செவ்வாய், 30 ஜூலை, 2019

108 திவ்ய தேசங்கள் :அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில்

மூலவர் :  நாவாய் முகுந்தன் (நாராயணன்)
தாயார் : மலர்மங்கை நாச்சியார் (சிறுதேவி)
தீர்த்தம் : கமல தடாகம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருநாவாய்
ஊர் :  திருநாவாய்
மாவட்டம் : மலப்புரம்
மாநிலம் : கேரளா
பாடியவர்கள்:நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்துயிர் தேவர்கட் கெல்லாம் விண்ணாளன் விரும்பியுரையும் திருநாவாய் கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே. நம்மாழ்வார்
 
விழா : வைகுண்ட ஏகாதசி, திருவோணம்  
      
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் இத்தலத்தை திருக்கோட்டியூருக்கும், திரு நறையூருக்கும் ஒப்பிட்டு மங்களாசாசனம் செய்துள்ளார். கேரளாவில் இந்த தலத்தில் மட்டும் தான் லட்சுமிக்கு தனி சன்னதி உண்டு என்கிறார்கள்.  
      
திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய் : 676 301 மலப்புரம் மாவட்டம், கேரளா மாநிலம். போன்:+91- 494 - 260 2157 
     
தகவல் : கோயிலின் சுற்றுப்பகுதியில் கணபதி, லட்சுமி, ஐயப்பனுக்கு சன்னதிகள் உண்டு. கோயிலுக்கு எதிரே உள்ள ஆற்றின் அக்கரையில் பிரம்மனுக்கும், சிவனுக்கும் தனி கோயில் உள்ளது. எனவே இத்தலத்தை மும்மூர்த்தி என அழைக்கிறார்கள். மிகப்பழமையான இக்கோயிலின் உட்புற சுவர்களில் காலத்தினால் அழியாத பல ஓவியங்கள் இன்றும் உள்ளன. காசியில் நடப்பதை போல இத்தலத்தில் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் கொடுக்கிறார்கள். கேரள மாநிலத்தில் பித்ரு தர்ப்பணம் கொடுப்பதில் இத்தலம் முதன்மை வகிக்கிறது. 


     
ஸ்தல பெருமை : ஒரு முறை ஒன்பது யோகிகள் சேர்ந்து பெருமாளை நினைத்து தவம் செய்துள்ளனர். எனவே இத்தலம் நவயோகிகள் ஸ்தலம் என அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் "நாவாய் ஸ்தலம்' ஆனது. இதை தற்போது "திருநாவாய்' என அழைக்கிறார்கள். இந்த ஸ்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். இவருக்கு மேலே உள்ள விமானம் வேத விமானம் எனப்படுகிறது. இவரை லட்சுமி, கஜேந்திரன், நவயோகிகள் தரிசனம் செய்துள்ளனர்.

ஸ்தல வரலாறு : முன்னொரு காலத்தில் மகாலட்சுமியும், கஜேந்திரனும் தாமரைப்பூக்களை பறித்து பெருமாளை பூஜித்து வந்தனர். இதில் ஒரு முறை கஜேந்திரனுக்கு அர்ச்சனை செய்வதற்கு பூக்கள் கிடைக்காமல் போனது. இதனால் வருத்தமடைந்த கஜேந்திரன் பெருமாளின் தனது நிலையை கூறி வருத்தப்பட்டான். உடனே பெருமாள் லட்சுமியை தேவியை அழைத்து இனி மேல் பூப்பறிக்க வேண்டாம் கஜேந்திரனுக்காக விட்டு கொடு என்று கூறினார். லட்சுமியும் அதன் படி செய்தாள். இதனால் மகிழ்ந்த கஜேந்திரன் தினமும் ஏராளமான பூக்களைப்பறித்து பெருமாளை அர்ச்சித்து வந்தான். பூஜையின் போது பெருமாள், லட்சுமி தேவியை தன்னுடன் ஏக சிம்மாசனத்தில் அமரச்செய்து கஜேந்திரனின் பூஜையை ஏற்று தரிசனம் தந்ததாக புராண வரலாறு கூறுகிறது. கேரளாவில் இந்த தலத்தில் மட்டும் தான் லட்சுமிக்கு தனி சன்னதி உண்டு என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: