சனி, 22 செப்டம்பர், 2018

புத்தர்

கபிலவஸ்து என்னும் நாட்டின் மன்னனான சுத்தோதனருக்கும் மகாமயாவுக்கும் மகனாகப் புத்தர் பிறந்தார். இவரது இயற்பெயர் சித்தார்த்தர். லட்சியத்தை அடைந்தவர் என்பது இதன் பொருள். இவர் பிறந்தது முழு நிலவு நாளான வைசாகா ஆகும். சித்தார்த்தர் பிறந்த சில நாட்களிலேயே அவரது தாய் இறந்துவிட்டார். ஒரே மகன் என்பதால் உலகத் துன்பங்கள், கவலைகள் என எதுவும் தெரியாதவராக தந்தையால் வளர்க்கப்பட்டார். அரசர்களுக்கே உரிய கல்வி, போர்ப்பயிற்சி போன்ற அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். யசோதரா என்ற பெண்ணை மணந்து ஓர் அழகான மகனையும் பெற்றார். புத்தரின் அரசபோக வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்தது. வாழ்வில் எந்தக் குறையும் இல்லை.

ஒரு நாள் வெளியில் பவனி வந்தபோது, ஒரு வயோதிகர், ஒரு நோயாளி, இறந்த ஒருவரின் இறுதி யாத்திரை ஆகியவற்றைக் கண்ட சித்தார்த்தர் மிகவும் சிந்தித்தார்! மூப்பு, பிணி, சாக்காடு இவற்றுக்குக் காரணம் என்ன? இவற்றைத் தவிர்க்க முடியாதா? என்று ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினார் சித்தார்த்தர். ஒரு துறவியிடம் அவற்றைக் குறித்து விளக்கம் பெற்றார். துறவு மேற்கொள்ளும் உறுதியுடன் புறப்பட்டுவிட்டார் புத்தர். இளவரசர் புறப்பட்டதைக் கண்டு துணுக்குற்ற தேரோட்டி, இளவரசே! தங்களுக்கு வாழ்வில் என்ன குறை? அரச பதவி, அரண்மனை சுகம், அன்பு மனைவி, ஆண் மகன் என அனைத்தும் உள்ளன. இவற்றையெல்லாம் பிரிந்து சென்று என்ன சுகத்தைக் காணப் போகிறீர்கள்? என்று வினவினார். சித்தார்த்தர் பதிலேதும் கூறாமல் புன்னகைத்தார். உண்மை ஞானத்தைத் தேடி கயாவில் ஆறு ஆண்டு காலம் ஆழ்ந்த தியானத்தில் தவமியற்றினார். முடிவில் தனது பிறந்த நாளான அதே வைசாகா முழு நிலவு நாளில் ஞானஒளியைப் பெற்று தனது கேள்விகளுக்கான பதிலைக் கண்டுபிடித்தார். அதுமுதல் அவர் கவுதம புத்தர் என அழைக்கப்பட்டார். இடைவிடாத முயற்சியும் தவமும் ஞானத்தை அளிக்கும் என்பர். ஞானத்தை அடைய கடும் முயற்சி செய்யவேண்டும். அல்லது கடுந்தவம் செய்ய வேண்டும். சித்தார்த்தர் தாம் பெற்ற ஞானத்தை உலகின் நன்மைக்காக உபதேசித்தார். வாராணசிக்கு அருகில் உள்ள ஸாரநாத்தில் புத்தர்பிரான் தமது அருளுரைகளை வழங்கினார். அந்த நந்தவனத்துக்கு வடக்கில் ஒரு மடாலயத்தில் புத்தர் சில காலம் தங்கினார். பிற்காலத்தில், அங்கு அசோகச் சக்கரவர்த்தி ஒரு ஒரு சலவைக்கல் தூணை எழுப்பினார். அதன் உச்சியில் நான்கு கிரகங்களின் உருவம் செதுக்கப்பட்டது. இந்தச் சின்னமே நம் நாட்டின் தேசியச் சின்னமானது. பல இடங்களிலும் தாம் சந்தித்த மக்களின் குறைகளைத் தீர்த்த புத்தர், நாற்பது ஆண்டுகள் தமது உபதேசங்களை அருளினார். அவை ஆசியாவெங்கும் வேகமாகப் பரவின. கி.மு, மூன்றாம் நூற்றாண்டில் மாமன்னர் அசோகர், புத்தரின் கொள்கைகளைப் பரப்பியதில் முன்னணியில் நின்றார். கயாவிலிருந்த போதிமரக் கன்றுகளுடன் தமது பிரதிநிதிகளை அசோகர் இலங்கைக்கு அனுப்பி வைத்தார். புத்தர் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வலியுறுத்தினார். அன்பை நான்கு வகைகளாகக் குறிப்பிட்டார் புத்தர். பகைவனுக்கும் அருளும் பரந்து விரிந்த அன்பு கொள்ளுதல் மைத்ரி. உயிர்களிடம் இரக்கம் கொள்ளுதல் கருணா. சமத்துவ மனத்துடன் அனைவரிடத்திலும் அன்பு கொள்ளுதல் உபேக்ஷõ. உற்சாகத்துடன், நம்பிக்கையுடன் தொண்டு செய்தல் முதிதா எனப்படும்.

பிற நாடுகளில் வழக்கத்திலுள்ள மதக் கருத்துக்களுக்கு மாறுபட்ட புதிய கருத்துக்களைக் கூறிய சிந்தனையாளர்களும், சீர்திருத்தவாதிகளும், பெரிதும் துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்பதை அவர்களின் வரலாற்றிலிருந்து அறியலாம். பின் தன் இறுதி காலம்வரை பல இடங்களுக்கும் பயணம் சென்று தான் கண்டுகொண்ட உண்மையை பற்றி நீண்ட பிரசங்கங்கள் செய்தார். இறுதியில் கி.மு. 483 ல் தனது 80  வது வயதில் தனது பிறந்த நாளும், தான் ஞானத்தை அடைந்த நாளுமான அதே வைசாகா அன்று புத்தர் இவ்வுலக வாழ்வைத் துறந்தார். புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான இந்த மூன்று சம்பவங்களையும் நினைவு கூறுவதே புத்தபூர்ணிமா எனப்படுகிறது. புத்தபூர்ணிமா அன்று புத்தமதத்தினர் வெள்ளை நிற உடைகளை மட்டுமே அணிவர். அன்று மடாலயங்களிலும், வழிபாட்டிடங்களிலும், வீடுகளிலும் வழிபாடுகளையும் விழாக்களையும் நடத்தி மகிழ்வர். கீர் எனப்படும் பானம் அன்றைய தினம் அவர்களது உணவில் முக்கிய அங்கமாக இருக்கும். இந்தியாவின் பீகாரில் உள்ள புத்த கயாவிலும், உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள சாரநாத்திலும் இவ்விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அத்தகைய சிறப்புடைய புத்தபூர்ணிமாவில், புத்தர் போதித்த உயர் நெறிகளைப் பின்பற்ற நாம் உறுதிகொள்ள வேண்டும்.
_________________________________________________________

கருத்துகள் இல்லை: