வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

274 சிவாலயங்கள் : அருள் மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : பதஞ்சலீஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்மன் : கோல் வளைக்கையம்பிகை
தல விருட்சம் : எருக்கு
தீர்த்தம் : சூர்யபுஷ்கரிணி
ஆகமம் பூஜை  : சிவாகமம்
பழமை : 1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :  திருக்கானாட்டுமுள்ளூர்
ஊர் :  கானாட்டம்புலியூர்
மாவட்டம் :  கடலூர்
மாநிலம் :  தமிழ்நாடு
பாடியவர்கள் : சுந்தரர்
      
விடை அரவக்கொடி ஏந்தும் விண்ணவர்தம் கோனை வெள்ளத்து மாலவனும் வேத முதலானும் அடியிணையும் திருமுடியும் காண அரிதாய சங்கரனைத் தத்துவனைத் தையல் மடவார்கள் உடைஅவிழக் குழல்அவிழக் கோதை குடைந்தாடக் குங்குடங்கள் உந்திவரும் கொள்ளிடத்தின் கரைமேல் கடைகள் விடுவார் குவளை களைவாருங் கழனிக் கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே. சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 32வது தலம்.
 
விழா : சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.  
      
சிறப்பு : இத்தலத்தில் அம்பாள் கோல்வளைக்கையம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். இவளை அம்புஜாட்சி கானார்குழலி என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர். சுந்தரர் தனது பதிகத்தில் அம்பாளைக் குறித்தும் பாடியுள்ளார். இவளது சன்னதிக்கு வலப்புறத்தில் சனீஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார். சனிதோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனைகள் செய்து கொள்கின்றனர்.  
      
திறக்கும் நேரம் : காலை 06:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 07:00 மணி வரை திறந்திருக்கும். பிற நேரங்களில் அர்ச்சகரை அழைத்துக்கொண்டு சுவாமியை தரிசனம் செய்யலாம். அருள் மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், கானாட்டம்புலியூர் : 608 306, கடலூர் மாவட்டம். போன் : +91& 4144 & 208 508, 208091, 93457 78863. 
     
தகவல் : கோயில் அமைப்பு கோஷ்டத்தின் பின்புறம் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் இருக்கிறார். இவருக்கு நேரே இருக்கும் முருகன், வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். தன் மாமாவிற்கு மரியாதை செய்யும் விதமாக முருகன் நின்ற கோலத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். இதில் வள்ளி காதில் மூதாட்டிகள் அணியும் பாம்படம் (தண்டட்டி) அணிந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இங்குள்ள தெட்சிணாமூர்த்திக்கு மேல் கல்லால மரம் இல்லை. பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், காசிவிசாலாட்சி, நிருதிவிநாயகர், கஜலட்சுமிக்கு சன்னதிகள் உள்ளது. முன் மண்டபத்தில் இரண்டு நாகங்களுக்கு நடுவே கிருஷ்ணனும், அருகே நாகங்களுக்கு நடுவே லிங்கமும் இருக்கிறது.
 
பிரார்த்தனை : நன்றாக பணி செய்தும் சரியான மரியாதை கிடைக்காமல் இருப்பவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பணி உயர்வு, இடமாற்றம் வேண்டுபவர்களும் சுவாமியை வழிபடலாம்.
     
பெருமை : கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள இக்கோயிலுக்கு மதூகவனம் என்றும் பெயருண்டு. கருவறையில் சிவன் சிறிய லிங்கமாக இருக்கிறார். தமிழ் வருடப்பிறப்பின் போது மூன்று நாட்கள் சூரியன் தன் ஒளியை சூரியன் மீது பரப்பி பூஜிக்கிறார். தண்டகாரண்ய முனிவர்கள் இங்கு சிவனை வழிபட வந்த போது மணல்கள் எல்லாம் லிங்கங்களாக அவர்களுக்கு தெரிந்ததால் வெளியில் இருந்தே சிவனை தரிசித்து விட்டு சென்றார்களாம். எனவே இத்தலத்து மண்ணை மிகவும் விசேஷமானதாக கருதுகிறார்கள். மண்ணை எடுத்து சென்றால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும், பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள நடராஜர் தனது இடது காலை முன்புறமாக தள்ளி தூக்கி நிறுத்தி உடலை பின் புறமாக சாய்த்த படி இருக்கிறார். பதஞ்சலிக்காக சிவன் மகிழ்ந்து நடனமாடியதால் இவ்வாறு காட்சியளிப்பதாக சொல்கிறார்கள். பதஞ்சலி நடராஜர் சன்னதிக்கு எதிரே நால்வருடன் சேர்ந்து இருக்கிறார். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு சுவாமி மற்றும் பதஞ்சலியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. இத்தலத்திற்கு அருகிலேயே வியாக்ரபாதர் வழிபட்ட ஓமாம்புலியூர் தலம் இருக்கிறது. ஒரே வரிசையில் சிதம்பரம், கானாட்டம்புலியூர், ஓமாம்புலியூர் ஆகிய மூன்று தலங்கள் அமைந்திருப்பது சிறப்பு. வரப்பிரசாதியான இந்த அம்பாளுக்கு புத்திர பாக்கியம் இல்லாத பெண்கள் அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி வளையல்கள் அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால் குழந்தை பேறு கிடைப்பதாக நம்புகிறார்கள்.
 
ஸ்தல வரலாறு : பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் மகா விஷ்ணுவை தாங்கும் ஆதிசேஷன் சிவனின் நடன தரிசனம் காண விரும்பி பதஞ்சலி முனிவராக அவதாரம் செய்தார். சிவன் அவருக்கு சிதம்பரத்தில் தன் நடனக்காட்சி காட்டியருளினார். ஒரு சமயம் பதஞ்சலி நடராஜரை தரிசித்த போது அவரை இத்தலத்திற்கு வரும் படி கூறவே இத்தலத்திற்கு வந்தார் பதஞ்சலி. சிவனை வேண்டி தவம் செய்தார். அவருக்கு சிவன் தன் நடனத்தை காட்டி அருள் செய்தார். அப்போது சிவன் பதஞ்சலியிடம் என் தாண்டவங்களை கண்டு மகிழ்ந்தீரா? இப்போது திருப்திதானே! என்றார். தங்கள் நடனம் என்றும் எனக்கு சலிக்காதது. அந்நடனத்தை நான் என்றும் தரிசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார் பதஞ்சலி. சிவன் அவர் விரும்பிய படியே பல தலங்களில் தான் தரிசனம் தருவதாக கூறினார். மேலும் அவருக்கு மரியாதை செய்யும் விதமாக அவரது பெயரையே தனக்கும் சூட்டி பதஞ்சலீஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.

கருத்துகள் இல்லை: