ஞாயிறு, 28 ஜூலை, 2019

விநாயகரை எந்தெந்த மலர், இலைகளால் அர்ச்சனை செய்யலாம்?

அருகம்புல், வன்னி இலை, மரிக்கொழுந்து, அந்தி மந்தாரை, நந்தியாவர்த்தம், செம்பருத்தி, பவளமல்லி, செவ்வரளி, செவ்வந்தி, தாமரை போன்றவை விநாயகருக்கு உகந்தவையே. துளசியால் மட்டும் அர்ச்சிக்கும் வழக்கம் கிடையாது.
------------------------------------------------------------------------------------------------------------
ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்பது ஏன்?

ஆன்மிகம் மட்டுமில்லாமல் எந்த செயலுக்கும் இது பொருந்தும். எதிரெதிரான இரண்டு விஷயத்தில் ஈடுபட்டால், இரண்டிலும் பலன் கிடைப்பதில்லை. குளிப்பது என்பது உடல் அழுக்கைப் போக்குவது, சேற்றில் வைப்பது என்பது குளிப்பதற்கு மாறானது. செய்வதை திருந்தச் செய் என்பதை இது குறிக்கிறது.
------------------------------------------------------------------------------------------------------------
நவக்கிரக கோயில்களுக்கு பரிகாரம் செய்வதாக இருந்தால் மட்டுமே செல்ல வேண்டுமா?

நவக்கிரக கோயில்கள் அனைத்திலும் பிரதானமாக கருவறையில் சிவபெருமானே இருக்கிறார். நவக்கிரகங்கள் பரிவார தேவதையாக பிரகாரத்தில் மட்டுமே இருக்கின்றன. தீமை மட்டுமில்லாமல் ஒருவனுக்கு நன்மை செய்வதும் கிரகங்களே. கடவுளின் அடியவர்களான நவக்கிரகங்களை எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம்.
------------------------------------------------------------------------------------------------------------
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?

பிரம்ம மந்திரம் ஜபித்து பிரும்மம் எனப்படும் பரம்பொருளை மட்டுமே சிந்தித்து வாழ்பவர் களை பிராமணர்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இவர்களைக் கொல்லுதல், துன்பப்படுத்துதல் போன்றவை பிரம்ம ஹத்தியாகும். ஹத்தி என்றால் அழித்தல். இதே போன்று போரில் ஒருவரைக் கொன்று விட்டால் வீரஹத்தி தோஷம் என்றும், கருவைக் கலைத்தால் ப்ரூணஹத்தி தோஷம் என்றும் சாஸ்திரம் கூறுகிறது. எந்த விதத்திலும் யாரையும் கொல்லும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. கொல்லாமை என்னும் அகிம்சையே ஆன்மிக வாழ்வின் அடிப்படைத் தத்துவம்.
------------------------------------------------------------------------------------------------------------
துளசிமாடத்தில் உள்ள இலையைப் பறித்து பூஜை செய்யக் கூடாதா?

ஆம்! இதனை லட்சுமியின் அம்சமாக கருத வேண்டும். மாடத்தில் உள்ள செடியை துளசிமாதா என்பர். இந்த இலையை லட்சுமி தாயாராக கருதி, விளக்கேற்றி துளசி ஸ்தோத்திரம் சொல்லி வழிபட வேண்டும். இளம்பெண்கள் வெள்ளியன்று வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும்.
------------------------------------------------------------------------------------------------------------
அம்மா தந்த அனுமதி!

விவேகானந்தருக்கு துறவு நாட்டம் எழுந்தது. ஆனால், அவரது தாய் புவனேஸ்வரி அனுமதி தர வேண்டுமே! இதற்காக, வாய்ப்பு கிடைக்கும் சமயத்தில் அம்மாவிடம் சொல்லி வந்தார். அவரோ புன்னகைத்தபடி, நரேன்! (விவேகானந்தரின் இளமைப் பெயர்) சமையல் அறைக்குச் சென்று கத்தியை எடுத்து வா! என்று சொல்லி விடுவார்.விவேகானந்தரும் கத்தியை எடுத்து வந்து கொடுக்க,இப்போ! என்னப்பா அவசரம்! கொஞ்ச காலம் பொறுமையாய் இரு! என்று பதிலளிப்பார். அம்மாவின் பதிலை ஏற்றுக் கொண்டாலும், அவர் ஏன் தாமதிக்கிறார் என்பதற்கான காரணம் மட்டும், விவேகானந்தருக்கு விளங்கவில்லை. ஒருநாள் அம்மாவின் அனுமதியும் கிடைத்தது.அம்மா! இத்தனை நாளும் மறுத்த நீங்கள், இன்று அனுமதி தர காரணம் என்ன? என்று கேட்டார் விவேகானந்தர். நரேன்! இத்தனை நாளும், நீ கத்தியை கொண்டு வரும் போதெல்லாம் கைப்பிடியை உன் பக்கமும், கூர்மையான பகுதியை என் பக்கமுமாய் நீட்டியபடி தருவாய். அது சுயநலத்தின் வெளிப்பாடு. ஆனால், இன்று கைப்பிடி என் பக்கமும், கூரிய பகுதி உன் பக்கமுமாக இருந்தது. மற்றவரின் நன்மையில் அக்கறை காட்டும் தியாக மனப்பான்மை தான், துறவுக்கான அஸ்திவாரம் என்றார். துறவு பொதுநலத்திற்குரியது. அதில் சுயநலம் துளியும் இருக்கக்கூடாது என்பதை உணர்த்திய அம்மாவின் திருவடிகளை விவேகானந்தர் வணங்கினார்.
------------------------------------------------------------------------------------------------------------
கொடிமரம் இல்லாத கோயிலில் சுவாமி புறப்பாடு நடத்தலாமா?

தாரளமாகச் செய்யலாம். ஏகதின உற்ஸவம் என்ற அடிப்படையில் சாஸ்திரம் இதை அனுமதிக்கிறது. கொடிமரம் இருந்தால், கொடியேற்றி பத்து நாள் திருவிழா நடத்தலாம்.
------------------------------------------------------------------------------------------------------------
விரதத்தை உபவாசம் என்பது ஏன்?

விரதம் வேறு உபவாசம் வேறு. விரதம் என்ற சொல்லுக்கு சிறிதளவு உணவு, பழம் சாப்பிட்டு ஏற்படும் கஷ்டத்தை சகித்துக் கொள்வது. வ்ரு என்பது வேர்ச் சொல்லுக்கு கஷ்டம் என்று பொருள். வ்ருதம் என்பதே விரதம் என்றானது. உபவாசம் என்றால் சமீபத்தில் வசிப்பது. அதாவது முழுமையாக உணவைத் தவிர்த்து, கடவுளின் அருகில் இருப்பதாக கருதுவதாகும். விரதத்தை விட உபவாசம் மேலானது. மாதம் ஒருமுறை இருந்தால் போதும். மனவலிமையும், ஆரோக்கியமும் உண்டாகும். விரத நாளில் வெங்காயம், பூண்டு, மாமிசம் தவிர மற்ற எளிய உணவுகளை அளவு குறைத்து சாப்பிடலாம்.
------------------------------------------------------------------------------------------------------------
பழைய துணிமணிகளை ஏழைகளுக்கு கொடுப்பது தானமாகுமா?

ஆகாது. புதிதாக துணிமணி வாங்கிக் கொடுப்பதே வஸ்திர தானம்.
------------------------------------------------------------------------------------------------------------
வெள்ளை மனசு வேணுமா?

மந்திரங்களில் சிறந்த காயத்ரியை, வேதத்தின்தாயாகப் போற்றுவர்.  அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில்(4.30-6.00) கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து, காயத்ரி மந்திரம் சொல்வது சிறப்பு. புருவநடுவிலோ அல்லது இதயத்திலோ காயத்ரி வீற்றிருப்பதாக எண்ணியபடி, 108 முறை ஜெபிப்பர். இதனால்,நல்லறிவு, மனஉறுதி, முகப்பொலிவு, உடல்நலம் உண்டாகும். மனம் தூய்மை பெற இதை விட சிறந்தவழி வேறில்லை என சிவானந்தர் குறிப்பிடுகிறார். எல்லா பாவங்களையும், அறியாமையையும்போக்குபவரே! வணக்கத்திற்குரியவரே! உலகைப் படைத்த கடவுளே! உமது புகழை நாங்கள்தியானிக்கிறோம். நீங்கள் எங்கள் புத்தியை நெறிப்படுத்த வேண்டும், என்பது இதன் பொருள்.
------------------------------------------------------------------------------------------------------------
பூஜைக்குரிய திசை!

அம்பிகை தவிர்த்த விநாயகர்,முருகன், சிவன், விஷ்ணு, சூரியன் ஆகிய தெய்வங்களை வணங்கும்போதுசுவாமியை கிழக்கு நோக்கி வைத்து, நாம் வடக்கு நோக்கி அமர்ந்து பூஜை செய்வதே சிறந்தது. ஆனால், பெண் தெய்வங்களான காளி, மாரி, லட்சுமி உள்ளிட்ட தெய்வங்களை வழிபடும்போது நேருக்கு நேராக அமர்ந்து பூஜை செய்யலாம்.அதாவது அம்மன் கிழக்கு நோக்கி இருக்க, நாம் மேற்கு நோக்கியோ அல்லது அம்மன் வடக்கு நோக்கி இருக்க நாம் தெற்குநோக்கியோ பூஜை செய்யலாம்.
------------------------------------------------------------------------------------------------------------
நேர்மை மிக்க பெரியவர்!

பெரியவர் ஒருவர் தன் நண்பர்களுடன், வேலூர் மாவட்டம், காங்கேய நல்லூரில் இருந்து (83 கி.மீ.) நடந்து திருவண்ணாமலைக்கு யாத்திரை சென்றார். அந்த சமயம் வேலூரைச் சுற்றி காலரா பரவிக்கொண்டிருந்தது. திருவண்ணாமலையில் நோய் பரவாமல் இருக்க, நோய் பரவிய ஊர்க்காரர்கள்திருவண்ணாமலைக்குள் நுழையக்கூடாதென, சுகாதார துறை அனுமதி மறுத்தது. காங்கேயநல்லூரில் இருந்துவந்தவர்களோ, தாங்கள் அரக்கோணத்தில் இருந்துவருவதாகச் சொல்லி விட்டு திருவண்ணாமலைக்குச் சென்றனர். ஆனால், பெரியவர் மட்டும்,நான் காங்கேயநல்லூர்க்காரன் என்ற உண்மையைச் சொன்னதால்அனுமதி மறுக்கப்பட்டார். அந்த இடத்திலேயே, அண்ணாமலையானுக்கு அரோகரா என்று சொல்லி வணங்கி விட்டு ஊர் திரும்பினார். நேர்மையான நெஞ்சம் கொண்ட பெரியவர் வேறு யாருமல்ல!வாரியார் சுவாமிகளின் தாத்தா சாமியண்ணா தான். ஆண்டுதோறும் அண்ணாமலை தீபம் தரிசிக்கும் அவர், பொய் சொல்ல விரும்பாமல் ஊர் திரும்பியதுகுறிப்பிடத்தக்கது.
------------------------------------------------------------------------------------------------------------
தலைகீழாகும் இலை!

வீட்டிலேயே தோட்டம் உள்ளவர்கள், பூஜைக்குரிய பூக்களைப் பறித்து சுத்தமான கூடையில் போட வேண்டும். புடவைத் தலைப்பில் போடக்கூடாது. பூக்களை சுவாமியின் பாதத்தில் போடும் போது, காம்பு கீழேயும் பூவிதழ் மேலாகவும் இருக்குமாறு போடுவதே முறையானது. பூ மட்டுமில்லாமல் இலை, பழம் இவற்றிற்கும் இது பொருந்தும்.புஷ்பம் பத்ரம் பலம் சைவ யதோத்பன்னம் ததார்ப்பயேத்என்கிறது சாஸ்திரம். அதாவது, பூக்கள், இலைகள், கனிகள் அனைத்தையும் மேல்நோக்கி படைக்க வேண்டும் என்பதுஇதன் பொருள். ஒரே ஒரு இலைக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. வில்வ இலையால் சிவனை அர்ச்சிக்கும்போது தலைகீழாக கவிழ்ந்து இருக்குமாறு அர்ச்சிப்பது சிறப்பு.
------------------------------------------------------------------------------------------------------------
சுயம்புவை வணங்கலாம்!

கோயிலில் கருவறையில் மூலவரும், அதன் அருகில் உற்சவரும் எழுந்தருளியிருப்பர். திருவிழா காலத்தில் உற்சவர் மட்டும் திருவீதி எழுந்தருள்வது வழக்கம். சுவாமி தரிசனம் செய்ய முடியாதவர்களுக்கும் அருள்புரிவதற்காக வீதியுலா நடக்கிறது. அப்போது உற்சவர், மூலவரின் அனைத்து சக்தியையும் தன்னோடு எடுத்து வருவதாக ஐதீகம். அந்த சமயத்தில் மூலவரை தரிசித்தல், அர்ச்சித்தல், வலம் வருதல் போன்ற எந்த வழிபாட்டையும் மேற்கொள்வது கூடாது என்கிறதுசிவயோகி ஸம்வாதம். ஆனால், சுயம்பு மூர்த்தியாக(தானாக தோன்றியது) எழுந்தருளியுள்ள கோயில் களில் மட்டும் மூலவரைத் தரிசிக்கலாம். ஆனால், அர்ச்சனை செய்யவோ, வலம் வரவோ கூடாது.
------------------------------------------------------------------------------------------------------------
பூதூவும் கை!

தினமும் வீட்டில் காலையிலும்,மாலையிலும் விளக்கேற்றி வழிபாடுசெய்யும்போது, இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரம், ஸ்லோகம் ஜெபிப்பதும், தேவார, திருவாசக, பிரபந்தப் பாடல்களைப் பாடுவதும் அவசியம். பூஜையின் நிறைவில், இரு கைகளையும் ஒன்று சேர்த்து, பூக்களை அள்ளி, சுவாமியின் திருவடியில் தூவ வேண்டும். இதற்கு புஷ்பாஞ்சலி என்று பெயர். தெய்வ கைங்கர்யங்களை வலது கையால் தான் செய்ய வேண்டும் என்றாலும், புஷ்பாஞ்சலியின்போது மட்டும், இடக்கையையும் சேர்த்து செய்வதில் தவறில்லை என்கிறது சாஸ்திரம்.
------------------------------------------------------------------------------------------------------------
அனுமன் பூஜித்த ஆதி ராமர்!

மந்திராலயம் திருத்தலத்தில் ஆதிராமர் விக்ரகம் உள்ளது. இந்த விக்ரகத்தை முதலில் அனுமன் பூஜித்தாராம். பின்னர் பீமன் மற்றும் பலரால் பூஜிக்கப்பட்டு மத்வாச்சாரியாரிடம் வந்தது. அதன்பின் ஸ்ரீராகவேந்திரரால் பூஜிக்கப்பட்டது. அது முதல் இந்த விக்ரகம் மந்திராலயத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------------------
2ம் நூற்றாண்டு சிவலிங்கம்!

கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சிவலிங்கத்தை ஆந்திரா மாநிலத்திலுள்ள ரேணிகுண்டாவிற்கு அருகிலுள்ள குடிமல்லம் தலத்தில் தரிசிக்கலாம். 5 அடி உயரம் கொண்ட இச் சிவலிங்கத்திற்கு ஆவுடையார் கிடையாது. பாணத்திலேயே சிவபெருமானின் உருவம் உள்ளது. அதில் கைகளும், காலடியில் ஒரு அரக்கன் மிதிபட்டுக் கிடக்கும் காட்சியையும் காணலாம்.
------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை: