புதன், 10 ஜூலை, 2019

“தர்பையின் மகிமை”

  க்ருஷ்ணமூர்த்தி ஸாஸ்த்ரிகள்
(வேதபாஷ்ய ரத்னம்,வேதாந்த மீமாம்ஸா சிரோமணி)

நமது வாழ்க்கைக்கு உணவு, ஜலம், காற்று எல்லாம் தேவை. உணவு என்பது தான்யங்களின் மூலம் கிடைக்கிறது. பசி என்ற நோயை குணப்படுத்துவதால் தான்யங்களுக்கு ஓஷதிகள் என்று வைத்து தைத்திரீய உபநிஷத்தில் “ஓஷதீப்யோ அன்னம்” எனப்படுகிறது.

உணவினால் உயிருக்கு பலம் ஏற்படுதல் மட்டும் போதாது. பல நோய் எதிர்ப்பு சக்தியையும் நாம் பெற வேண்டும். அதற்காக விசேஷமாக ரத்த ஸுத்திக்காக அருகம்புல் மிகவும் பயன் படுவது போல தர்பை எனப்படும் புல்வகையானது சில சூழ்நிலைகளில் உள்ள கெடுதல்களை போக்கடிக்கும் தன்மை பெற்றது என்று வேதத்திலேயே கூறப்படுகிறது.

1.பவித்ரம் வை தர்பா : தர்பையானது புனித தன்மையைத்தருகின்றன. நமது உடலில் வெளியிலிருந்து உள்ளே புகும் தீமையைத் தடுக்கிறது. எனவே தான் நாம் எந்த ஒரு செயல் (வைதீககார்யங்கள்) செய்ய ஆரம்பிக்கும் போதும் தர்பத்தில் உட்கார்ந்து கையிலும் தர்ப்ப பவித்ரத்தை அணிகிறோம்.

2.“தர்பையின் உத்பத்தி”: வேதத்தில் பல முறை இந்த கதை வருகிறது. இந்திரன் வ்ருத்ராஸுரனை கொன்ற பொழுது வ்ருத்ராஸுரனின் தலை நதியில் விழுந்தது. அப்போது ஜலத்தில் இயல்பாக உள்ள ஒரு விசேஷமான சக்தி தெய்வத்தன்மை இரண்டும் நதியின் கரையோரத்தில் வெளிவந்து மண்டியது. அந்த இடத்தில் உடனே தர்பை முளைத்தது. எனவே யாகாதிகளான செயல்களுக்கு தேவையான சக்தியும் தெய்வத்தன்மையும் தன்னுள்ளே கொண்டுள்ளதாக தர்பையானது கருதப்படுகிறது.”இந்த்ரோ  வ்ருத்ரமஹன்………தே தர்பா அபவன்” (6.1.1)இதே ஸந்தர்பம் ப்ராம்ஹணத்திலும் (3.2.4)வருகிறது.

3.“அக்னியின் ப்ரதிநிதி”: கடைந்து எடுக்கும் அக்னி உற்பத்தியாகா விடில் மற்ற தீக்ஷிதரின் அக்னியை எடுத்து கொள்ளலாம். அதுவும் கிடைக்காவிடில் தர்பஸ்தம்பத்தில் ஹோமம் பண்ணலாம். தர்பஸ்தம்பத்தில் அக்னியின் ஸாந்நித்யம் உள்ளது. ”தர்பஸ்தம்பே ஹோதவ்யம். அக்னிவான் வை தர்பஸ்தம்ப:”(3.7.3)

4.“தீயகதிர்களைத்தவிர்ப்பது”: சந்திர ஸூர்ய க்ரஹணகாலங்களில் வீடுகளில் பெரியவர்கள் தொன்று தொட்டு ஊறுகாய் போன்ற நீடித்து பயன்படுத்தும் உணவு பொருட்களில்(ஜாடி பாட்டில்) தர்பையைக்கிள்ளி அதன் துண்டை உள்ளே போடுகிறார்கள். ஏனெனில் வெளியிலே அந்த நேரத்தில் வரும் தீயகதிர்கள் வாயிலாக உணவு பொருட்களில் கெடுதல் ஏற்படாதவாறு தர்பை தடுக்கும் தன்மை வாய்த்தது. இவ்வாறு நமது மூதாதையர்கள் பயன் படுத்தி வரும் தர்பைக்கு பலப்பல விசேஷங்கள் உள்ளன.உடல் வலிமையும் புத்தி கூர்மையும் கூட அவற்றால் ஏற்படும் என்று ஊகிக்க முடிகிறது. ஏனெனில் பாணிணி முனிவர் கௌமுதியை எழுதும் போது “பவித்ர பாணியாக உட்கார்ந்து ஆலோசித்து எழுதினார்” என்று மஹாபாஷ்யத்தில் கூறப்படுகிறது. ஒரு புனிதச்செயல் செய்யும் நேரத்தில் நமது சக்தி தடைபடாமலிருக்க நாம் கையில் தர்பத்தினாலான பவித்ரத்தை தரிக்கிறோம். முழுமையாக அந்த வேலை பூர்தியாகும் வரை கழற்றாமலிருப்பது நம் செயலுக்கு உதவுகிறது.

5.“சக்தியை பரிமாறுவது”: இந்த விதத்திலும் தர்பை உபயோகிக்கப்படுகிறது. யஜமானன் தனக்கு பதிலாக புரோஹிதரை கார்யங்கள் செய்யுமாறு அதிகாரத்தை மாற்றித்தரும் போதும். ஸ்த்ரீகளே சில கார்யங்கள் (பித்ருகார்யங்கள்) செய்ய நேரிடும் போதும் தர்பங்களை மற்றவருக்கு கொடுத்து தன் அதிகாரத்தை மாற்றுவதும் வழக்கத்தில் உள்ளது.

கருத்துகள் இல்லை: