செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

ஆலயதரிசனம்

ஆலயதரிசனம்..

மதுரகாளி திருக்கோயில் சிறுவாச்சூர்...

1. வீர பிரம்மேந்திர சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சக்கரம் இங்குள்ளது.

2. வாரத்தின் திங்கள், வெள்ளி ஆகிய இருநாட்கள் மட்டுமே ஆலயம் திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது.

3. திருவிழா மற்றும் சில குறிப்பிட்ட பண்டிகைகளின் போது மட்டும் கோயில் திறக்கப்படுகிறது; மற்ற நாட்களில் கோயில் திறக்க மாட்டார்கள்.

4. .சிறுவாச்சூரின் வழிபாடு தெய்வம் செல்லியம்மன் ஆகும், மந்திரவாதி ஒருவன் தனது மந்திர வலிமையால் அம்மனைக் கட்டுப்படுத்தி தீய செயல்களுக்கு பயன்படுத்தி வந்தான்

5. மதுரை காளியம்மன் ஸ்தலத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு தங்க இடம் கேட்கிறாள். செல்லியம்மன் தன்னை மந்திர வலிமையால் தொல்லை தரும் மந்திரவாதி பற்றிக் கூறுகிறாள்.

6. மதுரை காளியம்மன் அதற்கு தக்க வழி செய்வதாக கூறி தங்குகிறாள். இரவு மந்திரவாதியை அழித்து, செல்லியம்மனை மந்திர வலிமையில் இருந்து விடுவிக்கிறாள்.

7. செல்லியம்மன் அன்னை திறம் கண்டு இனி அன்னையே சிறுவாச்சூர் ஆலயத்திலிருந்து அடியார்கட்கு அருள் பாவித்து வர வேண்டுகிறாள்.

8. தான் அருகிருக்கும் பெரியசாமி மலை சென்று விடுவதாகவும் ஆனால் கோயிலில் எப்பொழுதும் தனக்கு முதல் மரியாதை வேண்டுமெனவும் 
வரம் கேட்கிறாள். 

9. மதுரை காளியம்மனும் அதற்கு ஒப்புக் கொண்டு ஆலயத்தில் அமர்ந்து, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்புரிகிறாள்.

10. செல்லியம்மன் தனக்கு முதல் மரியாதை வேண்டுமென்று கேட்டதற்கு ஏற்ப பூஜையின் போது தீபாராதனை முதலில் மலை நோக்கி மேலே காட்டி விட்ட பிறகு மதுர காளியம்மனுக்கு தீபாராதனை காட்டும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. 

11. சிறுவாச்சூருக்கு வெள்ளிக் கிழமை வந்த மதுரைக் காளியம்மன் பக்தர்களுக்கு திங்கள் கிழமை காட்சி தருகிறாள். எனவே திங்கள், வெள்ளி மட்டும் ஆலயம் திறந்திருக்கும்.

12. மற்ற நாட்களில் மதுரகாளியம்மன் செல்லியம்மனுடன் பெரியசாமி மலையில் தங்குவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

13. இத்தலத்தில் புகழ்பெற்ற நேர்த்திக்கடன் என்பது மாவிளக்கு நேர்த்திக்கடன் என்பதாகும். 

14. வயிறு, நெற்றி, நெஞ்சு, கால், கை என்று வேண்டிக் கொண்டு அந்த பாகத்தில் மாவிளக்கு வைத்து அம்மனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.

15. வெளியில் எங்கும் மாவிளக்கு மாவு தயாரிக்காமல் ஆலய வளாகத்திற்குள் அரிசி கொணர்ந்து ஊற வைத்து இடித்து இங்கேயே மாவிளக்கு தயார் செய்கிறார்கள்.

16. பின்பு அதனுடன் நெய்விளக்கு  ஏற்றித் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இதற்காக மாவு இடிக்கத் தனியிடம் ஒதுக்கப்பட்டு உரல்களும், உலக்கைகளும் ஆலயம் மூலமாகவே வைக்கப்பட்டுள்ளன. 

17. இடிக்க முடியாத பக்தர்களுக்கு கூலிக்கு மாவிடித்துத்தர பணியாளர்களும் உள்ளனர்.

18. இவை தவிர அங்கபிரதட்ணம் செய்வதும், பாலாபிசேகம், அன்னதானம் ஆகியவற்றையும் பக்தர்கள் செய்கிறார்கள்.

19. மதுரைக் காளியம்மன் என்ற திருப்பெயரே பின்னாட்களில் மருவி மதுரகாளியம்மனாக வந்ததாகக் கூறுகிறார்கள்.

20. அம்மன் சுமார் 4 அடி உயரமாக இருக்கிறார். வடக்கு நோக்கிய சன்னதியில் அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளாள்.

21. நான்கு திருக்கரங்கள் இவற்றில் உடுக்கை, பாசம், சூலம், கிண்ணம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். இடது திருவடியை மடித்த நிலையில் வைத்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றி அமர்ந்த இருக்கிறாள்.

22. அம்மன் திருவடியில் அரக்கன் இல்லாததால் அழிக்கும் தொழிலில் காட்சியில்லை, பக்தர்களுக்கு அருளும் நிலையில்காட்சி தருகிறாள்.

23. தீராத நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமல் போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலியவற்றுக்கு அம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது.

24. ஆண்டுதோறும் சித்திரைத் திங்களில் அம்மாவாசைக்கு பின்வரும் முதல் செவ்வாயன்று பூச்சொரிதல் தொடங்கும், பின் காப்பு கட்டி 13 நாட்கள் பெருந்திருவிழா சிறப்புடன் நடைபெறுகிறது.

25. இத்திருவிழாவில் மலை வழிபாடு, வெள்ளிகுதிரை வாகனம், திருத்தேர் முதலியன முக்கிய நாட்களாகும். இத்திருவிழா நாட்களில் ஆலயம் திறக்கப்பட்டு பூஜை நடைபெறும்.

26. குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்யப்பட்ட கோயில் மலைகளும் ஏரியும் குளமும் தோப்புகளும் வயல்களும் சூழ்ந்துள்ள மனதிற்கினிய சூழலில் ஊரின் எல்லையில் அன்னையில் திருக்கோயில் அமைந்துள்ளது.

27. எழிலார்ந்த ராஜ கோபுரம் அனைவரையும் வருக வருகவென அழைக்கிறது. அன்னை மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம், தலத்தின் காவல் தெய்வாமாக அய்யனார் உள்ளார்.

28. குலதெய்வமாக வழிபடுவோ பக்தர்கள் பொங்கள் வைத்து வேண்டிக் கொள்கின்றனர்.

29. திங்கள் வெள்ளி கிழமைகளில் மட்டும் காலை 8 மணிக்கு சன்னதி திறக்கப்படும். காலை 11 மணிக்கு மேல் அம்மனுக்கு அபிசேகம் நடைபெறும். இரவு 8 மணி வரை தொடர்ந்து தரிசனம் செய்யலாம்.  
     
30. ஆலய முகவரி அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர், பெரம்பலூர் மாவட்டம். 

கருத்துகள் இல்லை: