வெள்ளி, 25 அக்டோபர், 2019

நாராயணபட்டத்ரி பகுதி-1

நாம் குருவாயூரப்பனை தரிசனம் செய்ய பக்தியுடன் செல்லும்போது இடது பக்கம் உள்ள திண்ணையில் ஒரு செப்புப் பட்டயம் இருக்கிறது. அதில் மலையாளத்திலும்,தமிழிலும் நாராயண பட்டத்ரி நாராயணியம் எழுதிய இடம் என்று எழுதப்பட்டுள்ளது.அந்த இடத்தில் தான் பட்டத்ரி நூறு நாட்கள் அமர்ந்து நாராயணிய நாயகனான குருவாயூரப்பனின் பெருமையை ஸ்ரீமத் பாகவதத்தின் சாரமான நாராயணியம் என்பதாக எழுதினார்.உடனே நம் மனது குருவாயூரப்பனில் இருந்து அந்த பட்டத்ரி மண்டபத்தை நோக்கி நகர்கிறது.நம் மனதில் பல கேள்விகள் எழுப்புகின்றன...பட்டத்ரி யார்?எதற்காக இதனை எழுதினார்?நாராயண பட்டத்ரி 1560 ஆம் ஆண்டு பாரதப் புழா ஆற்றின் வடகரையில் திருநாவா என்ற விஷ்ணு க்ஷத்திரத்திற்கு சமீபத்தில் மேல்புத்தூர் என்ற கிராமத்தில் பிறந்தார்.இவரது தகப்பனார் மாத்ருதத்தர் இவருக்கு சிறு வயதில் கல்வி கற்றுக் கொடுத்தார் பிறகு இவர் ரிக் வேதத்தை மாதவாச்சாரியார் என்பவரிடமும் தர்க்க சாஸ்திரத்தை தாமோதராச்சாரியாரிடமும் கற்றுத் தேர்ந்தார்.இவர் வ்யாகரணம் என்று சொல்லப்படுகின்ற சமஸ்கிருத இலக்கணத்தை அச்யுதபிஷாரடி என்பவரிடம் பயின்றார்.

இவர் தன் இளமையிலேயே கல்வியைக் கசடற கற்று முடித்தார். ஒரு நாள் இவரது குருவான அச்யுதபிஷாரடி இவரை அழைத்து இன்றோடு உன் குருகுல வாசம் முடிகிறது.உனக்கு சமஸ்கிருதத்தில் எல்லாம் கற்றுக் கொடுத்து விட்டேன்.இனி நீ உன் இல்லத்திற்குச் சென்று திருமணம் செய்து கொண்டு கிரகஸ்தாஸரமத்தை ஏற்றுக் கொள். தேவர்களுக்குப் பண்ண வேண்டிய யாகங்கள்,ஹோமங்கள் எல்லாம் செய் என்று கூறி ஆசிர்வதித்தார்.இதைக் கேட்ட பட்டத்ரி அவர் காலில் விழுந்து நமஸ்கரித்து.குருவே இத்தனை காலமும் சமஸ்கிருதத்திலேயே மிகவும் கடினமான வ்யாகரணத்தை நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள்.உங்களுக்கு நான் குருதக்ஷணையாக என்ன தரட்டும்?என்று பணிந்து கேட்டார்.

அப்பொழுது அச்யுதபிஷாரடி எனக்கு எந்த குருதக்ஷணையும் வேண்டாம். குருவுக்கு யாரும் தக்ஷணை கொடுக்க முடியாது.ஒரு குருவுக்கு அவர் சீடன் கொடுக்கும் சிறந்த தக்ஷணை அவன் கற்ற பாடத்தை மற்றவருக்கும் குற்றம் இல்லாமல் கற்றுக் கொடுப்பதுதான்.அப்படியும் நீ குருதக்ஷணை கொடுக்க நினைத்தால் நீ கற்ற சமஸ்கிருதத்தை தக்ஷணை வாங்காமல் எல்லோருக்கும் கற்றுக் கொடு அதுவே எனக்குப் போதும் என்று கூறினார்.

பட்டத்ரி குருவிடம் குருவே நீங்கள் சொன்னது போலவே நான் செய்கிறேன்.ஆயினும் நான் தங்களுக்கு ஏதாவது குரு தக்ஷணை தர விரும்புகிறேன் என்று கேட்டார்.இதைக் கேட்ட குரு உன்னால் எனக்கு என்ன தர முடியும் என்று சொல் அதை வாங்கிக் கொள்ள முடியுமா முடியாதா என்று நான் சொல்லுகிறேன் என்று கூறினார்.பட்டத்ரியின் விடாப்பிடியான வேண்டுகோளுக்கு ஒரு காரணம் இருந்தது.அவரது குருவான அச்யுதபிஷாரடிக்கு வாதரோகம் இருந்தது.அவரால் தன் கை கால்களை நகர்த்தக் கூட முடியாது.அப்படிப்பட்ட நிலையிலும் அவர் தன் சீடர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்தார்.தினமும் அவரை 15 20 சீடர்கள் குளிப்பாட்டி அவரைக் கொண்டு வந்து ஒரு நாற்காலியில் உட்கார வைப்பார்கள்.அந்த நிலையிலேயே அவர் தன் சீடர்களுக்குப் பாடம் நடத்துவார்.இதனை தினமும் கண்ணுற்ற பட்டத்ரிக்கு இவரது நோயை நாம் ஏன் வாங்கிக் கொள்ளக் கூடாது என்று தோன்றியது.இவர் குருகுலம் சேர்ந்த முதல் நாளிலிருந்தே நம் குரு இவ்வளவு கஷ்டப்பட்டு நமக்குப் பாடம் நடத்துகிறாரே!நாம் அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் இருந்தது.இப்பொழுது அதைக் கேட்டே விட்டார்.

குருவே நீங்கள் உங்கள் வாத நோயை எனக்கு ஆவாகனம் செய்து கொடுங்கள் வாத ரோக நிவர்த்தி என்ற குருதக்ஷணையை நான் உங்களுக்குத் தர விரும்புகிறேன்.அந்த சந்தோஷத்துடன் நான் இந்த குருகுலத்தை விட்டுச் செல்வேன்.உங்களால் அந்த மாதிரி தத்தம் செய்ய முடியும்.ஏனென்றால் நீங்கள் சித்த புருஷர்.நீங்கள் உங்கள் கர்மபலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.அதனால் உங்கள் கைகளில் ஜலத்தை எடுத்து ஆவாகனம் செய்து எனக்கு தத்தம் செய்து கொடுத்தால் உங்கள் வாத நோய் சரியாகி விடும்.அது உங்களால் முடியும் என்று கூறினார்.இதைக் கேட்ட குரு சிரித்துக் கொண்டு சொல்லலானார் ஒரு குருவானவன் தன் சிஷ்யனுக்கு ஆத்ம ஞானத்தையும் கல்வி கேள்விகளையும் சாஸ்திரங்களையும்,சகல வித்தைகளையும் கடவுள் பக்தியையும் புராணங்களையும் போதிக்க வேண்டுமே தவிர நீ கேட்டாய் என்பதற்காக நான் என் நேர்யைத் தரக் கூடாது. அவ்வாறு நான் செய்தால் இந்த ஊர் மக்கள் என்னை பழிப்பார்கள்.

குருவானவர் தன் சீடனை சொந்த மகனாக பாவிக்க வேண்டும்.எந்த தந்தையாவது தன் குழந்தைக்கு ரோகத்தைத் தருவாரா?என்னுடைய கர்ம பலனால் வந்த இந்த ரோகம் என்னுடனே போகட்டும்.இதை வாங்கிக் கொண்டு நீ அவஸ்தைப் பட வேண்டாம்.அது மட்டுமில்லை. நான் உனக்கு என் ரோகத்தைக் கொடுத்தால் இந்த ஊர் மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?இந்த ஊரில் எனக்கு உள்ள நல்ல பெயர் உன்னால் கெட்டு விடும்.அவர்கள் என்னைப் பார்த்து ஏளனமாகப் பேசுவார்கள்.அதனால் நீ இங்கிருந்து புறப்படு என்றார்.ஆனால் பட்டத்ரி அதெல்லாம் இல்லை.நீங்கள் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்று அவரை வற்புறுத்தினார்.அதற்கு குரு நீ வியாதியால் கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.நீ என்னை விடச் சிறியவன்.உன் ஆச்சார்ய பக்தியைக் கண்டு என் மனம் மகிழ்கிறது. உன்னைப் போல் ஒரு சிஷ்யன் கிடைக்க நான் மிகவும் கொடுத்து வைத்திருக்கிறேன்.இருந்தாலும் இது தர்மம் கிடையாது.ஆகையால் நீ கிளம்பு என்று கூறுகிறார்.

அதற்கு பட்டத்ரி குருவே எனக்கும் உங்களுக்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது.நான் உங்களை விட வயதில் சிறியவன்.அதனால் இந்த ரோகத்தைத் தாங்கும் சக்தி உங்களை விட எனக்கு அதிகம் இருக்கும். அது மட்டுமில்லை நீங்கள் இந்த வியாதியை எனக்குக் கொடுத்தாலும் கூட நான் இதனால் கஷ்டப்பட மாட்டேன் ஏனென்றால் நீங்கள் ஆச்சார ஸ்ரேஷ்டராக இருக்கிறீர்கள்.நீங்கள் வைத்தியரிடம் செல்வது கிடையாது.இதற்கு எந்த மருந்து மாத்திரையும் எடுத்துக் கொள்வது கிடையாது.ஆனால் நான் அப்படி இல்லை.நான் கேரள மாநிலத்தில் உள்ள சிறந்த வைத்தியரிடம் காட்டி என் நோயை குணப்படுத்திக் கொள்வேன்.அதனால் உங்கள் நோய் என்னிடம் வெகு நாட்கள் இருக்கும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.நான் இன்னும் ஒரு வாரத்தில் நன்கு குணமாகி உங்களை வந்து நமஸ்கரிப்பேன்.அதற்கு எனக்கு ஆசிர்வதியுங்கள் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறார்.

பட்டத்ரியின் பிடிவாதமான வார்த்தைகளைக் கேட்ட அச்யுதபிஷாரடி தன் கண்களை மூடிக் கொண்டு சிந்தித்தார் தன்னுடைய ஆத்ம பலத்தால் வருங்காலத்தை நினைத்துப் பார்த்தார்.சிருஷ்டியின் சூட்சுமம் புரிந்துவிட்டது அவருக்கு.இவையெல்லாம் அந்த இறைவனின் திருவிளையாடலே.... இவனின் பிடிவாதத்திற்குக் காரணம் அந்த குருவாயூரப்பனே.இவன் தன் வாயால் நாராயணியம் கேட்க வேண்டும் என்று அந்த கிருஷ்ணன் முடிவு செய்து விட்டான் என்று அவர் நினைக்கையில் அவர் மனக்கண் முன் கிருஷ்ணன் வந்தான். தலையில் மயில் பீலி அணிந்து பட்டுப் பீதாம்பரம் உடுத்தி புல்லாங்குழலுடன் நின்று புன்முறுவல் புரிந்தான்.தான் கண்ட காட்சியைக் கண்டு அச்யுத பிஷாரடி மெய் சிலிர்த்துப் போனார்.பக்தியின் ஆழத்தை நினைத்து வியந்து போனார்.தன் பக்தனுக்காக அந்த மாயக் கண்ணன் என்ன லீலை வேண்டுமானாலும் செய்வான் என்று நினைத்தார்.அதனால் இதை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது.இது தெய்வ சங்கல்பம் என்று புரிந்து கொண்டார்.எனவே தன் கையில் ஜலத்தை எடுத்து அவருக்கு தன் ரோகத்தை தத்தம் செய்து கொடுத்து விட்டார்.

அடுத்த நிமிஷம் குரு எப்படி இருந்தாரோ அப்படி பட்டத்ரியும் பட்டத்ரி எப்படி இருந்தாரோ அப்படி குருவும் ஆகி விட்டனர்.உடனே குரு தன் மற்ற சீடர்களிடம் இவனைக் கொண்டு போய் இவனது வீட்டில் சொல்லி விட்டுவிட்டு வாருங்கள்.ஏனென்றால் படிக்கச் சென்ற குழந்தை ரோகத்துடன் வந்தால் அந்த பெற்றோர் மனம் எவ்வளவு பாடுபடும்?குரு எவ்வளவு சொல்லியும் கேளாமல் குருவே நிர்பந்தப்படுத்தி அவரின் ரோகத்தை இவன்தான் வாங்கிக் கொண்டு விட்டான் என்று கூறுங்கள். அவர்கள் என்னை தப்பாக நினைக்கக் கூடாது என்றார்.பட்டத்ரியை ஒரு பல்லக்கில் வைத்து தூக்கிக் கொண்டு வந்து அவரது வீட்டில் விட்டனர் சிஷ்யர்கள்.வீட்டுக்கு வந்த பட்டத்ரியைப் பார்த்த குடும்பத்தினருக்கு குரு மீது மிகுந்த கோபம்.இவன்தான் கேட்டான் என்றால் அந்த குரு எப்படி ரோகத்தைத் தன் சீடனுக்குக் கொடுக்கலாம்.மற்ற சீடர்களுக்கு இல்லாத அக்கறை இவனுக்கு ஏன்?படிக்கச் சென்ற பிள்ளை இப்படி ரோகத்துடன் வந்து விட்டானே!இவனை எப்படி குணமாக்குவது.எந்த வைத்தியரைப் பார்ப்பது என்று மனச் சஞ்சலம் அடைந்தனர்.

இவரை அழைத்துக் கொண்டு பிரபல வைத்தியர்களிடம் சென்றனர். ஆனால் எங்கு சென்றாலும் அவரது நோயின் வலிமை கூடியதே அன்றி ஒரு துளியும் குறையவில்லை.அவர் சாப்பிட்ட மருந்து,மாத்திரைகள், சூர்ணத்தினால் எல்லாம் எந்த ஒரு பலனும் இல்லை.மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டால் உடலில் உள்ள வியாதியின் வலி குறையும் ஆனால் இவருக்கு நாளுக்கு நாள் வலி கூடியது.கை,கால்களை துளிக் கூட அசைக்க முடியவில்லை.வைத்தியத்தினால் அவர் உடலில் ஒரு முன்னேற்றமும் இல்லை.அவர் குருவிடம் இருந்து எப்படி அந்த ரோகத்தை வாங்கினாரோ அப்படியே இருந்தது.எல்லா வைத்தியர்களிடமும் காட்டி விட்டு இனி செல்ல கேரளாவில் வைத்தியரே இல்லை என்ற நிலைமைக்கு வந்தாகிவிட்டது.ஆனாலும் அவர் ரோகம் குணமாகவில்லை...

கேரளாவிலுள்ள எல்லா வைத்தியர்களிடமும் சென்று அவர்கள் சொன்னபடி எல்லா வைத்தியம் செய்தும் எல்லா மருந்துகளும் எடுத்துக் கொண்டும் பட்டத்ரிக்கு ரோகம் குணமாகவில்லை.இப்பொழுது பட்டத்ரி சிந்திக்க ஆரம்பித்தார்.நாம் நல்ல சிந்தனையோடுதானே நம் குருவிடம் இருந்து இந்த வியாதியை வாங்கிக் கொண்டோம்.ஆனாலும் ஏன் குணமாகவில்லை?அதற்கு ஒரே காரணம் நாம் குருவிடம் கர்வமாகப் பேசி விட்டோம்.வியாதி போகாததற்கு உங்கள் ஆசாரம் தான் காரணம்.ஆனால் எனக்கு அப்படி இல்லை.வைத்தியரிடம் சென்றால் தீர்ந்து விடும்.ஒரு வாரத்தில் வந்து உங்களை நமஸ்கரிக்கின்றேன் என்று கூறி விட்டேன்.பகவானிடம் கூட கர்வமாகப் பேசலாம்.ஆனால் குருவிடம் கர்வமாகப் பேசக் கூடாது.நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது.நான் மாபெரும் அபச்சாரம் அல்லவா செய்திருக்கிறேன்? அதனால்தான் என்ரோகம் இன்னும் தீரவில்லை.ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியப் பங்கு வகிப்பவர்களில் குருவே முதலிடம் பெறுகிறார்.குரு சொன்னதைக் கேட்காத சீடர்கள் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார்கள்.மகாபலி சக்கரவர்த்தி யாகம் செய்தபோது அவரது குரு சுக்ராச்சாரியார் எவ்வளவு சொல்லியும் கேளாமல் வாமனனுக்கு மூன்றடி நிலத்தை தத்தம் செய்து கொடுத்தான் மகாபலி.விளைவு?அவன் தன் குடும்பத்துடன் அதள பாதாளத்திற்குச் சென்றான்...

இப்படியாகத் தான் தன் குருவை அபசாரமாகப் பேசியதற்காக பட்டத்ரி மிகவும் வருத்தப் பட்டுக் கொண்டார்.இனி நாம் என்ன செய்வது?இந்த நோயை எப்படிப் போக்குவது?என்று தன் மனதினுள் சிந்தித்துக் கொண்டிருந்தார்.எப்பொழுதுமே வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுபவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும்போது தான் தன் ஜாதகத்தை நினைப்பார்கள்.எந்த ஜோசியரிடம் போவது என்ன பரிகாரம் செய்வது என்று சிந்திக்கத் தொடங்குவார்கள். அதுபோலத்தான் இவரும் நினைத்தார்.எந்த ஜோதிடரிடமாவது தன் ஜாதகத்தைக் காட்டி ஏதாவது பரிகாரம் உண்டா என்று கேட்கலாம் என்று நினைத்தார்.அப்போது அவர்கள் ஊரில் எழுத்தச்சன் என்று ஒரு பிரபல ஜோசியர் இருந்தார்.அவர் யார் வீட்டுக்கும் போய் ஜோதிடம் பார்க்க மாட்டார்.அவர் வீட்டிற்கு நாம் சென்றால் மட்டுமே ஜோதிடம் பார்ப்பார். அவர் அஷ்ட மங்கல ப்ரஸனம் என்று எட்டு விதமான மங்கலப் பொருட்களை வைத்துக் கொண்டு சோழி உருட்டி அவர்கள் வந்த நேரத்தையும் கணக்கில் வைத்து அவர்கள் கஷ்டத்தையும் மனதில் நினைத்து அது தீர ஜோதிடம் பார்த்துச் சொல்வார்.பட்டத்திரியும் நோயின் காரணமாக அவர் வீட்டுக்குச் செல்ல முடியாது.அவரும் வர மாட்டார்.என்ன செய்வது என்று யோசித்தார்.

அவர் தம் குடும்பத்தினரிடம் தன்னை அழைத்துக் கொண்டு செல்லும்படி கேட்டதற்கு வைத்தியருக்கு செலவு செய்ததே போதும்.இன்னும் ஜோதிடருக்கு வேறு செலவா?நீங்கள் இப்படியே இருங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி விட்டனர்.ஆனால் நாளுக்கு நாள் அவரது ரோகத்தின் வீரியம் அதிகரிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவர்கள் வீட்டு வேலைக்காரர்களில் ஒருவன்.சிறு வயது முதலே அந்த வீட்டில் வேலை செய்வதாலும் பரம்பரை பரம்பரையாக அவர்களைத் தெரியும் என்பதாலும் அவனுக்கு பட்டத்ரி மீது மிகுந்த பாசம் உண்டு. பட்டத்ரி அவன் மனம் நம் எஜமானர் இப்படி கஷ்டப்படுகிறாரே! அவருக்காக நாம் சென்று அவரது ஜாதகத்தைக் காட்டி பார்த்துக் கொண்டு வரலாம்.என்று நினைத்தான்.அதை மெதுவாக அவரிடமும் கூறினான். ஐயா நான் வேண்டுமானால் உங்கள் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு போய் ஜோசியர்கிட்ட காட்டி கேட்டுக் கொண்டு வருகிறேன் என்றான். இதைக் கேட்ட பட்டத்ரி மிகவும் சந்தோஷப்பட்டுக் கொண்டு என் குடும்பத்தாரும் உறவினர்களும் கூட முடியாது என்று சொல்லி விட்டபோது நீ எனக்காக செல்கிறேன் என்று சொல்கிறாயே!எனக்கு மிகவும் ஆனந்தமாக இருக்கிறது என்று கூறி தன் ஜாதகத்தை அவனிடம் கொடுத்து அனுப்பினார்.

அவன் சென்று அந்த ஜோதிடரின் காலில் விழுந்து நமஸ்கரித்து பட்டத்ரியைப் பற்றி முழுமையாகக் கூறி அவருடைய ஜாதகத்தைக் காட்டி இது என் எஜமானரின் ஜாதகம்.அவர் வாத நோயால் வாடுகிறார். அவரால் வர இயலாது.அவர் குடும்பத்தாரும் வர மறுக்கின்றனர். அதனால்தான் நான் வந்தேன்.இவர் நோய் தீருமா என்று பார்த்துச் சொல்லுங்கள் என்று கேட்டான்.அவனுடைய எஜமான விஸ்வாசத்தைப் பார்த்த ஜோதிடர்.உனக்காக நான் பார்த்துச் சொல்கிறேன் என்று கூறி பட்டத்ரியின் ஜாதகத்தைப் பார்த்தவர் பிரமித்துப் போனார்.பின் அவர் சோழியைப் போட்டுப் பார்த்து அஷ்ட மங்கல ப்ரஸனம் பார்த்து.அவன் வந்த நேரத்தையும் பார்த்து அவனது உள்ளக் கிடக்கையும் அறிந்து சொல்லலானார்.எஜமானனுக்குக் கண்டிப்பாக இந்த வியாதி நீங்கும். இதற்குப் பரிகாரம் இருக்கிறது.ஆனால் ஏழு எட்டு கோயில்களுக்குச் சென்று பரிகாரம் செய்ய வேண்டாம்.ஒரே ஒரு பரிகாரம் செய்தால் போதும் என்றார்.உடனே அந்த வேலைக்காரன் ஆவலோடு அப்படியா?என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா நான் உடனே செய்கிறேன் என்றார்.

அதற்கு எழுத்தச்சர் இந்த பரிகாரத்தை நீ செய்ய வேண்டாம் உன் எஜமானார் தான் செய்ய வேண்டும். திருச்சூர் அருகில் குருவாயூர் என்றொரு பிரசித்தி பெற்ற கோயில் உள்ளது.கிருஷ்ணன் பிரத்யக்ஷ பேசும் தெய்வமாக விளங்குகின்ற க்ஷத்ரம்.குருவும் வாயுவும் பிரதிஷ்டை செய்த தெய்வம் பெரும் அதிசயங்கள் நிகழ்ந்த க்ஷத்ரம். கிருஷ்ணரே ஸ்நானம் செய்த புண்ணியக் குளமான நாராயண சரஸ் உள்ள ÷க்ஷத்ரம்.அப்பேர்ப்பட்ட குருவாயூருக்கு இவரை நேரே அழைத்துச் செல்.அங்கு கோயிலுக்கு அருகில் உள்ள நாராயண சரஸ் என்னும் தீர்த்தத்தில் நீராட வைத்து பின் புது வஸ்திரம் அணிவித்து கொடிக்கம்பமாகிய ஜ்வஜஸ்தம்பம் தாண்டி உள்ளே நுழையும் இடத்தில் பகவானுக்கு வலது பக்கம் நமக்கு இடது பக்கம் உள்ள திண்ணையில் அவரை உட்கார வைத்து மத்ஸ்யம் தொட்டுப் பாட சொல் என்று கூறினார்.

இதைக் கேட்ட அந்த வேலைக்காரன் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து விட்டான்.அவனைக் கண்ட பட்டத்ரி என்னப்பா ஆயிற்று?எனக்கு ஏதாவது நிவாரணம் உண்டு என்று சொன்னாரா?என்று மிகவும் ஆவலுடன் கேட்டார்.அதற்கு அவன் ஐயா அவர் உங்களுக்கு வியாதி குணமாகும்.கண்டிப்பாகப் பரிகாரம் இருக்கிறது என்று கூறினார்.அதுவும் ஒரே ஒரு பரிகாரம் செய்தால் போதும் என்றும் கூறினார்.ஆனால் அதற்குப் பிறகு அவர் சொன்ன பரிகாரம் தான் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது என்றான்.அதற்கு பட்டத்ரி அப்படி என்ன சொல்லி விட்டார்? என்று ஆர்வமாகக் கேட்க அவன் ஜோதிடர் சொன்ன விவரமெல்லாம் சொல்லி புனிதமான க்ஷத்ரமான குருவாயூரில் தங்களை மீனை நாக்கில் வைத்துக் கொண்டு பாடச் சொல்கிறார்.அந்தக் கோயிலில் ஒரு சின்னக் குழந்தை அசுத்தம் செய்து விட்டாலே மூன்று மணி நேரத்திற்குக் கோயில் கதவை மூடி புண்யாகவாசனம் என்ற சுத்தி செய்துவிட்டுத்தான் பிறகு திறப்பார்கள்.

அப்பேர்ப்பட்ட பெருமை மிகுந்த கோயிலில் உங்களை மீனை நாக்கில் தொட்டுப் பாடச் சொல்கிறார்.அப்படிச் செய்வதற்கு நீங்கள் மேல்புத்தூரிலேயே உங்கள் வாத ரோகத்துடன் இருக்கலாம்.நானே உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்.இந்த ஜோசியர் இப்படிச் சொல்லுவார் என்று தெரிந்திருந்தால் நான் போயே இருக்க மாட்டேன்.நான் ஏன் தான் அந்த ஜோசியரிடம் போனேனோ என்று வருத்தப்படுகிறேன் என்றான்.ஜோசியர் கூறியதன் உட்பொருளைப் புரிந்து கொண்டார் பட்டத்ரி.அவர் மிகவும் சந்தோஷப்பட்டுக் கூறலானார்.நாம் இன்றே குருவாயூர் செல்ல வேண்டும். அதற்கு உண்டான ஏற்பாடுகள் செய்யுங்கள் என்றார்.இதைக்கேட்ட வேலைக்காரன் நான் கூட வர முடியாது.குருவாயூர் போன்ற புண்ணிய க்ஷத்ரத்தை நீங்கள் அசுத்தம் செய்வதை நான் விரும்பவில்லை.நீங்கள் உங்கள் வியாதி குணமாக வேண்டும் என்பதற்காக இதைச் செய்யலாம். ஆனால் இதற்கு உடன்பட என்னால் முடியாது என்று மிகவும் கோபமாகக் கூறினான்.

அவனை சாந்தப்படுத்திய பட்டத்ரி அப்பா அதற்கு அர்த்தம் அதுவல்ல. மத்ஸ்யம் தொட்டுப் பாடணும் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? சாதாரண மீன் என்று நீ ஏன் நினைத்துக் கொள்கிறாய்?பகவான் குருவாயூரப்பனின் அவதாரங்களில் முதல் அவதாரம் மத்ஸ்ய அவதாரம்.அவர் மிகவும் இஷ்டப்பட்டு எடுத்த அவதாரமும் மத்ஸ்ய அவதாரம்தான்.மத்ஸ்யம் தொட்டு என்றால் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவதாரம் முழுவதையும் அவர் என்னைப் பாடச் சொல்லி இருக்கிறார்.அதனால் நான் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவ தாரங்களைப் பற்றி குருவாயூரில் பாட வேண்டும்.அதனால் இப்பொழுதே என்னை குருவாயூருக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார்.தன் வியாதிக்குப் பரிகாரம் கிடைத்த சந்தோஷம் அவருக்கு. அதுமட்டுமில்லாமல் தம் குரு தமக்குக் கற்றுக் கொடுத்த சமஸ்கிருத மொழியில் பாட அந்த பகவானே நம்மைப் பணித்திருக்கிறார் என்று நினைத்து அவர் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன.

அந்த குருவாயூரப்பனைப் பாடப் பாட நம் ரோகம் நிவர்த்தி ஆகும் என்று நினைத்ததும் அவர் மனம் ஆனந்தக் கூத்தாடியது.பகவானின் பெருங் கருணையை எண்ணி மனம் பரவசம் அடைந்தது.ஆனால் இவருடைய வியாதியால் ஏற்கெனவே நொந்து போயிருந்த உறவினர்கள் இது வேறா என்ற வெறுப்புடன் வேறு வழியில்லாமல் அவர் குருவாயூர் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்தனர்.ஒரு பத்துப் பதினைந்து பேர் அவரை ஒரு பல்லக்கில் வைத்துத் தூக்கிக் கொண்டு குருவாயூர் சென்றனர்.பட்டத்ரியின் மனம் பல்லக்கை விட வேகமாகச் சென்றது. அந்த குருவாயூரப்பனின் தரிசனத்திற்காக அவர் மனம் ஏங்கியது. அவர் மனத்தில் இருந்த பயம் விலகியது.இந்த ரோகத்தால் இனி நம்மை ஒன்றும் செய்ய முடியாது.அந்தக் குட்டிக் கிருஷ்ணன் நம்மைப் பார்த்துக் கொள்வான்.நாளை காலை நிர்மால்ய தரிசனத்தின்போது நாம் அந்த குருவாயூரப்பன் சன்னதியில் இருப்போம் என்று எண்ணிக் கொண்டார்.

அடுத்த நாள் விடியற்காலையில் அவர்கள் குருவாயூர் சென்றடைந்தனர். அவரை அழைத்து வந்தவர்கள் அவரை நாராயண சரஸில் ஸ்நானம் செய்ய வைத்தனர்.பகவானே ஸ்நானம் செய்த குளமா?இதில் ஸ்நானம் செய்ய நாம் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று அவர் மனம் துடித்தது.புது வஸ்த்ரம் உடுத்தினர்.அவரை தூக்கிக் கொண்டு கருடரை வணங்கி பின் பிரதான வாயிலைத் தாண்டி கொடிக் கம்பத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தின் சிறிய வாயில் நுழைந்தனர்.தினமும் காலையில் மூன்று மணிக்கு நிர்மால்ய தரிசனத்திற்கு வைகுண்டத்திலிருந்து அந்தர்யாமியாக(கண்ணுக்குத் தெரியாமல்)வந்து குருவாயூரப்பனை தொழுது செல்லும் முப்பத்து முக்கோடி தேவர்கள், பாகவதோத்தமர்களான வியாஸர்,பிரகலாதன்,நாரதர்,குரு,வாயு, துருவன்,அம்பரீஷன்,அஷ்டதிக் பக்தர்கள் அனைவரும் அவனைத் தொழ வந்திருந்தனர்.அவர்களில் ஒருவராக இவரும் உள்ளே நுழைந்தார்.இவரைக் கண்ட தேவர்கள் இவரால் நாராயணியம் என்னும் மாபெரும் க்ரந்தம் ஒன்று உருவாகப் போகிறது என்பதை உணர்ந்து மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.

குருவாயூரப்பனின் தரிசனம் ஒரு விநாடி நேரமாவது கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் பக்தர்களுக்கு நடுவே இவரும் உள்ளே நுழைந்தார்.அப்பொழுது அவரைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் அங்குள்ள திண்ணையைக் கண்டனர்.பகவானுக்கு வலப் பக்கம் தமக்கு இடப்பக்கம் உள்ள அந்தத் திண்ணையில் அவரை அமர வைத்தனர். பட்டத்ரி முதன்முறையாக குருவாயூர் வருகிறார்.அவர் இதற்கு முன் குருவாயூரப்பனைப் பார்த்தது இல்லை.ஆனால் கேள்விப்பட்டிருக்கிறார். அவரது உடல் பரவசத்தால் சிலிர்த்தது.சாதாரண மானிடனான என்னை அந்த பகவானின் கருணையன்றி வேறு எது இங்கு அழைத்து வரமுடியும்?இவரது திவ்ய ஸ்வரூபத்தைக் காண கண் கோடி வேண்டுமே?எத்தனை அழகு?எவ்வளவு தேஜஸ்?இப்பேர்ப்பட்ட அழகு வாய்ந்த இவரைப் பாட என்னால் முடியுமா?அதற்கு நான் தகுதி உடையவனா?அந்த பகவான் என்னை ஏற்றுக் கொள்வானா?அவர் என்னையும் தன் சரணாரவிந்தங்களில் சேர்த்துக் கொள்வானா?இப்படி பட்டத்ரி தன் மனத்திற்குள் ஆயிரம் கேள்விகளை எழுப்பிக் கொண்டே அந்த குருவாயூரப்பனைக் காணத் துடிக்கிறார்.அந்த மண்டபத்தில் அமர்ந்து கொண்டு அவரது தேஜோமய திவ்ய ஸ்வரூபத்தை தியானித்து கண்ணா என பக்தியுடன் கதறினார்.அவரது கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன.குருவாயூரப்பன் அவருக்கு செவி சாய்த்தானா?

கருத்துகள் இல்லை: