செவ்வாய், 26 மே, 2020

 தசாவதாரம் ஒன்பது கிருஷ்ண அவதாரம்.
**********************************************************************

நேற்றைய  தொடர்ச்சி பாகம் மூன்று....

பசுக்கன்றுகளின் பாதத்தில் ஒட்டியிருந்த தூசை குழந்தையின் உடல் மீது தூவினார்கள். இதன் பிறகு கிருஷ்ணரை நாராயணின் 22 திருநாமங்கள் சொல்லி பாதுகாப்பு தருமாறு வேண்டினார்கள். நாராயணின் 22 நாமங்க ளை சொல்வோர் அருகில் எந்த கெட்ட சக்திகளும் நெருங்குவ தில்லை என நம்பிய கோகுல மக்கள், மணி மான், யக்ஞர், அச்யுதா, ஹயக்ரீவர், கேசவா, விஷ்ணு, உருக்ரமா, ஈஸ்வரா, சக்ரதாரி, கதாதரா, மதுசூதனா, குபேந்திரா, தாரக்ஷயா, ஹலாதரா, ஹ்ருஷிகேசா, நாராயணா, ப்ருஷ்ணிஹர்பா, யோகேஸ்வரா, புருஷோத்த மா, கோவிந்தா, மாதவா, வைகுண்டாதிபதி, என்ற நாமங்களால் அவரைப் பூஜித்தனர். இந்த நேரத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. பூதனா கொடுமைக்காரியாக இருந்தாலும் கூட, குழந்தைகளை கொன்றவள் என்றாலும் கூட, கடைசி நேரத்தில் கிருஷ்ணருக்கு பாலூ ட்டிய காரணத்தால் அவள் வைகுண்டத்தை அடைந்தாள். அவளுக்கும் முக்தியும் கிடைத்த து. அவளது உடலை கோகுலவாசிகள் எரித்த போது, அதிலிருந்து நறுமணம் கிளம்பியது.

கிருஷ்ண அவதாரம்  நாட்கள் கடந்தன. கிருஷ்ணருக்கு ஒரு வயதா னது. இந்த நிகழ்வை யசோதா மிக சிறப்பாகக் கொண்டாடினாள். வாத்தியங்கள் முழங்கின. ஆயர்குல மக்கள் ஒருவர் விடாமல் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். பிராமணர்கள் வேத பாராயணம் செய்தனர். யசோதா மகனை அன்போடு நீராட்டினாள். வேத மந்திரங்கள் ஒலித்துக் கொண்டிருந்த போது, கிருஷ்ணர் அப்படியே கண்ணயர்ந்தார். யசோதை குழந்தையை மடியில் வைத்திருந் தாள். குழந்தை உறங்கி விட்டதால், ஒருபட்டு மெத்தையை தரையில் விரித்து ஒரு வண்டியி ன் கீழே நிழலில் குழந்தையை படுக்க வைத்தாள். பின்னர், மற்ற வேலைகளைக் கவனிக்க வீட்டுக்குள் போய்விட்டாள். சற்று நேரத்தில் கிருஷ்ணர் விழித்து விட்டார். சாதாரண குழந்தைக்குரிய இயல்புடன் அழ ஆரம்பித்தார். கால்களை உதைத்தார். அவை பார்ப்பதற்கு பிஞ்சுக்கால்கள், ஆனால், அதன் சக்தி தாளாமல், அருகில் இருந்த வண்டியே நொறுங்கி விட்டது. சப்தம் கேட்டு வெளியே வந்த யசோதையும் மற்ற ஆயர்குல பெண்களும் இது என்ன விந்தை என்று மூக்கின் மீது விரலை வைத்தனர்.

யசோதைக்கு பயம் வந்துவிட்டது. வேதம் ஓத வந்த அந்தணர்களிடம், ஐயன்மீர்,  இந்தக் குழந்தை பிறந்தது முதல் இப்படித்தான் அற்புதமான செயல்களைச் செய்கிறான். ஓர் அரக்கியையே கொன்றான். இப்போது, உங்கள் கண்முன்னால் வண்டியை நொறுக்கி விட்டான். எனவே குழந்தையின் மீது எதுவும் அண்டாமல் மந்திரங்கள் ஓதி ஹோமம் செய்ய வேண்டும் என வேண்டினாள். அவ்வாறே வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓதினர். அவர்களு க்கு நிறைய பரிசுகளை அள்ளிக் கொடுத்தார் நந்தகோபர். பூதனாவை கிருஷ்ணர் கொன்று விட்டார் என்பதையறிந்து கம்சன், த்ருணாவ ர்த்தன் என்ற கொடிய அரக்கனை அனுப்பினா ன். இவன் பறக்கும் வல்லமையுள்ளவன். இவன் வேகமாக மூச்சுவிட்டால் சூறாவளியாக மாறிவிடும். அந்த கொடுமைக்காரன் கோகுல த்துக்குள் புகுந்தானோ இல்லையோ, கோகுல த்தில் பெரும் புயல் வீசியது. எங்கும் புழுதி மண்டலம். ஒருவருக்கொருவர் முகத்தையே பார்க்க முடிய வில்லை. இதைப் பயன்படுத்தி, கிருஷ்ணரை தூக்கிக் கொண்டு உயரே பற ந்து விட்டான் அசுரன். யசோதை கிருஷ்ணரை காணாமல் அழுதாள். ஐயோ,  என் மகன் புழுதி புயலில் சிக்கிக் கொண்டானோ,  அவன் எங்கே?..  என அரற்றினாள். த்ருணாவர்த்தன் உயரே சென்று குழந்தையை தூக்கி வீச எத்தனித்தான். குழந்தை அவனை விட்டால் தானே, குழந்தையின் கைகள் விஸ்தாரமாக விரிந்தன. வர்த்தனின் கழுத்து அதன் பிடியில் சிக்கியது. அப்படியே கழுத்தை இறுக்கிய குழந்தை அவனை வதம் செய்தது. அவன் கீழே விழுந்தான். புயல் அடங்கியது. கீழே விழுந்து கிடந்த அசுரனை கோகுலவாசி கள் பார்த்தனர்.

கிருஷ்ணர் அவன் உடல் மீது விளையாடிக் கொண்டிருந்தார். இதைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இது தெய்வ குழந்தையாக இருக்குமோ என எண்ணினர். இதை நிரூபிக் கும் வகையில், அடுத்த சம்பவம் நிகழ்ந்தது. ஒரு நாள் கிருஷ்ணர் மணலை அள்ளி தின்று கொண்டிருந்தார். யசோதை அவரைக் கண்டித்தாள். கண்ணா என்னிடம் நீ ஓடோடி வந்தால், நான் பால் தரு வேனே, ஏன் மண்ணைத் தின்கிறாய் ? என்று செல்லமாய் கண்டித்தாள். அன்று கிருஷ்ணர் அவளது கண்களுக்கு பூரண லட்சணமாய் தெரிந்தார். அதுகண்டு பூரித்த அவளது மார்பு களில் பால் நிறைந்தது. அதை அன்போடு ஊட்ட முயன்றாள். கிருஷ்ணர் வாய் திறக்க மறுத்தார். அவரது வாயை கட்டயாப்படுத்தி திறந்தாளோ இல்லையோ, வாய்க்குள் அண்ட சராசரமும் சுழன்று கொண்டிருந்தது. நந்தகோபரிடம், இந்த அதிசய நிகழ்ச்சியை எடுத்துச் சொன் னாள் யசோதை. நந்தருக்கும் குழந்தையைப் பற்றிய கவலை அதிகரித்தது. குழந்தையின் ஜாதகத்தைப் பார்த்தால் என்ன என்று தோன் றியது. ஜாதகம் கணிப்பதில் மிகச்சிறந்த ஞானியாக திகழ்ந்தவர் கர்கமுனிவர். அவரை வரவழைத்து உபசரித்து பின்பு நந்தகோபர், கிருஷ்ணரின் ஜாதகத்தை மட்டு மின்றி, ரோ கிணியின் மகனான பலராமனின் ஜாதகத்தை யும் கொடுத்தார். ஜாதகத்தைப் பார்த்த முனிவர் அதிர்ந்தே போய்விட்டார். நந்தகோபரும், யசோதையும் இதுவரை கிருஷ்ணன் தங்கள் பிள்ளை தான் என எண்ணி கொண்டிருந்தனர். தனக்கொரு பெண் குழந்தை பிறந்ததும், அது கூடையில் சுமக்கப்பட்டு கம்சனின் மாளிகைக்கு சென்ற தும், சிறையில் பிறந்த கிருஷ்ணன் தன்னரு கே படுக்க வைக்கப்பட்டதையும் யசோதையும் அறியமாட்டாள்.

தான் பெற்ற மகன் என்றே அவள் எண்ணியி ருந்தாள். ஆனால், கிருஷ்ணர் தேவகியின் வயிற்றில் பிறந்தவர் என்பதை உணர்ந்து விட்டார் கர்கமுனிவர் பலராமனும் தேவகியின் வயிற்றில் கருவாகி,ரோகிணியின் கர்ப்பத்தி ற்கு மாற்றப்பட்டவன் என்பது தெரிந்தது. எப்படியாயினும் குழந்தைகளுக்கு தந்தை வாசுதேவர் என்பதை புரிந்து கொண்டு விட்டார் கர்கமுனிவர். இதை நந்தகோபரிடம் தெரிவித்தும் விட்டார். நந்தகோபரே, இக்குழந்தை சாதாரண பிறவி யல்ல. அந்த விஷ்ணுவின் அம்சம். ஒரு பிறவி யில் சிவப்பாக இன்னொரு பிறவியில் மஞ்ச ளாகவும், இப்போது கருப்பாகவும் பிறந்திருக் கிறார். மனிதர்களுக்குள் நிறபேதம் இருக்கக் கூடாது. என்பது அவரது எண்ணமாக இருக்க லாம். ஆனால், அவர் தேவகியின் வயிற்றில் பிறந்தவர் என்று ஜாதகம் சொல்கிறது. உம் மனைவி யசோதைக்கு ஒரு பெண் குழந்தை தான் பிறந்திருக்கிறது. அவள் துர்க்கை என்னும் தெய்வமாக மாறிவிட்டாள். பெற்ற பிள்ளையே தன்னுடையது இல்லை என்பதும், தனக்கு பிறந்த குழந்தை தெய்வமாகி விட்டது என்பதையும் அறிந்தபிறகும் எந்த சலனத்தை யும் அவர் காட்டவில்லை. மாறாக விஷ்ணுவே, தன் மகனாய் வளர்வதில் மிகுந்த மகிழ்ச்சியைத் தான் அடைந்தார். பலராமரும், கிருஷ்ணரும் இப்போது தங்கள் பால்ய லீலைகளைத் துவங்கி விட்டார்கள். கோபியரின் வீடுகளுக்குள் நுழைவார்கள். பசுக்கள் பால் பொங்கும் மடுவுடன் காட்சி தருவதை பார்த்து மகிழ்வார்கள. கன்றுகளை யாருக்கும் தெரியாமல் அவிழ்த்து விடுவார் கள். அவை மகிழ்ச்சியுடன் ஓடிச்சென்று தாயில் மடியில் சுரந்து நிறைந்திருக்கும் பாலைக் குடிக்கும். அதுகண்டு கைகொட்டி ஆனந்தமடைவார்கள்.

பின்பு, கோபியரின் வீட்டுக்குள் புகுந்து வெண்ணெயைத் திருடுவார்கள். அதை குரங்குகளுக்கு கொடுப்பார்கள்.கோபியர்கள் அவர்களின் புத்திசாலித்தனத்தை ரசிப்பார்கள்  அதே நேரம், திருடுவது தவறு என கண்டிப்பார்கள். யசோதையிடம் ஒருத்தி சென்றாள். அம்மா யசோதா, உன்மகன் என் வீட்டில் வெண்ணெய் திருட வருகிறான் என்று பானையை இருளில் ஒளித்து வைத்தேன். அவன் என்னடா வென்றால், தன் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளின் ஒளியிலேயே அந்தப் பானையை கண்டுபிடித்து விடுகிறான். பானை காலியாகி விட்டது, என்றாள். சரி... சரி... அவன் கழுத்தில் அணிந்திருக்கும் நகையை இனி கழற்றி விடுகிறேன், என்றவள் கிருஷ்ணரைக் கண்டிப்பதற்காக கையை ஓங்கினாள். பால் வழியும் முகத்துடன் அந்த சிங்காரக்கண்ணன், அவளை ஒரு அன்பு பார்வை பார்க்கவே, கை தானகவே கீழே வந்து விட்டது. வசுக்களில் ஒருவரான துரோணர் (இவர் மகாபாரத துரோணர் அல்ல) என்பவர் தரா என்ற தன் மனைவியுடன் வசித்தார். அவர் களிடம் பிரம்மா, நீங்கள் இருவரும் உலகத்தை விருத்தி செய்யனும் என உத்தரவிட்டார்.

அப்போது அவர்கள், தந்தையே, நீங்கள் கூறும்  உத்தரவின்படி நடக்கிறோம். எங்களுக்கு நீங்கள் ஒரு வரம் தரவேண்டும். மகா விஷ்ணு வை நாங்கள் நேசிப்பது தங்களுக்கும் தெரிந்த ஒன்றுதான். அவர் குழந்தையாக இருந்தால் எப்படி இருப்பார் ? என்னென்ன சேஷ்டைகள் செய்வார் என்பதை நாங்கள் கண்குளிரக் காண வேணடும். பிற்காலத்தில், அவரது இந்த சேஷ்டைகளையெல்லாம் படிப்போரும், கேட்போரும் பாவ விமோசனம் பெற வேண்டும், என்றார். அந்தப் பிறவியில் அப்படி நடக்காதென்றும், மகாவிஷ்ணு பூலோகத்தில் நடக்கும் அநியா ங்களை தடுத்து நிறுத்த, மானிட ரூபத்தில் கிருஷ்ணாவதாரம் எடுக்கும் போது, அந்தப் பாக்கியம் உங்களுக்கு கிடைக்குமென்றும் சொன்னார் பிரம்மா. அதன்படி இப்பிறவியில் அந்த தம்பதியர் நந்தகோபர் - யசோதையாக கோகுலத்தில் அவதரிக்க, அவர்களிடத்தில் கிருஷ்ணன் தேவகியின் வயிற்றில் பிறந்து பால்ய பருவத்தை கழிக்க வந்திருக்கிறார். யசோதையின் வீட்டில் பல வேலைக்காரிகள் உண்டு. அதில் வீட்டு வேலை செய்பவளுக்கு, அன்று கடுமையான வேலை இருந்தது. எனவே, வெண்ணெய் கடையும் பொறுப்பை யசோதை எடுத்துக் கொண்டாள். அவள் மன மெல்லாம் கிருஷ்ணன் நிறைந்திருந்தான். கிருஷ்ணன் செய்யும் சேஷ்டைகளை பாடிய படியே அவனது நினைவில் மூழ்கிப்போனாள்.

அப்போது, அவளையறியாமல் அவளது மார் பில் பால் சுரந்தது. அந்நேரத்தில் கிருஷ்ணர் வந்தார். தாயிடம், வெண்ணெய் கடைவதை நிறுத்தி விட்டு, தனக்கு பாலூட்ட வேண்டுமெ ன்ற தன் ஆசையை குறிப்பால் தெரிவித்தார். இதை உணர்ந்த யசோதையும் கிருஷ்ணருக்கு பால் புகட்டினார். அந்த நேரத்தில் அவள் அடுப்பில் வைத்திருந்த பால் கொதித்து வழிய ஆரம்பிக்கவே, குழந்தையை ஒதுக்கி விட்டு அடுப்பை நோக்கி ஓடினாள் யசோதா. எனவே, கிருஷ்ணருக்கு கோபம் வந்துவிட்டது. அவரது முகம் கோவைப் பழமாகச் சிவந்து விட்டது. ஒரு கல்லை எடுத் தார். எறிந்தார்; அம்மா விட்டுச் சென்றிருந்த வெண்ணெய் தாழி உடைந்தது. சிந்திய வெண்ணெய் ஒரு கை நிறைய அள்ளிக் கொண்டார். ஒரு தனியிடத்திற்கு போனார். தலைகுப்புற கவிழ்த்தப்பட்டிருந்த ஒரு உரலில் அமர்ந்து வெண்ணெய்த் தின்ன ஆரம்பித்து விட்டார். பசி பொறுக்க மாட்டார் போலும் நம் சின்னக் கண்ணன். பகிர்ந்துண்ணும் குணம் அவரை விடுமா. அங்கே வந்த குரங்குகளுக்கும் கொடு த்தார். யசோதா பால் பானையை இறக்கி வைத்து விட்டு திரும்பினான். பானை உடைந் திருந்தது. கிருஷ்ணன் தான் இதைச் செய்திருப்பான் என்பதை அவள் அறிவாள்! அந்தப் பொல்லாதவனைத் தேடினாள். தூரத் தில் உரல் மீது அமர்ந்திருந்தான். அவனைப் பிடிக்க ஓடினாள். அவன் அவளுக்கு போக்கு காட்டிவிட்டு ஆங்காங்கே மறைந்து கொண்டான். அவள் மீது கொண்ட அன்பு காரணமாக அவனே அவளது பிடியில் சிக்கிக் கொண்டான்.

மாயனே, வசமாக சிக்கினாயா?,

வெண்ணெயை எவ்வளவு சிரமப்பட்டு கடைந்தேன். நீயோ, அதை எவ்வளவு எளிதாக உடைத்து விட்டாய். உன்னைக் கட்டிப்போட்டால் தான் சரி வருவா ய் போலும்,  என்றவள் கயிறை எடுத்தாள். அவனை இழுத்து வந்து கட்டிப் போட முயற்சி த்தாள். கயிறு போதவில்லை. இன்னும் சில கயிறுகளை எடுத்து வந்து சேர்த்து கட்டினாள். என்ன அதிசயம், எப்படி கட்டினாலும் கயிறின் நீளம் கூடவே இல்லை. அவள் சோர்ந்து விட்டாள். இப்போதும் கிருஷ்ணர் அவள் மீது கிருபை வைத்தார். அவளது அன்புக்கு கட்டுப் பட்டார். கயிறு நீளமானது. யசோதைக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும், அந்தக் குறும்புக் காரரை கட்டிப்போட்டாள். வேலையைப் பார்க்க போய் விட்டாள். அங்கே இரண்டு அர்ஜுன மரங்கள் இருந்தன. கண்ணனை வணங்கி அவை பேச ஆரம்பித்தன. பரந்தாமா, நாங்கள் நிதிகளுக்கு அதிபதியான குபேரனின் மக்களான நளகூவரன், மணிக்ரீவன். எங்களை நாரத மகரிஷி சபித்து விட்டார். எங்களின் இந்த ரூபத்தைக் மாற்றி சுயரூபம் தர வேண்டும், என வேண்டிக்கொண் டன அந்த மரங்கள். உலகத்து செல்வம் அனை த்தையும் குவித்து வைத்திருக்கும் குபேரனின் பிள்ளைகள் செய்த அட்டகாசம் கொஞ்ச நஞ்ச மல்ல .

பணமுள்ளவனிடம் மூன்று பழக்கங்கள் பிரதா னமாக இருக்கும். மது, மாது, சூது ஆகியவை யே அவை. இதில், முதல் இரண்டிலும் ஊறிக் கிடந்தார்கள் கூவர க்ரீவர்கள். ஒருமுறை, பல பெண்களுடன் ஒரு குளத்தில் ஜலக்ரீடையில் ஆழ்ந்திருந்தனர். அந்தப் பெண்களும் ஆடை கலைந்து போதையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த நாரதரை மதிக்கவில்லை. இதை கண்ட நாரதர்,  இருவரையும் அர்ஜுன மரமாகு ம் படி சபித்து விட்டார். மேலும் இருவரும் தேவர்கள் என்பதால், அவர் களுக்கு விஷ்ணுவின் தரிசனம் மூலம் விமோ சனம் கிடைக்க வேண்டும் என்பதே நாரதரின் விருப்பம். அவர்களை மரமாக மாறும்படி சபித்துவிட்டார். பகவான் நாராயணன், கிருஷ் ணாவதாரம் எடுத்து பூமிக்கு வரும்போது தான், உங்களுக்கு சுயரூபம் கிடைக்கும் என சொல்லி விட்டார். கிருஷ்ணர் உரலை இழுத்துக் கொண்டு நெரு ங்கி நின்ற மரங்களுக்கிடையே சென்றார். அவரது ஸ்பரிசம் பட்டதோ இல்லையோ, அந்த தேவர்கள் உயிர் பெற்று பகவானை வணங்கி, இனி தவறு செய்வதில்லை என உறுதியளி த்து விடை பெற்றனர். பின்னர் உயிரற்ற அந்த மரங்களை இழுத்துச் சாய்த்தார் கிருஷ்ணர். மரங்கள் சாயும் சப்தம் கேட்டு நந்தகோபரும் மற்றவர்களும் ஓடி வந்தனர். குழந்தை காயமின்றி தப்பியதைப் பார்த்து ஆனந்தம் கொண்டனர். இந்த அதிசயம் நிகழ்வுகளும், கிருஷ்ணர் அதில் இருந்து தப்பித்து வருவதும் நந்தகோபரின் சகோதர ரான உபநந்தருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி யது. அவர் கோபாலர்களின் சபைக்கூட்டத்தை கூட்டினார்.

கோபாலர்களே ! கிருஷ்ணன் அரக்கர்களிட மிருந்து பலமுறை தப்பிவிட்டான். ஆனால், எப்போதுமே இப்படி தப்பமுடியும் என சொல்ல முடியாது. நம் குழந்தைகளுக்கு பலமுறை ஆபத்து வந்து விட்டது. இனியும், நாம் கோகுல த்தில் வசிப்பது உசிதமல்ல. மனிதர்களுக்கு இறைவன் அவ்வப்போது சில எச்சரிக்கைக ளைத் தருவான்.  அதைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப நம் செயல்களை மாற்றி கொள்ள வேண்டும். எனவே, நாம் யமுனை நதிக்கரை யிலுள்ள விருந்தாவனத்திற்கு சென்று விடுவோம். அங்கு கோவர்த்தனம் என்ற மலை இருக்கிறது. அந்த மலையில் நம் பசுக்களுக்கு தேவையான புல் செழித்துக் கிடக்கிறது. புறப்படுவதற்குரிய ஏற்பாட்டைச் செய்யுங்கள் என்றார். உபநந்தரின் கருத்தை மக்கள் ஏற்ற னர்.அவர்கள் விருந்தாவனத்தை அடைந்தனர். குழந்தைகள் கிருஷ்ணருக்கும், பலராமருக்கு ம் மாடுகளை மேய்க்கும் பயிற்சி அளிக்கப்பட் டது. கோபாலர் இல்லப் பிள்ளைகளுக்கு மாடு மேய்க்க கற்றுக் கொடுப்பது தான் தலையாய பணி. தொழிலில் எதுவுமே கேவலமல்ல. கோபாலர்கள் வசித்த கோகுலம், விருந்தாவன ம் போல் செழிப்பான பகுதியை பூமி இதுவரை பார்த்ததில்லை. கன்றுகளுக்கு போக எஞ்சிய பாலும், நெய்யும், வெண்ணெயுமே அவர்களி ன் வாழக்கைத் தரத்தை உயர்வாக வைத்திரு ந்தது. மாடு மேய்க்கும்  சிறுவர்களுக்கு கல்வியறிவு இல்லை. ஆனால், என்ன ஆச்சரியம். ஒவ்வொ ருவர் வீட்டிலும் செல்வம் கொட்டிக் கிடந்தது. சிறுவர்களெல்லாம், ஏராளமான நகைகளை அணிந்திருப்பார்கள். அவற்றை அணிந்தபடி தான் மேய்ச்சல் நிலங்களுக்கும் செல்வார்கள். கிருஷ்ணரும், பலராமரும் மாடுகளை ஓட்டிக் கொண்டு கோவர்த்தன மலைக்குச் செல்வார்கள்.



பகுதி நான்கு நாளை தொடர்வோம்...

கருத்துகள் இல்லை: