வெள்ளி, 1 ஜனவரி, 2021

மயில் தத்துவம்

மயில் தத்துவம்


முருகனுக்கு வாகனமாக மயிலை வைத்திருப்பதற்கு என்ன தத்துவம் பின்னனியாக இருக்கிறது ? அந்த மயில், பாம்பை மிதிப்பது போல வைத்திருப்பதன் தத்துவம் என்ன ?

மயிலின் முக்கியமான பண்பு அதன் அழகான தோற்றமும், ஒயிலாக ஆடும் நடனமும்தான். ஆனால் அவை கவர்ச்சியாகத் தோன்றுவதற்கு நீலமயமான வண்ணம்தான் காரணமாக இருக்கிறது. அது, தான் அழகாக ஆடுவதாக நினைக்கும்போது அந்தக் கர்வத்தை அடக்க ஒருவர் அதன் மீது அமர்ந்து கட்டுப்படுத்த வேண்டி இருக்கிறது.

மனிதன் எப்போதும் தன்னைப் பற்றியே எண்ணிக் கர்வப்படுகிறான். தனக்கு அழகான உடம்பு இருப்பதாக நினைக்கிறான். தன்னால் நினைத்துப் திட்டமிடக் கூடிய மனம் இருப்பதாக எண்ணுகிறான். கற்பனை சக்தி மிகுந்த சிந்தனையால் எதையும் திறமையுடன் சாதிக்க முடியும் என்று கருதுகிறான். இதில் ஊறிப்போகும் மனிதனால் தனக்குள் ஆண்டவன் இருப்பதை உணரமுடிவதில்லை. இந்த நிலையிலிருந்து அவன் மாற வேண்டும். அவனுள் இருக்கும் ஆத்மாவே அவனுடைய உண்மையான வடிவம் என்பதை அவன் தெரிந்து கொள்ள வேண்டும். கடவுள் அந்தப் பண்பட்ட மனத்தை வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இதையே கர்வத்துடன் ஆடும் மயிலின் மீது அமரும் சுப்பிரமணியர் நமக்கு உணர்த்துகிறார்.

தவிர, ஆசன வகைகளில் ஒன்றான மயூராசனத்தின் சிறப்பையும் அது உணர்த்துவதாக உள்ளது. மயூராசனம் என்பது கைகளின் வழியே உடலைத் தாங்கும் நிலை. இந்த ஆசனம் உள்ளுறுப்புகளை பலப்படுத்துவதோடு, குண்டலினி சக்தி விழிப்படையவும் உதவியாக இருக்கிறது. குண்டலினி விழிப்பால் தன்னைப் பற்றி அறிவு மிகைப்படுகிறது. தன்னைப் பற்றிய கவனம் அதிகமாகிறது. செயல்களில் தெளிவும் பேச்சில் நிதானமும் ஏற்படும். மயிலாசனத்தின் செய்தி இதுவே.

மயிலுக்கும் - பாம்புக்கும் பகைமை உண்டு. மயில் பாம்பைக் கொல்லுவதில்லை. ஆனால் மிதித்து அடக்கி வைக்கிறது. அதைப்போல உலக பந்தங்கள், ஆசைகள் எல்லாமே நமக்கு ஓரளவேனும் வாழ்க்கையில் கூடவே இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் நாம் ஆன்மீக முன்னேற்றம் அடைய வேண்டுமானால், இவற்றை முழுவதுமாக அழிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் அடக்கி வைக்க வேண்டும். இதையே மயில் காலடியில் மிதித்து அடக்கிவைக்கும் பாம்பு நமக்கு உணர்த்துகிறது.


கருத்துகள் இல்லை: