திங்கள், 22 ஏப்ரல், 2019

தெரிந்த கதை தான்... தெரியாத சில விஷயங்களும் எழுதப்பட்டு உள்ளது... படிப்போம்.. அறிவோம்..

கண்ணப்பநாயனாரின் பக்தியை போற்றும் ஆதி சங்கரர்"

சிவானந்த லஹரியின் சுலோகத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் பக்தியைக் கண்டு, 'இதுவல்லவோ பக்தி' என்று புகழ்கிறார் ஆதிசங்கரர்.

கண்ணப்ப நாயனாருக்கு ஆதியில் அமைந்த பெயர் திண்ணன். நாகரீகத்தின் பக்குவமோ, படிப்பின் பாதிப்போ சிறிதும் இல்லாத ஓர் எளிய முரட்டு வேடன்.

திருக்காளத்தியில் காட்டுக்கு நடுவேயுள்ள சிவலிங்கத்தை 'இவர்தான் இறைவன்' என்று எப்படியோ உணர்ந்து கொண்டான்.

அவன் பூஜை முறைகள் எதுவும் தெரியாதவன். ஒரு கையில் கொடிய வில்; மறு கையில் கடித்துத் தின்று ருசி பார்த்து இறைவனுக்குப் படைப்பதற்காக கொண்டு வரப்பட்ட ஒரு துண்டு பன்றி மாமிசம்; வாய் நிறைய ஸ்வர்ணமுகி என்னும் பொன்முகலி ஆற்றின் நீர்; தலையில் பலவிதமான காட்டுப்பூக்கள்; காலில் பழஞ்செருப்பு; தோளில் அம்புறாத்தூணி என இந்தக் கோலத்தில் அங்கு ஒவ்வொரு நாளும் வந்து, அங்கு ஏற்கெனவே சிவகோசாரியர் என்ற முனிவரால் பூஜிக்கப்பட்டிருக்கும் மலர்களை தன் செருப்புக் காலால் ஒதுக்கிவிட்டு, வாயிலிருந்து ஆற்றின் நீரை லிங்கத்தின்மேல் உமிழ்ந்து, பன்றி மாமிசத்தைப் படைத்து காட்டுப்பூக்களை இறைவனுக்குச் சூட்டி, தெரிந்த மட்டும் வாயாற வாழ்த்தி மனதார வணங்கி அகமகிழ்ந்து போகிறான் திண்ணன்.

ஐந்து நாள்களாக தொடர்ந்து பார்த்து அருவறுப்பும் பயமும் கலந்த உணர்வுடன் இறைவனிடம் மனமுறுகி வேண்டுகிறார் சிவாகோசாரியர்.

அவர் கனவில் தோன்றிய இறைவன், "மறைந்திருந்து பார், உன்னதமான அவனது பக்தியை அறிவாய்!'' என்றருளினார்.

மறுநாள் வழக்கம் போல அதே கோலத்தில் வருகிறான் வேடன். இறைவனைக் கண்டதும் அதிர்ந்து போகிறான்.

இறைவனின் வலது கண்ணிலிருந்து ரத்தம் அருவியாய் கொட்டிக்கொண்டிருந்தது. "ஐயோ! நான் என்ன செய்வேன்?'

ஓடோடிச்சென்று சிவலிங்கத் திருமேனியைக் கட்டிக்கொண்டு கதறி அழுகிறான் திண்ணன். பின்னர் பச்சிலைகளைக் கொண்டு வந்து இறைவனுடைய கண்ணில் பிழிகிறான்.

 ஆனால் ரத்தம் நின்றபாடில்லை. "ஊனுக்கு ஊன், கண்ணுக்கு கண்' என்று சொல்கிறது அவன் மனம். உடனே கூரிய அம்பினால் வலது கண்ணில் குத்தி கண்ணைப் பிடுங்கி எடுத்து குருதி வடியும் இறைவனின் கண்ணில் அப்புகிறான்.

என்ன ஆச்சரியம்!

 இறைவனுடைய கண்ணில் ரத்தப்பெருக்கு நிற்கிறது. ஆனந்தக் கூத்தாடுகிறான் திண்ணன்.

சில நொடிப்பொழுதில் அவனது மகிழ்ச்சி மறைந்தது. இப்போது இறைவனின் இடது கண்ணிலிருந்து ரத்தம் கொட்டியது.

திண்ணன் தயங்கவில்லை. "இன்னொரு கண்ணையும் கொடுப்பேன்' என்று தனது இடது கண்ணை எடுத்துவிட எண்ணினான். "அப்படியானால் இறைவனின் இடது கண்ணை எப்படி அடையாளம் காண்பது?' என தனது செருப்புடன் கூடிய காலை இறைவனின் இடது கண்ணில் மேல் வைத்தபடி தனது கண்ணைப் பிடுங்க முனைந்தபோது, "கண்ணப்பா, நில்!'' என்றபடி அவனது கரத்தைப் பிடித்து தடுத்து திருக்காட்சி அளித்து அழைத்துச் செல்கிறார் இறைவன்.

மெய்சிலிர்த்துப் போகிறான் திண்ணன். இறைவனின் அற்புதமான லீலையை மறைந்திருந்து பார்த்த சிவகோசாரியர் கண்ணீர் மல்க இறைவனையும் கண்ணப்பனையும் துதிபாடி மகிழ்கின்றார்.

இந்த கதையை நினைவு கூர்கிறார் ஆதிசங்கரர். கண்ணப்பன் ஒரு கண்ணை இறைவனுக்கும் கொடுத்துவிட்டு மறுகண்ணும் கொடுக்கத் தயாராகும் பொழுது, இறைவனே அவன் செயலைத் தடுத்து, "நில்லு கண்ணப்ப' என்று கூறி அருள்புரிந்தார்.

பக்தியில் கண்ணப்பனுக்கு நிகர் யாரும் இல்லை. அவனே பக்தர்களில் முதன்மையானவன் என்கிறார் சங்கரர்.

 ஆதிசங்கரர், கண்ணப்பனின் இறைபக்தியை தமது சிவானந்த லஹரியில் 63 ஆவது சுலோகமாக பதிவு செய்கிறார். அந்த சுலோகம்:

"மார்க்காவர்த்தித பாதுகா பசுபதே
ரங்கஸ்ய கூர்ச் சாயதே
கண்டூஷாம்பு நிஷேசனம் புர ரிபோர்
திவ்யாபி ஷேகாயதே!
கிஞ்சித்பக்ஷித மாம்ஸ சேஷ கபலம்
நவ் யோபஹா ராயதே
பக்தி: கிந் நகரோத்ய ஹோ
வநசரோ பக்தாவதம் ஸôயதே''

கருத்துகள் இல்லை: