புதன், 27 மே, 2020

கும்பகோணம் திருநாகேஸ்வரம் திருவிண்ணகரம் ஸ்ரீ ஒப்பிலியப்பன் பெருமாள் திருவடிகளே சரணம் ... !!!

பெருமாளுக்கு பக்தர்களை சோதித்து தடுத்தாட் கொள்வதில் அலாதி விருப்பம்.
துளசிவனத்தில் தோன்றிய குழந்தையை பூதேவி என்ற திருநாமமிட்டு வளர்த்துவந்தார் மார்க்கண்டேய முனிவர்.
பெண் சற்று வளர்ந்ததும் பெருமாள் கிழவர் வேடத்தில் வந்தார்.
மார்கண்டேயரிடம் " உங்கள் பெண் அழகாக இருக்கிறாள் . அவளை எனக்கு மனம் முடித்து வையுங்கள் " என்கிறார்.

என்னடா இது கிழவர் வந்து பெண் கேட்கிறாரே என்று திடுக்கிட்டார். சமாளித்து கொண்டு " பெரியவரே ! என் பொண்ணுக்கு உப்பு போட்டுக்கூட சமைக்க தெரியாது ... அவளை எப்படி திருமணம் செய்வீர்கள் ? " என்கிறார் .

" பரவாயில்லை ... நான் உப்பில்லாமல் சாப்பிடுகிறேன் சீக்கிரம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் " என்கிறார் கிழவர் ஆகிய பெருமாள்..

இவரை எப்படி சமாளிப்பது என்று மார்கண்டேயே முழித்தபோது ஸ்ரீ நிவாஸர் தம் திரு உருவத்தை காண்பித்து தான் சாட்ஷாத் மகாவிஷ்ணுவே என்று அருளி முன்பு வாக்கு கொடுத்தபடி திருமகளை திருமணம் செய்யவே எழுந்தருளியதாக கூறினார்.

மகா சந்தோஷத்துடன் மார்க்கண்டேயர் சம்மதித்தார். பெருமாளுக்கு வலது புறம் கீழே மண்டியிட்டு வணங்கும் திருக்கல்யாண கோலத்துடன் அருளும் (தனி சன்னதி கிடையாது) தாயார் பூமா தேவி பூமி நாச்சியார் என்றும் அழைக்கப்படுகிறார்.
இவர்களுக்கு இடது புறம் பெருமாளுக்கு கன்னிகாதானம் செய்து வைத்த மார்க்கண்டேய மகரிஷி அமர்ந்த நிலையில் வணங்கும் நிலையில் உள்ளார்.

இத்தலத்தில் இன்றும் பிரசாதங்களில் உப்பு சேர்ப்பதில்லை. எனவே உப்பு சுவையை நீக்கிய பெருமாள் என்ப தால் " லவண வர்ஜித வேங்கடேசன்" (உப்பினை விலக்கிய பெருமாள் ) என்கிறது புராணம். உப்பு இல்லாத பெருமாள் - உப்பில்லா அப்பன் - உப்பிலியப்பன் என்று அழைக்கப்படுகிறார்.
108 திவ்ய தேசங்களில் இந்த திவ்ய தேசத்தில் மட்டும் தான் உப்பில்லாத பிரசாதம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை: