செவ்வாய், 22 அக்டோபர், 2013

கடவுளுக்கு உருவம் உண்டா?

ஒரு சமயம் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்த ஒரு பக்தர், கடவுளுக்கு உருவம் உண்டா? என்று கேட்டார். அதற்கு ராமகிருஷ்ணர், இறைவன் உருவம் உடையவர், உருவம் அற்றவர்-இந்த இரண்டும் அவரே! அதாவது பனிக்கட்டியையும், தண்ணீரையும் போல என்று பதில் கூறினார். இறைவன் என்பவன் முடிவில்லாமல் பரந்து கிடக்கும் மகா சமுத்திரத்தைப் போன்றவன். சமுத்திரம் அதீத குளிர்ச்சியின் காரணமாக சில இடங்களில் உறைந்திருக்கும். அவ்விதம் உறைந்த பனிக் கட்டிகள் பலவித வடிவங்களில் இருக்கும். ஆனால் சிறிது வெப்பம் அதிகரித்ததும் பனி உருகி நீரோடு நீராகக் கலந்து விடும். பனிக்கட்டியும் நீரும் ஒரே சமுத்திரத்தைச் சேர்ந்தவைதான். இறைவனும் அப்படித்தான். பக்தியின் குளிர்ச்சியால் அவன் பக்தர்களுக்கு தகுந்தாற்போல பலவேறு வடிவங்களில் தோன்றுகிறான். ஞானம் என்ற வெம்மை செயல்பட ஆரம்பித்ததும், அவனும் வடிவமற்றவானாகி விடுகிறான். இவ்வாறாக, சாதாரண பக்தனுக்கு வடிவம் தேவைப்படுகிறது. ஆனால் அனைத்தும் அறிந்த ஞானிக்கு வடிவம் தேவைப்படுவதில்லை.

கருத்துகள் இல்லை: