ஞாயிறு, 12 ஜூலை, 2020

சிவன் :அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில்
மூலவர்    :  திரியம்பகேஸ்வரர்
அம்மன்    :     கருமாரி திரிபுரசுந்தரி
தல விருட்சம்    :     இலந்தை மரம்
பழமை    :     500 வருடங்களுக்குள்
ஊர்    :     சாமியார்தோட்டம்
மாவட்டம்    :     சென்னை
மாநிலம்    :     தமிழ்நாடு
 
திருவிழா: பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, பகல் பத்து - ராப்பத்து விழாக்கள், அனுமன் ஜெயந்தி,பங்குனி உத்திரம், சிவராத்திரி      

 முகவரி: அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில், அசோக்நகர்- சாமியார் தோட்டம், சென்னை.    
           
பொது தகவல்:  இங்கு செல்வ விநாயகர், வைத்தீஸ்வரன், முத்துக்குமார சுவாமி, துர்கை, ஸ்ரீநிவாச பெருமாள் ஆகிய தெய்வங்களும் தனிச் சன்னதிகளில் அருள்கின்றனர்.  திறக்கும் நேரம்: காலை 5 மணி முதல் 8 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.  
             
 ஸ்தல பெருமை:  சில வருடங்களுக்கு முன் கால பைரவர் மற்றும் மனைவி லோபா முத்திரையுடன் அகத்தியர் ஆகியோரின் விக்கிரகத் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பிரதோஷ வழிபாடும், இறைத் திருமேனிகளுக்குச் செய்யப்படுகிற அலங்காரங்களும் இந்த ஆலயத்தின் சிறப்பம்சங்கள்! புதன் மற்றும் சனிக்கிழமைகளில், பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள், லட்சுமி ஹயக்ரீவர், சுதர்சனர் ஆகியோரைத் தரிசித்துப் பலன் பெறுகின்றனர், பக்தர்கள். ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு துளசி மாலையும் பத்மாவதி தாயாருக்கு தாமரைப் பூவும் சார்த்தி வழிபட... விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை! கருமாரி திரிபுரசுந்தரி அம்பிகைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி, புடவை சார்த்தி வணங்கினால், விரைவில் குழந்தை பாக்கியம் பெறலாம்; சகல சவுபாக்கியங்களுடன் வாழலாம் என்பது ஐதீகம். சரபேஸ்வரருக்கும், அனுமனுக்கும் இங்கே தனித் தனிச் சன்னதிகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் சரபேஸ்வரருக்கும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெறுகின்றன. பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, துர்கைக்கு ராகு கால பூஜை என மாதம் முழுவதும் வழிபாடுகள் குறையற நடைபெற்று வரும் இந்தக் கோயிலில், மார்கழி மாதத்தில்... ஸ்ரீநிவாச பெருமாளுக்கும் பத்மாவதி தாயாருக்கும் பகல் பத்து - ராப்பத்து விழாக்கள், உத்ஸவங்கள் எனக் களை கட்டியிருக்கும்! அதேபோல், அனுமத் ஜயந்தி நாளில்.. ஒரு லட்சத்து எட்டு வடைமாலை சார்த்தி, விசேஷ அலங்காரத்தில் அற்புதமாகக் காட்சி தருவார் அனுமன். முக்கியமாக... மூலவர் திரியம்பகேஸ்வரர், அம்பாள் கருமாரி திரிபுர சுந்தரி ஆகியோருக்கு பங்குனி உத்திர நன்னாளில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தைக் காணக் கண்கோடி வேண்டும். கருமாரி திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரியம்பகேஸ்வரரையும் பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாச பெருமாளையும் வழிபட வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.    
             
ஸ்தல வரலாறு:  சுமார் 50 வருடங்களுக்கு முன் இலந்தை மர நிழலில் சூல வடிவினளாக அருள்பாலித்து வந்தாளாம் கருமாரி திரிபுரசுந்தரி. பிறகு பக்தர் சக்தி சுந்தரேசன் மற்றும் அந்தப் பகுதி மக்களின் பெரு முயற்சியால் அழகிய கோயில் கட்டப்பட்டு, அங்கே விக்கிரகத் திருமேனியளாக குடியேறினாள் என்கிறார்கள். நான்கு திருக்கரங்களில் அபய - வரத முத்திரைகளும், சூலமும், உடுக்கையும் கொண்டு ஒரு காலை தரையில் தொங்கவிட்டு, இன்னொரு காலை மடித்து, வீராசனத்தில் காட்சி தருகிறாள் கருமாரி திரிபுரசுந்தரி. தேவியின் சிரசுக்கு மேல் ஐந்துதலை நாகம் படமெடுத்து நிற்பது போன்ற அமைப்பு சிலிர்க்கச் செய்கிறது.    
             
    சிறப்பம்சம்:   
             
      அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு கையில் திருச்சாத்துருண்டையை ஏந்திய கோலத்தில் முத்துக்குமார சுவாமி அருள்பாலிப்பது சிறப்பு.

கருத்துகள் இல்லை: