வெள்ளி, 25 டிசம்பர், 2020

அருள் மிகு வஜ்ரேஸ்வரி கோவில்


அருள் மிகு வஜ்ரேஸ்வரி கோவில்
 
மூலவர்:வஜ்ரேஸ்வரி
பழமை:2000 வருடங்களுக்கு முன்
ஊர்:நாகர்காட்
மாவட்டம்:காங்ரா
மாநிலம்:ஹிமாச்சல பிரதேசம்
 
திருவிழா:நவராத்திரி, ராமநவமி, மகர சங்கராந்தி
  

சிறப்பு:அம்மனின் 51 சக்திபீடங்களில் இதுவும் ஒன்று.   
       
திறக்கும் நேரம்:காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.   
     
முகவரி:அருள்மிகு காங்க்ரா ஸ்ரீ வஜ்ரேஸ்வரி திருக்கோயில், நாகர்காட், காங்க்ரா மாவட்டம், இமாசலப் பிரதேசம்.போன்:+91 01892-265073  
      
பொது தகவல்:கஜினி முகம்மது இத்திருக்கோயில் மீது 5 முறை படையெடுத்ததாக வரலாறு கூறுகிறது. 1905 ஆம் ஆண்டு பெரிய பூகம்பத்தால் இக்கோயில் தாக்கப்பட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.   
       
பிரார்த்தனை:பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேற இங்கு வழிபாடு செய்கின்றனர்.
 
நேர்த்திக்கடன்:மகர சங்கராந்தி அன்று அம்மனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுவது சிறப்பு.  
      
தலபெருமை:இங்கு அருள்பாலிக்கும் வஜ்ரேஸ்வரி அம்மனை, வஜ்ராபாய், வஜ்ரயோகினி என்றும் அழைக்கின்றனர். அம்பாள் பார்வதி தேவியாகக் காட்சி அளிக்கிறாள். முகத்தில் தைரியம், ஒரு தீர்மானம் பிரகாசிக்கிறது. அதைப் பார்த்தவுடன், அதன் தைரியம் வஜ்ரம் போன்று காணப்படுகிறதால் வஜ்ரேஸ்வரி என்று பெயர்.

நவராத்திரி விழா, ஸ்ரீராம நவமி போன்றவை இங்கு மிகவும் விசேஷம். மற்றும் மகர சங்கராந்தி விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மஹிஷாசுரனுடன் போரிடும் போது, தேவிக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டன. அதற்கு வெண்ணெய் தடவி அம்பாள் இந்த நாகர்காடில் இருந்தாராம். பிறகு நலமாயிற்று. அன்று முதல் அம்பாளுக்கு மகரசங்கராந்தி அன்று வெண்ணெய் அபிஷேகம். ஒரு வாரம் இந்த விழாவினைக் கொண்டாடுகிறார்கள்.   
       
தல வரலாறு:பல ஆண்டுகளுக்கு முன் கலிகாலா அல்லது கலிகுட் என்ற பெயருடைய அரசன், ரிஷிகள், முனிவர்கள் உட்பட எல்லோரையும் துன்புறுத்தி வந்தான். அவன் தொல்லை எல்லை மீறவே,வசிஷ்ட மாமுனிவரின் தலைமையில் சண்டியாகம் செய்து அம்பாளை வேண்டினர். இந்த யாகத்துக்கு இந்திரலோக அதிபதியான இந்திரனுக்கு அழைப்பு இல்லை. மிகவும் கோபப்பட்ட இந்திரன், வஜ்ராயுதத்தை ஆக்ரோஷத்துடன் யாக குண்டம் மீது விட்டெறிந்தான். வஜ்ராயுதம் பல சுக்கல்களாக உடைந்தது. தேவர்களும் ரிஷிகளும் அம்பாளே எங்களைக் காப்பாற்றுங்கள் என ஓலமிட்டனர். அப்போழுது பிரமிப்பூட்டும் மின்னல்-ஒளி, அங்கு அம்சத்துடன் அம்பாள் தோன்றினாள். உடனே அந்த வஜ்ராயுத துண்டுகள் எல்லாவற்றையும் அம்பாள் விழுங்கிவிட்டாள். அசுரர்களையும் கொன்றாள். அப்பொழுது இந்த இடத்திலேயே வஜ்ரேஸ்வரி என்ற திருநாமத்துடன் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டினர் என்றொரு வரலாறு.

மற்றுமொரு கதையும் உண்டு.

தடைபடாமல் இந்த சண்டியாகம் நடக்க, இந்திரன் மற்றும் தேவர்கள் யாவரும் பார்வதி தேவியை மனமுருக வேண்டினர். தேவி, தாங்கள் அந்த கலிகால அசுரனைக் கொன்று எங்களைக் காப்பாற்றுங்கள் என வேண்டினர். அதற்கு மனம் இசைந்த அம்பாள், தக்க தருணம் நோக்கி கலிகாலனுடன் போரிட, அவனது ஆயுதங்கள் எல்லாவற்றையும் விழுங்கிவிட்டாள். கடைசியில் இந்திரன் அந்த அசுரன் மீது, தனது வஜ்ராயுதத்தை கோபத்துடன் வீசினான். அது பல துண்டுகளாகப் போக, அதிலிருந்து வந்த அம்மன் அந்த அசுரனைக் கொன்றாள். தேவர்கள் மிகவும் ஆனந்தமடைந்து வஜ்ரேஸ்வரி என பெயரிட்டு, இங்குள்ள கோவிலை கட்டினர் என்றும் கூறுகின்றனர்.

மற்றுமொரு புராணக்கதை.

தனது தந்தை தட்சன் நடத்தும் யாகத்துக்குச் சென்றாள் பார்வதி. அந்த யாகத்தில் தன்னை அர்பணம் செய்துகொள்ள, முக்கண்ணன் அங்கு மிகவும் கோபமடைந்து ருத்ரதாண்டவமாடினார். திருமால் தனது சக்ர ஆயுதத்தால் அன்னையின் தேகத்தை ஒவ்வொரு பாகமாக வெட்டி வீசினார். அன்னையின் வலது மார்பகம் இந்த இடத்தில் விழுந்ததால் இது சக்தி பீடமாக விளங்குகிறது. மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் கனவில் துர்காதேவியாக தோன்றி தனக்கு ஒரு கோயிலை கட்டித் தருமாறு சொன்னாள் அன்னை. அதன்படியே இத்திருக்கோயில் கட்டப்பட்டது என்கிறார்கள். 

கருத்துகள் இல்லை: