சனி, 22 செப்டம்பர், 2018

ஸ்ரீஹர்ஷர்

நளமகராஜாவின் சரித்திரத்தை வடமொழியில் எழுதியவர் ஸ்ரீஹர்ஷர். இவருடைய தந்தை பெயர் ஸ்ரீஹிரர். ஸ்ரீஹிரரின் பெரும் புலமை அவரை மன்னர்பால் ஈர்த்தது. மன்னர் அவரைத் தனது ஆஸ்தான புலவராக்கிப் பொன்னும் பொருளும் கொடுத்து ஆதரித்தார். ஸ்ரீஹிரரின் மனைவி மாமல்ல தேவி.

ஒரு சமயம் அயல்நாட்டுப் புலவர் ஒருவர் இந்த மன்னனின் அரசவைக்கு வந்தார். அவர் மன்னனிடம், என் புலமையோடு போட்டி போட உம்மிடம் யாராவது புலவர் இருந்தால் வரச்சொல்லும். இல்லையென்றால் ஒரு கோடிப் பொற்காசுகளைக் கொடுத்து, எனது புலமைக்கு ஈடான புலமை உமது நாட்டில் இல்லையென்று எழுதிக்கொடுங்கள் என்றார். மன்னன் சிரித்தான். புலவரே, கர்வம் வேண்டாம். எனது சபையில் உள்ள என் ஆஸ்தான புலவர் ஸ்ரீஹிரர் ஒருவரே போதும், உமது சவாலை எதிர்கொள்ள என்றார். நாளை உங்களுடன் அவர் போட்டியிவார் என்றார் மன்னர். ஸ்ரீஹிரரும் தேச கௌரவத்தைக் காக்க அவருடன் போட்டியிட்டார். ஆனால் அவருடைய புலமை வெளிநாட்டுப் புலவரின் புலமை முன் எடுபடாமல் தோற்றுப் போனார். மன்னன் குனிந்த தலையுடன் ஒரு கோடி பொற்காசுகளையும் கொடுத்து, தன் தேசப்புலமையைத் தாழ்மைப்படுத்தி ஓலையும் எழுதிக் கொடுக்க வேண்டியதாயிற்றே என்று வருத்தமுற்றார். வெட்கமடைந்த ஸ்ரீஹிரர் வீட்டுக்குப் போய் தன்மானத்துடன் நாட்டின் கௌரவமும் தன்னால் தாழ்ந்ததே என்று வருத்தமடைந்தார். அந்த வருத்தத்தில் மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் என்பதற்கேற்ப தனது வாழ்நாளை முடித்துக் கொண்டார். அவர் மனைவி மாமல்ல தேவி அழுதாள், புரண்டாள். என்ன செய்வது? விதி சதி செய்துவிட்டது. கணவனில்லாத கைம்பெண்ணாக வாழ்வதை விட மானம் பெரிதென உயிர்விடுவதையே அவள் விரும்பினாள். ஆனால், தனது மகனை என்ன செய்வது என்ற கவலையும் கூடவே எழுந்தது. அவளது தந்தை அவளுக்குச் சிறிய வயதில் சிந்தாமணி என்ற மந்திரத்தை உபதேசம் செய்திருந்தார். மகளே! அந்த மந்திரத்தை 12 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஜெபித்தாலோ அல்லது ஒருநாள் ஒரு இரவு முழுவதும் ஒரு உயிரற்ற சடலத்தின் மீது அமர்ந்து எந்த பயமும் இல்லாமல் உச்சரித்தாலோ சரஸ்வதி மாதா உன் முன் தோன்றுவாள், நீ விரும்பும் வரத்தை அவளிடமிருந்து பெறலாம் என்று கூறியிருந்தார். தனது கணவனால் தேசத்துக்கு ஏற்பட்ட களங்கம் மகன் ஸ்ரீஹர்ஷனால் நீங்க வேண்டுமென விரும்பிய அவள், தனக்குத் தெரிந்த அந்த மந்திரத்தை மகனுக்குச் சொல்லிக் கொடுத்து, தொடர்ந்து பயிற்சியளித்தாள். சில நாட்களில் பயிற்சி முடிந்தது.

ஒருநாள் இரவு தன் மார்பின்மீது அமர்ந்து மந்திரத்தைத் தொடர்ந்து சொல்லும்படி மகனை வற்புறுத்தினாள். அப்படி அவன் சொல்லிக்கொண்டிருந்த போது தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்டு மாண்டு போனாள். இதையறியாத சிறுவன் தாயின் அரவணைப்பில் தானே இருக்கிறோம் என்ற எண்ணத்தில் மந்திரத்தை விடிய விடிய உச்சரித்துக் கொண்டிருந்தான். அவன் முன்பு சரஸ்வதி பேரழகுடன் தோன்றினாள். சிறுவனின் நாக்கில் ஓம் என்று எழுதினாள். அவன் மிகச் சிறந்த கவிஞனாவான் என்று வாக்களித்தாள். பிறகுதான் தாய் இறந்து கிடப்பதை அறிந்தான் சிறுவன், அவளுக்கு மீண்டும் உயிரளிக்க வேண்டினான். சரஸ்வதி அவளை உயிருடன் எழுப்பினாள். இந்த மகானே நள சரிதம் எழுதிய  ஸ்ரீஹர்ஷர். மனிதனாகப் பிறந்தவன் எந்தவிதமான கஷ்ட சூழ்நிலையிலும் மனம் கலங்கக் கூடாது என்று அறிவுறுத்தியவர். நைஷதம் என்ற வடமொழி நூலையும் இவரேதான் எழுதினார். ஒழுக்கம், நேர்மை, நிதானம், கட்டுப்பாட்டுடன் கூடிய வாழ்வியலை இவர் தனது நூலில் வற்புறுத்தியுள்ளார். இந்த வடமொழி நூல் அதிவீரராம பாண்டியனால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: