கள். அந்தப் பெருங்காற்று, மரங்களை எல்லாம் வேரோடு வீழ்த்தியது. காலாக்கினிக்குச் சமமான அந்த அக்கினி அவற்றை எரித்தது. இதனால் மரங்கள் யாவும் ஏககாலத்தில் நாசமாகத் துவங்கின. ஆங்காங்கே ஒன்றிரண்டு மரங்கள் நின்றன. தவிர, மற்றவையெல்லாம் நாசமடைந்தன. அதைக்கண்டு ஓஷதிகளுக்கு அதிபதியான சந்திரன் கலங்கி, பிரசேதசர்களிடம் வந்து கூறலானான். அரசகுமாரர்களே; நீங்கள் கோபத்தை விட்டு என் வார்த்தையைக் கேளுங்கள். மரங்களுக்கும் உங்களுக்கும் இடையே ஓர் உடன்பாடு செய்து நட்பை ஏற்படுத்துகிறேன். மரங்களுக்கெல்லாம் மகளான மாரிஷை என்ற கன்னியை, நான் எதிர்காலத்தையுணர்ந்து எனது கிரணங்களால் வளர்த்து வந்திருக்கிறேன். ஜகன்மோகன ரூபலாவண்ய மிகுந்த அந்தப் பெண் மாரிஷையை உங்களுக்குப் பாரியையாகத் தருகிறேன். அவள் உங்கள் வமிசத்தை அபிவிருத்தி செய்யத்தக்கவள். அந்தப் பெண்ணிடம் உங்கள் தேஜஸின் பாதியினாலும், எனது தேஜஸின் பாதியினாலும், மகா பண்டிதனான தக்ஷன் என்ற பிரஜாபதி பிறப்பான். அவன் அக்கினிக்கு ஈடான தேஜஸையுடையவனாக, வெகுவான பிரஜாவிருத்தி செய்வான். அந்தக் கன்னிகையின் உற்பத்தி விவரத்தைக் கூறுகிறேன்; கேளுங்கள்.

பூர்வத்தில் வேதசாஸ்திரங்களை நன்றாக அறிந்தவரான கண்டு என்ற மாமுனிவர்; கோமதி என்ற அழகிய நதிகரையில் அருந்தவஞ்செய்து கொண்டிருந்தார். இந்திரன் அவருடைய தவத்தைக் கெடுக்க நினைத்து பிரமிலோசை என்ற தேவலோக மங்கையை அனுப்பினான். அந்தப் பொற்கொடியாள் மாமுனிவரின் ஆசிரமத்துக்கு வந்து மனோகரலாவண்ய ஆடல்களால் அவரை மோகிக்கச் செய்தாள். கண்டு மாமுனிவர், அவளுடைய அழகில் மனங்கலங்கியவராய், அவளுடன் கூடி மந்திர பருவதத்தில் நூறு ஆண்டுக்காலம் கிரீடித்துக் கொண்டிருந்தார். பிறகு அந்தப் பெண்ணரசி, முனிவரை நோக்கி பிராமண உத்தமரே! நான் இனி தேவலோகம் போகிறேன். எனக்கு விடைகொடுத்து அனுப்புங்கள் என்றாள். கண்டுமா முனிவரோ அவளைப் பிரிவதற்கு மனமில்லாமல், நல்லவளே! நீ இன்னும் சில நாட்கள் இங்கேயே இருக்க வேண்டும் என்று கெஞ்சினார். அதனால் பிரமிலோசையாள்; மீண்டும் நூறு ஆண்டுகள் அம்முனிவரின் இஷ்டபோகங்களுக்கு இசைந்து அவருக்குத் திருப்தியுண்டாக்கினாள். பிறகு, அவள் அவரை நோக்கி; மகாத்மாவே! நான் சுவர்க்கத்திற்குப் போகிறேன். உத்தரவு கொடுங்கள் என்றாள். அப்போதும் கண்டுமா முனிவர் அவளைப் பிரிய மனமில்லாமல் அடி; கட்டழகி போகலாம் இரு! என்றார். அதன்படியே தெய்வப்பெண் பிரமிலோசையும் மீண்டும் நூறு ஆண்டுகளுக்கு மேல் அவருடன் இருந்து பிறகு ஒருநாள் அவரை நோக்கிப் புன்னகையுடன் நான் இனியாகிலும் தேவலோகம் செல்ல அனுமதி கொடுங்கள் என்று கேட்டாள். அப்போது கண்டு முனிவர் காமப் பரவசத்தால், அவளை இறுகக் கட்டியணைத்துக் கொண்டு, அழகிய புருவமுடையவளே! இன்னும் ஒரு கணம் இரு, நீ போய்விட்டாய் என்றால் நெடுங்காலம் வரமாட்டயல்லவா? என்றார். கட்டழகி பிரமிலோசை தன்னை முனிவர் சபித்து விடுவாரே என்று பயந்து, சிறிது நாள் குறைய இருநூறு ஆண்டுகள் அவருடன் கூடியிருந்து, பிறகு மீண்டும் தேவருலகம் செல்ல வேண்டும் என்று முனிவரிடம் விடை கேட்டாள். அப்போதும் கண்டுமாமுனிவர் போகத்தில் திருப்தியடையாமல், மேலும் சிலகாலம் தன்னுடன் இருக்கும்படி வேண்டினார். இவ்விதம் பிரமிலோசை பிரிவுவிடை கேட்கக் கேட்க இன்னும் சில நாள் இரு! சிலநாள் இரு! என்று கண்டுமாமுனிவர் சொல்லிக் கொண்டேயிருந்தார். பிரமிலோசையும் சாப பயத்தாலும் தாட்சண்யத்தாலும் அவருடைய பரிதாப நிலையைக் கண்டு இரங்கியும், தன்னைப் பிரிந்தால் அவர் மிகவும் வருந்தி வாடுவாரே என்ற பச்சாதாபத்தாலும், அவரைப் பிரிய மனமில்லாமலும், பிரிவதற்கு மார்க்கமில்லாமலும் தவித்தாள். எத்தனையோ வகையான இன்பங்களை எத்தனையோ ஆண்டுகள் அனுபவித்த கண்டுமாமுனிவரின் காதல் நாளுக்கு நாள் வலிமை பெறலாயிற்று.

இப்படியிருக்கும் போது ஒரு சமயம் கண்டுமாமுனிவர், அவசர அவசரமாக எழுந்து, தமது ஆசிரமத்தை விட்டு எங்கோ புறப்பட்டுச் சென்றார். அப்போது தெய்வ அழகி பிரமிலோசை அவரைத் தடுத்து, இப்போது நீங்கள் இவ்வளவு அவசரமாக எங்கே போகிறீர்கள்! என்று கேட்டாள். அதற்கு முனிவர், பெண்ணே! மாலைப்பொழுது முடிந்து சந்தியா காலம் நெருங்கி விட்டது. ஆகையால் நான் சந்தியாவந்தனம் செய்யப்போகிறேன். அப்படிச் செய்யவில்லையென்றால் என் கடமையில் ஒன்றை நிராகரித்ததாகி விடும் என்றார். அதைக் கேட்டதும் பிரமிலோசை புன்னகையுடன் அவரை நோக்கி, சர்வ தர்மக்ஞரே! சந்திப்பொழுது விரைவது இப்பொழுது தானா உங்களுக்குத் தெரிந்தது. எத்தனையோ ஆண்டுகளெல்லாம் உங்களுக்கு ஒரே நாளாக இருப்பது அனைவருக்குமே வியப்பைத் தருமே? இதை யாரிடத்திலாவது சொல்லிப்பாரும்! என்றாள். அவளை நோக்கி முனிவர், பெண்ணே! நீ அதிகாலையில் நதிக்கரையிலிருந்து வந்தாய். அப்போது உன்னைப்பார்த்த நான் என் ஆசிரமத்திற்கு அழைத்து வந்தேன். இப்போது இன்றைய நாள் முடிந்து, சாயங்காலமானபடியால் சந்தியாவந்தனம் செய்யப் போகிறேன். இதற்கு நீ ஏன் என்னைப் பரிகாசம் செய்கிறாய்? உண்மையைச் சொல் என்றார். அதற்குப் பிரமிலோசை, பிராமணோத்தமரே! நான் அதிகாலையில் நதிக்கரைக்கு வந்தது என்னவோ உண்மைதான். ஆயினும் இன்று அதிகாலையில் அல்ல! எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒருநாளின் அதிகாலையில் நான் வந்தேன். நான் உம்மிடம் வந்து எத்தனையோ நூற்றாண்டுகள் கடந்து விட்டன என்றாள். அதைக்கேட்டதும் கண்டுமா முனிவர் மிகவும் பயந்து நடுநடுங்கி பிரமிலோசையை நோக்கி, பெண்ணே! நான் உன்னுடன் கூடி எத்தனை காலம் சுகபோகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன்? அதை நீயே சொல்வாயாக! என்று கேட்டார். அதற்கு அவள், முனிவரே! நான் வந்து தொள்ளாயிரத்து ஏழு ஆண்டுகளும் ஆறுமாதமும் மூன்று நாட்களும் ஆயின! என்றாள். அந்தத் தேவமங்கையைப் பார்த்து கண்டு மாமுனிவர் குழப்பத்துடன், பெண்ணே! நீ சொல்வது யதார்த்தமோ அல்லது பரிஹாசமோ? உண்மையைச் சொல். நான் உன்னுடன் கூடியிருந்தது ஒரே நாள் தான் என்று நினைக்கிறேன் என்றார். பிரமிலோசை தலையாட்டி அந்தணரில் உயர்ந்தவரான உம்மிடம் நான் ஏன் உண்மையில்லாததை சொல்கிறேன்? அதுவும் அறவழியை அனுசரித்து நீங்கள் கேட்கும் இந்த விஷயத்தில் நான் பொய் சொல்வேனா? ஆகையால் நான் உண்மையைத்தான் சொல்கிறேன் என்றாள்.

உடனே தவமுனிவர் தன்னைத்தானே கடிந்துகொண்டார். சை! என் தவம் எல்லாம் நஷ்டமாயிற்றே! நான் என்ன செய்வேன்? பிரமவித்துக்களான பிராமணர்களுக்குக் குலதனமாகிய வேதத்தியனம் வீணாயிற்றே! என் விவேகம் எல்லாம் பறிபோய் விட்டதே! என்னை வஞ்சிப்பதற்காக எவனோ ஒருவன் இந்த வனிதையை என்னிடம் அனுப்பிவிட்டானோ? பசி, தாகம், சோகம், மோகம், வார்த்திக்யம், மரணம் ஆகிய ஷடூர்மி! என்று சொல்லப்படும். இந்த ஆறு விகாரங்களும் இல்லாமல் நிர்மலமாக இருக்கும் பரப்பிரமத்தை அறியும் பொருட்டு மனதையடக்கியாள வேண்டும் என்று நிச்சயஞ் செய்த எனது விவேகத்தை அபகரித்து, என்னை யோகப் பிரஷ்டனாகச் செய்த காமம் என்னும் மாபெரும் பூதத்தை தகிக்க வேண்டும். சாந்திராயாணதி விரதங்களும் வேதாப்பியாசமும் மற்றுமுண்டான மோட்ச காரணங்களான புண்ணியங்களும் நரகத்திற்கு வழியான துஷ்ட சகவாசத்தால் பாழாக்கப்பட்டனவே? என்று கண்டு மாமுனிவர் தன்னைத்தானே நிந்தித்துக்கொண்டே; தேவமங்கையான பிரமிலோசையை நோக்கி, அடி பாதகீ! நீ இனிமேலாவது என்னை விட்டு உன்னிச்சையாகப் போய்விடு. நீ வந்து உன்னுடைய நடையுடை பாவனைகளால் என் சித்தத்தை கலக்கி, என் தவத்தைக் குலைத்து இந்திரனுக்கு சாதகமான காரியங்களைச் செய்து விட்டாய். இத்தகைய உன்னை என் கோபாக்கினி சுவாலைகளினால் சாம்பலாக்கிவிட வேண்டும். ஆயினும் சத்புருஷடன் ஏழடி உடன் நடந்தவர்கள் கூட நண்பர்கள் ஆவார்கள். ஆகையால் இத்தனைக் காலமும் என்னுடன் நீ கூடியிருந்ததை எண்ணி உன்னை மன்னித்தேன். நியாயமாக விசாரித்தால் உன்னைக் குறைசொல்லி ஒரு பயனும் இல்லை. நான் எனது ஐம்புலன்களையும் வெல்லமாட்டாமல் காமமோக பரவசமானதால், குற்றமே என்னுடையதாகின்றது. தேவேந்திரனுக்குப் பிரீதியாக என்னுடைய தவத்துக்கு ஊறு விளைத்த உன்னுடைய மாமோகத்திற்கு இருப்பிடமான மாயையைத் தகிக்க வேண்டும்! என்று கோபித்தார். உடனே தெய்வப்பெண் பிரமிலோசை பயத்தால் நடுநடுங்கி, தன் உடல் வியர்க்க கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். உடல் வியர்க்க, மெய் சிலிர்த்துக் கொடிபோல நிற்கும் அந்தப்பெண் கொடியை நோக்கி மாமுனிவர் கோபத்துடன் போ, போ! என்று உரக்கக் கூவினார். உடனே, அவரது கோபத்திற்குப் பயந்து பிரமிலோசை அந்த ஆசிரமத்தை விட்டுப் புறப்பட்டு, வானத்து வழியே செல்லும்பொழுது, அவள் தனது சரீரத்தில் உண்டான வியர்வையை மரங்களின் நுனியிலிருந்த துளிர்களினாலே துடைத்து, விருட்சங்களில் போட்டு, மரத்தின் மேல் மரமாகத் தாண்டிச் சென்றாள்.

பிரமிலோசை என்னும் அந்தத் தெய்வ மங்கையிடம் கண்டு மாமுனிவரால் உண்டான கர்ப்பமானது அவளுடைய ரோம கூபங்களிலிருந்து வியர்வையாகக் கசிந்து வந்ததால்; அந்தக் கர்ப்பத்தை விருட்சங்கள் தரித்தன. பிறகு, அவ்வியர்வையெல்லாம் வாயுவினால் கூட்டப்பெற்று ஒன்றாய்த் திரண்டன. அவற்றை சந்திரனாகிய நான் எனது கிரணங்களினால் வளர்த்து வந்தேன். இவ்விதமாக அந்த கர்ப்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வர, அதிலிருந்து மிகவும் அழகிய கன்னி ஒருத்தி தோன்றினாள். அவள் தான் இப்பொழுது மாரிஷை என்ற பெயருடன் வளர்ந்து கொண்டிருக்கிறாள். இந்த மரங்களே இந்த மங்கையை உங்களுக்குத் தருவதால், உங்களுடைய கோபத்தை விட்டு விடுங்கள். இந்த மாரீஷையானவள் கண்டுமாமுனிவர் பிரமிலோசையிடம் விட்ட வீரியத்தாலே, தருக்களிலே தரித்து, வாயுவும் நானும் வளர்த்ததால், கண்டு முனிவருக்கும் மரங்களுக்கும் எனக்கும் வாயுவுக்கும் பிரமிலோசைக்கும் மகளாகிறாள். இது நிற்க, கண்டு மகரிஷியானவர், பிரமிலோசை சென்ற பிறகு தமது தவம் க்ஷீணித்ததற்காக மிகவும் மனம் வருந்தி, ஸ்ரீவிஷ்ணு தேவனின் நிவாஸ ஸ்தானமான ஸ்ரீபுரு÷ஷாத்தமம் என்று வழங்கப்படும் ஒரு மலைக்கு வந்து அங்கே ஏகாக்கிர சித்தத்தோடு ஹரியை ஆராதித்தவண்ணம் மகாநிஷ்டையிலிருந்து வந்தார் இவ்வாறு சந்திரன் கூறி முடித்தான். அதைக்கேட்ட பிரசேதசர்கள் சந்திரனை நோக்கி, மகாத்மாவே ஸ்ரீமந்நாராயணன் திருவுள்ளம் உவக்கும்படி கண்டு மகரிஷி செய்த அந்தப் பிரமபார ஸ்துதியை நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம். அதை நீங்கள் எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள். உடனே சந்திரன் கூறினான்.

முடிவற்றதும், தாண்டக் கூடாததும் காமக் குரோத மோகாதி திமிங்கலங்கள் நிறைந்ததும் பயங்கரமானதுமான சம்சார சாகரத்தைக் கடப்பதற்கு ஒரு தெப்பத்தைப் போல இருப்பவனும், இதற்குப் பரமமான முடிவாக இருப்பவனும், உபதேச பரம்பரையினால் அறியப்பட்டவனும் அளவற்ற சக்தியுடையவனும், தேச, கால, பொருள்களாலே பரிச்சேதிக்க ஒண்ணாதவனும் நிறைவு பெறாத கர்மாதிகளைத் தனது திருநாம சங்கீர்த்தனத்தினாலே நிறைவேற்றுகிறவனும், பிரம்மாதிகளான சகல ஆன்ம கோடிகளுக்கும் மேம்பட்டவனாய் காரணமாய் நிரதிசய ஆனந்தரூபனாய் இருக்கிறவனும், பிரம்மாதிகளைப் போல், காலவசத்தாலே அகப்படாமல் சகல சக்திகளோடுங்கூடி நித்தியமாய்த் தேஜோமயமாய் விளங்கும் திவ்யமங்கள விக்கிரகமுடையவனாய் ஆனந்த ஸ்வரூபியாய் இருப்பவனும், முக்கியத்துக்கு முடிவிடமாயும் வேத வைதீகங்களைப் பரிபாலிப்பவனாயும் பிரதானமும் சீவனும் பிரளய காலத்தில் லயமடைகிற ஸ்தானமாயும், யாவற்றுக்கும் கலப்புண்டாகாமல் இருக்கும்படி ஏற்பட்ட அணையாயும், முக்தியடைந்தவர்களுக்கும் மேம்பட்டவன் என்று சொல்லும்படியான காரணத்துவ சேஷித்துவங்களையுடையவனாகவும், பிரபஞ்சத்துக்கு பரிய வசானமான காலத்துக்கும் ஸ்தானமாயும் ஆகாயம் முதலான விபுத்திர வியங்களையும் நிறைப்பவனாயும், சகல ரக்ஷகர்களும் ரக்ஷகனாயும் இருக்கிற ஸ்ரீவிஷ்ணுதேவா! ஜகத்துக்குக் காரணமான விராட் புருஷனும் அவனுக்கு காரணமான அகங்காரமும் அதற்குக் காரணமான மகத்தத்துவமும் அதற்குக் காரணமான பிரகிருதியும் இந்தத் தத்துவங்களின் முக்கிய காரியங்களும் ஆகி, காரிய காரண ரூபமாகக் காணப்பட்டுக் கொண்டு, சுவாபாவிகங்களும் அனந்தங்களுமான ஞானம், பலம், ஐசுவரியம், வீரிய சக்தி தேஜசவுசீரிய, வாதசல்லய சௌரிய, தைரியாதி சகல கலியாண குணங்களுக்கும் ஆசிரயனாகி கிரியா சொரூபங்களாலேயும் கர்த்துரு சொரூபங்களாலே÷யும், சேதனா சேதனங்களையெல்லாம் ரட்சித்து வருகின்றான். வேதங்களுக்கு அதிபதியும் வேத வேதாந்தங்களினால் அறியப்படுவோனும், வேத வேதாந்த சாஸ்திரங்களும், அந்த ஸ்ரீவிஷ்ணுவேயன்றி வேறல்ல. சாஸ்திர ஜன்யம், விவேக ஜன்யம் என்று வழங்கப்படும் இரண்டுவித ஞானமும், முதல் வேத பிரவர்த்தனான பிரமாவும் ஸ்மிருதி பிரவர்த்தகரான மனு முதலானவரும், இந்த அச்சுதனேயாவன். அபக்ஷயாதி தோஷங்களை அடையாமல் ஜனன ரகிதமும் அட்சரமும் நித்தியமுமான பரப்பிரமம் அந்த ஸ்ரீவிஷ்ணுவேயாகும்! அந்தப் பிரமமே, பக்த பரிபாலானார்த்தமாக இந்தப் புனிதப் புரு÷ஷாத்தம ÷க்ஷத்திரத்தில் சகல கல்யாண குணங்களும் பூரணமாக விளங்கும்படி புரு÷ஷாத்தமன் என்கின்ற அரீச்சாரூபியாய்த் திருவவதாரஞ்செய்தருளி விளங்கா நின்றது. ஆகையால் அந்தக் கேசவனைச் சிந்தித்து சரணடைந்து நிற்கிற அடியேனிடத்தில் சத்கிரியா யோகங்களுக்குப் பங்கம் ஏற்படும்படி உண்டாகும். ராகத்து வேஷலோப மோகாதி துர்க்குணங்கள் சாந்தமாகக் கடவன! என்று கண்டு முனிவர் பரமமான பிரமபார ஸ்துதியை ஜபித்து கேசவனை ஆராதித்து சித்திபெற்றுப் பரமபதத்திற்குச் சென்றார்.

இனி மாரிஷை என்னும் கன்னிகையின் முந்திய பிறவியின் சரிதத்தைச் சொல்கிறேன், கேளுங்கள், இதைச் சொல்வதால் எனக்குப் பெரியதொரு காரிய சித்தியும் இதைக் கேட்பதால் உங்களுக்கு மேன்மையான பல சித்தியும் உண்டாகும். உருவின் கர்ப்பத்தில் ஜனித்த இந்த மாரிஷை பூர்வஜன்மத்தில் ஓர் அரசனின் பத்தினியாக இருந்தாள். புத்திரப் பேறடையாமலேயே இளவயதில் விதவையானாள். பிறகு பக்தியுடன் ஸ்ரீமந்நாராயணனை ஆராதித்து வந்தாள். அதனால் அந்த எம்பெருமான் திருவுள்ளம் உவந்து, பிரத்யட்சமாகி அந்தப் பெண்ணைப் பார்த்து, பெண்ணே! உனக்குப் பிரியமான வரத்தைக் கேள் என்றார். அதற்கு ராஜபத்தினியும் சுவாமியைப் பார்த்து, சுவாமி! அடியேன் இளவயதிலேயே வைதவ்யத்தையடைந்து சந்தானமற்ற துர்த்தசையில் இருக்கிறேன். இதனால் எனது இந்தப் பிறவியே வீணாயிற்று! இனி உம்முடைய கருணையால் அடியேனுக்கு ஜன்ம ஜன்மங்களிலேயும் சர்வ ஜகத் பூஜ்யர்களான புருஷர்களும் பிரமனுக்கு இணையான புத்திரனும் உண்டாக வேண்டும். நானும், சகலஜன இருதயானந்தகரமான அழகோடு, அயோநிஜையாய்ப் பிறக்க வேண்டும். தேவரீர், கிருபை கூர்ந்து இந்த வரங்களை எனக்கு வழங்கியருள வேண்டும் என்று வேண்டினாள். வணங்கி வழிபட்டாள். தன் முன்பு வழிபாடு செய்த அந்த வனிதையை விஷ்ணு பகவான் தமது தாமரை மலர்க்கரங்களால் எடுத்து; பெண்ணே! உனக்கு வேறொரு பிறவியிலே பிரசித்தியும் புகழும் உடையவர்களாய் மகா உதாரகுணமுள்ள கணவர்கள் பத்துப்பேர் உண்டாவார்கள். மகாத்மாவாகவும்; பலபராக்கிரமத்துடன் பிரமனுக்கு சமானமாகவும் உள்ள மகன் ஒருவனும் பிறந்து, திரிலோகமும் நிறையும் படியான சந்தானத்தையுடையவனாய் அனேக வமிசங்களுக்குக் கர்த்தாவாக இருப்பான். நீயும் பேரழகும் நற்குணங்களும் கொண்ட பதிவிரதையாய் அயோநிஜையாய், சகல ஜனங்களுக்கும் இருதய ஆனந்தமுண்டாகும்படி இருக்கக் கடவாய்! என்று அருளிச் செய்து அந்தர்த்தானமானார். இவ்விதமாக ஸ்ரீமந்நாராயணனுடைய கிருபையால் இச்சித்த வரங்களைப் பெற்ற அந்த ராஜபத்தினியே இப்பொழுது மாரிஷையாக பிறந்திருக்கிறாள். ஆகையால் பிரசேதசர்களே; அந்தக் கன்னிகையை நீங்கள் ஏற்பீராக என்று சந்திரன் சொன்னான். உடனே பிரசேதசரர்கள் தங்கள் கோபத்தை விட்டுச் சாந்தமடைந்தார்கள். மரங்களும் தங்கள் கன்னிகையான மாரிஷையை கொடுக்க, அவர்கள் அவளைத் திருமணம் செய்து கொண்டார்கள். பிறகு அந்த மங்கையிடம் பிரசேதசரர்கள் பதின்மராலும் மகானுபாவனான தக்ஷப் பிரஜாபதி பிறந்தான். இந்தப் பிரஜாபதியே பூர்வத்தில் பிரமாவினுடைய தக்ஷிண அங்குஷ்டத்திலிருந்து பிறந்திருந்தான். மகா தபசியாசியான அந்தத் தக்ஷன், பிரஜைகளைச் சிருஷ்டிக்க நினைத்து சரங்களும் அசரங்களும் இருபாதங்களும், நான்கு பாதங்களுமான ஐந்து ஜாதங்களைப் படைத்து பிரமாவின் ஆக்ஞையைப் பரிபாலித்தான். அந்த விவரத்தைக் கேளுங்கள்.

தக்ஷன் ஐம்பது பெண்களைப் பெற்றான். அவர்களில் பத்துப்பெண்களைத் தருமனுக்கும் பதின்மூன்று பெண்களை காசியபருக்கும், இருபத்தேழு பெண்களைச் சந்திரனுக்கும் கொடுத்தான். அப்பெண்களிடம் தேவ; தைத்ய, தானவ புசங்க, கந்தர்வ, தேவர்கள் ஜனித்தார்கள். மைத்ரேயரே! அது முதலாகத்தான் பிரஜைகள் ஆண் பெண் உடலுறவினால் பிறந்து வருகின்றனர். அதற்கு முன் பூர்வ காலத்திலே தவம் மிகுந்த மகாத்மாக்கள் வெறும் தரிசன ஸ்பரிச சங்கல்பத்தினாலேயே சந்தானங்களை உண்டாக்கி வந்தனர். இவ்வாறு பராசரர் கூறி நிறுத்தினார். அப்போது மைத்ரேயர், அவரை நோக்கி, முனிவரே பூர்வத்தில் தக்ஷன் என்பவன் பிரும்மாவின் வலது பாதத்தின் கட்டை விரலில் பிறந்தான் என்று கேட்டிருக்கிறேன். இப்போது பிரசேதசர்களால் பிறந்தான் என்று நீங்கள் சொல்கிறீர்கள். இந்த விஷயம் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. சந்திரனுக்குப் பாட்டனான தக்ஷன், திரும்பவும் அவனுக்கு எப்படி மாமனானான்? என்று கேட்க பராசரர் கூறலானார். சகல பூதங்களுக்கும் உற்பத்தியும் அழிவும் நித்தியம்! ஆகையால் திவ்ய ஞானமுடைய முனிவர்களுக்கு இதில் சந்தேகம் உண்டாவதில்லை. அவர்கள் மயங்குவதுமில்லை தக்ஷன் முதலான சகல தேவ முனிவர் கூட்டமும் யுகந்தோறும் பிறந்து லயத்தை அடைந்து வருகின்றனர். ஆகையால் இதில் சந்தேகப்பட வேண்டியதில்லை. பூர்வகாலத்தில் வயதும் இல்லை. பெரியவன் சிறியவன் என்று வேறுபாடும் இல்லை. தவத்தாலும் ஞானத்தாலும் உயர்ந்தவர்களே மேலானவராகக் கருதப்பட்டார்கள்! என்றார் பராசரர். முனிவரே! தேவர்கள்; தானவர்கள், கந்தருவர்கள், ராக்ஷசர்கள் முதலானவர்களின் உற்பத்தியை எனக்குத் தெளிவாகக் கூறவேண்டும் என்றார் மைத்ரேயர். பராசரர் கூறலானார். கமலாசனான பிருமனின் நியோகத்தால் முன்பு தேவர்கள் ரிஷிகள்; கந்தர்வர்கள்; அசுரர்கள், பன்னகாதி பூதங்கள் முதலானவர்களைத் தக்ஷன் தனது சங்கற்பமாத்திரத்தாலேயே சிருஷ்டித்தான். அவை அபிவிருத்தியாகாமல் நசித்துப் போனதைக் கண்டு, அவன் மீண்டும் பிரஜாசிருஷ்டியில் முயன்றான். அதற்காக வீரணப் பிரஜாபதியின் மகளான அசிக்கினி என்பவளை மணந்து அவளிடம் ஐயாயிரம் பிள்ளைகளைப் பெற்றான். அவர்கள் அரிய சுவர்கள் என்கிற பெயரால் புகழ்பெற்று, பிரஜாவிருத்தி செய்ய எத்தனித்தார்கள். அப்போது நாரத முனிவர் அவர்களிடம் வந்து, அரிய சுவர்களே! பிரஜா சிருஷ்டி செய்ய நினைத்த நீங்கள் ஒரு காரியத்தை முன்னதாகச் செய்ய வேண்டும். அதாவது பூமியின் நிலப்பரப்பையும் உயர்வையும் தாழ்வையும் அறிய வேண்டும். நீங்கள் பாலியர்கள் ஆகையால் அதனை அறியமாட்டீர்கள். அப்படியிருக்க நீங்கள் பிரஜைகளைச் சிருஷ்டிப்பது எப்படி? தடையில்லாமல் எங்குமே செல்லும் திறமையுடைய நீங்கள் பூமியின் அளவு பரிமாணங்களை ஏன் இன்னும் அறிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர்கள் நாங்கள் பூமி பரிமாணத்தை அறிந்து வருகிறோம் என்று கூறிவிட்டு நான்கு திக்கிலும் சென்று, சமுத்திரத்தில் சேரும் நதிகளைப் போல் திரும்பி வராமலேயே மறைந்து விட்டார்கள். அவ்வாறு அரியசுவர்கள் நாசமடைந்ததைப் பிரசேதசனான தக்ஷன் கேட்டுத் திரும்பவும் வீரண புத்திரியான அசிக்கினியிடத்தில் ஆயிரம் மக்களைப் பெற்றான். அவர்கள் சபளாசுவர்கள் என்ற பெயருடன் பிரஜா சிருஷ்டி செய்ய எத்தனித்தனர். அப்போது முன்போலவே நாரத முனிவர் வந்து முன் சொன்னது போல அவர்களிடம் சொன்னார். உடனே அவர்கள் சரிதான் என்று தங்கள் மூத்த சகோதரர்கள் சென்ற மார்க்கத்திலேயே பூமியின் பரிமாணத்தை அறிந்து வரச்சென்று திரும்பி வராமலே போய்விட்டார்கள். அதுமுதல், தூரதேசதனான சகோதரனைத் தேடிக்கொண்டு ஒருவன் சென்றால் நாசமடைவான்! என்பது சொல் வழக்காயிற்று.

பிறகு சபளா சுவர்களும் நாசம் அடைந்ததைத் தக்ஷன் கேள்விப்பட்டு மிகவும் கோபங்கொண்டு நாரதரை அழைத்து, நாரதா! எங்குமே நிலைபெறாமல் திரிந்து கொண்டேயிருப்பாயாக என்று சபித்தான். மீண்டும் தக்ஷன் பிரஜா சிருஷ்டி செய்ய நினைத்து, அசிக்கினியிடத்தில் அறுபது பெண்களைப் பெற்றான். அவர்களிலே பத்துப்பெண்களைத் தருமனுக்கும், பதின்மூன்று பெண்களைக் காசியபருக்கும், இருபத்தேழு பெண்களைச் சந்திரனுக்கும் திருமணம் செய்து கொடுத்தான். அரிஷ்டநேமிக்கு நால்வரையும், வெகு புத்திரனுக்கு இருவரையும், ஆங்கிரசுக்கு இரண்டு பெண்களையும், பிருசாசுவனுக்கு இரண்டு பெண்களையும் கொடுத்தான். முதல் பத்துப் பெண்களாகிய அருந்ததி, வசு, ஜாமி, லங்கை, பானு, மருத்வதி, சங்கல்பை, முகூர்த்தை, சாத்தியை, அசுவை என்று சொல்லப்பட்ட கன்னிகளைத் திருமணஞ்செய்து கொண்ட தருமன், விசுவையின் மூலம் விசுவ தேவதைகளையும், சாத்தியையிடம் சாத்தியர்களையும், மருத்துவதியிடம் மருத்தவத்தர்களையும், முகூர்த்தையிடம் முகூர்த்தர்களையும், பானுவிடம் பானுக்களையும், லங்கையிடம் சகோஷனையும், ஜாமியிடம் நாகவீதி என்ற திவ்யமார்க்க அபிமானியையும், அருந்ததியிடம் பூமியைச் சேர்ந்த பொருள்கள் அனைத்தையும் சங்கல்பையிடம் சங்கல்ப்பன் என்பவனையும் பெற்றான். அவர்களில் அபாரமான பலமும் தேஜஸும் உடையவர்களாய் விளங்கும் அக்கினி முதலான வசுக்களின் வமிசத்தை விவரமாகச் சொல்கிறேன்; கேளுங்கள். ஆபன், துருவன், சோமன், அனிலன், பிரத்தியூஷன், பிரபாசன் முதலான வசுக்கள் எண்மர் ஆவர். அவர்களில் ஆபனுக்கு வைஸ்தப்த்தன், சிரமன், சிராந்தன், துனி என்ற பிள்ளைகள் உண்டானார்கள். துருவனுக்கு சகல உலகங்களையும் நடத்தும் காலன் உற்பத்தியானான். சோமனுக்கு வர்ச்சன் என்ற மகன் பிறந்தான். அவனால்தான் ஜனங்களுக்கு வர்ச்சஸ் என்ற பிரகாசம் உண்டாகிறது. தருமனுக்கு மனோகரை என்பவளிடம் திரவிணன், உதவகன், சிசிரன், பிராணன், ரமணன் என்னும் பிள்ளைகள் பிறந்தார்கள். அனலனுக்கு சிவை என்பவளிடத்தில் புரோசவன், அவிக்தி, யாதகதி என்ற இரண்டு புதல்வர்கள் பிறந்தார்கள். அனலன் என்றால் அக்கினியாகும். ருத்திர வீரியத்தை அக்கினியே ஏற்றுக்கொண்டு வழியில் நாணற் புதரில் விட்டதால், சுப்ரமணியரை அக்கினி புத்திரன் என்றும் இங்கு கூறப்படுகிறது. சாகன் முதலியோர், குமாரனின் தம்பியர் ஆவர். அனலனுக்கு நாணற்புதரிலே குமாரன் என்று சொல்லப்படும் சுப்பிரமணியன் உண்டானான். அவனுடைய முதுகிலிருந்து, சாகன், விசாகன், நைகமேஷன் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அந்த சுப்பிரமணியன் கிருத்தைகளின் ஸ்தன்ய பானஞ் செய்ததால் அவர்களுக்குப் பிள்ளையாகிக் கார்த்திகேயன் என்ற பெயரைப் பெற்றான். பிரத்யூஷனுக்கு தேவன் என்ற முனிவன் ஜனித்தான். அவனுக்க பொறுமையும் புத்தியும் இரு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் ஒருவன் பிரகஸ்பதி, அந்தப் பிரகஸ்பதிக்குச் சகோதரியான ஒருத்தி யோக சித்தியுடையவளாய், விரக்தியடைந்து பிரமசரியத்தோடு உலகமெங்கும் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். பிறகு அவள் வசுக்களில் எட்டாவதான பிரபாசனனுக்கு மனைவியாகி விசுவகர்மாவைப் பெற்றாள். அவன் விசித்திரங்களான அநேக சிற்பக்கலைகளை அறிந்தவனாய் தேவதச்சனாகி அநேக திவ்ய ஆபரணங்களையும் விமானாதிகளையும் நிர்மாணஞ் செய்தான்.

அவன் செய்த சிற்பங்களில் சிலவற்றை அறிந்துதான் பூவுலகிலுள்ள ஜனங்கள் வேலை செய்து பிழைக்கிறார்கள். மேலும் அந்தப் பெண்ணரசியிடம், அனஜகபாத், அகிர்ப்புத்தினியன், துவஷ்டா, ருத்திரன் என்ற நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் துவஷ்டாவுக்கு விசுவரூபன் என்னும் மகாதவசியான புத்திரன் ஒருவன் பிறந்தான். அறிஞனான ருத்திரனுடைய அமிசமாய் அரண்பகுரூபன், திரியம்பகன், விருஷாகபி சம்புகபர்த்தி, ரைவதன், மிருக வியாழன், சர்வன் கபாலி என்னும் பதினொருவர் பிறந்து, ருத்திரன் என்ற பெயரைப் பெற்று, திரிலோகாதிபதிகளாய் விளங்குகிறார்கள். இவர்களிடமிருந்து அளவற்ற தேஜஸ் வாய்ந்த நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். இது இவ்விதமிருக்க காசிபருக்கு மனைவியாக இருந்த அதிதி, திதி, தனு, அரிஷ்டை, சுரசை, கஷை சுரபி, வினதை, தாம்பிரை, குரோதவசை, இளை, கத்துரு, முனி என்ற பெயருடைய பதின்மூன்று பத்தினிகளில் அதிதி என்பவளுக்குப் பூர்வத்தில் சாட்சுஷ மன்வந்தரத்திலே துஷிதர் என்ற பன்னிரண்டு தேவதைகள். வைவஸ்வத மனுவந்தரம் வரும்போது நாம் யாவரும் அதிதியின் கர்ப்பத்திலே ஜனிக்க வேண்டும்! என்று நிச்சயித்து கொண்டே பிறந்தார்கள். அவர்கள் இந்திரன் விஷ்ணு அரியமன் தாதா; துவஷ்டா, பூஷா, விவசுவான், சவிதா, மித்திரன், வருணன், அமிசு, பகன் என்ற பெயர்களைப் பெற்று, துவாச ருத்திரர்கள் என்று வழங்கப்படுகின்றனர். இப்படியாக வைவஸ்வத மனுவந்தரத்திலே ஆதித்தியர் என்று சொல்லப்படுவோர், சாட்சுஷ மனுவந்தரத்தில் துஷிதர் என்று வழங்கப்பட்டனர். சந்திரனுக்கு மனைவியான அசுவினி முதலான இருபத்தேழு பெண்களுக்கும் காந்தியுள்ள மக்கள் உண்டானார்கள். அரிஷ்டநேமியின் பத்தினிகள் நால்வருக்கும் பதினாறு பிள்ளைகள் பிறந்தார்கள். வெகுபுத்திரனுக்கு பத்தினிகளான இருவரிடத்திலும் காற்று, வெயில், மழை, துர்ப்பிஷம், இவற்றுக்கு ஏதுக்களாய் கபில வர்ணமும் இரத்த வர்ணமும் அரித்ராவர்ணமும், நீலவண்ணமும் கொண்ட நான்கு மின்னல்கள் உண்டாயின. ஆங்கிரசுக்கு பிரம ரிஷிகள் துதிக்கத்தக்க மேன்மை பெற்ற பிரதியங்கிரகங்கள் என்ற மந்திரங்கள் உதித்தன. பிருசாசுவனுக்கு, திவ்விய பாணங்கள் பிறந்தன. இவ்விதமாகக் கல்பாதி காலத்திலே உண்டான முப்பத்து முக்கோடி தேவதைகளும், தினந்தோறும் சூரியன் உதயமாகி மறைவதைப் போல ஒவ்வொரு மனுவந்தரத்திலும் பிறந்து கொண்டே வருவார்ரகள். இவர்கள் சுயஇச்சைப்படி பிறப்பார்கள். திதி என்பவளிடத்தில் காசிபருக்கு இரணியகசிபுவும், இரணியாக்ஷனும், விப்ரசித்தி என்ற ராக்ஷதனுக்குப் பாரியையான சிம்மிகை என்ற பெண்ணும் பிறந்தார்கள். அவர்களில் இரணியகசிபுக்கு அனகிலாதன், ஹிலாதன், பிரகலாதன், சம்கிலாதன் என்ற நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களிலே பிரகலாதன் ஜீதேந்திரியனும், மகா பாகவதனுமாய் ஸ்ரீமந்நாராயணனிடத்தில் பக்தியுடையவனாய் விளங்கி வந்தான்.

தைத்திய ராஜனான இரணியகசிபுவின் கட்டளையினால், அசுரர் கொளுத்திய அக்கினியும் ஸ்ரீவாசுதேவனது இதயகமலத்தில் வசித்ததால் மகாத்மாவான பிரகலாதனைத் தகிக்கமாட்டாமற் போயிற்று. பிரகலாதன் என்னும் அந்த மகானுபாலன், பாசங்களினால் கட்டப்பட்ட கடலின் நடுவேயிருந்து அசைந்த போது அநேக மலைகளும் காடுகளும் நடுங்கின. பூமண்டலமே நடுங்கியது. எங்குமே எம்பெருமானைப் பாவித்ததால், அந்த மகானின் உடல் மலைபோலக் கடினமாயிற்று. அதனால் அசுரர்கள் பிரயோகித்த பாணங்கள் அவரைப் பாதிக்கவில்லை. இரணியகசிபு ஏவிய லிஷாக்கினிச் சுவாலை வீசும் சர்ப்பங்கள் அந்த மகாத்மாவை பீடிக்கவில்லை. பர்வதங்களால் அமுக்கப்பட்ட போதும், ஸ்ரீவிஷ்ணு ஸ்மரணை என்ற கவசத்தால் பிரகலாதன் காக்கப்பட்டு, மரணமடையாமற் போனான். சொர்க்கத்தின் உயரமான இடத்திலிருந்து, பிரகலாதனை இரணியகசிபு கீழே தள்ளியபோதும் அந்த மகாத்மாவை பூமாதேவி ஏந்திக் கொண்டாள். அதன்பிறகு இரணியகசிபு மிகவும் ஆத்திரமடைந்து சம்சோஷகன் என்ற வாயுவை ஏவினான். ஆனால் மதுசூதனான விஷ்ணுவின் இருதயத்திலே பிரகலாதன் இருந்ததால், அந்த வாயு பிரகலாதனிடம் புகுந்து நாசமடைந்து போயிற்று. திக்கு கஜங்கள் எல்லாம் இரணியகசிபுவின் உத்தரவினால் பிரகலாதன் மீது பாய்ந்து தந்தங்கள் ஒடிந்து, மதமழிந்தன. நைத்தியப் புரோகிதர்களால் நிருமிக்கப்பட்ட கிருத்தியைகள். கோவிந்த சரணாரவிந்தங்களில் மனதைச் செலுத்தியிருந்த அந்த மஹா யோகிந்தனைப் பாதிக்காமற் போயின. மகாமாயாவியான சம்பராசுரன் என்பவன், புண்ணிய புருஷனான பிரகலாதன் மீது ஏவிய அனந்த மாயைகளும் ஸ்ரீவிஷ்ணுவின் திருக்கையால் விடப்பட்ட சக்கராயுதத்தால் சாம்பலாயின. இரணியகசிபுவின் சமையற்காரர்கள் ஆலகாலம் என்ற கொடிய விஷத்துடன் கலந்து வைத்த அன்னமானது பிரகலாதனின் உதரத்தில் ஜீரணமாகி விட்டது. சர்வ பூதசமனும் சர்வ உயிர்களுக்கும் மித்திரனான அந்த மகாத்மா, தன் சரீரத்தைப் போலவும் தன் பிள்ளைகளைப் போலவும், சர்வ பூதங்களையும் லாலனை செய்து வருவான். அந்த ஞானி சத்புருஷர்களுக்கெல்லாம் உபமானமாகப் புகழ்பெற்று விளங்கினான்.
14. பிரசேதசர்களின் இலட்சியம்

பராசர முனிவர் மேலும் தொடர்ந்து கூறலானார் : மைத்ரேயரே! பிருது மன்னனுக்கு அந்தர்த்தானன்; வாதி என்றும் இரு பிள்ளைகள் பிறந்தார்கள். அந்தர்த்தானன் திருமணம் புரிந்து கொண்டு சிகண்டி நீ என்னும் மனைவியிடம் ஹவிர்த்தானன் என்ற மகனைப் பெற்றான். அவனுக்கு அக்கினியின் மகளான தீக்ஷிணையிடத்தில் பிராசீனபர்ஹி, சுக்கிரன், கயன், கிருஷ்ணன், விரசன், அசினன் என்று ஆறு குமாரர்கள் உண்டாயினர். அவர்களில் ஹிவர்த்தானனின் மூத்த மகனான பிராசீனபர்ஹி என்பவன், பிராசீனக்கிரகங்களான தருப்பைகளை பூமியில் பரப்பி யக்ஞங்கள் செய்ததால் அவனுக்கு பிராசீனபர்ஹி என்ற பெயர் உண்டாயிற்று. அவன் சமுத்திரனின் புதல்வியான சுவர்ணை என்பவளைக் கல்யாணம் செய்து கொண்டு பிரசேதர்கள் என்னும் பத்துப்பிள்ளைகளைப் பெற்றான். அவர்கள் தனுர் வேதத்தில் கரை கண்டவர்கள். அவர்கள் அனைவரும் ஒரே பயனை அபேட்சித்து, ஒரே தர்மத்தைச் செய்து, சமுத்திர நீரில் பதினாயிரம் ஆண்டுகள் மூழ்கியிருந்து தவஞ்செய்தார்கள். ஏனெனில், பிரும்மாவின் கட்டளைப்படி பிராசீனபரிஹியானவன் பிரஜைகளை அபிவிருத்தி செய்ய நினைத்தான். தன் புத்திரரான பிரசேதசர்களை நோக்கி, பிள்ளைகளே! வேததேவனான பிதாமகர், பிரஜாவிருத்தி செய்யும்படி என்னை நியமித்தார். நான் அப்படியே ஆகட்டும் என்று அவரது கட்டளைக்கு இசைந்தேன். ஆகையால், நீங்கள் எனக்குப் பிரியமாகும்படிப் பிரஜாவிருத்தி செய்யுங்கள் என்றார். பிரசேதசரும் தந்தையின் வாக்கை ஏற்று, ஐயா! நாங்கள் பிரஜாபிவிருத்தி செய்யத்தக்க ஆற்றலையுடையவராக, எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும்? அதை விளங்கச் சொல்ல வேண்டும்! என்று கேட்டார்கள்.

பிராசீனபரிஹி தன் புத்திரர்களைப் பார்த்து, ஸ்ரீவிஷ்ணுவை ஆதரித்து ஒருவன் தன் இஷ்டத்தைப் பெறுவானே அல்லாமல், வேறு ஓர் உபாயத்தினாலும் இஷ்ட சித்தியைப் பெறமுடியாது. இனி நான் சொல்வதற்கு வேறு எதுவுமில்லை. ஆகையால் உங்கள் இஷ்டம் சித்தியாக வேண்டும் என்று விரும்பினால் ஸ்ரீகோவிந்தனை ஆராதனை செய்யுங்கள். பிரஜாவிருத்தி செய்யும் ஆற்றலைப் பெறுவீர்கள், புருஷனுக்குத் தர்மார்த்த காம மோக்ஷம் என்கின்ற நான்குவித புருஷார்த்தங்களிலே அபிலாஷையுண்டானால், ஆதியந்தரகிதனும் பகவானுமான புரு÷ஷாத்தமனை அர்ச்சனை செய்ய வேண்டும். ஆதிகாலத்தில் பிரும்மா ஜனார்த்தனனை ஆராதித்துத் தான் சிருஷ்டிக்கும் ஆற்றலைப் பெற்றான். அதுபோல், உங்களுக்கும் அச்சுதனை ஆராதிப்பதால் பிரஜா விருத்திக்குரிய சாமார்த்தியமும் உண்டாகும்! என்று சொன்னான். அதைக்கேட்ட பிரசேதசர்கள் பத்துப் பேரும் தந்தையின் வாக்குப்படி தவஞ்செய்ய நிச்சயித்தார்கள். அதனால் சமுத்திரத்திலே மூழ்கி ஏக சிந்தனையுடன் சர்வலோக சரண்யனும் ஜகத்பதியுமான ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடித்தாமரைகளில் மனதை நிறுத்தி, பதினாயிரம் ஆண்டுகள் தவஞ்செய்த வண்ணம் சகல அபீஷ்டங்களையும் வழங்கவல்ல லக்ஷ்மி நாராயணனை மனமாரத் துதித்தார்கள். இவ்வாறு பராசரர் கூறிவரும்போது மைத்ரேயர் அவரை நோக்கி முனிவரே! பிரசேதசர்கள் சமுத்திரத்தில் மூழ்கிக்கொண்டு ஸ்ரீவிஷ்ணுபகவானைத் துதித்தார்கள் என்றீர்கள். அந்தத்தோத்திரத்தை அடியேனுக்குச் சொல்ல வேண்டும் என்றார். அதற்குப் பராசரர் பிராமண உத்தமரே! பக்திப் பரவசத்தினால் தன்மயமாய் சாகா ஜலத்தில் நின்று கொண்டு, பிரசேதசர்கள் செய்த ஸ்ரீவிஷ்ணு ஸ்துதியைச் சொல்கிறேன். அமைதியாகக் கேளுங்கள்! என்று கூறலானார்.

சகலமான சப்தஜாதங்களும் எங்கே சென்று நிலைபெறுமோ அத்தகைய சகல உலகங்களுக்கும், சிருஷ்டி சங்காரகர்த்தாவான பரமபுருஷனை நாங்கள் வணங்குகிறோம்! சூரிய சந்திராதி சோதிக் கணங்களையும் பிரகாசிக்கச் செய்யும் அந்தப் பிராகிருத ஜோதிமயனும் உபமானரகிதனும் நுண்ணிய ரூபனும், கால பரிச்சேதமில்லாதவனும் சராசரத்மகமான ஜகத்துக்குக் காரண பூதனுமான ஸ்ரீவிஷ்ணு மூர்த்திக்குத் தெண்டஞ் சமர்ப்பிக்கிறோம்! எவனுக்குப் பகலானது முதல் ரூபமாகவும் இரவு இரண்டாவது ரூபமாகவும், சக்தி மூன்றாவது ரூபமாகவும் இருக்குமோ காலவடிவான அந்தப்பரந்தாமனுக்குத் தண்டனிடுகிறோம். எவன் அமிர்தமாகித் தினந்தோறும் தேவதைகளாலும் பிதுர்க்களாலும் உண்ணப்படுகிறானோ எவன் ஓஷதிகளைக் கொண்டு எல்லாவற்றிற்கும் ஜீவனாக விளங்குகிறானோ, அந்தச் சந்திரரூபியான பகவானுக்குத் தண்டனிடுகிறோம். எவன் உஷ்ணமயமாகித் தனது கிரணங்களால் இருளைப் போக்கி ஆகாயத்தை ஒளிரச் செய்து கொண்டு, தாபத்திற்கும் சயத்திற்கும் ஜலத்திற்கும் காரணமாக இருக்கிறானோ சூரியாத் மகனான அந்தப் பகவானுக்குத் தண்டனிடுகிறோம்! எவன் கடினமான ரூபமுள்ளவனாய் இந்தவுலகத்தையெல்லாம் பார்த்துக் கொண்டு, சப்த, ஸ்பரிச, ரூப, ரச கந்தங்களுக்கு ஆசிரயமாய் விளங்கிறானோ அந்தப் பூமிஸ்வரூபியான எம்பெருமானை வணங்குகிறோம்! சுக்கிலமும் சுரோணிதமுமாய், உலகங்களுக்குக் காரணமாக இருக்கிற ஜலம் என்பது யாதோ, பக்தாக்ஷகனுடைய அந்த ஸ்வரூபத்துக்கு வந்தனஞ் செய்கிறோம். எவன் சகல தேவதைகளுக்கும் மூலமாக இருந்து கவ்யத்தைப் புசிக்கிறானோ, அந்த அக்னி ஸ்வரூபியான பரமாத்மாவுக்குத் தெண்டனிடுகிறோம்! பிராண அபானதி ரூபமாகச் சரீரங்களிலே இருந்து கொண்டு, எப்பொழுதும் சுவாசிப்பது போன்ற செயல்களைச் செய்பவனாகவும், ஆகாயத்தினின்று முற்பன்னனாயும் இருக்கிற வாயுதேவதா ஸ்வரூபியான ஜெகதீஸ்வரனுக்குத் தெண்டனிடுகிறோம்! எவன் சர்வபூதங்களுக்கும் அவகாசம் கொடுத்து, அனந்தமூர்த்தியாயும் சுத்தமாயும் இருக்கிறானோ அத்தகைய ஜகத்துக்கு கர்த்தாவாகிய ஸ்ரீகிருஷ்ணனுக்குப் பிரணாமஞ் செய்கிறோம்! எவன், க்ஷரமும் அக்ஷரமும் ஆன இந்திரிய ஸ்வரூபியாய், சப்தாதி விஷயங்களைக் கிரகித்துக் கொண்டு, ஞானத்துக்கு ஆதாரமாக இருக்கிறானோ, அந்தப் பிரணதார்த்திஹரனான் பெருமானுக்குத் தெண்டம் சமர்ப்பிக்கிறோம்! இந்திரியங்களாலே கிரகிக்கப்பட்ட சப்தாதி விஷயங்களை ஆன்மா அறிவதற்குக் கருவியாய் நிற்கும் மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்று சொல்லப்பட்ட அந்தக்கரண சொரூபியான சர்வேசுவரனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறோம்!

அளவில்லாதவனான எவனிடத்திலிருந்து சகல பிரபஞ்சமும் இருக்கிறதோ, எவனிடத்திலிருந்து அவை உண்டாயிற்றோ, எங்கே லயிக்கிறதோ, அந்தப் பிரகிருதி ரூபமுடையவனுக்கு நமஸ்காரம் செய்கிறோம்! எவன் பிராகிருதமான சத்வாதி குணங்களல்லாமல் சுத்தனாக இருந்து பிரகிருதி சம்பந்தமுடைய சத்துவாதி குணங்களைக் கொண்டவனைப் போலப் பிராந்தியினால் தோற்றமளிக்கிறானோ அந்த ஜீவாத்மா ரூபியான புரு÷ஷாத்தமனுக்கு தண்டம் சமர்ப்பிக்கிறோம். அறிவு குறுகுவதும் விரிவதுமான விகாரமில்லாதவனும், பிறப்பற்றவனும், சுத்தனும் பிரகிருதி சம்பந்தமில்லாதவனும், பிரகிருதி புருஷர்களைவிட உயர்வுள்ளவனுமாக இருக்கிற மூத்த ஜீவன் உண்டோ அந்த ஸ்வரூபத்தில் விளங்குகின்ற ஸ்ரீவிஷ்ணுபகவானுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறோம்! தீர்க்கமும் ஸ்தூலமும் சூட்சுமமும் ரத்தமும் நீலமுமல்லாமல் இருப்பதாய், ஒட்டுதலும் சாயையும் தேகமும் அவயவங்களும் இல்லாததாய், இடைவெளி இல்லாததாய் இன்ப துன்பமுற்றதாய் சப்த ஸ்பரிச ரூபரச கந்தங்கள் இல்லாததாய், கண் மூக்கு காது முதலியவையும், வாக்கு பாணி பாதாதிகளும், அந்தக்கரணமும் இல்லாததாய் நாமே தோத்திரங்களும் அன்னபானாதிகளில் உண்டாகும் சுகமும்; தன்னைவிட வேறொரு தேஜஸும் தனக்கு ஒரு காரணமும் இல்லாததாய்; பயம் பிரமம் நித்திரை ஜனன மரணம் முதலிய குற்றங்கள் இல்லாததாய், சலனமில்லாததாய், பரமேசுரத்துவாதி சகல கல்யாண குணங்களுடையதாய் யாவற்றுக்கும் இருப்பிடமாய், தனக்கு ஓர் ஆதாரமற்றதாய், வாக்கு மனம் இரண்டுக்கும் எட்டாததாய், கண்ணால் காணக்கூடாததாய், இவ்விதமாக எல்லாவிதத்திலும் உயர்ந்ததாய், பரமபிராப்பியமுமாய் விளங்கும் அந்த ஸ்ரீவிஷ்ணுபகவானுடைய ஸ்வரூபத்தை நாங்கள் வணங்குகிறோம்! என்று பிரசேதசர்கள் எம்பெருமானைத் துதித்த வண்ணம் சமுத்திர ஜலத்தில் இருந்தவாறு பதினாயிரம் ஆண்டுகள் தவஞ்செய்தார்கள். பிறகு ஷட்குண சம்பன்னனான ஹரி அவர்களிடம் கிருபை கூர்ந்து, அந்த சமுத்திர ஜலத்திலேயே பிரத்யட்சமானார். அப்பொழுது மலர்ந்த நீலோத்பல மலரிதழைப் போன்ற நீலச்சாயையுடன் பிரகாசிக்கும் திவ்வியத் திருமேனியோடும் கிரீட மகாகுண்டலங்களாகிய திவ்விய ஆபரணங்களோடும், சங்கு சக்கராதி திவ்ய ஆயுதங்களோடும், ஸ்ரீமந்நாராயணன் தோன்றி, பட்சியரசான பெரிய திருவடியின் (கருடனின்) திருத்தோளில் அமர்ந்து வந்து சேவை சாதித்தார். அவரைப் பிரசேதசர்கள் தங்கள் கண்குளிரக் கண்டு பக்திப் பரவசத்தால் தலைவணங்கித் தண்டப் பிரணமங்கள் செய்து, கைகூப்பி வணங்கி நின்றார்கள். பகவான் அவர்களை நோக்கி பிரசேதசரே உங்கள் தவத்தைக் கண்டு மகிழ்ந்த நான் உங்களுக்குப் பிரசன்னமானேன். உங்களுக்கு வேண்டும் வரங்களை கேட்பீராக என்று அருளிச் செய்தார். அவர்கள் மீண்டும்; ஸ்ரீயப்பதியை வணங்கி எமது தந்தையின் வாக்குப்படி நாங்கள் பிரஜாவிருத்தி செய்வதற்கு எங்களுக்குச் சாமர்த்தியம் ஏற்படும்படி கிருபை செய்ய வேண்டும்! என்று பிரார்த்தித்தார்கள். பகவான் அவர்கள் கேட்ட வரத்தைக் கொடுத்துவிட்டு மறைந்தார். பிரசேதசர்களும் விஷ்ணுவின் அனுக்கிரகத்தினால் இச்சித்த வரத்தைப் பெற்று, கடலிலிருந்து எழுந்து தங்கள் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார்கள்.
13. பிருது சக்கரவர்த்தியின் சரிதம்

துருவ சரித்திரத்தை பராசரர் கூறிவிட்டு அந்த வமிசத்தின் வரிசையையும் கூறலானார். அருந்தவஞ் செய்து ஸ்ரீமந் நாராயணனுடைய கிருபையினால் சர்வ உத்தமமான பதவியை அடைந்த துருவன், சம்பு என்பவளை திருமணம் செய்து கொண்டான். அவனுக்கு சிஷ்டி, பவியன் என்ற பிள்ளைகள் இருவர் பிறந்தார்கள். அவர்களில் சிஷ்டி என்பவன், சுச்சாயை என்பவளைத் திருமணம் செய்து கொண்டு ரிபு, ரிபுஞ்சயன், ரிப்பிரன்; விருகலன், விருக தேஜசன் என்னும் பிள்ளைகள் ஐவரைப் பெற்றான். அவர்களில் ரிபு என்பவன் பிரகதீ என்ற மனைவியிடத்தில் சாட்சுஷன், சர்வதேஜசன் என்ற இரு பிள்ளைகளைப் பெற்றான். அவர்களில் சாட்சுஷன் வருண சந்ததியில் பிறந்தவரும் வீரணாப் பிரஜாபதிக்கு மகளுமான புஷ்கரணியிடத்தில் ஆறாவது மநுவந்தரத்துக்கு அதிபதியான மநுவைப் பெற்றான். அந்த மநுவுக்கு வயிராசன் என்ற பிரஜாபதியின் மகளான நட்வளை என்பவளிடத்தில் ஊரு பூரு, சதத்தியும்னன், தபஸ்வி, சத்தியவான், சுசி, அக்கினிஷ்டோமன், அதிராத்திரன், சுத்தியும்னன், அபிமன்யு என்னும் பத்துப் பிள்ளைகள் பிறந்தார்கள். ஊரு என்பவன், அக்கினியின் குமாரியை மணந்து மகா தேஜசுடைய அங்கன் சுமனசு, சுவாதி, கிரதி அங்கிரசு, சிபி என்ற ஆறு பிள்ளைகளைப் பெற்றான். அங்கனுக்கு மிருத்து புத்திரியான சுநீதை என்பவளிடத்தில் வேனன் என்பவன் பிறந்தான். மகாமுனிவர்கள் புத்திரார்த்தமாக அந்த வேனன் என்பவனது வலது கையைக் கடைந்தனர். அப்போது அதனிடமிருந்து பிருது என்பவன் பிறந்தான். அவன் பிரஜைகளின் நன்மைக்காக தேனு ரூபம் தரித்த பூமியிலிருந்து வேண்டிய பொருள்களைக் கறந்து கொடுத்தான்! இவ்வாறு பராசரர் கூறிவரும்போது, மைத்ரேயர் குறுக்கிட்டு முனிவரே! வேனனுடைய வலது கரத்தை மகரிஷிகள் கடைந்தார்களே. அதிலிருந்து பிருது என்பவன் எப்படித் தோன்றினான்? அதை விவரமாகச் சொல்லவேண்டும் என்று கேட்டார்.

பராசரர் கூறலானார்: மைத்ரேயரே! மிருத்துவுக்கு முதல் மகளான சுருதை என்பவள், அங்கன் என்னும் அரசனுக்கு மனைவியாகி வேனன் என்ற புதல்வனைப் பெற்றாள். அந்த வேனன் மிருத்துவின் தோஷத்தினால் குணவீனனாய்ப் பால்யம் முதல் துஷ்ட சுபாவமுடையவனாகவே இருந்தான். அவன் பட்டாபிஷேகம் செய்து கொண்டது முதல் யாரும் இன்று முதல் யக்ஞங்களைச் செய்ய வேண்டாம். தானங்கள் கொடுக்க வேண்டாம் ஓமங்கள் செய்யவேண்டாம். நானே யக்ஞங்களுக்கு அதீஸ்வரன்! என்னைத் தவிர வேறு ஒருவரும் இல்லை என்று பறையறைவித்தான். அதைக் கேட்ட முனிவர்கள் அனைவரும் அந்த அரசனிடம் சென்று, அரசே! நாங்கள் தேசத்துக்கும் மக்களுக்கும் இதமான தீர்க்க சத்திர யாகம் செய்து, யக்கிய ஈசுவரனான ஸ்ரீஹரியை ஆராதிக்கிறோம். அதனால் உனக்கும் யக்ஞ பாகத்தில் பங்கு கிடைக்கும். யக்ஞ புருஷனான ஸ்ரீமந்நாராயணன், நாங்கள் செய்யும் வேள்வியினால் திருவுள்ளம் உவந்து, உனக்குச் சகல பீஷ்டங்களையும் வழங்கியருள்வான். எவனது ஆட்சியில் யாகாதி சத்கருமங்களாலே யக்ஞேசுவரனான புரு÷ஷாத்தமன் பூஜிக்கப்படுவானோ அந்த அரசனுக்கு அவ்வெம்பிரான் சகல மனோரதங்களையும் அருள்வான்! என்று நயமாகக் கூறினார்கள். அதற்கு மன்னன் வேனன், என்னைவிட அர்ச்சிக்கத் தகுந்தவன் வேறு யார் உண்டு? யக்ஞேசுவரன் என்று நீங்கள் கூறும் அந்த ஹரி என்பவன் யார்? பிரேமா, விஷ்ணு, சிவன், இந்திரன், யமன்! வருணன், குபேரன், வாயு, அக்கினி, சந்திரன்! சூரியன், பூமி என்ற தேவர்களும், மற்ற சுபானுக்கிரக ஆற்றலுடைய யாவரும் அரசனுடைய சரீரத்திலேயே இருக்கின்றனர். ஆகையால் மன்னவனே சர்வதேவ சொரூபி என்று சாஸ்திரங்கள் கூறுவதை அறிந்தே நான் கட்டளையிட்டான். ஆகவே, கட்டளைப்படி நடந்து கொள்ளுங்கள். மங்கையர் தங்கள் கணவருக்குப் பணிவிடை செய்வதே முக்கிய  தருமம் என்பது போல், அரசனாகிய என்னுடைய ஆக்ஞையை ஏற்று நடப்பதே உங்களுக்குத் தர்மமாகும் என்றான். அரசே! யக்ஞங்கள் செய்ய எங்களுக்கு அனுமதியுங்கள். தர்மத்தை நாசஞ்செய்ய வேண்டாம். சராசராத்மகமான பிரபஞ்சங்கள் எல்லாம் வேள்விகளிலே ஓமஞ்செய்யும் அவிசினாலேயே செழிப்படைகின்றன! என்றார்கள் ரிஷிகள். அவர்கள் கூறியதற்கு வேனன் இணங்காமல் பிடிவாதமாகவே இருந்தான். அதனால் முனிவர்களுக்கு கோபம் பொங்கியது. அவர்கள், இவன் ஆதியந்தமில்லாதவனும் ஜகத்பிரபுவும் யக்ஞ புருஷனுமான ஸ்ரீயப்பதியை இகழ்கிறான் அல்லவா?  இவன் ராஜ்ய பரிபாலனத்துக்குத் தகுந்தவனல்ல; இந்தத் துராத்மாவைக் கொன்றாலும் நமக்குப் பாவம் வராது! என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டு, மந்திரங்களால் சுத்தி செய்யப்பட்டிருந்த குச தர்ப்பைகளாலே அந்த அரசனை அடித்தார்கள். அவன் பூர்வத்திலேயே; சர்வேஸ்வரனான ஸ்ரீவிஷ்ணுவையும் அவனது மகிமையை விளக்கும் வேதத்தையும் அவனது ஆராதனையான யாகத்தையும் நிந்திப்பதாகிய அக்கினியால் தகிக்கப்பட்டிருந்ததால் முனிவர்களின் தருப்பைப் புல்லின் அடிபட்டவுடனே உயிர் இழுந்து கீழே விழுந்தான்.

அந்த சமயத்தில் நான்கு திசைகளிலும் ஏராளமான துன்பும் தூசியும் பறந்து ஆகாயம் எங்கும் வியாபித்தது. அதைக் கண்ட மகரிஷிகள் அங்கிருந்த மக்களைப் பார்த்து; இந்தத் தூசி என்ன காரணத்தால் உண்டாயிற்று? என்று கேட்டார்கள். அதற்கு ஜனங்கள், உங்களால் பூமண்டலம் அராஜகமானதினால் அனேக ஜனங்கள் ஆங்காங்கே பிரவேசித்துப் பிறருடைய திரவியங்களை அபகரிப்பதற்காக வேகமாய் வருகிறார்கள். அத்தகைய கள்ளர்களின் கால்பட்ட வேகத்தினால் தூளிப்படலமாகிய இந்தத் தூசியும் தும்பும் தோன்றியது? என்றார்கள். அதைக்கேட்ட முனிவர்கள் ஆலோசித்து, ஒரு புத்திரனை உண்டாக்க வேண்டுமென்று தீர்மானித்து அபுத்திரனான வேனனது தொடையைக் கடைந்தார்கள். அப்போது அதிலிருந்து எரிந்த கட்டையைப் போன்ற கறுப்பு நிறமும் விகாரமான முகமும், குட்டையான உடலும் கொண்ட ஒரு மனிதன் தோன்றி, முனிவர்களை நோக்கி, நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். அதற்கு அவர்கள் நிஷீத (உட்கார்) என்று சொன்னார்கள். அதன் காரணமாக அவன் நிஷாதன் என்ற பெயரைப் பெற்றான். விந்தியமலை வாசியரான வேடர்கள் அவனது பரம்பரையில் உண்டானார்கள். ஆகையால் அவர்கள் நிஷாதர்கள் என்று வழங்கப்பட்டனர். இவ்விதமாக மன்னன் வேனனின் பாபங்களெல்லாம் ஒருங்கே திரண்டு புருஷாகாரமாகப் பிறந்தன. அன்று முதல் நிஷாத ஜாதி உலகத்தில் உண்டாயிற்று. அதன் பிறகு முனிவர்கள் வேனனுடைய வலதுகையைக் கடைந்தார்கள். அந்தக் கையிலிருந்து அக்கினியைப் போல் ஜொலிக்கும் திவ்ய தேஜோவிராஜிதனும் மகாப் பிரதாபம் கொண்டவனுமான ஒரு குமாரன் தோன்றினான். பிருது மாமன்னன் என்று அவனுக்குப் பெயர் வைக்கப்பட்டது, அவன் பிறந்ததுமே ஆகாயத்திலிருந்து அசகவம் என்ற ஒரு வில்லும் திவ்வியமான பாணங்களும் விழுந்தன. அவற்றை பிருது கைக்கொண்டான். அவன் தோன்றியதுமே சகல பூதங்களும் பெருமகிழ்ச்சியடைந்தன. வேனனும் சற்புத்திரன் உண்டானதால் புத்து என்ற நரகத்திலிருந்து நீங்கிச் சொர்க்கத்தையடைந்தான். அப்போது சமுத்திரங்களும் நதிகளும் பிருதுவுக்கு அபிஷேகம் செய்வதற்கான புனித நன்னீரையும் திவ்விய ரத்தினங்களையும் கொண்டு வந்து வணங்கி நின்றன. பிரமனும் ஆங்கிரசர் என்னும் தேவதைகளோடும் சகல பூதங்களோடும், வந்து வேனனுடைய மகனான பிருது சக்கரவர்த்தியைச் சகல பூமண்டலங்களுக்கும் அதிபதியாகப் பட்டாபிஷேகம் செய்தான். அப்போது பிருது சக்கரவர்த்தியின் வலது கையில், சக்கரம் இருப்பதை பிருமா பார்த்து, இவன் நாராயண அம்சமுடையவன் என்று நினைத்து மகிழ்ச்சியடைந்தார். மைத்ரேயரே! எவருடைய வலது ஹஸ்தத்தில்; விஷ்ணு சின்னமான சக்கரரேகை காணப்படுமோ அவர்கள் தேவர்களாலும் வெற்றி பெறக்கூடாத பராக்கிரமமுடையவர்களாய்; மாமன்னர்களிலே உயர்ந்தவராய் விளங்குவார்கள்.

இவ்விதம்; பிருது சக்கரவர்த்தி முடிசூட்டிக்கொண்டு, முறைப்படி ஆட்சி செலுத்தி வரும்போது, அவனது தகப்பனான வேனனுடைய உபத்திரவத்தினால் வருந்திய மக்கள், இவனது நற்குணங்களைக் கண்டு மகிழ்ந்தனர். பிரஜைகளைக் காத்து, அவர்களுடைய அன்பைப் பெற்றதால்; அவன் அவனிராஜன் என்று வழங்கப்பட்டான். அவன் தேரில் ஏறிப் புறப்படும்போது சமுத்திரங்கள் இரையாமல் ஸ்தம்பித்தன. பர்வதங்கள் எல்லாம் அவனுக்கு வழிவிட்டு நின்றன. அவனது விருதுக்கொடிகள் கிளைகளிலே படுமே என்ற பயத்தினால் உயர்ந்த மரங்கள் தணிந்து நின்றன. பூமி உழாமலே விளைந்தது. நினைத்த மாத்திரத்திலேயே பயன்கள் சித்தித்தன. பசுக்கள் வேண்டும் அளவு பாலைச் சுரந்தன. இலை மடிப்புக்களில் எல்லாம் தேன் நிறைந்திருந்து பிரும்மாவைக் குறித்துச் செய்த வேள்வியிலே, இந்தப் பிருது மாமன்னன் தோன்றியவுடனே, அந்த யக்கியத்தின் சுத்தியா காலத்தில் சூதனும் மாகதனும் தோன்றினர். இப்படிப் பிறந்த சூதமாகதர்களைப் பார்த்து மகாமுனிவர்கள், பிரதாப சாலியான பிருது மன்னனை அவனது குணகர்ம வரலாறுகளைச் சொல்லித் துதியுங்கள்! இவன் துதிப்பதற்குத் தகுந்தவன் என்று கட்டளையிட்டார்கள். சூதமாகதர் தயங்கி, முனிவர்களே! இவர் இப்போது தானே பிறந்தவர்? ஆகையால் இவரது குணங்களையும் புகழையும் நாங்கள் அறியோமே! எதைச் சொல்லி, நாங்கள் இவரைப் புகழ்வோம்? என்று கேட்டார்கள். அதற்கு முனிவர்கள், இவன் சக்கரவர்த்தியும் மிக வலிவுடையவனுமாகி, உலகத்துக்கு இதமான பல செயல்களைச் செய்வான்! ஆகையால் இவனுக்கு இனிமேல் விளங்கத்தக்க குணங்களைப் பற்றித் துதி செய்யுங்கள்! என்றார்கள். அதைக்கேட்டு, பிருது சக்கரவர்த்தியும் தன்னுள்ளே தனக்குத்தானே நினைக்கிறான். உலகத்திலே சற்குணங்களினால் மன்னனுக்குப் புகழும் பெருமையும் உண்டாகும். இம்முனிவர்கள் என்னைத் துதிக்கச் சொன்னதே நான் சற்குணங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்கான ஓர் உபதேசமாகும். ஆகையால் நான் குணவான் ஆவேன். இம்மாகதர்கள் கீர்த்தனஞ்செய்யும் குணங்களை ஏற்று, இவர்கள் காட்டும் துர்க்குணங்களை விட்டு விடுகிறேன் என்று சித்தமாக இருந்தான்.

அப்போது சூதமாகதர்கள் அந்த அரசகுமாரனான பிருதுவை இந்த மகாராஜகுமாரன் சத்தியசீலன்; தானசீலன்; பிரதிக்ஞையை நிறைவேற்ற வல்லவன்; செய்யத்தகாத காரியத்தைச் செய்யக் கூசுபவன். ஜெயசாலி பொறுமையுள்ளவன் நட்புக்குணமுடையான், மகாப் பிரதாபவான், துஷ்டர்களைத் தண்டிக்கும் குணமுடையவன், இனிய பேச்சுத் திறனுடையான்; பூஜிக்க தகுந்தவரைப் பூஜிப்பவன்; யாகசீலன்; பிராமண பக்தன்; யோக்கியரிடத்தில் அன்புடையவன். சத்துரு மித்துருக்களிடம் சமபுத்தியோ பட்சபாதமற்று சகல விவகாரங்களையும் தீர்ப்பவன்! என்று நல்ல குரலோடு நன்றாகத் துதி செய்தார்கள். சூதனும் மாகதனும் இவ்வாறு எடுத்துக் கூறிய சற்குணங்களையெல்லாம் பிருது மன்னன் தன் உள்ளத்தில் பதிய வைத்துக்கொண்டு; அக்குணங்களுடன் ஆட்சி செய்து; பலவிதமான யாகங்களை நடத்தி அதிக தட்சணை கொடுத்து வந்தான். அவனது தந்தை வேனன் மடிந்ததால்; பூமி அராஜகமாயிற்று. அதனால் பிருது மன்னனது ஆட்சியின் ஆரம்பத்திலே; பிரஜைகள் அனைவரும் பசியால் வருந்தியவர்களாய் அரசனிடம்; சென்று அரசே! நீர் முடிசூட்டிக் கொள்வதற்கு முன்பே; பூமண்டலம் அராஜகமாகி சகலவோஷதி வர்க்கங்களையும் தன்னுள்ளே இழுத்துக் கொண்டு விட்டது. ஆகையால் இப்போது ஆகார வசதியில்லாமல் பிரஜைகள் பசி வாதையால் அழிந்து வருகின்றனர். அன்ன பானங்களைக் கொடுத்து எங்களை ரட்சிப்பதற்காகவே பிரம்மா உங்களைப் படைத்து எங்களுக்கு வழங்கினார். ஆகையால் பசியால் பீடிக்கப்பட்ட எங்களைக் காத்து ரட்சிக்க வேண்டும்! என்று முறையிட்டார்கள். அதைக் கேட்ட பிருது மன்னன் அப்படியே ஆகட்டும் என்று சொல்லி, அசகவம் என்ற வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டு பூமியை எதிர்க்கச் சென்றான், அப்போது பூமாதேவியானவள்; பசுவின் ரூபத்தைத் தரித்து பயந்து ஓடினாள். மன்னனும் அவளை விடாமல் பின் தொடர்ந்து சென்றான். அதனால் பூதேவி பிரம்மலோகம் முதலிய உலகங்களுக்கும் ஓடிச்சென்று எங்கும் அடைக்கலம் அடைய முடியாமல் வில்லும் கையுமாய்த் தன்னைத் துரத்திவரும் வேந்தனை நோக்கி; பிருது மன்னனே! பெண் வதையினால் பாதகம் சம்பவிக்கும் அல்லவா, அதையறிந்தும் ஏனிப்படிச் செய்கிறாய்? என்று கேட்டாள். வசுந்தரையே! துஷ்டகாரியஞ் செய்பவரை வதைப்பதால் பலருக்கு நன்மையுண்டாகுமானால் அப்படிப்பட்ட வதையைச் செய்வதால் புண்ணியம்தான் உண்டாகும்! என்றான் பிருது.

அரசே! பிரஜைகளுக்கு இதமுண்டாவதற்காக என்னை அழித்தால், சதுர்வித பூதசாதங்களுக்கும் ஆதாரம் என்ன? என்றாள் பூமிதேவி. உற்று அவளை பிருது நோக்கி வசுந்தரா என்னுடைய ஆக்ஞையை மீறி துர்விநீதையாய் நடக்கிற உன்னை என்னுடைய அம்புகளால் சங்கரித்து எது யோக சக்தியினால் சகல பிரஜைகளையும் தரிக்கிறேன்! என்றான். அதைக்கேட்ட பூதேவி பயத்தால் நடுங்கி, பிருதுவை வணங்கி அரசே! உபாயத்தினால் சகல காரியங்களும் சிந்திக்குமேயல்லாமல் வேறு வகையால் சித்திக்காது. ஆகையால் நான் ஓர் உபாயம் சொல்கிறேன். கேட்பாயாக உலகத்தில் உண்டான ஓஷதி நிகரங்களையெல்லாம் நான் என்னுள்ளேயே அடங்கும்படி கிரகித்திருக்கிறேன். ஆகையால் அவை என்னிடம் க்ஷீரரூபமாக இருக்கின்றன. வேண்டுமானால் பால்ரூபமாக இருக்கும் அந்த ஓஷதிகளை உலக நன்மைக்காக நான் வழங்குகிறேன். தகுந்தவொரு கன்றையுண்டாக்கிக் கொடுப்பாயாக. அந்தக் கன்றினிடமுள்ள அன்பினால் பால் ரூபமாகவுள்ள ஓஷதிகளைக் கறக்கச் செய்வேன். நான் கொடுக்கும் க்ஷீரங்கள் ஜகமெல்லாம் வியாபிக்கும் பொருட்டு தடையாகவுள்ள மலைகளையெல்லாம் விலக்கி; என்னை மேடுபள்ளமில்லாமல் நிரவவும் என்றாள். பிருதுவும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லித் தன்னுடைய வில்லின் நுனியால் அவற்றைப் புறத்தே தள்ளி பூமண்டலத்தைச் சமமாகச் செய்தான். மைத்ரேயரே! பூர்வ காலத்தில் மலைகள் எல்லாம் மிகவும் நெருங்கி முழுவதும் பரவியிருந்ததாலே பூமண்டலத்தில் நகரப்புரங்களும் கிராமங்களுமாகிய குடியிருப்புகள் பிரிவு படாமல் இருந்தன. பயிர்த்தொழிலும் பசு வளர்ப்பும் வாணிபமும் இல்லை. பிருது மன்னன் முடிசூட்டிக் கொண்டது முதல் இவ்வேறுபாடுகள் உண்டாயின. எங்கெங்கே பூமியானது மேடு பள்ளங்கள் இல்லாமல் சமமாக இருக்குமோ அங்கங்கே, புரங்களையும் கிராமங்களையும் அந்த அரசன் ஏற்படுத்தி, அவற்றில் பிரஜைகளை வசிக்கச் செய்தான். பூர்வத்தில் கந்த, மூல பலாதிகளே பிரஜைகளுக்கு ஆதாரமாக இருந்தன. ஜகம் அராஜகமானபோது அவைகளும் கிடைப்பது கஷ்டமாயிற்று. ஆகையால் பிருது மன்னன் சுவாயம்புவமனுவைக் கன்றாக்கி தனது ஹஸ்தத்தை பாத்திரமாகச் செய்து, தேனுரூபிணியான பூமியினிடத்தில் சகல ஸஸ்யங்களையும் கறந்தான். அதனால் பிரஜைகள் மகிழ்ச்சியடைந்து, அவன் உண்டாக்கிய ஆகாரத்தினால் பலத்தையும் சக்தியையும் பெற்று சுகமாக இருந்தார்கள். அவன் கொடுத்த அன்னத்தால் தான் இன்றளவும் பிரஜைகள் ஜீவித்திருக்கின்றனர். பிருது மன்னன் பூமிக்குப் பிராணனைக் கொடுத்ததால் தந்தையானான் அந்தக் காரணத்தாலேயே பூமிக்கு பிருத்வி என்ற பெயர் உண்டாயிற்று. பிறகு தேவதைகளும், முனிவர்களும், தைத்தியர்களும், ராக்ஷசர்களும், கந்தருவர்களும், நாகர்களும், பிதுர்க்களும், விருட்சங்களும், பிருது மன்னனின் கருணையால் தத்தமது சாதிக்கான பாத்திரத்தையும் கன்றையும் கறப்பவனையும் உண்டாக்கி, தங்களுக்குரிய மகிழ்ச்சியை அடைந்தார்கள். சகல பூததாரணியாயும், எல்லாவற்றையும் உண்டாக்குபவளாயும், காப்பவளாயும், ஸ்ரீமகாவிஷ்ணுவின் பாதாம்புயத்தில் பிறந்தவளுமான பூமாதேவி என்னும் பிருதிவி முன்புபோல் சகல பூதங்களுக்கும் இஷ்டங்களைக் கொடுக்கத் துவங்கினாள். மைத்ரேயரே! இவ்விதமான வேனன் மன்னனின் குமாரனான பிருது சக்கரவர்த்தி புகழுடையவனாய் விளங்கினான். எவன் இத்தகைய பிருது மாமன்னனுடைய சரித்திரத்தைப் படிக்கிறானோ, படிக்கக் கேட்கிறானோ, அவன் பாவந்தீர்ந்து, துர்ச்சொப்பன பயமில்லாமல் சுகமாக இருப்பான்!
12. சிறுவன் துருவனின் பெருந்தவம்!

சப்தரிஷிகளிடமும் உபதேசம் பெற்ற துருவன் மனமகிழ்ந்து அவர்களை வணங்கி விட்டு, யமுனை நதி தீரத்திலிருந்த மதுவனத்துக்குச் சென்றான். அங்கு மாமுனிவர்கள் உபதேசித்த வண்ணம் ஸ்ரீவிஷ்ணுவைத் தனது இதய கமலத்தில் தியானித்துக் கொண்டிருந்தான். இப்படியே ஒரே நினைவாகத் தியானம் செய்துகொண்டிருந்த துருவனின் சித்தத்தில் சர்வ பூதங்களிலும் உள்ளவனான ஸ்ரீஹரிபகவான் அதிகப் பிரகாசமாய்த் தோன்றியருளினார். மைத்திரேயரே! இவ்விதம் அந்தப் பரமயோகியான துருவனுடைய இதயத்தில் எம்பெருமான் எழுந்தருளியிருந்ததால் சகலத்தையும் தரிக்கிற பூதேவி, அந்தப் பரமயோகியைத் தாங்கமாட்டாமல் இருந்தாள். பூமியில் துருவன் தன் இடக்காலை ஊன்றி, வலக்காலை மடித்துத் தவம் செய்தபோது, பூமியானது இடதுபக்கத்தில் தாழ்ந்தும், வலக்காலை ஊன்றிய போது வலப்பக்கம் தாழ்ந்தும் நின்றது. பிறகு துருவ யோகி ஒரே பாதத்தில் எட்டை விரலால் பூமியில் நின்றபோது, பூமண்டலமே மலைகளுடன் நடுங்கியது. மகா நதிகளும் சப்த சாகரங்களும் கலங்கிப்போயின. இவ்விதமாக மக்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் கலக்கம் உண்டானதைக் கண்டு, அந்த மநுவந்திரத்திலே இருந்த யாமர் என்னும் தேவதைகள் சித்தங்கலங்கினர். அவர்கள் இந்திரனுடன் ஆலோசித்துத் துருவனுடைய தியானத்திற்கு விக்கினம் செய்ய முயன்றார்கள். இந்திரனின் கட்டளையை ஏற்ற கூசுமாண்டங்கள் என்னும் பயங்கர பூதகணங்கள் அந்த மகாயோகியான துருவனின் தவத்தைக் கலைக்கப் பல மாயங்கள் செய்தன. எப்படியெனில், துருவனுக்குத் தாயான சுநீதியின் சொரூபத்தைத் தரித்த மாயை ஒன்று துருவனிடம் வந்து, மகனே! உன் உடல் அபாயமடைய்கூடிய கொடிய தவத்தை உடனே நிறுத்து! ஐயோ மகனே! அநேக காலம் தவமிருந்து உன்னைப் பெற்றேனடா? அனாதையும் பேதையுமான என்னைத் தனியே அலைய விட்டு மாற்றாந்தாயின் பேச்சிற்காக, நீ இப்படி வருவது நியாயமோ? கதியற்ற எனக்கு நீ அல்லவா கதி! ஐந்து வயதுப் பாலகனான நீ எங்கே? மிகவும் கடுமையான இந்தத் தவம் எங்கே? பயனற்ற இந்த முயற்சியிலிருந்து உன் மனதைத் திருப்பிக்கொள். அப்பனே! நீ விளையாடுகிற பருவமடா இது! இதற்குப் பிறகு வேதங்களை அத்தியனஞ்செய்யும் காலம்! அதன்பிறகு மோகானுபவங்களுக்குரிய காலம். அதன் பிறகே தவஞ்செய்வதற்குரிய காலமாகும்! விளையாடும் காலத்தில் ஆன்மக்கிலேசமான தவஞ் செய்வது நல்லதல்ல. தாயான என் வார்த்தையைக் கேட்டு; இந்தப் பிராயத்துக்குத் தக்கபடி, என்னுடன் வரவேண்டியது தான் உனக்கு நியாயம். இந்த தவத்தை விடாமற் போனால் நான் இப்போது உன் எதிரில் என் பிராணனை விட்டு விடுகிறேன் என்று இப்படியாகத் தன் கண்களிலே கண்ணீர் தாதை தாரையாகப் பெருகக் கதறியழுது கொண்டு நின்றாள். மாயையான சுநீதியை தன் முன்னால் கண்டும், துருவன் ஸ்ரீமந்நாராயணனின் திவ்விய திருவடிகளிலேயே சித்தத்தை வைத்திருந்ததால், கண் திறந்து பார்க்கவில்லை. பிறகு அந்த மாயா சுநீதி துருவனை நோக்கி, குழந்தாய்! கோர அரக்கர்கள் உன்னைச் சம்கரிப்பதற்காகக் கதை கட்கம் முதலான ஆயுதங்களோடு வருகிறார்கள். இப்பொழுதே உன் தவத்தை விட்டுவிட்டு ஓடிவா! என்று சொல்லி விட்டு மறைந்து போனாள். பிறகு பலவித ஆயுதங்களுடன் அக்கினிச்சுவாலை வீசும் முகங்களையுடைய அரக்கர்கள் தோன்றினார்கள். அவர்கள் போர்க்கருவிகளையேந்தி கர்ஜனை செய்தார்கள். குபுகுபுவென்று அனலெழும்பும் முகமுடைய நரிகள் துருவனைச் சுற்றிக்கொண்டு அகோரமாக ஊளையிட்டன.

சிங்கம், முதலை, ஒட்டகம் போன்ற முகங்களைக் கொண்ட நிசாசரர்கள் இந்தப் பையனைக் குத்துங்கள்! கொல்லுங்கள்! தின்னுங்கள் என்று பெருங்கூச்சலிட்டுப் பயமுறுத்தினார்கள். துருவனோ கோவிந்தனின் சரணாரவிந்தங்களிலேயே தன் மனதை லயப்படுத்தியதால், அப்பூதகணங்களின் சப்தங்களும் பயமுறுத்தல்களும் துருவனை ஒன்றும் செய்யமாட்டாமற் போயின. அவன் அவற்றைக் கவனிக்காமல், ஸ்திர சித்தத்துடன் ஸ்ரீமந்நாராயணனே தன்னுள் எழுந்தருளியிருப்பதாகத் தியானித்து கொண்டு, மற்றொன்றும் அறியாமல் இருந்தான். இவ்விதமாகத் தேவர்கள் பிரயோகித்த மாயைகள் எல்லாம் நாசமடைந்தன. அதைக்கண்ட தேவதைகள் அந்த மகாத்மாவின் தபோ மகிமையினால் தங்களுக்கு என்ன அபாயம் நேரிடுமோ என்று பயந்து அந்தத் தவத்தை நிறுத்துவதற்கு உபாயந் தேட வேண்டும் என்று உறுதியாகத் துணிந்து, ஜகத்தாரகண பூதனான ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைந்து, தேவதேவனே! துருவனின் தவ வலிமையினால் நாங்கள் தகிக்கப்படுகிறோம். அதனால் உம்மைச் சரணடைந்தோம் சந்திரன் தினந்தோறும் தனது கலைகளினால் அபிவிருத்தியடைவதைப் போல, உத்தானபாதனின் மகன் துருவனும் தவச்சிறப்பால் வளர்ந்து வருகிறான். ஆகையால் நாங்கள் பயப்படுகிறோம். அந்தப்பாலகன், இந்திர, வருண, குபேர, சூரிய சந்திராதிகளுடைய பதவிகளிலே எதைக்கேட்பானோ தெரியவில்லை. ஆகையால் அவனுடைய தவத்தை நிறுத்தி; எங்களுடைய கவலையைத் தீர்க்க வேண்டும்! என்றார்கள். அவர்களை மகாவிஷ்ணு கடாட்சித்து, சிறுவன் துருவன் பெருந்தவம் புரிகிறான் என்றாலும் இந்திரன், சூரியன், சந்திரன் ஆகியோரது அதிகாரங்களில் எதையும் அவன் விரும்பவில்லை. அவனது மனோரதத்தை நான் அறிவேன். ஆகையால் நீங்கள் கவலைப்படாமல், உங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லுங்கள். நான் துருவனுக்கு இஷ்டமான வரத்தைக் கொடுத்து அவனது தவத்தை நிறுத்துகிறேன் என்று அருளிச்செய்தார். பிறகு, தேவர்கள் திருமாலிடம் விடைபெற்றுச் சென்றார்கள். அதன் பின்னர் சர்வாத்மகனான எம்பெருமான் துருவனுடைய ஒன்றித்த தியானத்துத் திருவுள்ளம் உவந்து நான்கு திருத்தோளுடைய திருமேனியோடு துருவன் முன்பு காட்சி கொடுத்து உத்தானபாதனின் மகனே! உனக்குச் சுபமுண்டாகக் கடவது. உன் தவத்தைக் கண்டு மகிழ்ந்து, உனக்கு விருப்பமான வரத்தைத் தருவதற்கே நான் வந்தேன். நீ உனது சித்தத்தை என் மீது நிலையாக நிறுத்தியதால் நான் மகிழ்ந்தேன். உனக்கு விருப்பமான வரத்தைக் கேட்பாயாக! என்றார். துருவன் கண்களைத் திறந்து தான் தியானித்த விதத்திலேயே சங்கு சக்கரம் கதை கட்கம் சாரங்கம் முதலிய பஞ்சாயுதங்களோடும், கிரீட வனமாலிகா கௌஸ்துப பீதாம்பர அலங்காரத்தோடும் எழுந்தருளிய ஸ்ரீயப்பதியைக் கண்டு பூமியில் விழுந்து தெண்டனிட்டு; மெய்சிலிர்க்க பயபக்தியுடன் தேவதேவனான ஸ்ரீமந்நாராயணனைத் துதி செய்யலானான்.

இந்த மகாபுருஷனைக் குறிப்பிட என்ன வாக்கியத்தை சொல்வேன்? யார் சொன்னது போலத் துதிப்பேன்? என்று துருவன் மனங்கலங்கி, ஒன்றுமே தோன்றாமல் விஷ்ணு பகவானைச் சரணடைந்து ஸ்வாமி ஷட்குண ஐசுவரிய சம்பன்னனே! அடியேனது தவத்துக்குத் திருவுள்ளம் உகந்தீரானால் உம்மையே ஸ்தோத்திரம் செய்ய நினைக்கும் எனக்கு அதற்கேற்ற ஞானத்தை வழங்கியருள வேண்டும். வேதாந்த வேதிகளான பிரமாதிகளும் உமது மகிமையைச் சொல்ல வல்லவர்களல்லர். அப்படிப்பட்ட உம்மைப் பாலகனான நான் எப்படித் துதிப்பேன்? அடியேன் மனது மது சரண கமலங்களிலே பதிந்து, பக்தியுடன் உம்மைத் துதிக்கவே விரும்புகிறது. ஆகையால் அடியேனுக்கு அதற்கேற்ற ஞானோதயத்தை தந்தருள வேண்டும் என்று பிரார்த்திக்க, ஸ்ரீகோவிந்தன், சகல வித்யாமயமான தமது பாஞ்சசன்யத்தினாலே, அப்பாலகனின் முகத்தில் ஸ்பரிசித்து அருளினான். துருவனுக்கு ஞானோதயமானதால் அவன் பிரசன்ன முகத்துடன் தெண்டனிட்டு பிரிதிவி அப்பு தேஜசு, வாயு, ஆகாயங்களும் தன்மாத்திரைகளும் மனசும், மற்றுமுள்ள இந்திரியங்களும் மகத்தகங்காரங்களும் மூலப்பிரகிருதியும் எவனுடைய ரூபங்களோ, அந்தச் சர்வேஸ்வரனான விஷ்ணு பகவானுக்குத் தெண்டனிடுகிறேன்! இயல்பிலேயே தூய்மையானவனாய், சூட்சும ரூபியாய், ஞானத்தால் எங்கும் வியாபித்திருப்பவனாய், பிரகிருதிக்கும் பரனாக இருக்கும் புருஷனும் எவனுடைய ரூபமாக இருக்குமோ, அந்தக் குணாகரனான புரு÷ஷாத்தமனுக்குத் தெண்டனிடுகிறேன்! பிருதிவி முதலான பூதங்களும், சந்தாதி குணங்களும், புத்தி முதலியவைகளும், சம்சாரியான ஜீவனும் ஆகியவர்களைக் காட்டிலும் பரனான மூத்த புருஷன் எவனுடைய ரூபமாக இருக்குமோ அத்தகைய ஜகத்பதிக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறேன்! பிரம லக்ஷ்ணமுள்ளதாய் சகல உலகத்திற்கும் அதிபதியாய் தூய்மையானதாயுள்ள உமது சொரூபத்துக்கு வணக்கம். சர்வாத்மகனே! சமஸ்த சக்திகளும் அமைந்துள்ள பிரகத்துவத்தினாலும் ஜகதாகாரத்தினாலும் மகாப்பிரமாணமாக இருப்பதாலும், பிரமம் என்ற நாமதேயமுடையதாய், விகாரமில்லாதாய், யோகி சிந்தியமாய் விளங்கும் உமது திவ்விய சொரூபத்துக்கு வணக்கம். நீரே சகஸ்ர சிரசுகளும், ஆயிரம் பாதங்களும், ஆயிரம் கண்களும் உடையவராய், புருஷராய், சர்வத்தையும் வியாபித்து, பூமியென வழங்கும் சராசரமயமான பிரபஞ்சத்தைவிடப் பதின்மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளீர்! புரு÷ஷாத்தமனே! விராட்டு என்று வழங்கப்பட்ட அவ்யக்த சரீரகனான அநிருத்தனும் ஸ்வராட்டு என்று சொல்லப்பட்ட கேவல ஆத்ம பிராப்தியுள்ளவனும், சம்ராட்டு என்று சொல்லப்பட்ட பிரமதேவனும், உம்மிடமிருந்தே உண்டானார்கள். சமஷ்டி தேகனான ஹிரணியகர்ப்பன் என்ற அந்தப் புருஷன் பிரிதிவிக்கு அதோ பாகத்திலும் பாரிச தேகத்திலும், ஊர்த்துவ தேகத்திலும் வியாபித்துள்ளான். உம்மிடத்திலேயே பிரபஞ்சங்களெல்லாம் உண்டாயின. இவ்விதம் உம்மால் படைக்கப்பட்டு உம்முடைய ரூபமாயிருக்கிற இரணியகர்ப்பனு தரத்திலே அகில பிரபஞ்சங்களும் அடங்கியிருப்பதால் எல்லாமே உமக்குள்ளே என்று தனியாக வேறு சொல்ல வேண்டுமோ? யாவும் ஓமஞ்செய்யப் பெற்ற யாகமும், பிரஷதாச்சியம் என்ற அவிசும் கிராமியங்கள் ஆரணியங்கள் என்ற இருவிதமான பசுக்களும், ரிக்கு, யஜுர், சாம வேதங்களும் சந்தங்களும் அசுவங்களும், அஜாதிகங்களும், ஒற்றைப்பல் வரிசையுள்ள ஜந்து சாதங்களும் மிருகங்களும் உம்மிடத்தலேயே உண்டாயின.

இன்னும் உம்மிடத்திலேயே உண்டாகவும் போகின்றன. உமது வானத்திலே பிராமணர்களும் உமது புயங்களில் க்ஷத்திரியர்களும், கண்களிலே சூரியனும், மனதிலே சந்திரனும், பிராணத்திலே வாயுவும், முகத்திலே அக்கினியும், நாபியில் அந்தரிட்சமும் சரீரத்திலே சொர்க்கமும், கர்ணங்களிலே திசைகளும் பாதங்களிலே பூமியும் உண்டாயின. அது விஸ்தீரணமுள்ள ஆலமரம், அதிக நுண்ணிய பீஜத்திலே அடங்கியிருந்தாற்போல, மகத்தான இந்தப் பிரபஞ்சம் எல்லாம் பிரளய காலத்திலே ஆதிகாரண பூதனான உம்மிடத்திலேயே அடங்கியிருந்தன. வடவிருட்சம் மறுபடியும் விதையிலிருந்து தோன்றிச் சாகோபசாகமாக விஸ்தாரமாவது போல், படைப்புக் காலத்திலேயே பிரபஞ்சம் எல்லாம் உம்மிடத்திலிருந்தே உண்டாகிப் பரவின. ஜகந்நாயகனே! பட்டைகள் ஒன்றின்மேல் ஒன்றாய் மூடப்பெற்று, ஏகாதாரமாகத் தோன்றும் இளவாழைக் கன்றே பெரிதானதும் வேறாகாமல் இருப்பதுபோல, சூக்ஷ்ம சிதசித்தர்களோடு கூடிக் காரணரூபமான உம்மைக் காட்டிலும் ஸ்தூல சிதசித்துக்களின் ரூபமாய்க்காரியமான இந்தப் பிரபஞ்சம் வேறாகாமல் இருக்கிறத. சுத்த ஆனந்தம் இடைவிடாமல் நிகழ்வதும் எப்பொழுதும் ஒரே விதமாயிருக்கிற ஞானமும் உம்மிடத்தில் உண்டு இப்படியல்லாமல் மகிழ்ச்சியும் துக்கமும் உண்டாக்குவதும் சுத்த துக்கத்தை உண்டாக்குவதுமான ஞானங்கள் உம்மிடம் இல்லை. ஏனெனில் பிராகிருதங்களான சத்துவாதி குணங்களோடு நீங்கள் கலப்பில்லாமல் அப்பிராகிருத சுத்தசத்துவ மயனாக இருக்கிறவரல்லவா? பிரபஞ்சத்துக்கு வேறாய் நிற்கின்ற ஒரே ஆத்மாவாய், சர்வபூத சரீரகனாய் விளங்கும் உமக்கு வந்தனஞ் செய்கிறேன். சூட்சும பிரகருதியும் ஸ்தூலப் பிரகிருதியும் புருஷனும் விராட்டு; ஸ்வராட், சம்ராட்டு என்பவர்களும் எல்லாம் நீரே அல்லவா? எல்லோருடைய அந்தக் கரணங்களிலேயும் அக்ஷயமான ஞானமயனாகப் பிரகாசிப்பவரும் நீரே அன்றே நீரே அதனதன் சாரமாக எல்லாவற்றிலும் இருக்கிறீர்? உம்மிடத்திலேயே சர்வமும் இருக்கின்றன. ஆகையால் சர்வாத்மகனான உனக்குத் தெண்டனிடுகிறேன்! எல்லாவற்றுக்கும் காரணமாய் எல்லாவற்றிலும் வியாபித்து எல்லாவற்றினுள்ளேயும் இருக்கின்றவர் நீரே! ஆகையால் நீரே என் மனோரதத்தை அறிந்திருப்பீர். ஆகையால், அடியேன் விண்ணப்பம் செய்ய வேண்டுவது என்ன? சுவாமி, உம்மைப் பிரத்யட்சமாகக் கண்டு தெண்டன் சமர்ப்பித்தேனாகையினால் அடியேனது மனோரதங்கள் நிறைவேறின அடியேனது தவமும் பலித்தது. நான் கிருதார்த்தனானேன்! என்று துதி செய்து நின்றான். அவனை நோக்கி விஷ்ணு புன்முறுவலுடன், அரசகுமாரனே! என்னைக் கண்டு வணங்கியதால் உன் தவம் பலித்தது சரிதான், ஆயினும் நான் உனக்கு சேவை கொடுத்தது வீணாகக் கூடாது. ஆகையால் உனக்கு வேண்டிய வரத்தைக் கேட்பாயாக. நான் பிரத்யட்சமானோனானால் எவருக்குமே சகல மனோரதங்களும் கைகூடும்! என்றார்.

தேவதேவனே! சர்வபூத அந்தர்யாமியான உமக்கு அடியேனது விருப்பம் தெரிந்தேயிருக்கும் இருப்பினும் நீரே நியமித்ததால் விண்ணப்பிக்கிறேன். இந்திரன் உமது அனுக்கிரகத்தினால் அல்லவோ, திரிலோக ராஜ்யத்தை அனுபவிக்கிறேன்? ஜனார்த்தனனே! சுருசியானவள் தனது கர்ப்பத்தில் நான் பிறவாததால் ராஜருக்குத் தகுதியான சிங்காதனத்துக்குநான் அருகனல்ல என்று என்னைப் பார்த்து இறுமாப்புடன் ஏளனம் செய்தாள். ஆகையால் ஜகத்துக்கு ஆதாரமும் சர்வ உத்தமும் அவ்யயமுமான உன்னத ஸ்தானத்தை அடையவே நான் விரும்புகிறேன். இதற்கு தேவரீர் திருவருள் புரிய வேண்டும்! என்றான் துருவன். ஸ்ரீபகவான், துருவனைக் கடாட்சித்து, பாலனே! நீ விரும்பிய பதவியை அடையக் கடவாய், இதற்குக் காரணம் வேறொன்றுண்டு சொல்கிறேன் கேள். பூர்வ ஜன்மத்திலே நீ ஒரு பிராமணனாகப் பிறந்து, தாய் தந்தையருக்குப் பணிவிடைகள் செய்தும், ஏகாக்கிர சித்தத்துடன், என்னையும் ஆராதித்து வந்தாய். சிலகாலம் சென்ற பிறகு, உனக்கு யௌவன வயது வந்தபோது, சர்வாபரண பூஷிதனும் சகல போக சம்பன்னனும் மகா சுந்தர தேகமுடையவனுமான ஒரு ராஜகுமாரன் உனக்கு நண்பனானான். அப்போது நீ அவனுடைய ஐசுவரிய போகங்களைக் கண்டு ஆசைப்பட்டு, ராஜபுத்திரனாகப் பிறக்க வேண்டும் என்று இச்சித்தாய். ஆகையால் உன் மனோரதத்துக்கு ஏற்றதாக உனக்குத் துர்லபமான உத்தானபாதனது மாளிகையில் பிறந்தாய். என்னைத் துதியாத மற்றவர்களுக்கு ஜகத் பூசிதமான சுவாயம்புவமநுவின் வமிசத்தில் பிறவியுண்டானது கிட்டாததாகும். இப்பொழுதும் நீ அத்யந்த பக்தியால் என்னை மகிழ்வித்தாய். என்னிடத்தில் சித்தத்தை நிறுத்தி என்னைத் தியானித்த மனிதன் அதிசீக்கிரத்தில் சர்வோத்தமனான மோட்சத்தை அடைவானானால், அற்பமான சொர்க்காதி பயன்களை அடைவதில் விந்தையில்லை. நீயும் எனது அனுக்கிரகத்தினால் மூன்று உலகங்களுக்கும் மேன்மையானதாய் சந்திர, அங்காரக, புத, பிரகஸ்பதி ஸ்தானங்களுக்கும், நட்சத்திர மண்டலத்துக்கும், சப்த ரிஷிகளின் மண்டலத்திற்கும் விமானரூடராய்ச் சித்தர்கள், சஞ்சரிக்கிற ஸ்தானங்களுக்கும் அதியுன்னதமாய் திகழும் ஸ்தானத்தை அடைந்து, சுகமாய் இருப்பாயாக. தேவதைகளில் சிலர் நான்கு யுகங்கள் வரையிலும் சில மநுவந்தரப் பரியந்தமுமல்லாமல் அதிக காலம் இருக்கமாட்டார்கள். நீயோ எனது கிருபையால், கல்ப காலம்வரை அந்தச் சர்வ உன்னத ஸ்தானத்தில் சுகமாக இருக்கக் கடவாய். உன்னுடைய தாயான சுநீதியும் திவ்ய விமானத்தில் ஏறிக்கொண்டு, நட்சத்திர ரூபமாய் பிரகாசித்துக் கொண்டு கல்பாந்த பரியந்தமும் உன் அருகிலேயே இருக்கக் கடவள். வானத்திலே துருவ நட்சத்திரமாய்த் திகழும் உன்னை எவனாகிலும் அதிகாலையிலும் மாலையிலும் மனவுறுதியுடன் கீர்த்தனம் செய்வானாகில் அவன் மகாபுண்யத்தைப் பெறுவான் என்று திருவாய் மலர்ந்தருளினார்.

இவ்விதமாக திருமாலிடம் வரம் பெற்ற துருவன், சர்வலோகன்னத ஸ்தானத்தை அடைந்தான். தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்ததனாலும் தவச்சிறப்பாலும், ஸ்ரீமத்துவாத சாக்ஷர மகாமந்திர மகிமையினாலும் மகான்மாவான துருவனுக்கு உண்டான அபிமானத்தையும், ஐஸ்வரியத்தையும் பார்த்த அசுரகுருவான சுக்கிராச்சாரியார் மகிழ்ந்து, சப்த ரிஷிகளும் எந்த மகாத்மாவை குறித்துக்கொண்டு சஞ்சரிக்கின்றனரோ, அந்தத் துருவனது மேன்மையான தவத்தின் சிறப்பை என்னவென்று சொல்வேன்? இது வெகுவிந்தையானது இந்தப் பிரபாவத்தைக் கொண்டாட யாராலே ஆகும்? இதமும் சத்தியமுமான வாக்குள்ள துருவனின் தாயான சுநீதியின் மகிமையை வர்ணிக்கத்தக்க கவிகளும் உலகில் உண்டோ? அந்தப் பெண்ணரசி துருவனைக் கர்ப்பத்தில் தரித்ததால்; சர்வ உத்தமும் நிலையான தன்மையும் உடைய அந்தத் திவ்விய ஸ்தானத்தையடைந்தாள் என்ன அதிர்ஷ்டம்! என்ன விந்தை! என்று சில கவிகளால் துதித்தார். மைத்ரேயரே! துருவன் சர்வோன்னதமான பதவியைப் பெற்றதைக் கண்டு எந்த மனிதன் கீர்த்தனம் செய்வானோ, அவனது சகல பாவங்களும் நிவர்த்தியாகும். சொர்க்கலோகத்தில் வாசஞ்செய்வான். அன்றியும் அவன் வானத்திலும் பூமியிலும் ஸ்தானப் பிரஷ்டமாகாமல் சகல சவுபாக்கியமும் கொண்டவனாய்த் தீர்க்காயுளுடன் வாழ்வான்!
 
11. துருவன் கதை

பராசரர் தொடர்ந்து கூறலானார் : மைத்ரேய முனிவரே! சுவாயம்புவ மநுவுக்குப் பிரியவிரதன் உத்தானபாதன் என்னும் இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களிலே உத்தானபாதனுக்கு சுருசி, சுநீதி என்னும் இரண்டு மனைவியர் இருந்தார்கள். அப்பத்தினிகளில் சுருசி என்பவள் தான் உத்தனபாதனுக்கு மிகவும் பிரியமுள்ளவளாக இருந்தாள். அவளுக்கு உத்தமன் என்று வழங்கப்பட்ட மகன் ஒருவன் இருந்தான். அவன் தகப்பனுக்கு மிகவும் பிரிய மகனாக இருந்தான். சுநீதியிடத்தில் அரசனுக்கு அவ்வளவு பிரியமில்லை. அந்தப் பெண்ணுக்குத் துருவன் என்ற மகன் பிறந்தான். அவன் நற்குண நற்செய்கைகளைக் கொண்டவன். ஒருநாள் சின்னஞ்சிறுவனான துருவன் தன் தந்தையான உத்தானபாத மன்னனின் அந்தப்புரத்திற்குச் சென்றான். அங்கே தனது தகப்பனது மடியில் தன் சகோதரன் உத்தமன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். தானும் அவனைப் போல, தன் தகப்பன் மடியில் உட்கார வேண்டும் என்று துருவன் ஆசைப்பட்டு, தந்தையின் அருகே சென்றான். அப்போது சுருதி தன்னருகில் இருந்ததால், துருவனின் விருப்பத்தை அரசன் ஏற்கவில்லை. இவ்விதமாகத் தகப்பன் மடியின் மீது உட்கார வந்த சக்களத்தி மகனான துருவனைப் பார்த்து, சுருசி ஏளனமாகச் சிரித்து, பாலனே! நீ ஏன் வீண் முயற்சி செய்கிறாய்! என் வயிற்றில் பிறக்காமல் வேறொருத்தியின் வயிற்றில் பிறந்த நீ, இத்தகைய உயர்ந்த சிம்மாசனத்தில் இருக்க நினைப்பதா? விவேகமல்லாத நீ இந்த அரசனின் மகன் தான் என்றாலும், ராஜ்யலட்சுமி வாசம் புரியும் இந்தச் சிங்காசனத்துக்கு நீ தகுந்தவனல்ல. என் மகனே அதற்குத் தகுதியுடையவன், வீணாக ஏன் வருந்த வேண்டும். பாக்கியமில்லாத சுநீதி வயிற்றில் நீ பிறந்ததை நினைக்க வேண்டாமா? இங்கிருந்து போ! என்று இழிவாகக் கூறினாள். அவள் பேசியதைக் கேட்ட துருவன் கோபங்கொண்டு, மனக்கலக்கமடைந்து, சரேலென்று தன் தாய் வீட்டுக்குச் சென்றான்.

கோபமாகக் கண்கள் சிவக்க, உதடுகள் துடிக்க வந்த துருவனை அவனுடைய அன்னை சுநீதி தனது மடியில் உட்கார வைத்துக்கொண்டு, மகனே! உன் கோபத்துக்குக் காரணம் என்ன? உன்னை யார் சமாதானஞ் செய்வார்கள்? உன் தந்தையை யாராவது அவமதித்தார்களா? என்று கேட்டாள். அதற்குத் துருவன், தன் மாற்றாந்தாயான சுருசி கூறியவற்றையெல்லாம் தன் தாயிடம் சொன்னான். அதைக்கேட்ட சுநீதி, மகனே! சுருசி சொன்னவைகள் யாவும் உண்மைதான். நீ சொற்ப பாக்கியமுடையவன். ஏனென்றால் மிகவும் புண்ணியமுள்ள குழந்தை சத்துருக்களால் இப்படி தூற்றப்படுமோ? இத்தனையும் உன்னுடைய பூர்வ ஜன்ம நற்பலனை யாராவது அபகரிக்க முடியுமா? செய்யாத கர்ம பலனைக் கொடுக்கத்தான் யாரால் முடியும்? பாக்கியவான்களுக்கே, மகாராஜயோக்கியமான சிம்மாசனமும், ரதகஜதுரகபதாதிகள் போன்ற நால்வகை சேனைகளும் சுகபோகங்களும் கிடைக்கும். சுருசியானவள் பாக்கியசாலி! புருஷன் தன்னிடத்திலேயே பிரியமாக இருப்பதற்குப் பாக்கியஞ் செய்திருக்கிறாள். நானோ அவருக்கு மனைவி என்ற பெயரை மட்டுமே உடையவளாய் துக்கப்படுகிறேன். உத்தமன் புண்ணியம் செய்தவன். அதனால் தான் அவன் சுருசியின் மகனாகப் பிறந்தான். சொற்ப பாக்கியமுடைய நீ என் வயிற்றில் பிள்ளையாகப் பிறந்தாய் மகனே! இதற்கு நாம் என்ன செய்யலாம்? எவனுக்கு எந்த மட்டும் அதிர்ஷ்டமோ அந்த மட்டிலே அவன் மகிழ்ந்திருக்க வேண்டும். இதுதான் புத்திமான்களின் செயல். ஆகையால் ஐசுவரியத்தை நினைத்துத் துக்கப்படாமல் இரு! சுருசி சொன்னவைகளைக் கேட்டு உன் மனம் பொறுக்காவிட்டால் உனக்கும் அத்தகைய மேன்மையுண்டாவதற்குச் சகல முயற்சிகளையும் புண்ணியத்தையும் செய்ய எத்தனஞ்செய். தர்மாத்மாவாய், நல்ல நடத்தையுடையவனாய், சர்வபூத தயாபரனாகவும், சர்வஜனமித்திரனாகவும் இருந்து கொண்டு நல்லவற்றைச் செய்து வந்தால், தண்ணீர் பள்ளத்தை நாடிச்செல்வது போல், சம்பத்துக்களும் குணவானான மனிதனிடத்தில் தானாகவே வந்து சேர்கின்றன என்று சொன்னாள். அதைக்கேட்ட துருவன், தாயே! நீ சொன்ன வார்த்தைகள் சுருசி சொன்ன கொடிய நஞ்சினால் பிளந்த என் இதயத்தில் பதியவில்லை. ஐசுவரிய கர்வத்தால் அவளால் நிராகரிக்கப்பட்ட நான், மிகவும் உத்தமமான உயர்ந்த பதவியை அடைய எத்தனஞ் செய்கிறேன். பார்! புண்ணியசாலி என்ற சுருசியின் கர்ப்பத்தில் பிறவாமல், உன்னுடைய ரத்தத்திலே நான் பிறந்தவனானலும், என்னுடைய ஆற்றலைப் பார் என் அண்ணன் உத்தமனே என் தந்தையின் ராஜ்யத்தை அனுபவிக்கட்டும். நான் என்னுடைய சுயசக்தியினாலே அதைவிட உயர்ந்த பதவியை அடைவேன். ஒருவர் கொடுத்ததைப் பெற்று மகிழாமல் நானே முயன்று, என் தகப்பனுக்கும் அசாத்தியமான மிகவும் உயர்ந்த பதவியை எனது தவத்தினால் சம்பாதிக்கிறேன்! என்று சொல்லி தாயாரின் அனுமதியைப் பெற்று அங்கிருந்து அதிவிரைவாகப் புறப்பட்டு தலைநகரைக் கடந்து, அருகிலிருந்த ஒரு காட்டுக்குள் சென்றான்.

அங்கே, கறுப்பு மான் தோல்களைத் தரித்து குசப்புல்லை ஆசனமாகக் கொண்டு ஏழு முனிவர்களான சப்த ரிஷிகள் அமர்ந்திருந்தார்கள். அவர்களைக் கண்ட துருவன் வணங்கி, முனிவர்களே! நான் மன்னன் உத்தானபாதனுக்குச் சுநீதி வயிற்றில் பிறந்த மகன். துருவன் என்பது என் பெயர். நான் மிகவும் மனக்கவலையோடு தங்களது திவ்யசன்னதிக்கு வந்தேன் என்றான். ராஜகுமாரனே! நீயோ நாலைந்து வயதுள்ளவனாகவே இருக்கிறாய். இவ்வளவு சிறியவனான உனக்கும் மனக்கிலேசம் உண்டாகக் காரணம் என்ன? உன் தந்தை வாழ்ந்து கொண்டிருப்பதால் உன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற பாரமில்லையே! உன் ஆசைக்கு உரியபொருள் அகப்படவில்லையே என்று மன்னன் மகனான நீ வருந்த வேண்டியுமிராது! உன் உடம்பில் எந்தவிதமான நோயும் இருப்பதாக உன் தோற்றத்திலேயே தெரியவில்லை! அப்படியிருக்க உன் மன வெறுப்புக்குக் காரணம் என்ன? என்று சப்தரிஷிகள் கேட்டார்கள். என் தாய்க்குச் சக்களத்தியாகிய சுருதி சொன்ன வார்த்தைகளால் எனக்கு வெறுப்புண்டாயிற்று. அந்த அவமானத்தாங்காமல் இங்கு வந்தேன் என்றான். துருவன் அதைக் கேட்டதும் ஏழு முனிவர்களும் ஒருவருடன் ஒருவர் கலந்து இந்த சிறுவன் மாற்றாந்தாயின் பேச்சைப் பொறுக்கமாட்டாமல் இங்குவந்து விட்டான். இவனது ராஜகளையைப் பார்த்தீர்களா? இவ்வளவு சிறிய பையனுக்கும் அவமானம் பொறுக்க முடியவில்லையே, என்று பேசிக்கொண்டு, துருவனை நோக்கி, ராஜகுமாரனே, நீ மனஸ்தாபங்கொண்டு மனம் நொந்து என்ன செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறாய்! உனக்கு எங்களால் ஆகவேண்டிய உதவி என்ன? என்று கேட்டார்கள். துருவன் அவர்களை நோக்கி, முனிவர்களே! அடியேன்ராஜ்யத்தையோ அல்லது மற்ற பொருள்களையோ விரும்புகிறவன் அல்ல. ஆனால் பூர்வத்தில் ஒருவனாலேயும் அனுபவிக்கப்படாததாய், அபூர்வமானதாய், சகல ஸ்தானங்களுக்கும் உன்னதமானயிருக்கிற ஸ்தானத்தை நான் அடைய விரும்புகிறேன். இந்த மனோரதம் நிறைவேறுவதற்காக உபாயத்தை எனக்கு கூறியருள வேண்டும் என்றான். அதற்குச் சப்தரிஷிகள் ஒவ்வொருவராகப் பின்வருமாறு கூறினார்கள்.

அரசகுமாரனே! ஸ்ரீகோவிந்தனுடைய சரணாரவிந்தங்களையடைந்து ஆராதனை செய்யாதவர்களுக்கு, சர்வ உத்தமமான பதவி கிடைக்காது. ஆகையால் நீ பக்தியுடன், அச்சுதனை ஆராதிப்பாயாக! என்றார் மரீசி முனிவர். ராஜகுமாரனே! உலகநாயகனாக ஜனார்த்தனன் யாரைக் கடாட்சிக்கிறானோ அவனே, அக்ஷயமான திவ்விய ஸ்தானத்தை உடையவனாவான். என் வாக்கு சத்திய வாக்கென்று நினை! என்றார். அத்திரி முனிவர் ஆங்கிரசர், சராசராத்மகமான சகல பிரபஞ்சமும் எவனுடைய குட்சியில் இருக்கிறதோ, அந்தக் கோவிந்தனுடைய சரண கமலங்களை அர்ச்சனை செய்! சர்வ உன்னதப் பதவியை அடைவாய்! என்றார். பிறகு, புலஹ முனிவர், எவன் பரப்பிரமமும், பரமப்பிராப்பியமாகவும் சர்வ வியாபகனுமாக இருக்கிறானோ அந்த ஸ்ரீஹரியை ஆராதனம் செய்வதால், அத்தியந்தம் அசாத்தியமான மோட்சத்தையும் அடையலாம் என்றால் இதர ஸ்தானங்களை அடைவதற்கு என்ன சந்தேகம்? என்றார். அப்புறம் கிருதுமாமுனிவர் எவன் யக்ஞங்களாலே ஆராதிக்கப்படும் புருஷனாகவும், யக்ஞ சொரூபியாகவும், யக்ஞங்களுக்கு அதிபதியாகவும் இருக்கும் மகா புருஷனே, அந்த ஜனார்த்தனன் திருவுள்ளங்கொண்டானானால் அடையத் தகாத ஸ்தானமும் உண்டோ? என்றார். அதன் பிறகு, புலஸ்திய முனிவர், பூர்வத்திலே இந்திரன் ஜகத்பதியான எவனை ஆராதித்து சர்வ உன்னதமான இந்திரப்பதவியை அடைந்தானோ. அப்படிப்பட்ட யக்ஞேஸ்வரனான ஸ்ரீவிஷ்ணுவை ஆராதனை செய்! என்றார். பிறகு வசிஷ்ட முனிவர், குழந்தாய், ஸ்ரீவிஷ்ணு பகவானை ஆராதனை செய்வாயாகில் இதுவரையில் இல்லாத நூதனமான ஸ்தானம் ஒன்றை நீ மனத்தால் நினைத்தாலும், அதையும் சித்தமாக அடைவாய், அப்படியிருக்க முன்பே படைக்கப்பட்ட மூன்று உலகங்களுக்கும் உட்பட்ட மேலான ஸ்தானத்தை அடைவதற்குச் சந்தேகம் என்ன? என்று கூறினார். மாதவர்களே! தாங்கள் ஆராதக்க வேண்டிய அச்சுதனை அடியேனுக்குத் தெரியும்படி செய்தீர்கள், அவ்வெம்பெருமான் கிருபை செய்யும்படி ஜெபிக்க வேண்டிய மந்திரத்தையும் ஆராதனை செய்யும் முறைகளையும் அடியேனுக்கு அறிவிக்க வேண்டும் என்று துருவன் கேட்டான்.

ஓ ராஜபுத்திரனே! ஸ்ரீவிஷ்ணுவிடம் பக்தி செய்ய விரும்பும் மனிதன் முதலாவதாக விஷய அபிலாøக்ஷகளை நீத்து விட்டு மனதை நிர்மலமாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அந்த மனதை முகுந்தனுடைய சரணாரவிந்தங்களிலே தன்னுள்ளே நிச்சலமாகச் சேர்ந்து, வேறு நினைவில்லாமல் அந்தத் திருவடிகளையே பாவித்துக்கொண்டு, தூயவனாய், வியஷ்டி சமஷ்டி ரூபமாய் பிரகிருதியும் புருஷனும் சரீரமாகவுமுள்ள சுத்த ஞானமயனான வாசுதேவனுக்கு தெண்டன் சமர்ப்பிக்கிறேன் என்ற பொருளையுடைய மகாமந்திரத்தை ஜெபிக்க வேண்டும். உனது பிதாமகனான சுயாம்புவமநுவானவர் இந்த மகாமந்திரத்தினாலே ஜனார்த்தனனை உபாசித்தார். அதனால் பகவான் திருவுள்ளம் உகந்து, அந்த மநுவுக்கு அவர் விரும்பியபடியே திரிலோக துர்லபமான ஐசுவரியத்தைப் பிரசாதித்து அருளினார். நீயும் அப்படியே அந்த மகாமந்திரத்தை ஜெபித்து ஸ்ரீயப்பதியை ஆராதனை செய் என்று மகரிஷிகள் கூறினார்கள்.
10. பிருகு, மரீசி முதலானோர் வமிசம்

பராசர மகரிஷியே! உங்கள் தயவால் ஸ்ரீதேவியின் திருவவதார வைபவத்தை அறிந்து கொண்டேன். இனிமேல் பிருகு முதலானோருடைய வமிச வரலாற்றைக் கூறியருள வேண்டும் என்று மைத்ரேயர் வேண்டினார். பராசர முனிவர் தொடர்ந்து கூறலானார். மைத்ரேயரே! பிருகு முனிவருக்குக் கியாதி என்ற பத்தினியிடம் ஸ்ரீவிஷ்ணு பத்தினியான லட்சுமியும் தாதா விதாதா என்ற பிள்ளைகள் இருவரும் உண்டானார்கள் அல்லவா?அந்தத் தாதாவும் விதாதாவும் மேரு புத்திரிகளான ஆயதி, நியதி என்னும் கன்னியரை முறைப்படியே விவாகஞ் செய்து கொண்டார்கள். அவர்களில் தாதாவுக்குப் பிராணன் என்கிற மகன் பிறந்தான். அவனுக்கு துதிமான் என்னும் மகன் பிறந்தான். அவனுக்கு அசாவான் என்ற குமரன் பிறந்தான். விதாதாவுக்கு மிருகண்டு என்று புத்திரன் உற்பத்தியானான். அந்த மிருகண்டுக்கு மார்க்கண்டேயன் பிறந்தான். அந்த மார்க்கண்டேயனுக்கு வேதசிரன் என்ற மகன் பிறந்தான். அவர்களாலே பிருகு வமிசம் உலகத்தில் பரவி வந்தது. இந்நிலையில் மரீசி மாமுனிவருக்குச் சம்பூதி என்ற மனைவியிடம் பவுர்ணமாசன் என்ற புத்திரன் பிறந்தான். அவனுக்கு விரசன், பர்வதன் என்னும் இருபிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களுடைய சந்ததிக் கிரமத்தைப் பின்னால் சொல்லுவேன். ஆங்கிரசமுனிக்கு பத்தினியான ஸ்மாருதி என்பவள் சீனிவாலி, குரு, ராகை அனுமதி என்று சொல்லப்பட்ட நான்கு பெண்களைப் பெற்றாள். அத்திரி மாமுனிவருக்கு மனைவியான அனுசூயை என்பவள் சந்திரனையும், துர்வாசரையும் தத்தாத்திரேயர் என்ற மகாயோகியையும் பெற்றாள். அவன் பூர்வ ஜன்மத்தில் சுவாயம்புவ மநுவந்திரத்திலே அகஸ்தியனாக இருந்தான். புலஹன் என்ற முனிவருக்குக்ஷமை என்பவளிடத்தில் கர்த்தமன் அர்வரீவான் சகிஷ்ணு என்ற மூன்று பிள்ளைகள் தோன்றினார்கள். கிரது என்னும் மாமுனிவருக்கு சன்னதி என்பவளிடத்தில், ஊர்த்துவரேதஸரும் கட்டை விரற் பரிமாணமுள்ளவரும் சூரியப்பிரகாசிகளுமான வாலக்கில்யர் என்ற அறுபதினாயிரம் முனிவர்கள் உண்டானார்கள். வசிஷ்டருக்கு ஊர்ச்சை என்ற பெண்ணிடம் ரசனும், காத்திரனும்; ஊர்த்தபாகுவும் சவனனும், அனகனும் சுதபனும் சுக்கிரனும், ஆகிய சப்த மாமுனிவர்கள் பிறந்தார்கள். பிரமதேவனுக்கு மூத்த மகனான அக்கினி என்பவனுக்கு சுவாஹா என்ற பத்தினியிடம் பாகவன், பவமானன், சுசி என்னும் பிள்ளைகள் மூவர் பிறந்தார்கள். அவர்களது சந்ததியில் நாற்பத்தைந்து பிள்ளைகள் பிறந்தார்கள். இவர்களும் இவர்களுடைய தகப்பன்மார்கள் மூன்று பேரும் கூடஸ்தனான அக்கினியபிமானி தேவதையும் ஆக நாற்பத்தொன்பது பேர்களும் அக்கினிகள் என்று வழங்கப்படுகிறார்கள். மைத்ரேயரே! சதுர்முகப் பிரமன் சிருஷ்டித்த அக்கினிஷ்வாத்தர் என்றும் பர்ஹீஷதர் என்றும் சொல்லப்பட்டு யாகம் செய்தவர்களும் யாகம் செய்பவர்களுமான பிதுர்க்கணங்களைச் சேர்ந்து ஸ்வதை என்னும் பெண்மணியானவள் மேனை, வைதரணி என்கிற இரு பெண்களைப் பெற்றாள். அவ்விருவரும் யோகப் பயிற்சியில் சிறந்து பிரமவாதிகளாய்த் திகழ்ந்தார்கள். இவ்விதமாக விருத்தியான தக்ஷ புத்திரிகளுடைய சந்தானக்கிரமம் சொன்னேன். இதை விசுவாசத்தோடு ஸ்மரணஞ் செய்த மனிதன் சந்தானமில்லதாவனாக மாட்டான்.