வெள்ளி, 6 செப்டம்பர், 2019

நமது ஆச்சார்யர்களை பற்றி  தெரிந்துகொள்வோம்

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்யர் மற்றும் ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரியர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர். அவர்களின் முதலாமானவர் ஆதிசங்கரர் ஆவார். இவரை அனேகமாக அனைவருக்கும் தெரிந்தவர். மற்ற ஆச்சார்யர்களை பற்றி இனி வரும் நாட்களிள் நாம் தெரிந்துகொள்வோம். ஆதிசங்கருக்கு அடுத்தபடியாக பீடத்தை அளங்கரித்தவர் ஸ்ரீ சுரேஸ்வரர் ஆவார்.

2: ஸ்ரீ சுரேஸ்வரர்( கி.மு.491முதல் 407)

ஸ்ரீ சுரேஸ்வரருடைய பூர்விக நாமம் மண்டனமிச்சர். இவர் நர்மதா நதிக்கரையில் மாகிஷ்மதி என்ற சிற்றூரில் வசித்து வந்தார். இவரை பிரம்மாவின் அம்சம் என்பர். இவருடைய மனைவி ஸரசவாணி ஸரஸ்வதி அம்சம். இவளும் தன் கணவரைப் போலவே வேத வேதாங்களில் புலமை மிக்கவள். மிச்ரரின் ஞானத்தை அறிந்த ஆதிசங்கரர் தனக்குப் பிறகு அவரே பீடத்தை அலங்கரிக்கக் கூடியவர் என தீர்மானித்து இல்லறத்தில் இருக்கும் அவரை துறவு வாழ்க்கைக்குத் திருப்ப அவர் இல்லம் தேடி வந்தார். அந்த காலங்களில் ஒருவர் ஒருவரை தன்பால் ஈர்த்துக் கொள்ள வேண்டுமென்றால் வாதத்துக்கு அழைப்பது வழக்கம். அவ்விதமே மிச்ரரை வாதத்திற்கு அழைத்தார் ஆதிசங்கரர். தோற்றவர் வென்றவர் மார்க்கத்தை பின்பற்ற வேண்டுமென்பது நிபந்தனை. இரண்டு மலர்களைக் கொண்டு வந்து இருவர் கழுத்திலும் சூட்டி எவர் மாலை வாடுகிறதோ அவரே தோற்றவர் என்று கூறி அவர்களுக்கு நடுவராக இருந்தாள் மிச்ரரின் மனைவி. இருவரும் சளைக்காமல் பலநாள் வாதப்போர் நடத்தினர். மிச்ரர் கழுத்தில் இருந்த மாலை வாடத் தொடங்கியது. கணவனில் பாதி மணைவி. தன்னையும் வாதில் வென்றாலே பூரண வெற்றி என்று ஸரசவாணி தர்க்கம் செய்தாள். அவளையும் தர்க்க சாஸ்திர நெறிப்படி வென்றார் ஆதிசங்கரர். நிபந்தனைப்படி மிச்ரர் சந்நியாச ஆச்ரமத்தை ஏற்றார். ஸ்ரீசுரேஸ்வரர் என்ற தீட்சா நாமத்தை அவருக்கு அளித்தார் சங்கரர். ஆதிசங்கரர் சித்தியடைந்த பின் ஸ்ரீ சுரேஸ்வரர் அனைத்து பீடங்களுக்கும் மேலாளராயிருந்து நிர்வகித்தார். இவர் பல அத்வைத்த நூல்களை எழுதினார். காஞ்சியில் ஒரு பெரும் அக்ரஹாரத்தை அமைத்தார். ஸ்ரீகச்சபேஸ்வரர் ஆலயத்துக்கருகிலுள்ள இந்த அக்ரஹாரம் மண்டனமிச்ரர் அக்ரஹாரம் என வழங்கப்படுகிறது. சுரேஸ்வரர் கி.மு.407ல் சுக்லபட்ச துவாதசியன்று சித்தியடைந்தார். இன்றும் காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடத்தில் சரேஸ்வருக்கு தனி சன்னதியும் திருவுருவமும் உள்ளது. இவருக்கு அடுத்து வந்த ஆச்சார்யர்கள் அனைவருக்கும் அவர்களுடைய நாமத்தில் சரஸ்வதி பட்டம் சூட்டப்பட்டது.

ஹர ஹர சங்கர                                                                                                                          ஜய ஜய சங்கர

கருத்துகள் இல்லை: