புதன், 3 ஜூன், 2020

*லிங்க புராணம் ~ பகுதி — 07*

         *தாருகாவனத்தில்*
       *திகம்பர சந்நியாசி*
   =======================

தாருகாவனத்திலிருந்த முனிவர்களுக்கு உண்மையை உணர்த்த எண்ணிய சிவபெருமான்., திகம்பரராய்., சிறந்த அழகனாய்., கையில் ஓடு ஏந்தி பிக்ஷாடனாராய் புறப்பட்டார் ஈசன். அவரைக் கண்ட ரிஷி பத்தினிகள் தம் சுய அறிவின்றி., ஈசன் வசத்தினராகி அவரைப் பின் தொடர அனைவருடனும் முனிவர்கள் இருந்த யாகசாலைக்கு அருகில் வந்தார் ஈசன். இந்நிலையில் முனிவர்கள் சினம் கொண்டு யாரோ ஒரு காமுகனை தம்முடைய பத்தினிகள் பின் தொடர்ந்து வந்திருப்பதைக் கண்டு நிலை குலைந்தனர். அவர்கள் அந்த திகம்பர சன்னியாசியை சபித்தனர். ஆனால்., அவர்களுடைய சாபம் பலனற்றுப் போகவே திகைப்படைந்தனரே அல்லாமல்., வந்தவர் பரமன் என்பதை அறிந்து கொள்ளவில்லை. அப்போது சன்னியாசி தீடீரென்று மறைந்துவிட்டார். சன்னியாசி மறைந்தவுடன் கொடுந்துன்பங்கள் முனிவர்களைப் பற்றிக் கொண்டன. செய்வதறியாது அவர்கள் உதவிக்காக பிரம்மனை நாடினர். நிகழ்ந்தது அனைத்தையும் அறிந்த பிரம்மன் முனிவர்களிடம் கீழ்க்கண்டவாறு கூறினார். நீங்கள் பெரும் தவறு இழைத்து விட்டீர்கள். முக்கியமாக அனைத்துக்கும் மேலான பரம்பொருள் ஒன்று இருப்பதை ஏற்கவில்லை. அதனை உணர்த்துவதற்கே எம்பெருமான் உங்களிடையே வந்தார். அவரை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை., சாபமும் கொடுத்தீர்கள். அந்த அபசாரமே வெப்ப நோயால் உங்களைத் துன்புறுத்துகிறது என்றார். ஈசனிடம் பக்தி உள்ளவன்., அதிதியாக வருபவரை., ஈசனாகவே எண்ணி உபசரிக்க வேண்டும் என்ற முறைகளின் கூற்றை நீங்கள் அறியவில்லை. அதிதியை உபசரித்து அழியாப் பேரின்பம் பெற்ற சதரிசனன் வரலாற்றைக் கேளுங்கள் என்று அந்த வரலாற்றைக் கூறினார் பிரம்மன்.

தொடரும்...

*அஷ்டதளோபரிவேஷ்டித லிங்கம்*
*ஸர்வஸமுத்பவ காரண லிங்கம் |*
*அஷ்டதரித்ர வினாஸன லிங்கம்*
*தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||*

கருத்துகள் இல்லை: