வியாழன், 23 ஜனவரி, 2014

பலவித பிரார்த்தனைகளும்.. பலனும்!

திருமணம் கைகூட...: திருக்கண்ணமங்கை என்ற திருத்தலத்துக்கு கிருஷ்ண மங்கள ÷க்ஷத்திரம் என்றும் பெயருண்டு. இங்குள்ள கோயில் மதிற்சுவரில் பல வருடங்களாக ஒரு தேன்கூடு உள்ளது. இந்தத் தேனீக்கள் யாரையும் கடிப்பதில்லை. பெருமாளின் திருமணக் கோலத்தைக் காணவந்த தேவர்கள், அவரது திருமணக் கோலத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் தேனீக்கள் உருவில் காட்சி தருகிறார்கள் என்பது ஐதீகம். திருமணம் கைகூட, வழிபட வேண்டிய சிறப்புத்தலம் இது!

குருவருள் பெற...: நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ளது தேவூர். இங்குள்ளது தேவ குருநாத சுவாமி கோயில். இது ஆலங்குடி, திட்டை கோயில்களுக்கு இணையாகக் கருதப்படுகிறது. ஜாதகத்தில் குருபலன் இல்லாதவர்கள் ஜென்மகுரு, விரய குரு பாதிப்பு உள்ளவர்கள் இந்த கோயிலுக்குச் சென்று தரிசித்தால் ஒப்பற்ற பலனையும் அருளையும் பெறலாம்.

தாரதோஷம் அகல...: நாகை மாவட்டம் குத்தாலத்துக்கு வடகிழக்கே மூன்று கி.மீ. தொலைவிலுள்ளது வேள்விக்குடி. ஜாதகப்படி இரு தார தோஷ அமைப்புள்ளவர்கள் இங்கு வந்து, இங்குள்ள பெண் கன்னிச் சிலைக்கு மங்கல நாண் அணிவித்து சிலையுடன் கோயிலை வலம் வந்து அச்சிலையை கோயிலிலேயே விட்டுச் செல்கின்றனர். இது முதல் தாரக் கணக்கு என்று கருதப்படுவதால், இரண்டாவதாக நடைபெறும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைவது நிஜம் என்கின்றனர்.

செயல்கள் வெற்றி பெற...: நாகை மாவட்டம், சிக்கல் தலத்திலிருந்து சுமார் நான்கு கி.மீ. தொலைவிலுள்ள ஆவராணியில் ஆனந்த நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இங்குள்ள அனுமன் விசேஷமானவர். இவருக்கு வியாழன், சனி மற்றும் அமாவாசை ஆகிய தினங்களில் கட்டமுது படைத்து வழிபடப்படுகிறது. அதாவது, வஸ்திரத்தில் கட்டமுதை வைத்து (தயிர்சாதம்) அனுமனின் திருவயிற்றில் அதை வைத்துக் கட்டி மனதில் வேண்டிக் கொண்டால், நினைத்த காரியங்கள் யாவும் விரைவில் நடந்தேறும் என்பது இங்கு நிலவும் நம்பிக்கை.

கருத்துகள் இல்லை: