வியாழன், 19 நவம்பர், 2020

அருள் மிகு வீரராகவப்பெருமாள் கோவில்

அருள் மிகு வீரராகவப்பெருமாள் திருக்கோயில்
 



மூலவர் :வீரராகவப்பெருமாள்
உற்சவர் :ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீரராகவப்பெருமாள்

தாயார் :கனவகவல்லி
ஆகமம் பூஜை  :பாஞ்சராத்ரம்
பழமை : 1000 வருடங்களுக்கு முன்
ஊர் :மதுரை
மாவட்டம் :மதுரை
மாநிலம் :தமிழ்நாடு
 
திருவிழா:சித்ராபவுர்ணமி, ஆடிப்பூரம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம்.   
       
தல சிறப்பு:மதுரை வைகை ஆற்றில் சித்ராபவுர்ணமியன்று இறங்கும் கள்ளழகர் தரும் முதல் மரியாதையை பெரும் பெருமாள் இவர். பெருமாள் இத்தலத்தில் நின்ற கோலத்தில் வீரராகவப்பெருமாளாகவும், கிடந்த கோலத்தில் ரங்கநாதராகவும், அமர்ந்த கோலத்தில் யோக நரசிம்மராகவும் மூன்று நிலைகளில் அருளுகிறார்.   
       
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரிஅருள்மிகு வீரராகவப்பெருமாள் திருக்கோயில், வீரராகவப்பெருமாள் கோயில் தெரு, எழுத்தாணிக்காரத் தெரு சந்திப்பு, தெற்கு மாசி வீதி, மதுரை-625 001. போன்:+91 452 2338542  
      
பொது தகவல்:சொக்கப்ப நாயக்கர் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்து. தாயார் கனகவல்லி, ஆண்டாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பள்ளிகொண்ட ரங்கநாதர், சக்கரத்தாழ்வார், கருடன், ஆஞ்சநேயர், மணவாள மாமுனிகள், நவக்கிரகங்களுக்கு சன்னதி உள்ளது. பெருமாளுக்கு உகந்தது சனிக்கிழமை தான் என்றாலும், இத்தலத்தில் வெள்ளிக்கிழமையன்று தான் பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும்.
 
பிரார்த்தனை:புத்திரபாக்கியம், திருமணம், தொழில் விருத்தி, வழக்கில் வெற்றி, சத்ரு பயம் நீங்க, நவக்கிரக தோஷம் விலக, கணவன் மனைவி கருத்து வேறுபாடு நீங்க இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.  
      
பிரார்த்தனை நிறைவேற வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் இரவு 8 - 9 மணிக்குள் ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. பவுர்ணமியன்று வீரராகவப்பெருமாளுக்கும், அமாவாசை தோறும் இக்கோயிலில் உள்ள பள்ளி கொண்ட ரங்கநாதருக்கும் திருமஞ்சனம் நடக்கிறது.  
      
தலபெருமை:வீரராகவப்பெருமாள்: வைகை ஆற்றில் மஞ்சள் நிற தங்கக்குதிரையில் அழகர் இறங்குவார். அதற்கு முன்னதாக, வெள்ளிக் குதிரையில் வரும் வீரராகவப் பெருமாள் ஆற்றில் இறங்கி, வையாழி நடைபயில்வார்.முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு செல்வதையே இப்படி சொல்வர். "அண்ணா வாரும்' என கள்ளழகரை ஆற்றிற்குள் அழைத்து வருவார்.ஆற்றில் நடுமண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளும்போது, அவரை வீரராகவப்பெருமாள் மூன்று முறை சுற்றி வருவார். அவருக்கு கள்ளழகர் சார்பாக தீர்த்தம், பரிவட்டம், மாலை என முதல் மரியாதை செய்யப்படுகிறது.அதன்பின் வீரராகவப்பெருமாள் ஆற்றில் உள்ள நடு மண்டபத்தில் இருந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.

தல வரலாறு:பல்லாண்டுகளுக்கு முன்பு, சோழவந்தான் அருகிலுள்ள தேனூரில் தான் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா நடந்தது. அக்காலகட்டங்களில் பெருமாளுக்குரிய உற்சவ மண்டபங்கள் நெற்கதிர் கால்களைக்கொண்டு அமைக்கப்படும். ஒரு முறை கள்ளழகர் இந்த மண்டபத்தில் எழுந்தருளியபோது திடீரென தீப்பிடித்து விட்டது. அங்கிருந்த அரசர் உள்ளிட்ட அனைவரும் தள்ளி நின்றனர்.ஆனால், அமுதார் என்ற அர்ச்சகர், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தீயில் சூழ்ந்த கள்ளழகர் சிலையைத் தூக்கி, ஆற்று மணலில் போட்டுவிட்டு மயங்கி விழுந்தார்.இதைக்கண்ட அரசன், ""அமுதாரே! நான் ஆண்டாண்டு காலமாக கள்ளழகரின் தீவிர பக்தனாக உள்ளேன். அத்துடன் இவ்விழாவில் முதல் மரியாதையும் எனக்கு கிடைக்கிறது. அப்படியிருந்தும் கூட அழகரை காப்பாற்றாமல் என் உயிரையே பெரிதெனக் கருதி ஒதுங்கி நின்றேன்.நீங்களோ உயிரையும் பொருட்படுத்தாமல் பெருமாளை காப்பாற்றி விட்டீர்கள். எனவே இவ்வாண்டு முதல் எனக்குத் தரப்பட்ட முதல் மரியாதையை தாங்களே பெற வேண்டும்'' என கேட்டுக்கொண்டார்.அதற்கு அமுதார்,""அரசே! நான் மிகச் சாதாரணமானவன். முதல் மரியாதையைப்பெறும் தகுதி எனக்கு இல்லை. நான் அர்ச்சகராக சேவை செய்யும் வீரராகவப்பெருமாளுக்கு, கள்ளழகரின் முதல் மரியாதை கிடைக்குமாறு செய்யுங்கள்,''என வேண்டினார். அவரது விருப்பப்படியே கள்ளழகர் வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் போது, மதுரை வீரராகவப்பெருமாளுக்கு முதல் மரியாதை தரப்பட்டது.பின்னர் மதுரை வைகை ஆற்றின் வடகரைக்கு இவ்விழா மாற்றப்பட்ட பிறகும் இந்த மரியாதை தொடர்கிறது.

சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: மதுரை வைகை ஆற்றில் சித்ராபவுர்ணமியன்று இறங்கும் கள்ளழகர் தரும் முதல் மரியாதையை பெரும் பெருமாள் இவர். பெருமாள் இத்தலத்தில் நின்ற கோலத்தில் வீரராகவப் பெருமாளாகவும், கிடந்த கோலத்தில் ரங்கநாதராகவும், அமர்ந்த கோலத்தில் யோக நரசிம்மராகவும் மூன்று நிலைகளில் அருளுகிறார்.

கருத்துகள் இல்லை: