புதன், 22 ஜனவரி, 2014

SRI PARVATHAVARDHINI SAMETHA SRI RAMALINGESWARAR TEMPLE

இந்த ஆலயம், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ள மாரங்கியூர் எனும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள ஏராளமான கல்வெட்டுகள் மூலம் இவ்வாலயம் 10ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டது என்ற விவரம் தெரிய வருகிறது. புராண காலம் தொட்டே இத்தலம் சிறப்பாக விளங்கி வந்துள்ளது.

புராண வரலாறு:ஸ்ரீ ராமபிரான் வனவாசத்தில் ஸ்ரீ சீதா தேவியை இழந்து எங்கும் அலைந்து தேடி வரும் வேளையில் இவ்விடம் வந்து பெண்ணை ஆற்றின் கரையில் ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாத சுவாமியை ச்மரித்து ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார். அதோடு அமாவாசை அன்று பித்ரு தர்பணமும் செய்து வந்தார். இதை அறிந்து பின்நாளில் இத்தலத்தில் பித்ரு தர்ப்பணம் , வருட திதி கொடுப்பது விசேஷமாக கருதப்பட்டது. ராமேஸ்வரம் சென்று செய்யும் பலன்கள் இததலத்திலேயே கிட்டுகிறது என்பது திண்ணம். எனவே மாரங்கியூர் வந்து அமாவசை அன்றோ அல்லது வருட திதி அன்றோ மூதாதயருக்கான திவச தர்பணங்கள் செய்தால் பித்ருக்களின் ஆசி கிட்டுவது உண்மை. இவாலயத்தில் அம்பாள் ஸ்ரீ பர்வதவர்த்தினி, காமகோட்ட நாச்சியார் என்றும் அழைக்கப்படுகிறாள். இவ்வம்பிகையை வழிபட்டால் காஞ்சி காமாக்ஷி தேவியை வழிபட்ட பலன் வந்து சேருகிறது.

சங்க காலத்து தேவி:சங்க காலத்தில் ஸ்ரீ கொற்றவை தேவி வழிபாடு இருந்ததை சங்க இலக்கியங்கள் மூலம் அறிய முடிகிறது. எட்டு கரங்களில் ஆயுதம் ஏந்தி சிம்ம மற்றும் மான் வாகனத்துடன் காட்சி அளிக்கும் தேவியை போரில் வெற்றி அருளும் தேவியாக வழிபட்டுள்ளனர். இந்த தேவியின் வடிவம் இங்கிருப்பது இத்தலத்தின் தொன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

ஆலயத்தின் தொன்மை:ஆதியில் பல்லவ அரசர்களால் கட்டப்பட்டு, பிறகு ராஜராஜ சோழன் முதல் பிற்கால சோழ அரசர்கள்,பாண்டியர்கள் மற்றும் சிற்றரசர்கள் வரை திருப்பணிகள் செய்யப்பட்டு தற்போது முழுதும் சிதிலமாகி காண்போர் மனதை வருத்த வைக்கிறது. இக்கோயிலில் இருந்த விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன், பிக்ஷாடனார், சப்தகன்னி மாதாக்கள் மற்றும் பைரவர் திருஉருவ சிலைகள் இவ்வூர் மக்களால் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஜேஷ்டா தேவி(மூத்த தேவி) வழிபாடு:பல்லவர் காலத்தில் வழிபடபட்ட ஸ்ரீ ஜேஷ்டா தேவி திருவடிவம் இங்கு இருப்பது சிறப்பான அம்சம். இத்தேவியை வழிபடுவதினால் எல்லாவித செல்வங்களும் வந்து சேரும். முக்கியமாக செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் இத்தேவியை வழிபடுவது சிறப்பாகும். தாமரை மலரில் வீற்றிருக்கும் இத்தேவியை இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாதது ஓன்று.

கல்வெட்டுக்கள் ஏராளம்:இக்கோயிலில் உள்ள 27 கல்வெட்டுக்கள் தொல்பொருள் துறையினரால் 1936 ஆம் ஆண்டு படி எடுக்கப்பட்டு விவரங்கள் அறியப்பட்டன. அக்காலத்தில் ராஜேந்திரசிங்க நல்லூர் என்று இவ்வூர் அழைக்கப்பட்டதாகவும், கோயிலுக்கு வழங்கப்பட்ட தானங்கள் பற்றியும், கோயில் திருவிழா போன்றவைகளுக்கு கொடுக்கப்பட்ட தானங்கள் பற்றியும் அறிய முடிகிறது. மேலும் இதுதவிர ஸ்ரீ ரா மலிங்கேஸ்வரர் என்ற மூலவருக்கு திருவிராமீச்வரர் என்ற திருநாமமும் இருந்ததை அறிய முடிகிறது.

ஆலய திருப்பணி:இத்தகைய சிறப்பு வாய்ந்த பழமையான ஆலயம் முழுவதும் சிதிலமடைந்த நிலையில் மாரங்கியூர் மக்கள் ஓன்று சேர்ந்து தங்களால் முடிந்த அளவு உதவி செய்து திருப்பணி தொடக்கி உள்ளனர். இதற்காக அறக்கட்டளை ஒன்றை ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் அறக்கட்டளை என்ற பெயரில் நிறுவி உள்ளனர். இந்த தெய்வீக கைங்கர்யத்தில் பங்கு கொள்ளும் அடியவர்கள் பணமாகவோ காசோலையாகவோ கீழ் கண்ட இந்தியன் வங்கி கணக்கில் செலுத்தி விடலாம்.மேலும் விவரங்களுக்கு 9751966768-9159428289, 9843356682-9443538498 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். அவனருளாலே அவன்தாள் வணங்கி இந்த தெய்வீக பணி இடையூறு இன்றி விரைவில் நிறைவேற பணிவோமாக.

இந்தியன் வங்கி கணக்கு எண் 6184761697-ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் அறக்கட்டளை
(1737) T புதுப்பாளையம்
IFSC CODE IDIB000T134
(7 photos)

கருத்துகள் இல்லை: