ஞாயிறு, 28 ஜூலை, 2019

சில கோயில்களில் மூலவர் சிவன் மேற்கு நோக்கி இருப்பது ஏன்?

பெரும்பாலும் கோயில் கிழக்கு நோக்கியேஇருக்கும். பழமையான கோயில்கள் மேற்கு நோக்கி இருக்கும். இரண்டுக்கும் வேறுபாடு கிடையாது. சுவாமி எந்த திசை நோக்கி இருந்தாலும், வாசலை கிழக்கு திசையாகப் பாவித்து வணங்க வேண்டும் என சில ஆகமங்களும், மேற்கு திசை நோக்கிய சிவலிங்கம் சிறப்புடையது என சில ஆகமங்களும் கூறுகின்றன. இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்தால் இரண்டுமே சிறப்புடையவை தான்.
------------------------------------------------------------------------------------------------------------
சர்வம் லிங்க மயம்

லிங்கத்திலிருந்தே அனைத்தும் உண்டாயின. அதுபோலவே இறுதியில் லிங்கத்திலேயே எல்லாம் அடங்குகின்றன. படைப்பு, காப்பு, அழிப்பு ஆகிய யாவும் அதிலேயே அடங்கியுள்ளன. எனவே அது லிங்கம் எனப்பட்டது.
------------------------------------------------------------------------------------------------------------
பைரவ விரதம்!

தை மாதத்தில் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் பைரவரை குறித்துச் செய்யப்படும் விரதம் இது. செவ்வாய்க்கிழமையை மங்கல வாரம் என்று அழைப்பார்கள். செக்கச் செவேல் என்று சிவந்த ஒளி வீசுவதால் இந்தக் கிரகம் செவ்வாய் எனப் பெயர் பெற்றது. சித்திரை மாத பரணி நட்சத்திரமும், ஐப்பசி மாத பரணி நட்சத்திரமும் பைரவ விரதத்துக்கு உரிய நாட்களாகும்.
------------------------------------------------------------------------------------------------------------
காணிக்கைகள் ஏலம்!

பட்டுக்கோட்டைக்கு அருகில், பரக்கலக் கோட்டையில் வெள்ளால மரமாக காட்சி தருகிறார் பொது ஆவுடையார். இவருக்கு, திங்கள்தோறும் இரவு நடைபெறும் பூஜையில் சமர்ப்பிக்கும் நெல், தானியம் போன்ற காணிக்கைகளை, பொங்கல் அன்று ஏலம் விடுவார்கள். அவற்றை ஏலம் எடுத்துச் செல்வதால் வாழ்க்கை வளமாகும் என்பது நம்பிக்கை.
------------------------------------------------------------------------------------------------------------
மிருதங்க தட்சிணாமூர்த்தி!

ஞானமும் மங்கலமும் அருளக்கூடியது தட்சிணாமூர்த்தி தரிசனம். கல்லால மரத்தடியில் சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கும் நிலையில் அருளும் தட்சிணாமூர்த்தி, பல்வேறு திருத்தலங்களில் பல்வேறு  கோலங்களில் அருள்பாலிக்கிறார். அந்தத் தலங்களில் சில இங்கே:

தலை சாய்ந்த நிலை- வேலூர் மாவட்டம்-திருவூறல்.

சிற்ப அழகு- ஆலங்குடி

வீராசன நிலை- சென்னை, திரிசூலம்

யோகாசன மூர்த்தி- அனந்தழர், ஆந்திரா

வியாக்யான மூர்த்தி - காஞ்சி அருகில் அகரம் கோவிந்தவாடி.

நந்தியுடன் கூடிய மூர்த்தி - வள்ளலார்கோயில்-மயிலாடுதுறை

வீணையுடன் தட்சிணாமூர்த்தி-நஞ்சன்கூடு

மிருதங்க தட்சிணாமூர்த்தி-கழுகுமலை, தூத்துக்குடி மாவட்டம்.

வீணையுடன் நின்ற நிலையில்- நாகலாபுரம் வேதநாராயணன் திருக்கோயில், திருத்தணி.
------------------------------------------------------------------------------------------------------------
தஞ்சை பெரிய கோயிலில் வாராஹி வழிபாடு!

தஞ்சை பெரிய கோயிலில் சப்தமாதர்களுள் ஒருவரான வாராஹி தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறாள். இருள் கவ்வும் மாலை வேளையில் இங்குள்ள வாராஹியைத் தரிசித்து வழிபடுவது மிகுந்த பலனை தரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. வெள்ளிக்கிழமைகளில் இந்த தேவியை வழிபடுவதால் மாங்கல்ய பலமும் வியாபார அபிவிருத்தியும் கிடைக்கும். பில்லி, சூனியம், திருஷ்டி மற்றும் எதிரிகளின் தொல்லைகள் நீங்க சனிக்கிழமைகளில் வழிபடுதல் நலம் என்கிறார்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
பூதூவும் கை!

தினமும் வீட்டில் காலையிலும்,மாலையிலும் விளக்கேற்றி வழிபாடுசெய்யும்போது, இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரம், ஸ்லோகம் ஜெபிப்பதும், தேவார, திருவாசக, பிரபந்தப் பாடல்களைப் பாடுவதும் அவசியம். பூஜையின் நிறைவில், இரு கைகளையும் ஒன்று சேர்த்து, பூக்களை அள்ளி, சுவாமியின் திருவடியில் தூவ வேண்டும். இதற்கு புஷ்பாஞ்சலி என்று பெயர். தெய்வ கைங்கர்யங்களை வலது கையால் தான் செய்ய வேண்டும் என்றாலும், புஷ்பாஞ்சலியின்போது மட்டும், இடக்கையையும் சேர்த்து செய்வதில் தவறில்லை என்கிறது சாஸ்திரம்.
------------------------------------------------------------------------------------------------------------
சுயம்புவை வணங்கலாம்!

கோயிலில் கருவறையில் மூலவரும், அதன் அருகில் உற்சவரும் எழுந்தருளியிருப்பர். திருவிழா காலத்தில் உற்சவர் மட்டும் திருவீதி எழுந்தருள்வது வழக்கம். சுவாமி தரிசனம் செய்ய முடியாதவர்களுக்கும் அருள்புரிவதற்காக வீதியுலா நடக்கிறது. அப்போது உற்சவர், மூலவரின் அனைத்து சக்தியையும் தன்னோடு எடுத்து வருவதாக ஐதீகம். அந்த சமயத்தில் மூலவரை தரிசித்தல், அர்ச்சித்தல், வலம் வருதல் போன்ற எந்த வழிபாட்டையும் மேற்கொள்வது கூடாது என்கிறதுசிவயோகி ஸம்வாதம். ஆனால், சுயம்பு மூர்த்தியாக(தானாக தோன்றியது) எழுந்தருளியுள்ள கோயில் களில் மட்டும் மூலவரைத் தரிசிக்கலாம். ஆனால், அர்ச்சனை செய்யவோ, வலம் வரவோ கூடாது.
------------------------------------------------------------------------------------------------------------
தந்தையின் பெயரை மாற்றிய மகள்!

தட்சன் என்பவனுக்கு மகளாகப் பிறந்ததால், பார்வதிதேவிக்கு தாட்சாயணி என்ற பெயர் உண்டு. அவன் அவளை சிவபெருமானுக்கு மணம் முடித்து வைத்தான். மருமகனுக்கு மதிப்பளிப்பது உலக இயல்பு. அதிலும், தனது மருமகன் இறைவன் என்பதால் அதீத மதிப்பளித்திருக்க வேண்டும். ஆனால், தட்ச@னா, மருமகன் தனக்கு மதிப்பளிக்க வேண்டுமென விரும்பினான். இதனால் அவனுக்கு பார்வதிதேவி சிவேதரன் என்று பெயர் வைத்தாள். சிவனுக்கு இதரன் என்று இதைப் பிரிக்கலாம். சிவ என்றால் மங்களம். மங்களத்துக்கு இதரன் என்றால் மங்கள குணங்களுக்கு எதிரானவன் என்று தந்தைக்கே பெயர் சூட்ட வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானாள். தந்தையே தனக்கு எதிராகத் திரும்பியதால் தன் தந்தையின் பெயரால் ஏற்பட்ட தாட்சாயணி என்ற பெயர் தனக்கு தண்டனை தரப்பட்டது போல உணர்ந்தாள் அவள். எனவே, தன் தந்தைக்கு தட்சன் என்ற பெயரை மாற்றி, சிவேதரன் என்று பெயரைச் சூட்டிவிட்டாள். பாகவதம் ஸ்லோகம் ஒன்றில் தாட்சாயணியின் கதையும், சிவேதர என்ற வார்த்தையும் வருகிறது.
------------------------------------------------------------------------------------------------------------
தனியாக இருந்தால் பயமா?

இக்காலத்தில், பெரும்பாலும் தனிக்குடித்தனம் இருப்பவர்களே அதிகம். கணவர் வேலைக்குப் போய்விட்டால், வீட்டில் இருக்கும் மனைவிக்கு பயமாக இருக்கலாம். பெண்கள் வேலைக்குப் போகிறவர்களாக இருந்தால், வெளியாட்களால் பிரச்னை ஏற்படலாம். இப்படிப்பட்டவர்கள் நவதுர்க்கைகளின் பெயரைச் சொன்னாலே போதும். இந்த துதிக்கு சக்தி காப்பு என்று பெயர். மார்க்கண்டேய முனிவருக்கு பிரம்மா உபதேசித்த மந்திரம் இது. சைலபுத்ரீ, பிரும்மசாரிணீ, சந்திரகண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனீ, காளராத்ரீ, மகா கவுரி, சித்தி தாத்ரீ என்ற நவ சக்திகளே! உங்கள் திருப்பாதங்களில் சரணடைகிறேன், என்பதே அந்த மந்திரத்தின் பொருள். இந்த வாக்கியத்தை உச்சரித்தாலே போதும். பயம் விலகிப்போகும். இந்த மந்திரத்தைச் சொல்பவர்கள் தீயில் சிக்கி னாலும் தப்பித்து விடுவர். பகைவர்களின் பிடியில் இருந்து விடுபடுவர். இருளான பகுதிகளுக்குச் செல்லும் போது பயம் இருக்காது. எதிரிகளால் ஏற்படும் தொல்லை நீங்கும். செல்வ வளமும் ஏற்படும் என்கின்றன நூல்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
புரியாவிட்டாலும் நன்மை!

சீதக்களப செந்தாமரைப் பூம் என்று துவங்குகிறது அவ்வையார் அருளிய விநாயகர் அகவல். இதைப் படித்தால் புரியவில்லையே என பலர் ஏங்குவதுண்டு. யோக சாஸ்திரத்தின் ஒரு பகுதி இந்த அகவலில் இருப்பதால், எதற்கு வம்பென விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் போன்ற எளிமையான பாடல்களையே பக்தர்கள் பாடுகிறார்கள். நிஜத்தில் விநாயகர் அகவல் பல நன்மைகளைத் தரக்கூடியது. இதைப் புரிந்து படித்தால் தான் பலன் என்பதில்லை! புரியாமல் படித்தாலும் நன்மை தரும். ஏனெனில், அத்தகைய மகத்துவம் அவ்வையாரின் பாடல்களுக்கு உண்டு. குறிப்பாக, பெண்களும், குழந்தைகளும் இந்த அகவலைத் தவறாமல் படிக்க வேண்டும். அவ்வையார் பெண் என்பதாலும், குழந்தைக் கவிஞர் என்பதாலும் அவர்களுக்கே இதில் உரிமை அதிகம். இந்த அகவலைச் சொல்வதால் வீட்டுக்குமட்டுமல்ல, நாட்டுக்கும் நன்மை கிடைக்கும். இன்றைய பாதுகாப்பற்ற நிலையில் விநாயகர் அகவல் ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
------------------------------------------------------------------------------------------------------------
சிவனுக்கு பிரியமான பூக்கள்!

சிவபெருமானுக்கு என்னென்ன மலர்கள்  பிரியமானவை என்பது பற்றியும், அதை அணிவிப்பதால் ஏற்படும் பலன்கள் பற்றியும் அப்பைய தீட்சிதர் என்ற தீவிர சிவபக்தர் ஒரு சமஸ்கிருத ஸ்லோகம் எழுதியுள்ளார். அந்த ஸ்லோகத்தின் பொருளைக் கேளுங்கள்.  பரமேஸ்வரா! உன் மேல் எருக்கையும், த்ரோணம் என்னும் தும்பை மலரையும், அர்ச்சனை செய்தாலே போதும். அது ஒருவனுக்கு மோட்ச சாம்ராஜ்யத்தை என்னும் பேரின்ப வீட்டைத் தந்து விடுகிறது,  என்பதாகும். எருக்கு, தும்பை மலர்கள் பெண்கள் சூடாதவை. எல்லாராலும் ஒதுக்கப்படுபவை, விநாயகருக்கு மட்டுமல்ல, சிவனுக்கும் எருக்கு உகந்ததாகிறது. இனி சிவனுக்கு வில்வமாலையுடன், எருக்கம் மலர்களையும் அர்ச்சனைக்கு எடுத்துச் செல்லலாம். இந்த மலர்களை சிவலிங்கத்தின் மீது அர்ச்சனை செய்து அதையே பிரசாதமாகப் பெற்று வந்து, நம் பூஜை அறையில் வைத்துவிட்டால், இறைவனின் தன்மையே நமக்கும் வந்துவிடும். காஞ்சிப்பெரியவர் சொல்லும் தகவல் இது.
------------------------------------------------------------------------------------------------------------
கஞ்சி முகம் என்றால்.. அர்த்தம் கொள்வது எப்படி?

அம்பாள் கோயில்களில் கஞ்சி படைப்பது வழக்கம். குறிப்பாக, ஆடிமாதத்தில்  ஆடிக்கஞ்சி என்றே சொல்வார்கள். ஆனால், கஞ்சி குடிக்காதவள், கம்பஞ்சோறு உண்ணாதவள், வெஞ்சினங்களை (காய்கறிகள் சேர்த்து சமைத்த சாதம்) விரும்பாதவளாக ஒரு அம்பாள் இருக்கிறாள். யார் அவள் என்றால் காஞ்சி காமாட்சியம்மனைக் குறிப்பிடுகிறது ஒரு பாடல். கஞ்சி குடியாளே கம்பஞ்சோறு உண்ணாளே வெஞ்சினங்களொன்றும் விரும்பாளே என்ற பாடல் அது. இதில் கஞ்சி  குடியாளே என்றால் காஞ்சிபுரத்தில் வசிப்பவள் என்று பொருள். இன்னொரு அர்த்தமும் உண்டு. கஞ்சி என்னும் சொல்லுக்கு தாமரை என்றும் ஒரு பொருளுண்டு. கஞ்சி குடியாள் என்றால் தாமரையை தன் முகத்தில் குடிவைத்தவள், அதாவது தாமரை மலர் போன்ற முக அழகுடன் திகழ்பவள் என்றும் ஒரு பொருளுண்டு. அதனால், அழகான பெண்களை மட்டுமல்ல, ஆண்களையும் கூட இனி கஞ்சி முகத்தவனே, கஞ்சி முகத்தவனே என்றும் வர்ணிக்கலாம்.
------------------------------------------------------------------------------------------------------------
கோயில் பூஜையின் போது மணியைவேகமாக ஒலிப்பது ஏன்?

கோயிலில் சுவாமியை தரிசிக்கும் போது ஐம்புலனும் ஒன்றி வணங்க வேண்டும். கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தும் வழிபாட்டில் ஈடுபடும்போது வேறுகாட்சிகளை கவனித்தால் மன ஒருமைப்பாடு குலைந்து விடும். மனம் ஒன்றுபடாமல்  வழிபடுவது வீண் செயல். மணியை வேகமாக ஒலிக்கச் செய்யும் போது, அதன் நாதத்தில் மனம் லயித்து விடுவதால், புலன்கள் செயல் இழந்து விடுகின்றன. ஒன்றியிருந்து நினைமின்காள்; உன் தமக்கு ஊனமில்லை என்னும் திருநாவுக்கரசரின் தேவாரமும் இதை வலியுறுத்துகிறது.
------------------------------------------------------------------------------------------------------------
சுவாமியை நேருக்கு நேர் நின்று வணங்கக் கூடாது .. ஏன்?

பொதுவாக பெரியவர்களிடமும், சுவாமியிடமும் நேருக்கு நேர் நின்றுவணங்குதல், பேசுதல் கூடாது. நமது பணிவையும், அன்பையும் தெரிவிக்க ஒருபுறம் சற்று விலகியிருந்து வணங்குவதே முறையாகும். தெய்வங்களை நேரே நின்று வணங்காமல், கடைக்கண் அருட்பார்வை பெற ஒதுங்கியிருந்து வழிபடும்படி சாத்திரங்கள் கூறுகின்றன.
------------------------------------------------------------------------------------------------------------
விரத காலத்தில் பயறுவகை, பாகற்காயைத் தவிர்ப்பது ஏன்?

அப்படி ஒன்றும் வழக்கில் இருப்பதாகத்தெரியவில்லையே! உங்கள் குடும்ப வழக்கமாக இருக்கலாம். வெங்காயம், பூண்டு போன்ற சிலவற்றைத் தவிர பயறு வகை, பாகற்காயைச் சேர்த்துக் கொள்வதில் தவறில்லை.
------------------------------------------------------------------------------------------------------------
கோபத்தைப் போக்க எந்த தெய்வத்தை வணங்குவது?

விநாயகர், முருகன், லட்சுமி நாராயணர், உமாமகேஸ்வரர் போன்ற தெய்வங்களை வழிபட கோபம்அகலும். இது மட்டும் போதாது. ஒரு விஷயத்தில் கோபப்படும் சூழல் ஏற்பட்டால், முதலில்பேச்சைத் தவிர்த்து விட வேண்டும். தனிமையில் நிறைய யோசிக்க வேண்டும். நமக்கு வெற்றியைத் தரும் வழியைத் தேர்ந்தெடுத்து நிதானமாக நிறைவேற்ற வேண்டும். கோபத்தால் எதையும் சாதிக்க முடியாது. வளைந்து கொடுத்தால் உலகையே வெல்ல  முடியும்.
------------------------------------------------------------------------------------------------------------
திருமாலும் சிவராத்திரியும்!

திருமால் பன்றி அவதாரமெடுத்து சிவபெருமானின் திருவடியைத் தேடிச் சென்ற இரவே சிவராத்திரி என்பது பல இலயக்கங்களில் குறிக்கப்பட்டுள்ளது. அநேகமாக எல்லா சிவன்கோயில்களிலும் அமைந்துள்ள லிங்கோற்பவ திருவுருவங்களில், மேற்சொன்ன வரலாற்றை விளக்கும் திருமாலை முழுப்பன்றி வடிவத்தில் அல்லது பன்றி முகத்துடன் கூடியவராக அமைத்துள்ளனர். இதற்கு முற்றிலும் மாறாக, சிவலிங்கத்தினின்று வெளிப்படும் சிவபெருமானையும், அவரை திருமால் முழு தேவ வடிவில் மண்டியிட்டு வணங்கிப் பூசிக்கும் நிலையிலும் அமைந்த திருவுருவத்தை தஞ்சை பெரிய கோயிலில்  காண்கிறோம். இது ஓர் ஊழிக்காலத்தில் நீண்ட இரவில் திருமால் சிவபூஜை செய்ததையும், சிவபெருமான் அவருக்கு லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு அருள்பாலித்ததையும் குறிக்கும் சிற்பம் என்றும் கூறுவர்.
------------------------------------------------------------------------------------------------------------
எமனும் சிவராத்திரியும்!

சிவராத்திரி வேளையில், பெருமானைப் பூசிக்கும் மார்க்கண்டேயனைப் பிடிக்கவந்த எமன் உதைபடுவது. பின்னாளில் அவனுக்கு சிவராத்திரி மகிமை உரைக்கப்படுவது போன்றவை கதைகளில் காணப்படும் பொது அம்சமாகும். சிவராத்திரியின் அடிப்படைக் கருத்து- ஆன்மாவானது தனது வினைகளை நீக்கிக்கொண்டு, எமவாதனையை அகற்றி சிவபெருமானுடன் ஐக்கியமாவதேயாகும். சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதவேண்டும் என்று பெரியோர்கள் கூறுவதும் இங்கு எண்ணத் தக்கதாகும்.
------------------------------------------------------------------------------------------------------------
அபூர்வ மலையார்!

திருவண்ணாமலை கோயிலின் இரண்டாம் பிராகாரத்தின் தென்மேற்கு முனையில் கிழக்கு நோக்கியவாறு ஒரு சிற்கோயில் உள்ளது. இதனை அடிமுடிகாணாத கோயில் என அழைக்கின்றனர். இங்கு அபூர்வமான அண்ணாமலையார் சிலை ஒன்றுள்ளது. இதில் சிவபெருமானும் அம்பிகையும் எழுந்தருளியிருக்க, பின்னணியில் இடபவாகனம் நிற்கிறது. அதன் பின்னணியில் அண்ணாமலையும், அதன் உச்சியில் தீபமும் காட்டப்பட்டுள்ளன. மூலையின் உச்சியைக் காணமுயல்வதுபோல அன்னப்பறவையும், பீடத்தில் பன்றி வடிவமும் காட்டப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------
சிவபெருமானின் எட்டுப்பெயர்கள்!

சிவராத்திரி காலத்தில் சிவபெருமானின் எட்டுப்பெயர்களை ஓயாது ஜெபிக்க வேண்டும். அப்பெயர்கள்: ஸ்ரீபவாய நம; ஸ்ரீசர்வாய நம; ஸ்ரீருத்ராய நம; ஸ்ரீபசுபதயே நம; ஸ்ரீஉக்ராய நம; ஸ்ரீமகாதேவாய நம; ஸ்ரீபீமாய நம; ஸ்ரீஈசாநாய நம.
------------------------------------------------------------------------------------------------------------
தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்த ஆதிசங்கரர்!

ஆதிசங்கரர்,  இந்து மதத்தின் குலகுருவான இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் மேற்கொண்டிருந்த போது, ஒரு ஏழைப்பெண்ணின் வீட்டு வாசலில் நின்று பவதி பிக்ஷõம் தேஹி என்று பிøக்ஷ கேட்டார்.  அந்த பெண் தன்னிடமிருந்த உலர்ந்த நெல்லிக்கனியை தானமாக கொடுத்தார். இந்த தானம் ஆதிசங்கரரின் உள்ளத்தை உருக்கியது. இது போன்ற நல்ல மனம் படைத்தவர்களிடம் செல்வம் இருந்தால், அது மற்றவர்களுக்கும் உதவும் என்ற அடிப்படையில், ஆதிசங்கரர் மகாலட்சுமியை துதித்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். இதனால் மகிழ்ந்த மகாலட்சுமி, இவர் 19 ஆம் ஸ்லோகம் பாடிய போது, அந்த ஏழைப் பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தாள்.

இதன் அடிப்படையில்  கேரளா மாநிலம் காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் கனகதாரா யாக மண்டபத்தில் ஏப்ரல் 30 முதல் மே 4ம் தேதி வரை கனகதாரா யாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் தங்கம், வெள்ளி நெல்லிக்கனிகள் மற்றும் கனகதாரா யந்திரம் வைத்து, 32 நம்பூதிரிகளால் 10008 முறை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்த சக்தி வாய்ந்த தங்கம் மற்றும் வெள்ளி நெல்லிக்கனிகளால், அட்சய திரிதியான மே 2ம் தேதி, காலை 9 மணிக்கு மகாலட்சுமி விக்ரகத்திற்கு கனகாபிஷேகம் நடைபெறுகிறது. கனகதாரா யாகம் முடிந்ததும், அபிஷேகம் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி நெல்லிக்கனி மற்றும் எந்திரத்தை பக்தர்கள் வாங்கி சென்றால், சிறந்த உடல் வளமும், செல்வவளமும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

கனகதாரா எந்திரம்  ரூ. 351
தங்க நெல்லிக்கனி  ரூ. 12,001
வெள்ளி நெல்லிக்கனி  ரூ.2001
பிராமண போஜனம்  ரூ.   3,501
லெட்சுமி நாராயண அபிஷேகம்  ரூ. 17,001
பிராமண தட்சிணை  ரூ.1001
அன்னதானம்  ரூ.6001
கனகதாரா அர்ச்சனை  ரூ.101
நெல்லிக்கனி பாரா  ரூ.51
நெல்லிக்கனி சமர்ப்பணம்  ரூ.11

தொடர்புக்கு: காப்பிள்ளி ஸ்ரீகுமார் நம்பூதிரி, மேனேஜிங் டிரஸ்டி, ஸ்ரீகிருஷ்ணன் கோயில், காலடி - 683 574, எர்ணாகுளம் மாவட்டம். போன்: 093888 62321
------------------------------------------------------------------------------------------------------------
மோட்ச சாதனம்!

மோட்சத்திற்கு சாதனமாக இருப்பவை நான்காகும். அவை, சிவார்ச்சனை; உருத்திர பாராயணம்; அஷ்டமி, திங்கட்கிழமை, தேய்பிறைச் சதுர்த்தசி (சிவராத்திரி) ஆகிய மூன்று நாள் உபவாசம்; காசியில் மரணமடைதல் ஆகியவையாகும் இவை நான்கிலும் சிறந்தது சிவராத்திரி விரதமே யாகும். சிவராத்திரி இரவில் சிவபுராணம் கேட்டல், சிவாலய தரிசனம் செய்தல் ஆகியவை மோட்சத்திற்கு எளிய சாதனமாகும்.
------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை: