செவ்வாய், 8 அக்டோபர், 2013

படலம் 14 : சித்திரை மாத வஸந்தோத்ஸவ முறை

பதினான்காம் படலத்தில் சித்திரை மாதத்தில் செய்யக் கூடிய வஸந்தோத்ஸவ விதி கூறப்படுகிறது. முதலில் சித்திரை மாசத்தில் வஸந்தோத்ஸவம் செய்ய வேண்டும். அது இஷ்டத்தை (பலத்தை) கொடுக்க கூடியதாகும் என்று சூசிக்கப்படுகிறது. அதில் முதலில் ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும். சூரியன் அஸ்தமன சமயத்தில் ஸ்வாமியை வலம் வரச்செய்து ஸர்வாலங்கார ஸஹிதமாக கிராம பிரதட்சிண பூர்வம் நந்தவனத்தை அடையவும் என்று நந்தவன அலங்காரவர்ணனை கூறப்படுகிறது. நந்தவனத்திலும் செய்ய வேண்டிய உத்ஸவ விதி நிரூபணம் அங்கே வணங்குவதற்காக வஸந்தனும், மன்மதனும் வந்து இருப்பதாக பாவித்து அவ்விருவர்களுக்கும் பூஜை செய்யவேண்டும் என கூறி அந்த பூஜாவிதி வர்ணிக்கப்படுகிறது. பிறகு நாட்யம் வாத்யம் இவைகளால் திவ்யமான பாட்டுகளாலும் காலத்தை போக்கி தேவாலயத்தை அடைந்து ஸ்நபனம் செய்து விசேஷ பூஜை செய்க என்று வஸந்தோத்ஸவத்தில் பூஜை விவரம் கூறப்படுகிறது. உத்ஸவம் செய்பவனுக்கு எல்லா விருப்ப பூர்த்தியும் உத்ஸவ பலனாக ஆகும் என கூறப்படுகிறது. இவ்வாறாக 14 வது படல கருத்து தொகுப்பாகும்.

1. இந்த மாதமான சித்திரை மாதத்தில் இஷ்டமான வஸந்தோத்ஸவம் விதிக்கப்பட்டது. முதல் நாள் காப்புக்கட்டி பலவிதமான மரங்களோடு கூடியதும்

2. பலவிதமான மாலைகளோடு கூடியதும் பல விதமான பழங்களோடு கூடியதும், பலவிதமான வாத்யங்களோடும் பலவிதமான பாட்டுக்களோடும் கூடிய

3. பலவிதமான நடனங்களோடும் கூடிய பலவித வாகனங்களோடும் கூடிய பலவித மணத்தோடும் கூடிய பலபூக்களை வாரி இறைக்கப்பட்டதும்

4. கொடிகளோடு கூடியதும் ஜ்வாலையோடு கூடிய தீபங்களால் பிரகாசிப்பதும் ஆஸ்தான மண்டபத்தோடு கூடியும் ஜலக்ரீடா செய்ய வேண்டிய இடத்துடன் கூடியதுமான

5. ஸகலவிதமான அலங்காரத்தோடு கூடிய தேவர்களின் உத்யானவனத்திற்கு கிராமத்தை வலம் வந்து மாலை வேளையில் ஈசனை சேர்ப்பிக்க வேண்டும்.

6. விசேஷமாக ஈச்வரனை அதில் பிரதட்சிண கிரமமாக செய்து சந்தனம், தூபம், மாலைகள் முதலிய உபசாரங்களால் பூசிக்கவேண்டும்.

7. புஷ்ப பாணத்தையுடைய வஸந்தனை தர்சனம் செய்ய வந்திருப்பதாக பாவித்து ஈச்வரனுடைய இடது வலது பக்கம் அனேகவிதமான வாசனை யோடு கூடியதாக முறையோடு

8. தங்கமயமான வஸ்த்திரங்களை உடையவராக அவ்விருவரையும் பூஜிக்கவேண்டும். இரண்டாவது ஸ்தண்டிலத்தில் எல்லாவிதமான புஷ்பங்களோடு கூடியும்

9. நைவேத்யமான பாயஸத்தை வஸ்த்திரத்தினால் மூடி நிவேதனம் செய்யவும் முடிவில் தாம்பூலத்தை நிவேதித்து விசேஷமாக அவர்களை சந்தோஷிக்க செய்ய வேண்டும்.

10. நாட்டியம் இவைகளோடு தேவகானத்தினால் பூசை முடித்து மறுபடி ஈச்வரனை தேவாலயத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

11. சிவனை ஸ்நபனம் செய்து விசேஷமாக பூசை செய்யவேண்டும். இவ்வாறு விசேஷமாக பூசித்து சிரத்தையுடன் சிவாராதனம் செய்யவேண்டும்.

12. இந்த பிரகாரம் எந்த மனிதன் செய்கின்றானோ அவன் எல்லா நன்மைகளையும் இஷ்டங்களையும் அடைகின்றான்.

இவ்வாறு சித்திரை மாத வஸந்தோத்ஸவ முறையைக் கூறும் பதினான்காவது படலமாகும்.

கருத்துகள் இல்லை: