திங்கள், 28 ஏப்ரல், 2014

இறைவனால் பட்டம் சூட்டப் பெற்ற திருநாவுக்கரசர் (இன்று சித்திரை சதயம் (25/4/2014). அப்பர் சுவாமிகள் திருப்புகலூரில் முக்தி அடைந்த நன்னாள்):
*
திருநாவுக்கரசரின் அவதாரத் தலம் 'திருவாய்மூர்'.
இயற்பெயர் 'மருள் நீக்கியார்'. இவரின் தமக்கையான 'திலகவதியார்', சீரிய சிவத்தொண்டு புரிந்து வரும் இயல்பினர். மருள் நீக்கியார், இளமைக் காலத்தில் இறைவன் அருளாமையினால், தமக்கையாரையும் பிரிந்து, உய்யும் வழி அறியாது, சமண மதம் சேர்ந்து சமணர்களுள் பெரும் மதிப்பைப் பெற்றார்.
*
திலகவதியார் 'திருவதிகை' தலம் சென்று உழவாரப் பணி புரிந்து வந்தார். அனுதினமும் திருவதிகைப் பெருமானிடம், மருள் நீக்கியாரை புறச்சமயம் விட்டு நீக்கி அருளுமாறு வேண்டுவார். சிவபெருமான் திலகவதியார் கனவில் தோன்றி 'உன் சகோதரன் எம்மை அடைய முன்னமே தவம் செய்தவன். யாம் சூலை நோய் தந்து அவனை ஆட்கொள்வோம்' என்று அருளிச் செய்தார்.
*
சமணப் பள்ளியில் மருள்நீக்கியார், காரணம் இன்றிச் சூலைநோய் தாக்கிய தன்மையால் அலறிச் செய்வது அறியாது வீழ்ந்தார். மெய்நெறி உணரா சமணர்களின் அனைத்து மருத்துவ முறைகளும் பயனற்றுப் போயின. துடித்துப் பதறிய மருள் நீக்கியார் சமணக் கோலம் துறந்து, திருவதிகைத் தலத்துக்கு விரைந்து, திலகவதியாரின் பாதங்களில் பணிந்து பிணி போக்கி அருளுமாறு அழுதுத் தொழுதார்.
*
திலகவதியார், சகோதரர் உய்யும் பொருட்டு திருநீற்றை உடலெங்கும் பூசி, அவரைத் திருக்கோயிலினுள் அழைத்துச் சென்றார். திருவருள் தூண்ட மருள் நீக்கியார் 'கூற்றாயினவாறு' என்று தொடங்கும் 10 பாடல்கள் கொண்ட தேவாரம் பாடி அருளினார். சூலைநோயின் வலியை விளக்கி, அதை போக்கி அருளுமாறு மன்னிப்பு வேண்டும் ஒவ்வொரு பாடலும், கல்லையும் உருக்கும் தன்மை கொண்டவை.
*
இறைவன் மிக மகிழ்ந்து அடியவரின் சூலை நோயைப் போக்கி, 'இனியக் கவி பாடிய உன் நாவன்மையால் இன்று முதல் நாவுக்கரசர் என்று அழைக்கப் படுவாய்' என்று அசரீரியாய்த் திருவாய் மலர்ந்து அருளினார். இறைவனைத் தலைவனாகவும் தன்னைத் தொண்டனாகவும் பாவித்து வழிபாடு செய்யும் 'தாச மார்கத்தின்' வழி நின்றவர் திருநாவுக்கரசர்.
*
தலங்கள் தோறும் சென்று தேனினும் இனிய தேவாரம் பாடியருளி, உழவாரத் தொண்டும் புரிந்துத் தொண்டின் இலக்கணமாகத் திகழ்ந்தார்.


கருத்துகள் இல்லை: