புதன், 10 பிப்ரவரி, 2021

கணு பொங்கல்

கணு பொங்கல் !!

கணு அன்று நம்மை விட  வயதில் மூத்த பெண் மணிகளை நமஸ்கரித்து அவர்களிடம் நெற்றியில் மஞ்சள் கீறி விட சொல்லி கையில் கொண்டு போகும் பசு மஞ்சளை கொடுத்து அவர்களும் நல்ல வார்த்தைகளை கூறிக்கொண்டே நெற்றியில் மஞ்சளை கீற்றி விடுவார்கள்.

அவை:--- தாயோடும், தந்தையோடும், சீரோடும், சிறப்போடும்,   
பேரோடும், புகழோடும், பெருமையோடும், கீர்த்தியோடும், சிறு வயதில், தாலிகட்டி பெரியவளாகி பிள்ளைகள் பெற்று கொண்டவன் மனம் மகிழத் தையல்நாயகி போலத் தொங்கத் தொங்கத்தாலிகட்டித் தொட்டிலும், பிள்ளையுமாக, மாமியார், மாமனார் மெச்ச, நாத்தியும்    மாமியும் போற்ற பிறந்தகத்தோர் பெருமை விளங்கப் பெற்ற பிள்ளைகள், ஆயுள் ஓங்க உற்றார் உறவினரோடு புத்தாடை, புது மலர் சூடி புது மாப்பிள்ளை, மருமகளோடு, புது புது சந்தோஷம் பெருகி ஆல் போல் தழைத்து, அருகுப்போல் வேரோடி என்றென்றும் வாழணும்

எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கணும் என்று சொல்லி,  வாழ்த்துவர். பிறகு வீட்டிற்கு வந்து காக்காய் பொடி வைத்து,
அதை ஜலம் தெளித்து, நீர்  சுற்றி  மணி அடித்து சூடன், காண்பித்து, பிரார்த்திக்க வேண்டும். காக்காய் பொடி வைத்தேன், கனுப்பொடி  வைத்தேன், காக்காய்க்கு எல்லாம் கல்யாணம் காக்காய் கூட்டம்
பிரிந்தாலும், என் கூட்டம் பிரியாது இருக்கணும் என்று கூறி நமஸ்காரம் பண்ணிவிட்டு குளித்து கலந்த சாதங்கள் செய்து, ஸ்வாமிக்கு நிவேதித்து, காக்காய்க்கு அன்ன மிட்டு பிறகு சாப்பிடுவோம்.

கணுப் பண்டிகை பாடல் :

{அனைத்து சகோதரிகளுக்கும் சமர்ப்பணம்}

கணுப் பிடி வெச்சேன்
காக்காப் பிடி வெச்சேன்

கணுப் பிடியும் காக்காப் பிடியும்
கலந்து நானும் வெச்சேன்

பார்த்து வெச்சேன் பரப்பி வெச்சேன்
பச்சை இலையில் நிரப்பி வெச்சேன்

மஞ்சள் இலையை விரிச்சு வெச்சேன்
மகிழ்ச்சி பொங்க பிரிச்சு வெச்சேன்

காக்கைக்கும் குருவிக்கும்
கல்யாணம்னு சொல்லி வெச்சேன்

கலர் கலரா சாதம் வெச்சேன்
கரும்புத் துண்டும் கலந்து வெச்சேன்

வகை வகையா சாதம் வெச்சேன்
வாழைப்பழம் சேர்த்து வெச்சேன்

அண்ணன் தம்பி குடும்பமெல்லாம்
அமோகமாய் வாழ அழகாய் வெச்சேன்

இனிப்பு புளிப்பு தேங்காய் சாதம்
இன்பமாய் நானும் எடுத்து வெச்சேன்

எள் சாதம் எலுமிச்சை சாதம்
ஏகாந்தமாய் நானும் வெச்சேன்

கூட்டு பொரியல் அவியல் வெச்சேன்
கூட்டுக் குடும்பமாய் வாழ வெச்சேன்

தூப தீபம் காட்டி வெச்சேன்
தூய மனதோடு நானும் வெச்சேன்

கற்பூரம் ஏத்தி வெச்சேன்
கடவுளை வணங்கி வெச்சேன்

ஆரத்தி எடுத்து வெச்சேன்
ஆண்டவனை வேண்டி வெச்சேன்

கணுப் பிடி வெச்சேன்
காக்காப் பிடி வெச்சேன்

கணுப் பிடியும் காக்காப் பிடியும்
கலந்து நானும் வெச்சேன்

காக்கைக் கூட்டம் போல எங்கள் குடும்பமும் பிரியாதிருக்க வெச்சேன்.
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை: