திங்கள், 28 ஏப்ரல், 2014

சமணர்களின் கொடுமையும், திருநாவுக்கரசரின் பெருமையும்:-
*
திருநாவுக்கரசர், இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு சைவ சமயம் சார்ந்ததைக் கேள்வியுற்ற சமணர்கள், மன்னனும் இந்நிகழ்வால் சைவ சமயத்துக்கு மாறக் கூடும் என அஞ்சினர். மன்னனிடம் அப்பர் அடிகளைப் பற்றி தவறாகத் திரித்து உரைத்து, அடிகளைத் தண்டிக்கும் பொருட்டு அழைத்து வரச் செய்தனர். அன்பே வடிவான அடிகளும் அவர்களுக்கு இரங்கி, உடன் சென்றருளினார்.
*
பெருந்தீ கொழுந்து விட்டு எரியும் அறையுள் அப்பர் அடிகளை அடைத்து, 7 நாட்கள் வெளியில் நின்று காவல் புரிந்தனர். திருநாவுக்கரசர், இறைவனின் திருவுருவை மனதில் இருத்தி, 'மாசில் வீணையும் மாலை மதியமும்' என்னும் தேவாரம் பாடி அருளி, இனிது வீற்றிருந்தார். 7 நாட்களுக்குப் பின்னும் பொலிவுடன் அடிகள் வீற்றிருப்பதைக் கண்ணுற்ற சமணர்கள் பெரிதும் கலக்கமுற்றனர்.
*
பின்னர் அப்பர் அடிகளை, விடம் கலந்த நீரைப் பருகச் செய்தனர். விடம் உண்ட நீலகண்டனின் அடியவருக்கு, விடமும் அமிர்தமாக மாற முன்னிலும் பொலிவுடன் விளங்கினார் அடிகள். அறிவிழந்த மன்னனும் பொல்லாச் சமணர் சொல் கேட்டு, அடிகளை மண்ணில் திருக்கழுத்து வரை புதைத்து, அடிகளின் தலையை இடரும் பொருட்டு, பட்டத்து யானையை அழைத்து வர ஆணையிட்டான்.
*
அடிகள் 'அஞ்சுவது யாதொன்றும் இல்லை' என்னும் தேவாரம் பாடி அருள, யானை அடிகளை வலம் வந்து வணங்கிச் சென்றது. வஞ்சகர்கள் அத்துடன் நில்லாது இறுதி முயற்சியாக, அடிகளைக் கல்லுடன் பிணைத்துக் கட்டி ஆற்றில் மூழ்கச் செய்து, மகிழ்வுடன் சென்றனர். அப்பர் அடிகள் 'சொற்றுணை வேதியன்' என்னும் தேவாரம் பாடி அருள, கற்பாறை தோனியாக மாறி மிதந்து, அடிகளைக் கரை சேர்த்தது.
*
உண்மை நெறியுணர்ந்த பல்லவ மன்னன் அடிகளை வணங்கி, மன்னிப்பு வேண்டி நின்றான். கருணையே உருவான அப்பரடிகளும் அரசனின் பிழை பொறுத்து, ஆசிர்வதித்து அருளினார். சைவ சமயம் சார்ந்த பல்லவ மன்னன், அனைத்து சமணப் பள்ளிகளையும் இடித்து, குணபரவீச்சுரம் என்னும் சிவாலயம் புதுக்கினான்.
*
திருநாவுக்கரசு சுவாமிகள் பாடி அருளிய சிறப்புப் பொருந்திய இத்தேவாரப் பதிகங்களை அனுதினமும் பாராயணம் செய்வதால், பெரும் துன்பங்களில் இருந்தும் எளிதில் விடுபெறலாம் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.






கருத்துகள் இல்லை: