வியாழன், 5 செப்டம்பர், 2019

ஒரு நாள் “வபன பௌர்ணமி“! பகுதி ( 2)

அன்று பெரியவாளுக்கு பயங்கர காய்ச்சல் ! இந்தக் காய்ச்சலோடு 73 {72+1} தடவை ஸ்நானம் செய்வது அவருக்கு ஸாத்யமாக இருக்கலாம். ஆனால் அதைப் பார்க்க பாரிஷதர்களுடைய ஹ்ருதயங்களுக்கு அஸாத்ய பலம் இல்லை ! அதனால் அவர்களுடைய கண்ணீர் அஸ்த்ரத்துக்கு செவி மடுத்து பெரியவா வபனம் செய்து கொள்ள வில்லை. எனவே ரெண்டு மாஸம் அதாவது மறுபடி அடுத்த வபன பௌர்ணமி வரை காத்திருக்க வேண்டியிருந்தது. விளைவு ? வேறென்ன? பெரியவாளின் தாடியும் தலை முடியும் ஜாஸ்தியாக நீளமாக வளர்ந்து விட்டது ! இந்த தாடி மீசையோடு பெரியவா ஏதோ ஒரு கிராமத்தில் ஸஞ்சாரம் செய்து கொண்டிருந்தார். ஓரிரண்டு பாரிஷதர்களைத் தவிர ஒருவருமே இல்லை. பெரியவா தாடி பறக்க ஒரு மரத்தடியில் உட்கார்ந்து ஜபம் பண்ணிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு தம்பதிகள் பெரியவாளை தர்ஷனம் பண்ண வந்தனர். ஏராளமான முடியும் தாடி மீசையோடும் இருந்த பெரியவாளை அவர்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. யாரோ வழிப்போக்கர் ஸந்யாஸி என்று நினைத்துக் கொண்டார்கள். நேராக பெரியவாளிடமே போனார்கள்… இங்க... சங்கராச்சார்யார் வந்திருக்காராமே! ஸ்வாமி எங்க இருக்கார்ன்னு சொல்ல முடியுமா? பெரியவா அமைதியாக நானும் ஸ்வாமியைத்தான் தேடிண்டு இருக்கேன் இருக்கற எடம் தெரியல தனக்கே உரிய ஸ்லேடையில் சிரிக்காமல் படு ஸீரியஸாக் கூறினார். வந்தவர்களுக்கோ ஏமாற்றம்! ஸ்வாமிகள் இந்தப் பக்கந்தான எங்கியோ இருக்கறதா சொன்னா! அவர் இருக்கற எடம் தெரியலியாமே! அவர்கள் திரும்பி நடந்து சென்ற போது எதிரே ஒரு பாரிஷதர் வந்தார். சங்கராச்சார்ய ஸ்வாமி இங்க எங்கியோ வந்திருக்காராமே! ஆமா அதோ அங்க இருக்காளே! அவர் காட்டியது மரத்தடியில் உட்கார்ந்திருந்த பெரியவாளைத்தான்! தம்பதிகளுக்கு வெலவெலத்து விட்டது! எவ்வளவு பெரிய அபசாரம்! கொஞ்சங்கூட அடையாளமே தெரியாமல் பெரியவாகிட்டயே போயி பெரியவாளைப் பத்தி விஜாரிச்சிருக்கோமே! ”பெரியவா சிரித்துக் கொண்டே அவர்களை கூப்பிட்டார். அது தாடி ரொம்ப வளந்து போச்சு ! அதுனால தான் என்னை அடையாளம் கண்டுக்க முடியல! வாஸ்தவத்ல நாந்தான் ஒங்களை பயமுறுத்தி இருக்கேன் ! பரவாயில்ல! ஸமாதானப்படுத்தும் விதத்தில் அவர்களிடம் அவர்கள் யார் எங்கிருந்து வருகிறார்கள் என்பது போலெல்லாம் பேசி ப்ரஸாதம் கொடுத்தார்.

கருத்துகள் இல்லை: