வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

அருள் மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : அமிர்தகடேஸ்வரர்
அம்மன் : அபிராமி
தீர்த்தம் : அபிராமி அமிர்த புஷ்கரிணி
பழமை : 50 வருடங்களுக்குள்
ஊர் : சேலையூர் கேம்ப்
மாவட்டம் : சென்னை
மாநிலம் : தமிழ்நாடு

திருவிழா : மாசி மகம், சிவராத்திரி, அமாவாசை, ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம்.  
      
தல சிறப்பு : இங்கு சுவாமியும், அம்பாள் இருவருமே சுயம்பு என்பது சிறப்பு  
      
திறக்கும் நேரம் : காலை 08:00 மணி முதல் 01:00 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை திறந்திருக்கும்.  
அருள் மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் சேலையூர் கேம்ப், சென்னை.
     
தகவல் : கோயிலுக்குள்ளாகவே அபிராமி அமிர்த புஷ்கரிணி(திருக்குளம்) அமைந்துள்ளது. சுற்றுச்சுவர்களில் கங்கை முதல் காவிரி வரை 18 நதிகளின் பெயர்களுடன் சிலைகளை அமைத்து, அந்த நதிச் சிலைகளிலிருந்து நீர் கொட்டுவது போல அமைத்துள்ளார்கள். வருடந்தோறும் மாசி மகத்தன்று இந்த நதிகளுக்கு சிறப்பாக விழாவும் கொண்டாடுகிறார்கள்.  
     
பெருமை : மாசி மகத்தன்று பதினெட்டு நதிகளின் புனித நீர் கொணரப்பட்டு, ஹோமங்கள் வளர்த்து, பதினெட்டு குடங்களில் உள்ள தீர்த்தத்தால் பதினெட்டு நதி தேவதைகளுக்கும் தனித்தனியாக பூஜை செய்து, பின்னர் இந்த பதினெட்டு நதி நீரை திருக்குளத்தில் கலக்கிறார்கள். இதன்பின்னரே பக்தர்கள் பதினெட்டு நதிகளிலும் தனித்தனியாக கொட்டும்  தீர்த்தத்தில், வரிசையாக குளத்தைச் சுற்றி நீராடுகிறார்கள். நிறைவாக பதினெட்டு நதி நீரும் கலந்துள்ள இந்தத் திருக்குளத்தில் நீராடுகிறார்கள். பின்னர் சிவனையும் அம்பாளையும் வணங்கி அர்ச்சனை செய்தல் சிறப்பு. ஸ்நானம் செய்ய இயலாத பக்தர்கள் தலையில் இந்த நதி நீரை ப்ரோக்ஷித்துக் கொள்ளலாம். திருக்கடையூரில் நடைபெறும் சஷ்டியப்த பூர்த்தி ஹோமம் போன்று இங்கும் மாதத்துக்கு நான்கு ஐந்து சஷ்டியப்த பூர்த்தி ஹோமங்களை அவரவர் வசதிக் கேற்ப எளிமையாக நடத்துகிறார்கள்.

அபிராமிக்குச் சிறப்பானது தை அமாவாசை. அன்று மாலை 04:30 முதல் 05:00 க்குள் அபிராமி அந்தாதி பாட ஆரம்பிப்பார்கள். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் கூடை புஷ்பம் அம்பாளுக்கு அபிஷேகமாகச் சமர்ப்பிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். பாராயண நிறைவில் அம்மனுக்கு ஒன்பது வகையான பதார்த்தங்கள் நைவேத்யம் செய்விக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அன்னை மிகச்சிறந்த வரப்பிரசாதி. இங்குள்ள அம்பாள் ஒரு அடியை முன்னே எடுத்து வைத்து நமக்கு அருள்வது போல் இருக்கும் காட்சி ஒரு சிறப்பம்சம். அம்பாளை ஒருதரம் பிரதக்ஷிணம் வந்தாலே ஷோடச மண்டபத்தில் அமைத்திருக்கும் ஷோடச லக்ஷ்மிகளையும் வலம் வந்த பலன் உண்டு. வெள்ளிக் கிழமைகளில் இந்த ஷோடச லக்ஷ்மிக்கு சிறப்பு அர்ச்சனையும் உண்டு.
 
ஸ்தல வரலாறு : 1970-ல் காஞ்சி மஹா பெரியவர் சென்னை விஜயம் செய்த போது இவ்வூரில் பழங்காலச் சிலைகள் புதைந்துள்ளன. அவற்றைக்கண்டு பிடித்துக் கோயில் கட்டுங்கள் என்று அருளாசி வழங்கக் கிடைத்தது தான் இந்த கோயில். இக்கோயில் இருந்த இடம் முன்னர் மண்மேடாக இருந்தது. அதை அகற்றும் போது அமிர்தகடேஸ்வரர் மூல விக்கிரகம் கிடைத்தது. அருகில் இருக்கும் முத்தாலம்மன் கோயிலிலும் அச்சமயம் பல சிலைகள் கிடைத்தன. அதில் அன்னை அபிராமியின் விக்கிரகமும் கிடைத்தது. சிலைகள் பல கிடைத்தமையால் சிலையூர் என வழங்கப்பட்டுவந்த இந்த ஊர். நாளடைவில் சேலையூராக மாறிவிட்டது. 1972 ஆண் ஆண்டு கிராமப் பெரியோர்களால் முதலில் அபிராமி அம்மன் கோயிலும், அமிர்தகடேஸ்வரர் கோயிலும் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை: