வியாழன், 23 ஜனவரி, 2014

கோவிந்த தீட்சிதரும் மகாமகக் குளமும்!

கும்பகோணம் என்றால் ஆதி கும்பேசுவரர் ஆலயம், மகாமகம் குளம் தவிர இன்னொரு பிரசித்தி பெற்ற நிறுவனம் ராஜா காவ்ய வேத பாடசாலை, இதை நிறுவியவர் கோவிந்த தீட்சிதர் என்ற மகான். இந்தியாவில் மிகப் பழமையானதாகக் கருதப்படுகின்ற இந்த வேதபாடசாலை 1542 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பெருமை உடையது. மேலும் ரிக், யஜுர் மற்றும் சாம என்ற மூன்று வேதங்களையும் குருகுல முறையில் கற்றுத் தருகின்ற ஒரே வேத பாடசாலை இது. அந்தக் காலத்தில் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீட்சிதர், ஐயன் என்ற பெயராலேயே அறியப்பட்டார். இந்த ஐயன் என்ற பட்டத்தை நிலைநிறுத்தும் வகையில் ஐயன் தெரு, ஐயன் குளம், பசுபதி கோவிலை அடுத்த ஐயம்பேட்டை, திருவாரூருக்கு மேற்கே உள்ள மணக்கால் ஐயம் பேட்டை போன்றவை அமைந்துள்ளன.

கோவிந்த தீட்சிதர் தஞ்சை நாயக்க மன்னர்கள் மூவருக்கு, முதலமைச்சராக இருந்த பெருமையை உடையவர். அச்சுதப்ப நாயக்க மன்னரின் முதலமைச்சராக அவர் இருந்த போது, அரசன் தன் எடைக்கு நிகரான தங்கத்தை துலாபாரமாக நிறுத்துக் கொடுக்க, அதைக் கொண்ட தீட்சிதர் மகாமகக் குளத்தைச் செப்பனிட்டார். குளக்கரையில் உள்ள பதினாறு ஆலயங்களையும் சீர் செய்து அவற்றிற்கு விமானங்களை அமைத்தார். குளத்தின் நான்கு புறங்களிலும் விரிவான படிக்கட்டுகளை அமைத்தார்.

ஆதிகும்பேசுவரர் கோவில் திருப்பணியை முடித்து, நூதன ராஜகோபுரத்தை நிறுவி குடமுழுக்கும் செய்தார் தீட்சிதர். இந்தக் குடமுழுக்கு நாயக்க மன்னரான சேவப்ப நாயக்கர் முன்னிலையில் நடைபெற்றது. மேலும், தர்ம சாஸ்திரங்களில் அனைத்து மகா தானங்களையும் தீட்சிதர் செய்ததன் நினைவாக உள்ள மகாதானபுரம், திருவிடைமருதூர், மாயூரம், திருவெண்காடு இங்கெல்லாம் உள்ள மகாதானத் தெருக்கள் இவர் நினைவைப் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. திருவையாறு, தஞ்சை, வெண்ணாற்றங்கரை, திருவலஞ்சுழி, கும்பகோணம், திருவிடைமருதூர் போன்ற ஊர்களில் உள்ள ஜோடியான விமானங்களைக் கொண்ட புஷ்ப மண்டபங்களை நிறுவியவரும் இவர்தான். திருடைமருதூர் புஷ்யோத்ஸவ வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி ரதம் போன்றவையும் இவரது திருப்பணிகளே !சோழர்களுக்குப் பின்னர், ஆலயங்களைத் திருத்தி அமைத்து மறுமலர்ச்சியை உருவாக்கிய மகான் தீட்சிதர் அவர்கள்.

கும்பகோணம் ÷க்ஷத்திர மகாத்மியத்தின் கடைசி சுலோகம்,

கோவிந்த தீட்சிதோ நாம
மகாநாஸீத் கலௌõ யுகே

தேன ÷ஷாடசலிங்காணி
ஸ்தாபிதானி சரோவரே.

என்று இவரைப் போற்றுகிறது. கலியுகத்தில், அனைத்துப் பாவங்களையும் தீர்க்கும் மகாமகக் குளத்தின் கரையில் 16 கோவில்களை நிறுவிய மகான் இவர் என்று இந்த சுலோகம் குறிப்பிடுகிறது. கோவிந்த தீட்சிதர் மற்றும் அவருடைய மனைவி நாகம்மாள் சிலைகள் ஆதிகும்பேசுவரர் ஆலயத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டன.

கருத்துகள் இல்லை: