செவ்வாய், 10 நவம்பர், 2020

திபாவளி ஸ்ரீ ரங்கம்

திபாவளி @  ஸ்ரீ ரங்கம் - பூலோக வைகுண்டம் என்று போற்றப் படும் ஸ்ரீரங்கம் திருத்தலம் நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது.

இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் பெரியாழ்வாரின் மாப்பிள்ளை என்று புராணம் கூறுகிறது. ஒவ்வொரு வருடமும் ஸ்ரீரங்கநாதர் தீபாவளி கொண்டாடும் விதம் அலாதியானது. தீபாவளியை முன்னிட்டு முதல் நாள் மாலை எண்ணெய் அலங்காரம் மேளதாளத்தோடு பெரிய பெருமாளுக்கு கண்டருளப் பண்ணு வார்கள். மேலும் கோவில் சிப்பந்திகளுக்கு நல்லெண்ணெய் சீகைக்காய் தூள் ஆகியவற்றை பெருமாள் சார்பாக வழங்குவார்கள்.

தீபாவளிக்கு முந்தைய இரவு உற்சவர் நம்பெருமாளுக்கும் எண்ணெய் அலங்காரம் நடைபெறும். அதைத் தொடர்ந்து கோவிலில் அருள் பாலிக்கும் ஆழ்வார் ஆச்சாரியர் சந்நிதி களுக்கு நல்லெண்ணெய் சீகைக்காய்த் தூள் விரலிமஞ்சள் ஆகியவை பெருமாள் சார்பாக அந்தந்த சந்நிதிகளில் உள்ள அர்ச்சகர் மூலம் அனுப்பி வைக்கப்படும். தீபாவளியன்று அதிகாலை தாயார் மற்றும் ஆழ்வார் ஆச்சாரியர் சந்நிதிகளில் எண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டு திருமஞ்சனம் நடைபெறும். அதைத் தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவர்களுக்குப் புத்தாடை மலர் மாலை அணிவித்து அலங்காரம் செய்வார்கள். அலங்காரம் முடிந்ததும் ஆழ்வார்கள் ஆச்சாரியர்களின் உற்சவமூர்த்திகள் அனைவரும் புறப்பட்டு பெரிய சந்நிதிக்குக் கிழக்கில் உள்ள கிளிமண்டபத்துக்கு வந்து பெருமாள் வருகைக்காகக் காத்திருப்பார்கள்.

அப்போது பெருமாளின் மாமனார்- பெரியாழ்வாரும் மாப்பிள்ளை ஸ்ரீரங்கநாதருக்காக தீபாவளி சீர் தருவதற்காகக் காத்திருப்பார். பெரிய சந்நிதியில் அருள் புரியும் உற்சவர் நம்பெருமாள் காலை பத்து மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அங்கு அவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றதும் சிறப்பு அலங்காரத் துடன் பக்தர்களுக்கு அருள் புரிவார். இந்த நிகழ்ச்சி எல்லாம் முடிந்த பின் ஸ்ரீரங்கநாதரை மாப்பிள்ளையாக அடைந்த பெரியாழ்வார் (ஸ்ரீஆண்டாளின் வளர்ப்புத் தந்தை தான் பெரியாழ்வார் என்பது குறிப்பிடத்தக்கது.)தீபாவளி சீர் தரும் நிகழ்ச்சி நடைபெறும்.

பெரியாழ்வாரின் பிரதிநிதிகளாக அரையர்கள் சீர் வழங்கும் வழக்கம் இன்று வரை மிகச்சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. நம்பெருமாள் திருவடிகளைச் சுற்றி சீர்வரிசையான நாணய மூட்டைகள் வைக்கப்படும். அப்போது வேதபாராயணங்கள் முழங்க, மங்கள வாத்தியம் வாசிக்கப்படும்.இதை ஜாலி (சாளி) அலங்காரம் என்பர். ஜாலி அலங்காரம் என்பது ஆயிரம் ஒரு ரூபாய் நாணங்களை இரண்டு புது கைலிகளில் மூட்டையாகக் கட்டி பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பது. இந்த நிகழ்ச்சி நடைபெற்றதும் பெருமாள் கோவிலின் இரண்டாம் பிராகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். தீபாவளி சீர் பெற்ற பெருமாள் மீண்டும் சந்தனு மண்டபம் வருவார். மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை பக்தர் களுக்குக் காட்சி கொடுத்து அருள்வார். அதன்பின் கிளிமண்டபத்தில் காத்திருக்கும் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் அனைவரும் ஒவ்வொருவராக பெருமாள் முன் எழுந்தருளி பெயர் சொல்லி அழைக்கப்படுவார்கள். அப்போது பெருமாள் அவர்களுக்குப் புது வஸ்திரம் சந்தனம் தாம்பூலம் மலர் பழங்கள் ஆகியவற்றை தீபாவளிப் பரிசாகக் கொடுத்து கௌரவிப்பார். பெருமாளிடம் தீபாவளிப் பரிசு பெற்ற ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்கள் பெருமாளிடம் விடை பெற்றுக் கொண்டு தங்கள் சந்நிதிக்குத் திரும்புவார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கநாயகித் தயார் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் கலந்து கொள்ள மாட்டார்கள்.

இந்தத் திருக்காட்சியை தீபாவளித் திருநாளில் தரிசித்தால் ஆடை களுக்கும் பணவரவுக்கும் தட்டுப்பாடு உண்டாகாது என்பது நம்பிக்கை


கருத்துகள் இல்லை: