வெள்ளி, 5 ஜூலை, 2019

ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள்-பகுதி:1
           (ஸ்ரீதர ஐயாவாள்)

எத்தனையோ மகான்கள் பகட்டையும் படாடோபத்தையும் விரும்பாமல் எளிமையாக வாழ்ந்த ஒழுக்கசீலர்களாக இருந்திருக்கிறார்கள் இவர்களுடைய சரிதத்தைப் புரட்டினால் கண்கள் கசியும் இதயம் இளகும்.தங்களுக்கென வாழாமல் பிறரது நலன்களை முன்னிறுத்தியே இவர்களது வாழ்க்கை அமைந்துள்ளது.இவர்களுடைய  ஜீவன் அடங்கி இருக்கும் சந்நிதியை தரிசிப்பதே பெரும் பாக்கியம்.நம் முன்னோர் செய்த தவப்பயனின் விளைவாகவும் நமக்குள் இருக்கும் ஆன்மிக ஆற்றாலும்தான் அந்த பாக்கியம் நமக்குக் கிடைக்கிறது.

கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருவிசலூர் என்கிற கிராமம்.  திருவிசநல்லூர் என்றும் சொல்வது உண்டு.திருஞானசம்பந்தர் தனது தேவாரத்தில் வியலூர் என்று இந்த ஊரைக் குறிப்பிடுகிறார்.இங்குள்ள சிவாலயம் பாடல் பெற்றது தவிர அருளாளர்களின் திருவடிபட்ட திவ்ய பூமி இது.போதேந்திரர்,மருதநல்லூர் சத்குரு ஸ்வாமிகள்,சதாசிவ பிரம்மேந்திரர்(காஞ்சி காமகோடி பீடத்தில் வந்த பரமசிவேந்திரரின் சிஷ்யர்).ராமபத்ர தீட்சிதர்,ராமசுப்பா சாஸ்திரிகள் முதலானோரின் வாழ்க்கையுடன் தொடர்புகொண்ட ஊர் திருவிசநல்லூர்.ஸ்ரீஐயாவாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் கன்னடப் பிரதேசத்தில் பிறந்திருந்தாலும் தனது வாழ்நாளின் பிற்பகுதியை இங்குதான் கழித்தார்.

திருவிசநல்லூர் அக்ரகாரத்தில் வசித்து வந்தார் ஐயாவாள்.அருகில் பிரமாண்டமாக ஓடும் காவேரி நதிக்கு அக்கரையில் திருவிடைமருதூர்.அப்போதெல்லாம் இந்தப் பகுதியில் சிவக்ஷேத்திரம் என்றால் அது திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க ஸ்வாமி கோயிலைத்தான் குறிக்கும்.எனவே தினமும் அர்த்தஜாம பூஜை வேளையில் மகாலிங்க ஸ்வாமியைத் தரிசிக்க திருவிசநல்லூரில் இருந்து பரிசலில் அக்கரைக்குச் சென்று வருவார்.தவிர ஒவ்வொரு பிரதோஷ வேளையின்போதும் தவறாமல் அங்கு இருப்பார் ஐயாவாள்.ஒருநாள் அர்த்தஜாம் தரிசனத்துக்காக ஐயாவாள் மகாலிங்க ஸ்வாமி சந்நிக்கு வந்தபோது அவர் முகத்தில் கூடுதல் பிரகாசம்.தன்னுடன் இருந்த பக்தர்களுக்குப் பல உபதேசங்களை உருக்கமாக வழங்கினார்.அன்றைய தினம்.இறை இன்பம் குறித்த அவரது செயல்பாடுகளைக் கண்டு பக்தர்கள் பிரமித்து நின்றனர்.ஐயாவாள் சிவ நாமத்தை ஜபித்துக்கொண்டே இருந்தார்.கர்ப்ப கிரகத்துக்குள் மகாலிங்க ஸ்வாமி ஜோதி சொரூபமாகக் காட்சி தந்து கொண்டிருந்தார்.அடுத்த சில நிமிடங்களில் தன் சந்நிதி முன் நடக்கப் போகும் சிலிர்ப்பான அந்தக் காட்சியை மகாலிங்கம் மட்டும்தானே உணர முடியும்?ஆம் திட்டமிடுதலும் தீர்மானிப்பவனும் அவன்தானே.

உணர்ச்சிப் பெருக்குடன் நமசிவாய நாமத்தை மனமுருகி நெடுநேரம் உச்சரித்துக் கொண்டிருந்த ஐயாவாள்.திடீரென கருவறையை நோக்கி ஓட ஆரம்பித்தார்.கர்ப்ப கிரகத்துக்குள் இருக்கும் லிங்கத் திருமேனியை ஆலிங்கனம் செய்துகொள்ளும் மனோபாவத்துடன் ஏதோ ஒரு சக்தியுடன் ஓடி வந்த ஐயாவாளை ஆலய அர்ச்சகர் தடுக்க முற்பட்டார் முடியவில்லை.ஈசனின் சந்நிதிக்குள் நுழைந்து.  பொன்னார் மேனியனின் ஆவுடை அருகே வந்ததும் ஐயாவாள் பொசுக்கென மறைந்துவிட்டார்.ஆம் மகாலிங்கத் திருமேனியில் ஐக்கியமாகிவிட்டார் ஐயாவாள்.இந்தக் காட்சியை நேரில் கண்ட அர்ச்சகர்.பக்தர்கள் மற்றும் ஆலய சிப்பந்திகள் உட்பட பலரும் நடந்த சம்பவத்தின் தாக்கம் குறையாமம் மூர்ச்சையாகிக் கிழே விழுந்தனர்.இன்னும் சிலர் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர்.

ஸ்தூல உடம்புடன் ஜோதிர்லிங்க சொரூபனுடன் இரண்டறக் கலந்துவிட்டார் ஸ்ரீஐயாவாள்.எனவே அவருக்கு அதிஷ்டானம் என்று கிடையாது.அவர் வாழ்ந்து அனுபவித்து பல நல் உபதேசங்களை பக்தர்களுக்கு வழங்கிய திருவிசநல்லூர் வீட்டையே திருக்கோயிலாக பாவிக்கிறார்கள்.அவரது நினைவுகளை வாழ்க்கைச் சம்பவங்களைச் சொல்லும் இடமாக இன்று காட்சியளிக்கிறது அந்த சந்நிதி.ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் சேரிடபிள் டிரஸ்ட் என்கிற அமைப்பு தற்போது அவரது கோயிலை நிர்வாகித்து வருகிறது.கிருஷ்ண ப்ரேமியின் முயற்சியால் இது நன்றாக நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.சித்திரையில் வசந்தோற்சவம் ஆவணியில் கோகுலாஷ்டமி உற்சவம் கார்த்திகையில் கங்காவதாரண மகோற்சவம் மார்கழியில் ராதா கல்யாண மகோற்சவம் என்று பல விழாக்கள் சிறப்பாக நடந்து வருகின்றன.ஸ்ரீதர ஐயாவாளின் வீட்டுக் கிணற்றில் கங்காதேவி நிரந்தர வாசம் செய்கிறாள்.  இதை, ஐயாவாளே தனது ஸ்லோகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.இந்தக் கிணற்றில் ஸ்நானம் செய்தால் கங்கையில் நீராடிப் பலன் உண்டு.

ஒவ்வொரு வருடமும் கார்திக்கை அமாவாசை தினத்தன்று கங்கை இந்தக் கிணற்றில் பொங்கி வருகின்றது.எனவே அன்றைய தினத்தில் புனிதம் வாய்ந்த இந்தக் கிணற்றில் நீராட எங்கெங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் சாரை சாரையாக வந்து சேர்வார்கள்.இந்துக்கள்தான் என்றில்லை...இஸ்லாமிய பெண்மணிகள் உட்பட அனைத்து மத்தினரும் இந்த மகானின் மகிமையை உணர்ந்து நீராடும் வைபவத்தில் கலந்து கொள்கிறார்கள்.மூலவர் சந்நிதியில் ஐயாவாளின் உற்சவர் விக்கிரகம் கோதண்டராம ஸ்வாமி விக்கிரகம் நவநீதகிருஷ்ணன் மற்றும் நடராஜரின் படங்கள் ஆகியவை இருக்கின்றன.விகட ராமசாமி சாஸ்திரிகள் என்பவரது காலத்தில்தான் ஐயாவாளுக்கு விக்கிரகம் செய்யப்பட்டு முறையாக ஆராதனையும் உற்சவமும் தொடங்கப்பட்டன.கார்த்திகை அமாவாசைக்கு முதல்நாள் இரவு இடைவிடாமல் பஜனை நடைபெறும்.அதிகாலை பஜனை முடிந்ததும் பாகவதர்கள் அனைவரும் காவேரிக்குச் சென்று சங்கல்பம் செய்து ஸ்நானம் செய்வார்கள் கங்காஷ்டக ஸ்லோகம் சொல்வார்கள்.உடன் ஏராளமான பக்தர்களும் சென்று காவேரியில் ஸ்நானம் செய்வார்கள்.பிறகு அங்கிருந்து நாம கோஷத்துடன் புறப்பட்டு வந்து ஸ்ரீமடத்தை அடைவர்.

அங்கு கங்காதேவி வாசம் செய்யும் புனிதக் கிணற்றுக்கு விசேஷ பூஜைகள் செய்து அதில் ஸ்நானம் செய்வார்கள்.இதைத் தொடர்ந்து.பக்தர்களும் புனித நீராடுவார்கள்.இதற்கென்றே நான்கு பக்தர்கள் கிணற்றின் அருகில் இருந்துகொண்டு பக்தர்களது தலையில் கிணற்றுநீரை இரைத்து ஊற்றுவார்கள்.  கிணற்றில் நீராடுவதற்கு முன் காவிரி ஸ்நானம் செய்யவேண்டும்(இந்தக் கிணற்றில் பக்தர்கள் எப்போதும் நீராடலாம்).கார்த்திகை அமாவாசை காலத்தில் வரும் பக்தர்கள் தங்குவதற்கு விரிவான ஏற்பாடுகளை டிரஸ்ட் செய்கிறது.அதுபோல் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் குறைவில்லாமல் நடைபெறுகிறது.நித்திய வழிபாடுகள் அனைத்தும் நன்றாகவே நடந்து வருகின்றன.சுப்ரபாதம்,ராமாயணம்,பாகவதம்,விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்,டோலோற்சவம்,பஜனை,நாம கோஷம் என்று எதற்கும் இங்கே குறையவில்லை.ஏகாதசி,அமாவாசை ஆகியவை விசேஷமாக அனுஷ்டிக்கப்படுகின்றன.

கர்நாடக பிரதேசத்தில்.மைசூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக இருந்த லிங்கார்யர் என்பவருக்கு மகனாகப் பிறந்து.தன் கடைசிக் காலத்தை திருவிசநல்லூரில் கழித்து அந்தப் பூமிக்கு புண்ணியம் தேடித்தர வேண்டும் என்பதற்காகவே ஐயாவாள் இங்கு வந்து குடிகொண்டார் போலும்.தகப்பனாருடைய மறைவுக்குப் பிறகு சமஸ்தானத்திலிருந்து அவரைத் தேடி வந்த உயர் பதவியையும் ஏற்காமல் மனைவி லட்சுமி மற்றும் தாயாருடன் யாத்திரையாகப் புறப்பட்டு தமிழகம் வந்தார் ஐயாவாள்.உலகில் பக்தி மார்க்கத்தைப் பரப்ப வேண்டும் என்பது மட்டுமே ஐயாவாளின் சிந்தையில் மேலோங்கி இருந்தது.திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் திருபுவனம் திருநாகேஸ்வரம் ஆகிய தலங்களை தரிசித்து கடைசியாக திருவிசநல்லூர் வந்து சேர்ந்தார்.எண்ணற்ற பண்டிதர்கள் நிறைந்த இந்தத் தலமே தான் தங்கவேண்டிய க்ஷேத்திரம் என்பதை உணர்ந்து அக்ரகாரத்தில் குடி அமர்ந்தார்.அந்த ஊரில் இருந்த அந்தணர்கள் ஐயாவாள் மீது பொறாமை கொண்டனர்.ஆனால் ஆண்டவன் அவர் மீது அன்பு கொண்டான்.தஞ்சையை ஆண்ட மன்னன் ஷாஹாஜியின் அன்புக்குப் பாத்திரமானார் ஐயாவாள்.

எண்ணற்ற நுல்களையும் ஸ்லோகங்களையும் எழுதி உள்ளார் ஐயாவாள்.கோவிந்தபுரத்தில் ஸித்தி ஆன போதேந்திரருடன் இணைந்து பல கிராமங்களுக்குப் பயணித்து நாம ஜபத்தின் மேன்மையை மக்களிடையே பரப்பினார்.தீவிரமான சைவர் என்று ஐயாவாளைப் பற்றிச் சொல்லப்பட்டாலும் பேதம் பார்த்து எதையும் அவர் செய்தில்லை.சிவபெருமானையும் கிருஷ்ணனையும் அவர் ஒன்றாகவே பார்த்தார்.திருவிசநல்லுரில் தங்கி நாம சங்கீர்த்தன மகிமை பற்றித் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார் ஸ்ரீதர ஐயாவாள்.இதையறிந்த ஆன்மிக அன்பர்கள் பல்வேறு ஊர்களிலிருந்து திருவிசநல்லுருக்கு வந்து ஐயாவாளின் உபதேசங்களைக் கேட்டுப் பேறு பெற்றனர்.ஐயாவாளின் பெருமையையும் நாம மகிமை குறித்து அவர் செய்த பிரசங்கத்தைப் பற்றியும் தங்களுக்குள் உற்சாகமாக விவாதித்துக் கொண்டனர்.இப்பேர்ப்பட்ட ஒரு மகான் வாழும் காலத்தில் நாம் வாழ்வதே நமக்கெல்லாம் பெருமை என்று கூறி பூரித்துப் போயினர்.

புகழும் பெருமையும் ஒன்று சேர்ந்து ஒரு மனிதரை உயர்த்தும்போது அதே துறையில் கொஞ்சம் பிரகாசித்து வரும் மற்றவர்களின் மனநிலை இந்தக் கலியுகத்தில் நாம் அறியாதததா?ஆம் ஊரெல்லாம் ஸ்ரீதர் ஐயாவாளின் பெருமையை புகழ்ந்து பேசும்போது திருவிசநல்லூர் அக்ரகாரத்தில் வசித்த ஏனைய அந்தணர்கள் உள்ளுக்குள் புழுங்கினார்கள்.எங்கிருந்தோ வந்த ஓர் அந்தணருக்கு இவ்வளவு பேரும் புகழுமா?ஏன் நமக்கெல்லாம் திறமை இல்லையா?பக்தி இல்லையா?என்று எரிச்சல் பொங்கத் தங்களுக்குள் கூடிப் பேசினர்.ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவரை மட்டம் தட்டவேண்டும் என்றும் முடிவெடுத்தார்கள்.அப்போது கோகுலாஷ்டமி உத்ஸவம் வந்தது.திருவிசநல்லூரில் வசித்த அந்தணர்கள் இந்த விழாவை ஒவ்வொரு வருடமும் விமரிசையாகக் கொண்டாடுவர்.அந்த வருடமும் உத்ஸவம் களை கட்டியது.உள்ளூரில் வசிப்பவர் என்ற ஒரே காரணத்தால் ஐயாவாளை ஒதுக்கித் தள்ள முடியாமல் தாங்கள் நடத்திய உத்ஸவத்துக்கு கடனே என்று அழைத்தனர்.ஆனால் பக்திக்கு முக்கியத்துவம் தராமல் பகட்டுக்கு முன்னுரிமை கொடுத்து அந்த உத்ஸவம் நடத்தப்படுவதாக ஐயாவாள் கருதியதால் அவர் உத்ஸவத்துக்குச் செல்லவில்லை.இது உள்ளூர் அந்தணர்களை இன்னும் கோபப்பட வைத்துது.பாரேன் உத்ஸவத்துக்கு வாரமல் நம்மைப் புறக்கணிக்கிறாரே இந்த பிராமணன் என்று ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தனர்.

அன்றிரவு இல்லத்தில் தனியே அமர்ந்து பாகவதம் படித்துக் கொண்டிருந்தார் ஐயாவாள்.அப்போது கோகுலாஷ்டமி உதஸவத்தின் ஒரு பகுதியாக வீதியில் கிருஷ்ண பரமாத்மாவின் வீதியுலா ஆடம்பரமாக ஐயாவாள் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ண பகவானின் படத்தை மேளதாளம் முழங்க வீதியில் எடுத்து வந்தனர்.அந்தணர்கள் மேளச் சத்தமும் நாம கோஷ முழக்கமும் வெகு அருகில் கேட்கவே ஆகா கிருஷ்ணன் வந்துவிட்டார்.வீடு தேடி வந்தவருக்கு தீபாராதனை கொடுக்க வேண்டுமே என்று பதற்றத்துடன் எழுந்தார் ஐயாவாள்.தீபாராதனைக்குத் தேவையானவற்றை ஒரு பித்தளைத் தாம்பாளத்தில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்.கிருஷ்ண ஊர்வலம் அவருடைய வீட்டு வாசலில் நின்றது.கிருஷ்ணனின் படத்துக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்துவிட்டு தீபாராதனைத் தட்டைக் கொடுத்தார்.ஆனால் உள்ளூர் அந்தணர்கள் அதை வாங்க மறுத்துவிட்டனர்.உள்ளத்துக்குள் கனன்று கொண்டிருந்த ஆத்திரத் தீயை அவர் மேல் அள்ளி வீசினர்.கொஞ்சமும் கூட கிருஷ்ண பக்தி இல்லாத உம்மை போன்றவர்களது தீபாராதனையை ஏற்பதற்காக கிருஷ்ணன் இங்கே வீதி வலம் வரவில்லை.உமது தீபாரதனையை கிருஷ்ணனுக்குக் காட்டினால் தெய்வ நிந்தனைதான் எங்களை வந்து சேரும் என்று வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டனர்.

ஐயாவாளுக்கும் கோபம் எழுந்தது.ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்தணர்களே எனது பக்தியை உங்களால் அறிய முடியாது.அதை அந்த கிருஷ்ண பகவான் மட்டுமே அறிவார் என்றார் அமைதியாக.இதைக் கேட்டு அந்தணர்கள் சிரித்தனர்.அதில் ஒருவர் உமது பக்தியை எங்களாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை.இந்த நிலையில் கிருஷ்ண பகவானுக்கு மட்டும் உமது பக்தியின் திறன் தெரியுமோ?நன்றாக இருக்கிறது.உம்முடைய நகைச்சுவைப் பேச்சு.எதற்கு இந்த வீண் பேச்சு?நீர் உண்மையான பக்தன் என்றால் இதோ இந்தப் படத்தில் இருக்கும் மாயக் கிருஷ்ணனைக் கூப்பிடும்.உமது பக்திக்கு இரங்கி அவன் வருகிறானா என்று பார்ப்போம் என்றார் சவாலாக.

ஐயாவாளுக்கு அவமானமாகவும் தர்மசங்கடமாகவும் ஆனது.ஒட்டுமொத்த பக்தர்களும் தன்னையே கவனிப்பதாகப் பட்டது.இது தனக்கு ஏற்பட்ட சோதனை.கிருஷ்ணனுக்கும் தனக்குமான நட்பை அவர்களுக்கு  எப்படியாவது உணர்த்த வேண்டும் என்று தீர்மானித்தார்.படத்தில் இருக்கும் கிருஷ்ண பகவானைக் கண் குளிரப் பார்த்து ஸ்லோகம் ஒன்றைப் பாடினார்.பின்னர் விருட்டென்று தனது வீட்டுக்குள் சென்று விட்டார்.அவரைப் பரிகாசம் செய்தபடி ஊர்வலத்தை மேற்கொண்டு நகர்த்திச் சென்றனர் அந்தணர்கள்.அடுத்த வீட்டு வாசலில் ஊர்வலம் நின்றது.அந்த வீட்டில் இருந்த ஒரு பாகவதர் தீபாராதனைத் தட்டைக் கொடுத்தார். அதை வாங்கிய அந்தணர் கிருஷ்ணனுக்கு ஆரத்தி காண்பிப்பதற்காக படத்தைப் பார்த்தவர் திடுக்கிட்டார்.அங்கே கிருஷ்ண பகவானது படத்தைக் காணவில்லை.வெறும் சட்டமும் கண்ணாடியும் மட்டுமே இருந்தன.பதறிப்போன அந்தணர்கள் நடந்ததை ஒருவாறு ஊகித்துக்கொண்டு ஐயாவாளின் வீட்டுக்குள் ஓடிவந்தனர்.உள்ளே ஊஞ்சலில் கிருஷ்ணனின் ஓவியம் புன்னகையுடன் காட்சி தந்தது.இதுவரை வீதிவலம் வந்த அதே கிருஷ்ணன் போலவே விளங்கியது.கிருஷ்ணனைத் துதித்து மனம் நிறைய ஆனந்தத்துடன் ஸ்லோகம் பாடிக்கொண்டிருந்தார் ஐயாவாள்.இந்த ஸ்லோகங்களுக்கு டோலோ நவரத்னமாலிகா என்று பெயர்.

ஐயாவாளின் பிரார்த்தனைக்கு இரங்கி வீதியில் உலா வந்து கொண்டிருந்த கிருஷ்ணன் அவரது வீட்டுக்குள்ளே சென்று அவரது பாடலைக் கேட்டுக் மயங்கிக் கிடக்கிறார் என்றால் ஐயாவாளின் பக்தித் திறத்தை என்னவென்பது.திரவிசநல்லூர் அந்தணர்கள் அனைவரும் ஐயாவாளிடம் தங்களது தகாத செயலுக்காக மன்னிப்புக் கேட்டனர்.அன்றிரவு அந்தணர்கள் அனைவரும் ஐயாவாளின் வீட்டிலேயே தங்கி.நாமகீர்த்தனம் செய்துவீட்டு மறுநாள் காலைதான் சென்றனர்.ஒருமுறை ஐயாவாளின் ஆத்மார்த்தமான பக்தியுடன் விளையாடிப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை சாட்சாத் பரமேஸ்வரனுக்கு வந்துவிட்டது.(ஐயாவாளே பரமேஸ்வரனின் அவதாரம் என்றும் சொல்வார்கள்)திருவிளையாடலுக்கான தினத்தைக் குறித்தும் விட்டார்.

அன்றைய தினம் இரவு வேளையில் திருவடைமருதூர் மகாலிங்கத்தைத் தரிசிக்கப் புறப்பட்டார் ஐயாவாள்.அப்போது காவேரியில் வெள்ளம் அதிகம் ஓடியது.பரிசல் ஓட்டிகள் எவரும் காவிரிக்கரையில் இல்லை.இந்த வெள்ளத்தில் பரிசல் ஓட்ட முடியாது என்பதால் அனைவரும் விட்டிலேயே முடங்கிவிட்டனர்.காவிரியின் இக்கரையிலேயே நின்றுகொண்டு என்ன செய்வது?என்று தவிர்த்துப் போனார் ஐயாவாள்.சிவபெருமானை தரிசிக்காமல் வீட்டுக்குப் போவது அபசாரமாகப்பட்டது அவருக்கு.நேரம் ஓடிக்கொண்டே இருந்தது.காவேரியில் தண்ணீர் அதிகமாகிக் கொண்டிருந்ததே தவிர குறைவதாகத் தெரியவில்லை.சற்றுநேரம் காத்திருந்தவர் இக்கரையில் இருந்தபடியே திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி ஆலய ராஜகோபுரத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டார்.சிவபெருமானை நேரில் தரிசிக்க முடியாத ஏக்கத்தில் அவரது கண்களில் இருந்து நீர் கரகரவென வழிந்தது.அப்போது ஈஸ்வரனை தியானித்து.ஆர்த்திஹர ஸ்தோத்திரம் எனும் ஸ்லோகத்தைப் பாடினார்.

இப்படி ஐயாவாள் காவிரிக்கரையில் நின்றபடி ஈஸ்வரனைத் தியானித்திருந்த வேளையில்... திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி ஆலயத்தில் அர்ச்சகராக இருந்தவரும் ஐயாவாளுக்குப் பழக்கமானவருமான சிவாசார்யா ஒருவர் அவர் முன் தோன்றினார்.ஐயாவாளுக்குப் பிரமிப்பு விழிகளை இமைக்க மறந்து சிவாசார்யரையே பார்த்துக் கொண்டிருந்தார்.காவிரியில் வெள்ளம் அதிகமாக ஓடுகிறது.அதனால் ஆற்றைக் கடந்து வந்து ஈசனைத் தரிசிக்க முடியவில்லையே என்று தாங்கள் மிகவும் வருந்தியிருப்பீர்கள் என்று அறிவேன்.தங்களது மனம் புண்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அர்த்தஜாம பூஜை முடிந்ததும் விபூதிப் பிரசாதம் எடுத்து வந்தேன்.இந்தாருங்கள் என்று கொடுத்தார் சிவாசார்யர்.

ஆகா சிவ தரிசனம் செய்ய முடியாமல் போய்விடுமோ என்று கவலைப்பட்டேன்.ஆனால் அந்த மகாலிங்கமே அர்ச்சகரை நேரில் அனுப்பி விபூதிப் பிரசாதம் கொடுத்திருக்கிறார்.இனி எனக்குக் கவலை இல்லை.ஈஸ்வரனையே தரிசித்த பாக்கியத்தை அடைந்துவிட்டேன் என்று கண் மூடி பிரசாத்தை இட்டுக்கொண்டு நிமிர்ந்து பார்த்தார்.அர்ச்சகரைக்காணவில்லை.பிரசாதம் கொடுத்துவிட்டு நேரமாகிவிட்டது என்று கிளம்பி போய்விட்டார் போலிருக்கிறது என்று நினைத்த ஐயாவாளுக்கு அப்போதுதான் பிரக்ஞை வந்தது.அதுசரி வெள்ளம் கரை புரண்டு ஓடும் இந்த வேளையில் நம்மால் அக்கரைக்குச் செல்ல முடியவில்லை.அப்படியானால் அர்ச்சகர் மட்டும் எப்படி வந்தார்?வேட்டி துண்டு நனையாமல் இட்ட திருநீறு கலையாமல் இருந்தது எப்படி?வந்தவர் ஒரு வேளை மகாலிங்க ஸ்வாமியாகவே இருக்குமோ?சரி நாளைக்குத் திருவிடைமருதூர் போகும்போது அந்த அர்ச்சகரிடமே கேட்டுவிட்டால் ஆச்சு என்று நினைத்து வீடு திரும்பினார்.மறுநாள் காவேரியில் வெள்ளம் வடிந்திருந்தது.பரிசல் மூலம் அக்கரைக்குச் சென்றவர் மகாலிங்க ஸ்வாமியைக் கண்குளிர தரிசித்தார்.தரிசனம் முடிந்த பின் முந்தைய தினம் விபூதிப்பிரசாதம் கொடுத்த அர்ச்சகர் கண்ணில் பட்டார்.பயபக்தியுடன் அவர் அருகே சென்றார்.

நேற்று திருவிசநல்லூருக்கு வந்து எனக்குப் பிரசாதம் கொடுத்தீர்களே ஏன்? என்று கேட்டார்.

நானா?காவிரியில் நேற்று கரை புரண்டு ஓடிய வெள்ளத்தைத் தாங்கள் பார்க்கவில்லையா?அதைக் கடந்து எவர் வர முடியும்?நான் வர வில்லை ஸ்வாமிகளே.ஐயாவாளுக்குப் பிரமிப்பு.அப்படியெனில் நேற்று திருவிசநல்லூருக்கு வந்து விபூதிப் பிரசாதம் தந்தருளியது சாட்சாத் பரமேஸ்வரன்தானா?தயாபரனே என்னே உனது கருணை.உன்னைத் தரிசிக்க இயலாமல் நான் தவித்து நின்றபோது என் குரலுக்கு செவி சாய்த்து என்னையே தேடி வந்துவிட்டாயே என்று உருகினார்.

கருத்துகள் இல்லை: