செவ்வாய், 10 செப்டம்பர், 2013

இறைவனைப்பற்றி நினைப்பதுண்டா நீங்கள்?

மனிதன், தூங்கும் நேரம் தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் எதைப் பற்றியாவது சிந்தனை செய்து கொண்டோ, யோசித்துக் கொண்டோ தான் இருக்கிறான். ஆனால், கடவுளைப் பற்றி நினைக்கத்தான் நேரமில்லை என்கிறான். என்ன சார், இன்னிக்கு பிரதோஷமாச்சே... கோவிலுக்குப் போகலையா... என்று கேட்டால், அப்படியா... இன்னிக்கு பிரதோஷமா... எங்கே சார் நேரமிருக்கு... இங்கேயே வேலை சரியா இருக்கு... என்று பதில் சொல்லி, டிவி பார்க்க உட்கார்ந்து விடுகிறார். ஆனால், பகவானோ, என்னை வழிபடு, என்னை தியானம் செய். என் கோவிலுக்கு வா... என்று யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அவனவனுக்கு என்ன பிராப்தமோ அதன்படி நடக்கட்டும் என்று விட்டு விடுகிறார். நான் உன்னை விடமாட் டேன்... என்று, எந்த பக்தன் அவரை பிடித்துக் கொள்கிறானோ, அவனை கை விடாமல் காப்பாற்றுகிறார். நாம் ஒவ்வொரு நாளும், எவ்வளவோ விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள் கிறோம்.  
நேரப்படி எத்தனையோ காரியங்களை செய்கிறோம். ஞாபகமாக காலை, 6:00 மணிக்கு காபி சாப்பிடுகிறோம். பிறகு டிபன் 9:00 மணியானதும் அலுவலகத்துக்குப் போக வேண்டும். எதற்காக? சம்பளம் பெற்று குடும்பத்தைக் காப்பாற்ற. வீட்டில் யாருக்காவது உடல் நலமில்லை என்றால், வைத்தியரிடம் ஓடுகிறோம். அவர் கொடுக்கும் மருந்தை வாங்கி வந்து, நேரம் தவறாமல் கொடுக்கிறோம். அப்போது, அலுவலகம் போவதை முக்கியமாக கொள்வதில்லை. நோயாளியை குணப்படுத்துவதே முக்கியமாக கருதுகிறோம். இதுவரையில் அலுவலகம் முக்கியம். இப்போது வீட்டில் உள்ளோர் முக்கியம். இவைகளை தவிர, வேறு பல வேலைகளும் உள்ளது. அதற்காக நேரங்களை ஒதுக்கி, அவைகளை கவனிக்கிறோம். அன்றைய பொழுது போய் விடுகிறது; இரவும் வந்து விடுகிறது. அப்பாடா...இன்னிக்கு ஒரே அலைச்சல்... களைப்பாயிருக்கிறது... என்று சொல்லி, சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்று விடுகிறோம். இவ்வளவு நேரம் செலவிட்ட போதும், இவ்வளவு விஷயங்களை ஞாபகம் வைத்து கொண்ட போதும், கடவுள் ஞாபகம் மட்டும் வருவதில்லை; அதற்கான நேரமும் கிடைப்பதில்லை. 
ஒருவன், ஒரு ஊருக்குப் போக வேண்டியிருக்கிறது. ஞாபகமாக, 10 நாள் முந்தியே டிக்கெட் ரிசர்வ் செய்து, அதை பத்திரமாக வைத்துக் கொள்கிறான். என்ன தேதி, எந்த ரயில், எத்தனை மணிக்கு என்பதையும், ரயிலுக்குப் புறப்படும் முன், என்னென்ன பொருள், துணிமணிகள், எவ்வளவு பணம் எடுத்துக் கொள்வது என்பது பற்றியெல்லாம் முன்கூட்டியே எடுத்து வைத்து, தயார் செய்து கொள்கிறான். சரியான நேரத்துக்கு ரயில்வே ஸ்டேஷனை அடைவதிலேயே. கவனம் முழுவதும் இருக்கிறது. ஆனால், சிறிது நேரமாவது கடவுளை நினைக்கவோ, அதற்கு நேரம் ஒதுக்கவோ முடியவில்லை. ஸ்டேஷனுக்குப் போகும் வழியில், ஒரு கோவில் இருந்தால் கூட, உள்ளே போய் சுவாமி தரிசனம் செய்ய நேரமில்லை என்று, வாசலிலிருந்தே ஒரு கையால் அவசர கும்பிடு போட்டு விட்டுப் போகிறான். இந்த உலகில் நாம் பிறந்து, நல்ல நிலைமைக்கு வந்து சுகமாக இருப்பதே, அவனருளால் தான் என்பதே மறந்து விடுகிறது! உலக வாழ்க்கை என்பது எவ்வளவு நாட்கள் என்பது நிச்சயமில்லை. எப்படி எல்லாமோ நாட்களை கழிக் கிறோம். நமக்கு என்று ஒரு நற்கதியை தேடிக்கொள்ள வேண்டாமா? இது எப்படி கிடைக்கும்? கடவுள் ஞாபகமும், கடவுள் வழிபாடும் இருந்தால் தான் கிடைக்கும். ஈசனை நினைக்க பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்!

கருத்துகள் இல்லை: