திங்கள், 26 ஜூன், 2017

இறுதியில் இறை தூதர்களா ? எமதூதர்களா ? முடிவு உங்கள் கையில்..!! இறந்தவன் மகனால் முதல் நாள் வைக்கும் பிண்டத்தால் ஆவிக்குத் தலை உண்டாகிறது. இரண்டாம் நாள் போடும் பிண்டத்தால் கழுத்தும் தோளும் மூன்றாம் நாள் பிண்டத்தால் மார்பும் நான்காம் நாளில் வயிறும் ஐந்தாம் நாளில் உந்தியும் ஆறாம் நாளில் பிருஷ்டமும் ஏழாம் நாளில் குய்யமும் எட்டாம் நாளில் தொடைகளும் ஒன்பதாம் நாளில் கால்களும் உண்டாகி பத்தாம் நாளில் புத்திரனால் பெறப்படும் பிண்டத்தால் சரீரம் முழுவதும் பூரணமாக உருவாகும். பிண்டங்களால் முழுமையான உருவத்தைப் பெற்ற ஆவி பதினோறாவது நாள் தான் சரீரத்தோடு வாழ்ந்த வீட்டிற்கு வந்து தான் உயிரோடு இருக்கின்ற பொழுது வீட்டில் நிகழ்ந்த அனைத்து சம்பவங்களையும் தன்னால் நிகழ்த்தப்பட்ட எல்லா விதமான காரியங்களையும் நினைத்துப் பார்த்து அழுது துடிக்குமாம். மீண்டும் நம்மால் இப்படி வாழமுடியாமல் போய்விட்டதே என்று எண்ணியெண்ணி அந்த ஆவி துடிப்பதை எரி மலை சீற்றத்திற்குள் அகப்பட்டு கொண்ட சிறு பறவைக் குஞ்சியின் துடிப்பிற்கு இணையாக ஒப்பிடப்படுகிறது. கடந்த கால வாழ்க்கையை மீண்டும் வாழ ஆசைப்படுவதும் சரீரப்பிரவேசத்தில் மோகம் கொள்வதும் சாதாரணமான உலகியல் வாழ்க்கையில் வாழ்ந்து உழன்ற செத்துப்போன ஜீவன்கள் தான் என்பதையும் பரமார்த்திக வாழ்வை மேற்கொண்ட ஜீவன்கள் சரீரப்பிரிவைப் பற்றியோ மரணமடைந்ததைப் பற்றியோ துளி கூடக் கவலைப்படுவதில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். வாழ்ந்த வீட்டில் வீழ்ந்து கிடந்து அழும் ஆவியை பதி மூன்றாவது நாள் எமகிங்கரர்கள் பாசக்கயிற்றால் கட்டி எமபுரிக்கு இழுத்துச் செல்வார்கள். அப்படி இழுத்துச் செல்லும் போது கூரிய பற்களுடைய ரம்பம் போன்ற இலை அமைப்புக்கொண்ட அமானுஷ்யவனாந்திரம் ஒன்றின் வழியாக அந்த ஜீவன் பயணம் செய்யும் சூழ் நிலை ஏற்படும். அப்போது வாள் போன்ற மர இலைகள் அந்த ஜீவனின் பிண்ட உடலைக் குத்தி காயப்படுத்தும். அதனால் ஏற்படும் வலியில் சுறுக்கு மாட்டப்பட்ட நாய் ஊளையிடுவது போல் ஆவி கத்தித் துடிக்கும். வைவஸ்வத என்ற நரகம் வழியாகவும் ஜீவன் இழுத்துச் செல்லப்படுமாம். அந்த நகரத்தில் உயரமான மாளிகைகள் மிக நெருக்கமாக அமைந்திருக்குமாம். அச்சத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தும் கோர ரூபமுடைய பிராணிகள் பல ஜீவனைச் சூழ்ந்து கடித்துக் காயப்படுத்துமாம். மேலும் அந்நகரத்திற்குள் நுழைந்தவுடன் ஜீவனுக்குத் தாங்க முடியாத தாகம் ஏற்படுமாம். தாகம் தணிக்க இரத்தமும் சீழும் கலந்த கொடுக்கப்படுமாம். அந்த நகரத்து மேகங்களெல்லாம் இரத்தத்தையும் அழுகிய சதைத்துண்டகளையும் மழையாகப் பொழியுமாம். இத்தகைய அருவருக்கத்தக்க கஷ்டமான சூழலிலும் இறந்த ஜீவனுக்கு அதீதமான புத்திர பாசம் ஏற்படுமாம். பாவத்தின் தண்டனையும் பாசத்தின் சோதனையும ஆவியைச் சட்டையில்லாமல் பனிப்பொழிவிற்குள் அகப்பட்டக் கொண்டவனைப்போல் வருத்தி எடுக்குமாம். இப்படி வழி நெடுகலும் காற்று நிறைந்த வழியிலும் துஷ்ட ஜந்துக்கள் நிறைந்க வழியிலும் இழுத்துச் செல்லப்படும் ஜீவன் இருபத் தெட்டாவது நாளில் கொடுக்கப்படும் சிரார்த்த பிண்டத்தை உண்டு சற்று இளைபாறி முப்பதாவது நாள் யாமியம் என்ற நகரத்தை அடையும். அந்நகரில் வடவிருஷம் என்ற மரமும் பல விதமான பிரேதக்கூட்டங்களும் நிறைந்திருக்கும். அங்கு இரண்டாவது மாஸிக பிண்டத்தைப் பெற்ற பின்பு சற்று இளைப்பாறி மீண்டும் கிங்கரர்களால் இழுத்துச் செல்லப்பட்டு திரைப்பஷிக மாஸிக பிண்டத்தை வேண்டி சங்கமன் என்ற எட்க்ஷன் தலைமையில் உள்ள சௌரி என்ற பகுதியல் சிறிது காலம் தங்கி மூன்றாவது மாஸிக பிண்டத்தைப் பெறுவார்கள். ஐந்து மற்றும் ஆறாவது பிண்டத்தை உண்டு கடந்த சென்று வைதரணி என்ற நதிக்கரையை அடைவார்கள். சாதாரணமான நதிகளைப் போல் இந்த நதியில் தண்ணீர் இருக்காது. அதற்குப் பதிலாக ரத்தமும் சீழும் சிறுநீர் மலம் சளி இவைகள் ஒன்றாகக் கலந்து ஆறாக ஓடுமாம். இந்த நதியைப் பாவம் செய்த ஆத்மாக்கள் அவ்வளவு சீக்கிரம் கடக்க முடியாமல் கிங்கரர்கள் ஆழத்தில் தள்ளி அழுத்துவார்கள். புண்ணியம் செய்த ஆத்மாக்களை ஒரு நொடிப் பொழுதிற்குள் ஆற்றின் மறுகரையில் கொண்டு விட்டு விடுவார்கள். இப்படி பல இடங்களிலும் பலவிதமான அவஸ்தைகளையும் அனுபவங்களையும் பெற்றாலும் இறந்து ஏழாவது மாதம் ஆனாலும் கூட எமலோகத்திற்குச் செல்லும் பாதி வழியை மட்டும் தான் ஜீவன்கள் இது வரை கடந்து வந்திருக்குமாம். பக்குவப்பதம் என்ற இடத்தில் எட்டாம் மாத பிண்டத்தையும் துக்கதம் என்ற இடத்தில் ஒன்பதாவது மாத பிண்டத்தையும் நாதாக்தாதம் என்ற இடத்தில் பத்தாவது மாத பிண்டத்தையும் அதப்தம் என்ற இடத்தில் பதினோறாவது மாத பிண்டத்தையும் சீதாப்ரம் என்ற இடத்திலும் பன்னிரெண்டாவது மாத அதாவது வருஷாப்திய பிண்டத்தையும் பெறுவார்கள். மரணமடைந்து ஒரு வருடத்திற்குப் பின்னரே எமபுரிக்குள் ஜீவன்களால் நுழையமுடியும். எமதர்மன் முன்னால் நியாய விசாரணைக்கு ஜீவன் நிறுத்தப்படும் முன்னால்12 சிரவணர்கள் இறந்த ஆத்மா செய்த பாவ புண்ணியக் கணக்குகளைப் பார்ப்பார்கள். அதன் பின்னரே எமதர்மனால் விசாரிக்கப்பட்டு தண்டனை பெறுவார்கள். இங்கு நாம் எமலோகத்திற்குப் போகும் வழியில் ஆத்மாவிற்கு ஏற்படும் பலவிதமான கஷ்ட நஷ்டங்களைப் பார்த்தோம். தீமை மட்டுமே வாழும் காலத்தில் செய்த ஆத்மாக்கள் துன்பங்களை அனுபவிப்பது நியாயமானது தான். நன்மையைச் செய்த ஆத்மாக்கள் கூட இதே வழியில் தான் அழைத்து செல்லப்படுவார்களா? இதே துன்பங்களை தான் அனுபவிப்பார்களா என்று வினா எழும்புவது இயற்கையானது தான். நமதுசாஸ்திரங்களும் தர்மங்களும் சத்திய வழியில் வாழ்க்கை நடத்துபவர்களை மரணதேவனின் தூதுவர்கள் வந்து அழைக்க மாட்டார்கள். இறைதூதர்கள் தான் வந்து அழைத்துச் செல்வார்கள் என்று கூறுகிறது. திதி முன்னோர்களுக்கு கொடுங்கள். திருப்பம் திருப்தி கிடைக்கும்.


கருத்துகள் இல்லை: