செவ்வாய், 26 மே, 2020

ஓர் இரவு உணவின் போது பகவான், "நார்த்தங்காய் ஊறுகாய் இருக்கா?" என்று கேட்டார்.

கிச்சனில் தேடிப் பார்த்துவிட்டு 'இல்லை' என்று கூறினார்கள்.

சின்னசுவாமி கடிந்து கொண்டார்.

மறுநாள் ஆஸ்ரம ஆபிஸில் இருந்து ஜி.எல்.நரசிம்மராம்,ஆஸ்ரமத்தில் இருந்து அனுப்ப இருக்கும் அன்றைய தினக் கடிதங்களைப் பகவான் பார்வைக்கு வழக்கம் போல் கொண்டு வந்தார்.

அதில் ஒரு கடிதம் சர்வாதிகாரியால் மதுரை அன்பர் ஒருவருக்கு ஒரு கூடை நார்த்தங்காய் வாங்கி அனுப்பும்படி வேண்டியிருந்தது.

அதைப் படித்தவுடன் பகவான் முகத்தில் கடுமையேறியது.

"இவாளுக்கெல்லாம் நார்த்தங்காயிலே தான் மோக்ஷமிருக்கு போலே! இல்லைன்னா அதை ஏன் வேண்டனும்... இவ்வளவு பிரயாசைப்படணும்.

நமக்கு அது பிராப்தம்னா அதா தேடி வராதோ!

நல்லது.உங்க இஷ்டம் போலே பண்ணிக்கோங்க" என்றவாறு கடிதத்தைத் தூக்கி வீசினார்.

கடிதங்களைக் கொண்டு வந்தவர் பதில் கூறாமல் வெளியேறவும், ஒரு ரயில்வே காண்டிராக்டர் சீல் வைக்கப்பட்ட இரு கூடைகளுடன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

அது ரயில்வேயில் ஆர்.ஆர்.இல்லாமல் ஆசிரமத்திற்கு வந்த பார்சலாகும்.

அதைப் பார்த்தவுடன் பகவான் முகம் மாறியது.

நகைச்சுவையாக, "பாரும் ஓய்! அது நார்த்தங்காயா இருக்கப் போறது! பிரிச்சுப் பாரும்"என்றார்.

அந்த கூடை பிரிக்கப்பட்டது.அது நார்த்தங்காய் தான்.

அது ஊறுகாய் போட கிச்சனுக்கு அனுப்பப்பட்டது.

சில நிமிடங்கள் சென்றவுடன் பகவான், "ஒரு கூடை தான் நார்த்தங்காயா இருக்கப்போறது, மத்தது ஆரஞ்சா இருக்கும். பார்க்கச் சொல்லு!" என்றார்.

பகவான் கூறியது போலவே மற்றொரு கூடையிலே ஆரஞ்சு இருந்தது.

அது அனைவருக்கும் பகிரப்பட்டது.

கருத்துகள் இல்லை: