ஞாயிறு, 10 மே, 2020

த்ரேதா யுகம்....

ராம அவதாரம் முடிந்தது கடைசியில் மிஞ்சியவர்கள் அந்த யுகத்தில் இருவர் மட்டுமே. ஒருவர் இலங்கையில் விபீஷணாழ்வார் இவர் பன்னிரண்டில் ஒரு ஆழ்வார் அல்ல. பர்மனன்ட் இலங்கையை ஆள்வார். மற்றவர் ஆஞ்சநேயர் எங்குமிருப்பவர். இவரில்லாமல் நாம் இல்லை. மூச்சுக்கு காற்றே அவர் தானே. மாருதி என்கிற இருவருமே சிரஞ்சீவிகள். ராமனோடு இருந்த த்ரேதா யுகம் முடிந்தாலும் தன் உயிருக்குயிரான ராமர் மறைந்தாலும் ஆஞ்சநேயன் ராமரையே நினைத்து ராமநாம ஜெபத்தில் தனது வாழ்வை தனிமையில் கடத்தினான். அடுத்த யுகமான துவாபர யுகம் வந்து விட்டது. ஒருநாள் நாரதன் ஆஞ்சநேயனை சந்தித்தான். "ஆஞ்சநேயா இன்னும் எத்தனை நாள் ராமனையே நினைத்து ஜபம் செய்வாய்?" நாரதா முனீஸ்வரா என் மூச்சே ராமர் தான். ஆகவே மூச்சு முடியும் வரை ராமர் தான் எனக்கு எல்லாம்." நாரதன் சிரித்தான்.
"ஏன் சிரிக்கிறாய் நாரதா?" "நிஜத்தை விட்டு நிழலையே தேடிக்கொண்டு இருக்கிறாய். என்ற போது எனக்கு சிரிப்பு வந்தது" "எனக்கு புரியவில்லையே""
"எப்படி புரியும். புரிந்து கொள்ள முயற்சித்தால் அல்லவோ புரியும்!" நாரதா நிஜம், நிழல் என்கிறாய் என் ராமர் நிழலா?" "ஆம் வேறென்ன நாராயணின் ராம அவதாரம் முடிந்தவுடன் ராமர் மறைந்தார். வேறு அவதாரம் தொடங்கி விட்டாரே இந்த புது யுகத்தில்!" "என்ன சொல்கிறாய் நாரதா என் ராமர் என்னவாக புது அவதாரம் எடுத்துள்ளார்? எங்கிருக்கிறார்? சொல்லேன்?"
"இந்த துவாபர யுகத்தில் அவர் பெயர் கிருஷ்ணன். த்வாரகையில் உள்ளார் . சமீபத்தில் அவரிடம் பேசும் போது தான் உன்னை பற்றியும் பேச்சு வந்தது".
"என் பிரபு என்னை நினைத்து கொண்டிருக்கிறாரா. கேட்கவே ரொம்ப புளகாங்கிதம் அடைகிறேன். நான் என் பிரபுவை உடனே பார்க்க வேண்டுமே"
"உனக்கு அவரை பார்க்க வேண்டுமானால் இப்படிப் போக முடியாது. ஒரு மாறு வேடத்தில் துவாரகைக்கு வா. அங்கு ராம நவமி அன்று அன்னதானம் செய். நான் அப்புறம் உன்னை பார்க்கிறேன்" நாரதன் நகர்ந்தான். ஆஞ்சநேயன் ஒரு பிராமணன் வேடத்தில் துவாரகை சென்றான். துவாரகையில் ஸ்ரீ ராம நவமி அன்று அன்னதானம் அளித்தான். எண்ணற்றவர்களுக்கு தன் கையாலேயே அன்னமிட்டான். வரிசை வரிசையாக அமர்ந்திருக்கும் மக்கள் கூட்டத்தில் கொஞ்சமும் அயராது ஆஞ்சநேயன் குனிந்து ஸ்ரத்தையோடு அனைவருக்கும் இலையில் அன்னமிட்டான். இன்று ராமரைக் காணலாம் என்றாரே நாரதர்? எப்போது ராமரைப் பார்ப்பது? அவரை எங்கே சந்திப்பது? எங்கே போய் தேடுவது? மனதில் எண்ண ஓட்டம். இருந்தாலும் கை அன்னத்தை பரிமாறிக் கொண்டு இருந்தது. ராமனையே த்யானம் செய்துகொண்டு ராம நாமத்தை உச்சரித்துக்கொண்டு ஹனுமான் அனைவருக்கும் உணவு பரிமாறிக் கொண்டிருந்தான்.

" திடீரென்று ஆஞ்சநேயனுக்கு தலை சுற்றியது கை, கால்கள் தானாக துவண்டது, மூச்சு வாங்கியது, என்ன ஆயிற்று எனக்கு? ஆஞ்சநேயனுக்கு என்ன சொல்வது எப்படி சொல்வது என்றே புரிபட வில்லை... ஒரு வரிசையில் ஒரு கால் மடக்கி மறுகாலை கொஞ்சம் நீட்டிக்கொண்டு அமர்ந்திருந்த ஒரு வயோதிக பிராமணருக்கு எதிரில் அப்போது ஆஞ்சநேயன் குனிந்து கையில் அன்ன வட்டிலோடு பரிமாற நின்றவன் நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்தான்.
''ஏன்? ஏன்? இது எதற்காக? நான் என்ன அபசாரம் செய்து விட்டேன்?"
ஆஞ்சநேயன் கதறினான். அந்த மனிதரின் கால்கள் அவனுக்கு நிறைய பரிச்சயமானவை. சாக்ஷாத் ராமனின் கால்கள்""பிரபு என்னை இப்படியா சோதிக்கவேண்டும்? அலறினான் ஆஞ்சநேயன் பிராமணர் சிரித்தார் மெதுவாக எழுந்தார். அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பிராமணரான நாரதரும் எழுந்தார். கிழ பிராமணர் வேடத்தைக் களைந்து கிருஷ்ணன் ஆஞ்சநேயனை அணைத்து கொண்டார். நீண்ட பிரிவல்லவா? ஆஞ்சநேயா உன் கையால் சாப்பிட ஆசை வந்தது. எனவே நானும் நாரதனும் உனைக்காண வந்தோம்.'' "பிரபு எனக்கு ஒரு வருத்தம்!" "என்ன ஆஞ்சநேயா?" "நான் உடனே துவாரகைக்கு வர வேண்டும் உங்களையும் என் தாய் சீதா பிராட்டியையும் சேர்த்தே பார்க்க வேண்டும்.. உங்களைத் தனியாக பார்த்தால் எனக்கு பழைய ஞாபகங்கள் வந்து வதைக்கின்றன. பிரிவால் தாங்கள் வாடியதேல்லாம் நினைவுக்கு வந்து என்னை என்னவோ பண்ணுகிறது. உங்களை தனியாக பார்க்க என்னால் இனியும் முடியாது. உடம்பில் தெம்பில்லை "வாயேன் எங்களோடு" ஆஞ்சநேயன் கிருஷ்ணனோடு துவாரகை சென்றான். ருக்மிணி என்கிற உருவில் தனது மாதாவைக் கண்டான். பலராமன் என்ற உருவில் லக்ஷ்மணனையும் கண்ணாரக் கண்டு களித்தான். ‌பேச்சே எழவில்லை இரு கைகளும் தாமே மேலேழும்பி, குவிந்தன. மனம் லேசானது நினைவெல்லாம் மனத்தில் அவனாகவே நிரம்பி வழிந்தது. வாய் மெதுவாக சுவாசத்தோடு கலந்து '' ஹரே ராம ஹரே ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே'' என்று உச்சரிக்கும் போது கண்கள் மூடிக்கொண்டன. கண்கள் மூடினால் என்ன? உள்ளே தான் அவன் விஸ்வரூபனாக ராமனாக கிருஷ்ணனாக காட்சி தருகிறானே.

ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !!!!

கருத்துகள் இல்லை: