திங்கள், 8 ஜூலை, 2019

தென்னாங்கூர் பாண்டுரங்கன் ஆலயம்
இறைவனை வழிபடுவது என்பதே ஆனந்தம் அதிலும் இசையோடு இறைவனை வழிபடமுடியும் என்றால் பக்தர்களின் சந்தோஷத்திற்கு அளவேது. அப்படிப்பட்ட அற்புத ஆலயம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் உள்ள தென்னாங்கூரில் உள்ளது. இயற்கை எழில் நிறைந்துள்ள இந்த கிராமத்திற்கு அழகு சேர்ப்பதே இந்த ஆலயம் தான் என்றால் அது மிகையாகாது.

பாண்டுரங்கனை தரிசிக்க வருபவர்கள் இந்த கிராமத்திற்குள் நுழைந்ததும் தங்களை மறக்கச் செய்கின்ற வகையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. திசைமாறி கிழக்கு இந்திய பகுதிக்குள் நுழைந்து விட்டோமோ என்கிற பிரமிப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் பூரி ஜகன்னாதா ஆலயத்தின் வடிவமைப்பில் தென்னாங்கூர் பாண்டுரங்கன் ஆலயம் அமைந்திருப்பது தான்.

மேலும் இந்த ஆலயம், கோவில்களுக்கு என உள்ள ஆகமவிதிப்படி தியான மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், ராஜகோபுரம் என அடுத்தடுத்த நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காண்போரை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ராஜகோபுரத்தின் உயரம் 120 அடி ஆகும். அதற்கு மேல் தங்கக் கலசம் நிர்மாணிக்கப்படுகிறது.

இந்த அழகிய கோபுரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கருவரையில் பிரம்மாண்டமாக காட்சி தரும் வகையில் பாண்டுரங்கனும், ருக்மனியும் (இந்த ஆலயத்தில் ருக்மணி என்பதற்கு பதிலாக ருக்மாயி என்று அழைக்கப்படுகிறது) அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

கலைநயமிக்க வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள கருவரையில் பாண்டுரங்கனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, அவர்கள் கொடுக்கும் காணிக்கையான தேங்காய், பழம்ஆகியவற்றை பெற்றுக் கொண்டவுடன் திரைச்சீலை விலக்கப்படும். அப்போது கருவரையில் இருக்கும் பாண்டுரங்கனையும் ருக்மணியையும் காணும் பக்தர்கள் உள்ளத்தில், வைகுந்தத்தில் இறைவனை காண்பது போன்ற பிரமிப்பை எற்படுத்துகின்றது.

ஒவ்வொரு நாளும் பாண்டுரங்கனுக்கு ஒவ்வொரு வகையான அலங்காரம் செய்யப்படுகிறது. இதில் குறிப்பாக பக்தர்களை கவருவது, வியாழக்கிழமை நடக்கும் நிஜபாத தரிசனம், வெள்ளிக்கிழமை நடக்கும் வெள்ளிகலச சேவை அலங்காரம், சனிக்கிழமை நடக்கும் திருப்பதி வெங்கடேசபெருமாள் அலங்காரம். ஞாயிற்றுக்கிழமை நடக்கும் ராஜஸ்தான் தலைப்பாகையுடன்அலங்கரிக்கப்படும் ராஜகோபாலன் அலங்காரம் ஆகியனவாகும்.

கருத்துகள் இல்லை: