வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

274 சிவாலயம் அருள் மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : வசிஷ்டேஸ்வரர்
அம்மன் : உலகநாயகியம்மை
தல விருட்சம் : முல்லை, வெண்செண்பகம், செவ்வந்தி
தீர்த்தம் : சக்கர தீர்த்தம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருத்தென்குடித்திட்டை, திட்டை
ஊர் : தென்குடித்திட்டை
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : திருஞானசம்பந்தர்,தேவாரப்பதிகம்

கருவினால் அன்றியே கருவெலாம் ஆயவன் உருவினால் அன்றியே உருவுசெய் தானிடம் பருவநாள் விழவொடும் பாடலோடு ஆடலும் திருவினார் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே. திருஞானசம்பந்தர்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 15வது தலம்.  
      
விழா : மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, குருப்பெயர்ச்சி  
      
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சூரிய பகவான் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் கருவறையில் லிங்கத் திருமேனியின் மீது தன் கிரகணங்களை பரப்பி பூஜை செய்கிறார். உத்ராயண புண்ணிய காலத்தில் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளில் சூரிய பகவான் உதயசூரியனாக வசிஷ்டேஸ்வர் திருமேனியில் பட்டு சூரியபூஜை செய்கிறார். மூலஸ்தான வசிஷ்டேஸ்வரர் திருமேனியில் விமானத்தில் இருந்து 20 நிமிடத்திற்கு ஒருமுறை நீர் சொட்டு சொட்டாக இதுவரை விழுந்து கொண்டுள்ளது அதிசயமாகும். நவக்கிரகத்தில் உள்ள வியாழன் (குரு) தனி சன்னதியில் சிவனுக்கும் அம்பாளுக்கும் நடுவில் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
      
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், தென்குடித்திட்டை- 614 206.தஞ்சாவூர் மாவட்டம்.போன்:+91-4362 252 858, 94435 86453 
     
தகவல் : குருபகவானை வசிஷ்ட ரிஷி ராஜகுருவாக வழிபட்டதால் இத்தலம் குரு பகவான் தலமாக உள்ளது. இத்தலத்தில் ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடக்கிறது.  
      
பெருமை : திட்டை என்பது ஞானமேடு. மனித உடல் மூலாதாரம், சுவாதிதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. இத்தல முருகன் தன்னை வழிபடுபவர்களுக்கு முதலில் இந்த ஆறு ஆதார ஞானம் அருளி அதற்கு மேல் ஞானமாகி மெய்யுணர்வையும் தந்து பேரானந்த பெருவாழ்வில் நிலை பெற வைப்பார். எனவே இத்தலத்தில் முருகன் மூல மூர்த்தியாக விளங்கி உடலால் தென்குடி ஆகவும், உயிரால் ஞானமேடு எனப்படும் திட்டையாகவும் இருந்து அருள் பாலிக்கிறார்.

சூரிய பூஜை :  சூரிய பகவான் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் கருவறையில் லிங்கத் திருமேனியின் மீது தன் கிரகணங்களை பரப்பி பூஜை செய்கிறார். இதேபோல் உத்ராயண புண்ணிய காலத்தில் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளில் சூரிய பகவான் உதயசூரியனாக வசிஷ்டேஸ்வர் திருமேனியில் பட்டு சூரியபூஜை செய்கிறார். இவ்விரு காலங்களில் சுவாமிக்கு சூரிய பூஜை நடப்பது சிறப்பாகும்.

சிறப்பு : மூலஸ்தான வசிஷ்டேஸ்வரர் திருமேனியில் விமானத்தில் இருந்து 20 நிமிடத்திற்கு ஒருமுறை நீர் சொட்டு சொட்டாக இதுவரை விழுந்து கொண்டுள்ளது அதிசயமாகும். பிரகாரத்தில் பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வகையில் ஐந்து லிங்கங்கள் உள்ளது.

குருதலம் : குரு ஸ்தலங்களில் முக்கியமான தலம் இது. பொதுவாக அமர்ந்த நிலையில் காட்சி தரும் குருபகவான், இத்தலத்தில் நின்ற நிலையில் தனி சன்னதியில் ராஜகுருவாக இருக்கிறார்.இங்கே வந்து தன்னை வேண்டுவோருக்கு உடனடியாக சென்று உதவ வேண்டும் என்பதற்காக குருபகவான் நின்ற நிலையிலேயே அருள்பாலிக்கிறார் என்கின்றனர். நின்ற நிலையிலுள்ள குருவை வழிபட்டால் மேடைப் பேச்சில் பயம் இருக்காது என்பது நம்பிக்கை. குருபெயர்ச்சியால் ஜாதக ரீதியாக பாதிக்கப்படலாம் என கருதுவோர் மட்டுமின்றி, கல்வி அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என விரும்பும் மாணவர்கள் இங்கு குருபகவானை வழிபடுகின்றனர்.  
      
ஸ்தல வரலாறு : திட்டை என்பது திட்டு அல்லது மேடு ஆகும். ஒரு பிரளய காலத்தில் இவ்வுலகமானது நீரால் சூழப்பட்டது. "ஓம்' என்ற மந்திர ஓடத்தில் இறைவன், இறைவி இருவர் மட்டும் ஏறி வர, அது ஒரு திட்டில் வந்து நின்றது. அதுவே சீர்காழி என்னும் தோணிபுரம் ஆகும். ஆதி காலத்தில் இறைவன் விரும்பி இருந்த 28 தலங்களில் 26 தலங்கள் ஊழிக்காலத்தில் மூழ்கிவிட்டன. இரண்டு தலங்கள் மட்டும் திட்டாக நின்றது. அவற்றுள் ஒன்று சீர்காழி. மற்றொன்று தென்குடி திட்டை. சீர்காழியில் ஊழிக்காலத்தில் "ஓம்' என்ற மந்திர ஒலி எழுந்தது போலவே திட்டையில் "ஹம்' என்னும் மந்திர ஒலி வெளிப்பட்டதுடன் வேறு பல மந்திர ஒலிகளும் வெளிப்பட்டன. எனவே இத்தலம் ஞானமேடு எனவும் தென்குடி திட்டை எனவும், சீர்காழி வடகுடி திட்டை எனவும் வழங்கலாயிற்று. இறைவன், இறைவியுடன் விரும்பி குடியிருக்கும் திட்டுகள் குடித்திட்டை எனப்படும். வசிஷ்டா முனிவர் ஆசிரமம் அமைத்து இத்தல ஈஸ்வரனை பூஜித்தமையால் இத்தல ஈஸ்வரன் வசிஷ்டேஸ்வரர் எனப் பெயர் பெற்றார். அம்பாள் உலகநாயகியம்மை.

கருத்துகள் இல்லை: