புதன், 22 ஜனவரி, 2014

கொளத்தூர் சிவாஆலயம்

இறைவன் திருநாமம்:ஸ்ரீ சோமநாதேஸ்வரர்

இறைவி திருநாமம்:ஸ்ரீ அமுதாம்பிகை

ஆலய அமைவிடம்:குளத்தூர் கிராமம்

எப்படி செல்வது ?

வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் மாம்பாக்கம் என்ற ஊரில் உள்ள சந்திப்பில் தென்திசையில் செல்லும் சாலையில் 1.5 கி.மி. சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம். பேருந்து தடம் : தி.நகர் -கொளத்தூர் (M51V) தாம்பரம்-மாம்பாக்கம் (55K, 55T, 55V, 115, 555) மாம்பாக்கத்தில் இறங்கி 1.5 கி.மி. கால்நடையாக வரலாம்.

தல வரலாறு

ஸ்ரீ பிரும்ம தேவரின் மானச புத்திரனான தக்கன் அளித்த சாபத்தால் சந்திரன் எழில்குன்றி ஒரு கலையாக உருமாறினான். மனம் வருந்திய சந்திரன் தன பூரண அமுத கலையை அடைய வேண்டி அதனை அளிக்க வல்லவர் ஈசனே என உணர்ந்து இத்தலத்தில் சிவபெருமான் லிங்க திருமேனியை பிரதிஷ்டை செய்து அருகிலேயே சந்திர புஷ்கரணி என்ற குளம் அமைத்து அதில் நீராடி இறைவனை மனமுருகி பூஜித்து வந்தான். இதனால் சிவபெருமான் மகிழ்ந்து, இன்றுமுதல் உன் கலைகள் வளர்ந்தும் தேய்ந்தும் மாறி மாறி தோன்றும் அழியா நிலையினை பெறுவாய் என்ற வரம் தந்தருளி, ஒருகலைசந்திரனை தன சிரசில் சூடிக்கொண்டு பிறைசூடி என்ற திருநாமத்தையும் பெற்றார். சோமனுக்கு அருள் செய்ததால் சோமநாதேஸ்வரர் என்ற திருநாமம் பெற்றார்.

தேவ அசுரர்கள் அமுதம் வேண்டி மந்திர கிரியை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பினை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைய, வாசுகி கக்கிய விஷத்தின் வெம்மை தாங்காது தேவர்களும் அசுரர்களும் சிவபெருமானை தஞ்சம் அடைந்தனர். ஈசனும் கருணை கொண்டு ஆலகால விஷத்தினை உண்டு எல்லோரையும் காத்தருளினார். அம்பிகை ஈசன் கண்டத்தில் கை வைத்து விஷம் உள்ளே செல்லாமல் கண்டத்திலேயே நிறுத்தி விஷத்தையும் அமுதமாக்கி அமுதாம்பிகை என்ற திருநாமம் பெற்றாள்.

அறுபத்திமூவரில் ஒருவராக விளங்கிய திரு கலிய நாயனார் திருமரபில் வந்த திரு ராஜு செட்டியார் என்பவர் 1917ஆம் ஆண்டு முட்புதர்களுக்கு இடையில் சிதிலமடைந்த ஒரு கோயிலில் சிவலிங்கம் மற்றும் அம்பாள் திருவடிவமும் இருப்பதைக்கண்டு ,. இடத்தை சுத்தம் செய்து தினந்தோறும் பூஜை செய்து வரலானார். அருகில் உள்ள பழைய கிணற்றை தூர்வாறி ஆழப்படுத்த தொடங்கிய போது, நந்தி தேவர், விநாயகர், முருகன், வள்ளி, தேவசேனா, துர்கை, சண்டிகேஸ்வரர், மற்றும் சாஸ்தா திருஉருவ சிலைகள் கிடைத்தன.

திரு ராஜு செட்டியாரின் அருமை நண்பராக விளங்கிய ஸ்ரீ கி.வா. ஜகந்நாதன் அவர்கள் திருப்பணி குழு தலைவராக இருந்து 1957ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.கிழக்கு பார்த்த சுவாமி சன்னதி. அம்பாள் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. கோஷ்டத்தில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, துர்கை சன்னதிகள். புதிதாக நவக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. க்ஷேத்ர பாலபைரவராகிய மகா சாஸ்தா மிக பழமையான பெரிய கோயில்களில் இருப்பது வழக்கம். மகா சாஸ்தா திருவடிவம் இங்கிருப்பது ஆலயத்தின் தொன்மைக்கு சான்றாக விளங்குகிறது. கிணற்றுக்கு அருகில் இருந்த கல்வெட்டின் மூலம் இக்கோயிலுக்கு அளிக்கப்பட தானங்கள் பற்றிய செய்திகள் உள்ளன.

திரு கி.வா. ஜகந்நாதன் அவர்கள் ஸ்ரீ அமுதாம்பிகை பேரில் பல பாடல்கள் பாடி உள்ளார். அவரது சீடரான திரு மயிலம் சிவசுப்பிரமணியன் அவர்கள் அமுதாம்பிகை பதிகம் என்ற நூலை படைத்துள்ளார்.

பரிகார தலம்

பிரதி வெள்ளி கிழமை நாகபிரதக்ஷிணம் நடைபெறுகிறது. திருமண தடை உள்ளவர்கள் நாகபிரதக்ஷிணம் செய்து இத்தலத்தில் வழிபட்டால் திருமணம் கூடி வருகிறது. பௌர்ணமி பூஜை, சோமவார பூஜை இங்கு விசேஷமாக நடைபெறுகிறது. பூர்வ ஜன்ம தீவினையால் ஏற்படும் கொடிய நோய்கள் தீர பிரதி திங்கள்கிழமை வந்து ஸ்ரீ சோமநாதேஸ்வரரையும் ஸ்ரீ அமுதாம்பிகை அம்மையையும் அர்ச்சித்து வழிபாட்டு வந்தால், நல்ல பலன் ஏற்படும்.

இக்கோயில் திருப்பணி தொடங்கப்பட்டு ஸ்ரீ காஞ்சி மடத்து ஆஸ்தான புலவர் மகாவித்வான் வே. சிவசுப்பிரமணியன் அவர்களை தலைவராக கொண்டு ஸ்ரீ சோமநாதேஸ்வரர் திருப்பணிக்கமிட்டி ஒன்றை நிறுவி நடைபெற்று வருகிறது. இந்த அரிய ஆன்மீக தொண்டில் பங்குகொள்ள விரும்பும் அன்பர்கள் பணமாகவோ, காசோலையாகவோ கீழ்கண்ட விலாசத்துக்கு அனுப்பலாம்.

திரு ஜெயவேல், பொருளாளர், ஸ்ரீ சோமநாதேஸ்வரர் திருப்பணிக்கமிட்டி, 6/20,
சிவராமன் தெரு, மந்தைவெளி, சென்னை - 600 028. தொலைபேசி 9841081482,
044 249306910 (Cheque in favour of ARULMIGU AMUDHAMBIGAI WITH SRI SOMANATHESWARAR TEMPLE) OR REMIT THROUGH ONLINE WITH DHANALAKSHMI BANK LTD. A/C NO. 0068001000047299.
(6 photos)

கருத்துகள் இல்லை: