ஞாயிறு, 11 நவம்பர், 2018

சாஸ்தா வழிபாடு!

அஷ்டசாஸ்தா வழிபாடு-1

யுகம் கடந்த புருஷனாக விளங்குபவர் சாஸ்தா. கிருதயுகத்தில் கந்த புராணக் கூற்றுப்படி, சூரபதுமனுக்காகவும் அசுரர் குலத்துக்காகவும் பயந்து பூமியில், பாரத தேசத்தில், தமிழ்நாட்டில், குடகு முதல் காவிரி பாயும் தீர்த்தக்கரைவழியே வந்து, வேணுபுரம் என்று வடமொழியில் கூறப்படும் சீர்காழிப் பகுதியில் தேவேந்திரன் தன் மனைவி சசிதேவியுடன் மறைந்து வாழ்ந்திருந்த போது, தேவர்கள் அவனைத் தேடிக் கண்டுப்பிடித்து, சூரபதுமன் அழிய வேண்டுமானால் முருகப் பெருமான் அவதாரம் ஆக வேண்டும் என்று சிவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கோரி, இந்திரனையும் கயிலாயம் அழைத்துச் சென்றனர். தனித்துவிடப்பட்ட இந்திராணியை சூரபதுமன் சகோதரி அஜமுகி என்ற அரக்கியிடமிருந்து சாஸ்தா காத்தருளினார். (இடம் தென்பாதிகிராமம், சீர்காழி) என்று கந்தபுராணம் கூறுகிறது. எனவே முருகனுக்கும் மூத்தோன் என்று சாஸ்தா கூறப்படுகிறார்.

அதேபோல, சிவபுராணத்தில் சிவனை மதியாது யாகம் நடத்திய ரிஷிகளுக்கும், ரிஷி பத்னிகளுக்கும் சிவன் மகிமையை வெளிப்படுத்த சிவன் பிக்ஷõடனராகவும், திருமால் மோகினியாவும் உருமாறி, அவர்களை மாயையிலிருந்து விடுபடச் செய்து நல்வழிப்படுத்திய பின், சிவ-விஷ்ணு சேர்க்கையில், அயோனிஜனாக சாஸ்தா அவதரித்ததாக வழுவூர் மகாத்மியம் கூறுகிறது. (இடம் கழினிவாசல், வழுவூர்)

பத்மாசுரன் தலையில் கைவைத்து, மோகினி மாலும் சிவனும் கூடி சாஸ்தா அவதாரமானது மரக்காணம், பாண்டிச்சேரி அருகில் உள்ள புத்துப்பட்டு என்னும் கிராமம் என்று கூறப்படுகிறது. (பத்மபுராணம்)

லலிதோ பாக்யானத்திலும் கந்த புராணத்திலும், பாற்கடல் கடைந்த சமயத்தில் மோகினி அவதாரம் எடுத்த திருமாலுக்கும் சிவனுக்கும் ஹரிஹரபுத்திரர் அவதரித்தார் என்று கூறப்பட்டுள்ளது. இவை அனைத்திலும் கிருதயுகத்தைச் சார்ந்தவையாகும்.

த்ரேதாயுகத்தில், இராமவதாரம் நடைபெற்றுது. புத்ரகாமேஷ்டி யாகத்தை தசரதன் நடத்திய போது யாககுண்டத்திலிருந்து கையில் பாயச பாத்திரத்துடன் ஓர் யுகபுருஷன் வெளிவந்தான் எனவும் மஹத்பூதம் என்றும் வால்மீகி வர்ணிப்பது சந்தானப்ராப்தி யருளும் மாணிக்க பாத்திரம் கையிலேந்தி இருக்கும் சாஸ்தாவையே குறிப்பதாகும். இராமன் தரிசனம் பெற்ற சபரி முக்தி அடைந்தது சாஸ்தாவின் அருளினால் என்பதால் தான் மதங்கமலை என்று வழங்கப்பட்ட இடம் இன்று சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.

இராமர் முறித்த சிவதனுசு வில் சாஸ்தாவின் ஆவேச சக்தி ஆவிர்பாகம் ஆகியிருந்ததாகவும், சாந்த மூர்த்தியான இராமன் அந்த வில்லைத் தொட்டவுடன் சாஸ்தாவின் ஆவேச சக்தி இராமரிடம் குடி புகுந்து, பிற்காலத்தில் இராவணனை அழிக்க உதவியது என்று சமூக வரலாறு நூல் ஒன்று தெரிவிக்கிறது.

துவாபர யுகத்தில் (மஹாபாரத காலம்) அரக்குமாளிகையிலிருந்து பாண்டவரைக் கைப்பற்றினார் சாஸ்தா என்று ஓர் செவி வழிக்காதை உண்டு. அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் கொடுக்கும் முன்பு, அவனது வீரத்தைப் பரிட்சிக்க பரமேச்வரன் வேடுவனாகத் தோன்றி, ஒரு பன்றியை, வில்லால் அடித்துக் கொன்றது யார் என்று பிரச்சினை எழுப்பி போர் தொடுத்து, முடிவில் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் கொடுத்தார் பரமேச்வரன். அந்த பிரச்சினைக்குக் காரணமாயிருந்த முள்ளம் பன்றியை உசுப்பி விட்டவர் சாஸ்தா என்று கூறுகிறார்கள் (ஆதாரம் : சிதம்பரம் அருகே உசுப்பூர் சாஸ்தா கோயில்)

கலியுகத்தில் பம்பையில் தவழ்ந்து பந்தள பாலகனாக வளர்ந்து மகிஷி ஸம்ஹாரம் செய்து, வன்புலி வாகனனாகத் தோன்றி பூதநாத கீதை உபதேசம் செய்தருளி சபரிமலையில் கோயில் கொண்டான் சாஸ்தா என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இந்தியா முழுவதும் ஐயப்பன் வழிபாடு தற்போது பிரபலமாகி வருகிறது. இதில் ஐயப்பன், சாஸ்தா, ஐயனார் என பல உருவங்களில் ஐயப்பன் வழிபாடு நடைபெறுகிறது. இது தவிர ஆதிபூத நாதர், கல்யாண வரதர், மஹா சாஸ்தா, சம்மோஹன சாஸ்தா, சந்தான பிராப்தி சாஸ்தா, வீர சாஸ்தா, ஞான சாஸ்தா, வேத சாஸ்தா என எட்டு வகையான சாஸ்தா இருப்பது பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி அனைவரும் தெரிந்து கொள்வதற்காக இந்த அஷ்ட சாஸ்தா வழிபாடு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

நடமாடும் தெய்வமாம் காஞ்சி மஹா முனியின் அருளானையின்படியும், சிருங்கேரி ஆச்சார்யாளின் அனுக்ரஹதினாலும் ஐயப்ப வழிபாட்டில்  பல்வேறு  ஆராய்ச்சிகள் செய்து, கலிகாலத்திற்கு உகந்தவாறு எட்டு வித அவதாரங்களை வடிவமைத்து கொடுத்து  ஐயப்பனின் பதமலர்களை அடைந்தவர் குருசாமி பிரம்மஸ்ரீ விஸ்வநாத சர்மா. அவரது முயற்சியின் பலனாக திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமம், பாலாஜி நகர்-சாய் நகரில்  அஷ்டசாஸ்தா திருக்கோயில் விரைவில் கட்டப்பட இருக்கிறது.

கோயில் திருப்பணிக்கு நன்கொடை தர விருப்பமுள்ளவர்கள், பொருளாகவோ, பணமாகவோ வழங்கலாம்.

தொடர்புக்கு:வில்லிவாக்கம் ஸ்ரீ விஸ்வநாத சர்மா அஷ்டசாஸ்தா ட்ரஸ்ட்
29, வடக்கு மாட வீதி, ஐயப்பன் கோயில் அருகில்,
வில்லிவாக்கம், சென்னை-600 049.
போன் : +91-44-2617 3963, 99625 62067, 99625 62068.
email: sasthakalyan@gmail.com

கருத்துகள் இல்லை: