ஞாயிறு, 12 ஜூலை, 2020

எனக்கு இவரையும் இவர் பாடல்களையும் ரொம்ப பிடிக்கும்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்தில் வைராக்கியம் பிறக்கும்... இவருக்கு அந்த பக்தி வைரக்கியம் பிறந்தது அவரின் குழந்தை இறப்பில்......

நண்பர் ஒருவரின் இந்தபதிவை பார்த்த பொழுது அவ்வளவு மகிழ்வாக இருந்தது.... அதான் அவர் பர்மிசனோட காப்பி பேஸ்ட் பண்ணிட்டேன்... இவங்க முன்னாடிலாம் நாம சாதாரணம்....

பூந்தானம்

1547 மாசி மாதம் அசுவினி நாளில் ,
கேரளா
மலப்புறம் மாவட்டத்தில்
பெரிந்தல்மண்ணைக்கு
அருகிலுள்ள கீழாற்றூரில்,ஒரு நம்பூதிரி
பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.

பூந்தானம் என்பது அவர்கள் இல்லத்தின் பெயர். இல்லப்பெயரே அவரது பெயராக  நிலைத்துவிட்டது.

அதிகமாக படிக்காதவர் இவர்.

20 வயதில் திருமணம் நடைபெற்றது.

நீண்ட காலமாக அவருக்கு குழந்தை இல்லை.

நீண்ட வேண்டுதலுக்கு பிறகு இவருக்கு ஒரு மகன் பிறந்தார்.
தன்
குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆனபோது அன்னப்ராசனம்
அமுது ஊட்டும் நிகழ்வு செய்ய நாள் குறித்து, உறவினர்களை எல்லாம் அழைத்திருந்தார்.

அன்னப்ராசன தினத்தன்று, வீட்டில் உள்ள எல்லாரும் சீக்கிரமே எழுந்துவிட்டனர்.

அவர் மனைவி, குழந்தையை நீராட்டி, புதுத் துணிகள் உடுத்தி விட்டு, அலங்கரித்து, தாய்ப்பால் கொடுத்துவிட்டு, குழந்தையை ஒரு துணியில் சுற்றித் தூங்க வைத்தாள்.

குழந்தை உறங்க ஆரம்பித்ததும் உறவினர்களை வரவேற்கச் சென்றாள்.

கேரளத்தில், மிகவும் மடியாக இருக்கும் பெண்கள் கையில் தாழங்குடையையையும், மேலே வெள்ளைத்துணியையும் போர்த்தியிருப்பார்கள்.

வந்திருந்த பெண்களில் ஒருவர், தான் போர்த்தியிருந்த துணியை, குழந்தை இருப்பதை அறியாமல் அதன்மேல் போட்டாள்.

பின்னால் வந்த அனைவரும் மேலே மேலே துணிகளைப் போட்டார்கள்.

அன்னப்ராசனம் நடக்கவேண்டிய நேரம் நெருங்கவே, குழந்தையை எடுத்து வர உள்ளே சென்று பார்த்த போது, குழந்தை மூச்சு முட்டி இறந்துவிட்டிருந்தது.

நீண்ட காலம் கழித்து பிறந்த குழந்தை இறந்ததைக் கண்ட  பூந்தானத்தின் மனைவி  நிலைகுலைந்து போனாள்.

அழுது அரற்றினாள்.

கிருஷ்ணா ஏன் இப்படி? என்று கதறினார் பூந்தானம்.

அவரது சோகத்தைக் கண்ட குருவாயூரப்பன், "பூந்தானம் கவலைப் படாதே! இனி நானே உன் பிள்ளை, என்று கூறி அவர் மடியில் அமர்ந்து, உன் மடியில் படுத்துக் கொள்ளட்டுமா?" என்று கேட்டான்.

கண்ணனைத் தன் மடியில் கண்ட பூந்தானம், பரவசமடைந்து, "கண்ணனே என் மடியில் குழந்தையாகத் தவழும்போது, எனக்கென்று பிள்ளையும் வேண்டுமோ?" என்று பக்தியில் தன்னை மறந்தார்.

‘ஞானப்பான’ என்ற தத்துவ முத்துக்கள் அவர் வாயிலிருந்து கவிதையாக வந்து விழுந்தது. சோகமே ஸ்லோகமானது.

‘ஞானப்பான’ எளிய மலையாள நடையில் உயர்ந்த தத்துவக் கருத்துகளைக் கொண்ட ஓர் காவியம்.

ஞானத்தைத் தரும் பானை அதாவது ஞானக் களஞ்சியம் என்றே சொல்லலாம்.

‘ஞானப்பானை' சாஸ்வதமற்ற வாழ்க்கையைப் பற்றிய ஓர் கவிதை.

இவரது வீடான பூந்தானம் இல்லம் என்பது இப்போது குருவாயூர் தேவஸ்வத்தின் கீழ் உள்ளது.

பூந்தானம்
நாராயண பட்டதிரியிடம்
ஞானப்பானை நூலை
கொடுத்து செம்மைப் படுத்தித் தருமாறு கேட்டார்.

இருவரும் பக்தியில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர்.
பட்டதிரி மெத்தப் படித்த மேதாவி.

நாராயணீயம் என்ற உன்னதக் காவியத்தை எழுதிய புலவர்.

பூந்தானம் படிப்பறிவற்றவர்.
“ஞானப்பானை’ என்ற தத்துவ பக்திக் கவிதைகளின் ஆசிரியர். பூந்தானத்திற்கு பட்டதிரியிடம் மிகுந்த மதிப்புண்டு.

தெய்வீக மொழியான சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட சுலோகங்களையே பகவான் விரும்புவார் என்றும் நாட்டு மொழியான மலையாளக் கவிதைக்கு செவி சாய்க்க மாட்டரென்றும் சொல்லி மறுத்து விட்டார் பட்டதிரி.

நாராயண பட்டத்ரி பூந்தானத்தை, பாமரர் என்று அலட்சியப்படுத்த
மனம் வருந்திய பூந்தானம் குருவாயூரப்பனிடம் முறையிட்டார்.
பின்
துக்கத்துடன் வீடு திரும்பினார் பூந்தானம்.

பட்டதிரி ஒரு சுலோகம் இயற்றியதும் அதைக் கேட்டு பகவான் காட்சி தருவதும் வழக்கம். அன்று இயற்றிய சுலோகத்தைப் பாடிய பின்னும் பகவான் பிரத்யட்சமாகாமற்
போகவே வேதனைப்பட்டார் பட்டதிரி.

மனமுருகி வேண்டிய பிறகு குருவாயூரப்பன் காட்சியளித்தாராம்.

பூந்தானம் என்று ஒரு பக்தன் மலையாளத்தில் இயற்றிய கவிதை கேட்டு மயங்கி நின்றதில் பட்டதிரிக்கு காட்சியளிக்க தாமதமாகி விட்டது என்று விளக்கினாராம் கண்ணன்

இவ்வளவு நடந்தும் தானே பக்தியில் கவிதை புனைவதில் பெரியவன் எனும் எண்ணம் பட்டத்திரியிடம் மிகுதியாக இருந்தது.
.
பூந்தானம் பட்டத்திரியை குருவாகவே பார்த்தார்.

பூந்தானம் நம் கிருஷ்ணரை எப்படி மனதால் எந்த உரு கொண்டு வணங்க வேண்டும்
கண்ணனின் முழு வடிவத்தை தியானிக்க முடியாமல் சிரமப்படுகிறேன். நல்லதொரு வழியை காட்டுங்கள்...’ என, பணிவோடு
கேட்கவே

பட்டத்திரி எந்த வேடத்திலும் நீங்களும் வணங்களாம்
ஏன் கருமையான எருமை உரு கொண்டும் வணங்கலாம் என கூற

பூந்தானம். அன்றிலிருந்து தினந்தோறும் கண்ணனை எருமைமாடு வடிவத்தில் மனதுள் இருத்தி தியானிக்க ஆரம்பித்தார்.

அவருடைய தீவிரமான தியானத்தால், அவருக்கு, எருமை மாடு வடிவத்திலேயே காட்சி கொடுத்தார், கண்ணன்.

ஓர் நாள்

குருவாயூரில் திருவிழாக் காலம். கண்ணக் கடவுள் உற்சவ மூர்த்தியாக வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தார்.

பக்தர்களோடு பக்தர்களாக நாராயண பட்டதிரியும் பூந்தானமும் முன்வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள்.

உற்சவ மூர்த்தியைத் தோளில் சுமந்திருந்த அன்பர்கள் பல்லக்கை வெளியே கொண்டுவர முனைந்தார்கள்.

கண்ணுக்குத் தெரியாமல் எங்கோ ஏதோ இடித்தது. எங்கே எது இடித்துத் தடுக்கிறது என்று பல்லக்குத் தூக்கியவர்கள் ஆராய்ந்தார்கள்.

அவர்கள் கண்ணுக்கு ஒன்றும் புலப்படவில்லை.

அப்போது பட்டதிரியின் அருகே நின்றிருந்த பூந்தானம் பரபரப்படைந்தார்.

உற்சவ மூர்த்தி நடைதாண்டி வெளியே வர இயலாமல் எது தடுக்கிறது?

காரணம் தெரியாமல் பல்லக்குத் தூக்கியவர்கள் தவித்தபோது பூந்தானம் உரத்துக் குரல் கொடுத்தார்.

கொஞ்சம் சாய்த்துப் பல்லக்கை எடுங்கள். மேலே எருமை மாட்டின் வாலாலோ, உடலாலோ எந்தப் பிரச்னையுமில்லை. கொம்புதான் முட்டுகிறது.

அதனால் தான் உற்சவ விக்ரகம் வெளியே வர இயலாதிருக்கிறது. சாய்த்து எடுத்தால் வெளியே கொண்டுவந்து விடலாம்!

அப்போது

மூல விக்ரகத்துக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்த அர்ச்சகர் ஓடோடி வந்தார்.

உற்சவ விக்கிரகத்தைப் பார்த்துப் படபடவெனக் கன்னத்தில் போட்டுக் கொண்டார்.

பிறகு சொல்லலானார்.
“”அன்பர்களே! நான் அர்ச்சனை செய்துகொண்டே இருந்தபோது குருவாயூரப்பனின் மூல விக்ரகம் திடீரென ஒரு மகிஷமாக (எருமை) மாறியது. தன் எருமைக் குரலில் “”என் பக்தன் பூந்தானம் என்னை, நாராயண பட்டதிரி சொன்ன அறிவுரைப்படி, எருமை வடிவில் தியானம் செய்கிறான். அதனால் தான் உனக்கு இந்தக் காட்சி கிட்டியிருக்கிறது. உற்சவ மூர்த்தியைச் சுமந்து செல்பவர்களிடம் இதைத் தெரிவி என எனக்கு உத்தரவிட்டார்!
என்றார்.

பூந்தானம் சாதாரண பக்தரல்ல. அவர் கடவுளைக் கண்ட மகான்!”
அர்ச்சகர் பூந்தானத்தின் கால்களில் கண்ணீர் பெருக விழுந்து வணங்கினார்.

இதையெல்லாம் கவனியாத பூந்தானம், ஒரே ஒரு கொம்புதான் மேலே இடிக்கிறது. இன்னொரு கொம்பு இடிக்கவில்லை. விரைவில் உற்சவ மூர்த்தியை வெளியே கொண்டு வாருங்கள்!” என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்!

அவர் சொன்னபடியே சாய்த்து எடுத்துவந்தவுடன் பல்லக்கு எளிதாக வெளியே வந்துவிட்டது.

மறுகணம் தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. எல்லோரும் கேட்கும் வகையில் உற்சவ விக்கிரகத்திலிருந்து “ம்மா!’ என்ற எருமை மாட்டின் கம்பீரக் குரல் எழுந்து அந்தப் பிரதேசமெங்கும் எதிரொலித்தது!

எருமை மாட்டு வடிவில் கண்ணனைக் காணாவிட்டாலும் அந்த சப்தத்தைக் கேட்ட பட்டதிரி மெய்சிலிர்த்தார்.

கண்களில் கண்ணீருடன் உற்சவ மூர்த்தியை வணங்கியவர், தான் சொன்னதை மனப்பூர்வமாக ஏற்று எருமை வடிவில் கண்ணனைக் கண்ட மகான் பூந்தானத்தின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.

“”படிப்பால் என்ன பயன்! பக்தியல்லவா முக்கியம்! ஏராளமான விஷயங்களைத் தெரிந்துகொண்டதற்காக பகவான் காட்சி கிடைத்துவிடுமா என்ன! உள்ளார்ந்த பக்திக்கல்லவோ என் கண்ணன் உருகுவான்!
என்றார் பட்டத்தரி.

பட்டதிரியின் உருக்கமான பேச்சை பூந்தானம் கவனித்தாய்த் தெரியவில்லை. “”ஆகா! என் குருவாயூரப்பன் என்ன அழகாக வாலை அசைக்கிறார்! என மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

பாகவதம் பூந்தானம் சிவபெருமான்

பூந்தானம் செய்யும் பாகவத உபன்யாசங்களை மக்கள் மிகவும் நேசித்தார்கள்

ஒரு நாள் கேரளாவில் உள்ள கொட்டியூர் என்னும் ஊரில் உள்ள சிவன் கோவில் வருடத்தில் சில நாட்களுக்கு மட்டுமே திறந்திருக்கும்.

 பூந்தானம் கொட்டியூர் சென்று அங்குள்ள குளத்தில் நீராடி, சிவபெருமானை வழிபட்டு மிகுந்த சந்தோஷத்துடன் அங்கேயே சில நாட்கள் தங்கினார்.

தினசரி கோவிலில் சிவன் முன்னால் பாகவத ப்ரவசனம் செய்தார்.

நூற்றுக்கணக்கான மக்கள் அவருடைய இனிமையான பிரவசனத்தைக் கேட்டார்கள்.

ஸ்ரீமத் பாகவதத்தில் கிருஷ்ணர் விளையாட்டாக ருக்மிணியிடம், சிசுபாலன், ஜராசந்தன், சால்வன் போன்றோர் இருக்கும்போது என்னை ஏன் திருமணம் செய்தாய் என்று பரிஹாஸமாகப் பேச, ருக்மிணி மயங்கி விழ, பின்னர் கிருஷ்ணர் சமாதானம் செய்வதைக் கூறும் ஸர்க்கம்.

பூந்தானம் இந்தப் பகுதியை வாசித்து முடித்து, அடுத்த நாள் தொடர்வதற்கு வசதியாய் அந்த அத்தியாயத்தின் முடிவில் அடையாளம் வைத்தார்.

ஆச்சர்யப்படும் வகையில் அடுத்த நாள் அவர் வைத்த அடையாளம் அந்த ஸர்க்கத்தின் தொடக்கத்தில் இருந்தது.

அதனால் மறுபடியும் அந்த ஸர்க்கத்தையே வாசித்தார்

மீண்டும் சில நாட்களுக்கு இவ்வாறு தொடர்ந்து நடந்தது.

கோவிலை மூட வேண்டிய நேரம் வந்தது.

பூந்தானம் பிரவசனத்தை முடித்து, வீட்டிற்குத் திரும்பும் வழியில் பாகவத புத்தகத்தைக் கோவிலிலேயே மறந்து வைத்துவிட்டு வந்ததை உணர்ந்தார்.

அதை எடுக்க மீண்டும் கோவிலுக்குச் சென்றார். ஆனால் நடை சாத்திவிட்டார்கள். யாருமே அருகில் இல்லை.

அவர் ப்ரவசனம் செய்த பாகவத அத்தியாயத்தின் அதே பகுதியை யாரோ கோவிலின் உள்ளிருந்து சொல்வதைக் கேட்க முடிந்தது.

 சாவி த்வாரத்தின் வழியே உள்ளே பார்த்தார்.

பரமசிவனே அதைப் படித்துக் கொண்டிருந்தார்.

பார்வதிதேவியும், பூதகணங்களும் அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
பூந்தானம் அசையாமல் அதைக் கேட்டார்.

கடைசியில் சிவன் பார்வதியிடம், நான் படித்த இந்த பாகவத ஸர்க்கம் உனக்குப் பிடித்ததா? என்று கேட்க,

பார்வதி, “ நன்றாக இருந்தது,
ஆனால் பூந்தானம் சொன்னதைப்போல் இல்லை” என்று கூறினாள்.

சிவனும், உண்மைதான் நானும் பூந்தானம் சொல்வதையே கேட்க ஆசைப்படுகிறேன்.

அதனால்தான், தினமும் அவர் வைத்த அடையாளத்தை இந்த ஸர்க்கத்தின் தொடக்கத்தில் வைத்தேன் என்று கூறினார்.

வெளியே நின்றுகொண்டிருந்த பூந்தானம் இதைக் கேட்டவுடன் மெய்சிலிர்த்து, க்ருஷ்ணா, க்ருஷ்ணா என்று உரக்கக் கூறினார்.

அவர் மீண்டும் பார்த்தபோது, சிவபெருமானும் பார்வதியும் மறைந்து விட்டனர்.

மோதிரம்

ஒருநாள் பூந்தானம் குருவாயூர் கோயிலில் வழிபட சென்றார். அப்போது நேரம் பிந்தி விட்டது. மாலை இருள் சூழ்ந்துவிட்டது.

அந்த நேரத்தில் வழிப்பறி கள்வர்கள் இரண்டு மூன்று பேர் சூழ்ந்து, அவரது மூட்டை முடிச்சுகளை பறித்துவிட்டு, அவரை மரத்தில் கட்டி வைத்து, கொல்ல வேண்டும் என்று நினைத்தார்கள்.

அந்த நேரத்தில் சட சட வென்று ஒரு குதிரைக் குளம்புகளின் ஒலி கேட்டது. ஒரு நிமிடத்தில் அந்த ஊர் அரசன் "சாமுதிரிபாடின்" அமைச்சரான "மங்காட்டச்சன்" என்ற வீரர் அங்கே தோன்றினார்.

கள்வர்கள் கதிகலங்கி ஓடி மறைந்தனர்.

தனது உயிரை காத்த அமைச்சரிடம் மிகுந்த நன்றி உடையவராகி பூந்தானம் அவருக்கு ஏதாவது பரிசளிக்க விரும்பினார்.

ஆனால் மங்காட்டச்சன் பூந்தானத்தின் கை விரலில் உள்ள மோதிரத்தை கொடுக்க ஆசைகொண்டார்.

அந்த மோதிரம் பூந்தானத்தின் குருவாகிய மேல்பத்தூர் நாராயண பட்டதிரியால் அவருக்கு ஆசீர்வதித்து கொடுக்கப்பட்டது.

அதனால் அதை அமைச்சருக்கு சற்று தயக்கத்துடன் கொடுத்து அனுப்பினார்.

அன்று இரவு குருவாயூர் கோவில் தலைமை பூசாரியின் கனவில் பகவான் தோன்றி, "நாளை நிர்மால்ய பூஜை வேளையில் என் விரலில் புதியதோர் மோதிரத்தை காண்பாய். அதனை பூந்தானம் வரும்போது அவரிடம் கொடுத்து விடுங்கள்" என்று சொல்லி மறைந்தார்.

அதே போல் மறுநாள் காலை பூந்தானம் ஆலய வழிபாட்டிற்கு வந்தபோது மேல்சாந்தி (தலைமை பூசாரி) பூந்தானத்திடம் அந்த மோதிரத்தை பகவான் கனவில் சொல்லியபடி கொடுத்தார்.

பூந்தானத்திற்கு அப்போது தான் உண்மை விளங்கியது. தன்னை கொள்ளைக் காரர்களிடமிருந்து பகவானே மாறுவேடத்தில் வந்து காப்பாற்றி அருளினார் என்று அறிந்து அளவில்லாத ஆனந்தமும், பக்தியும் கொண்டு ஆடிப் பாடினார்

மஞ்சுளா தரை

மஞ்சுளா என்ற பக்தை தினமும் இரவில் குருவாயூரப்பனுக்குச் சார்த்த பூமாலை கொண்டு வருவது வழக்கம்.

ஒருநாள் தாமதமானதால், கோயில் நடை மூடப்பட்டு விட்டது. கலக்கமடைந்தாள் மஞ்சுளா. அப்போது அவளை ஆசுவாசப்படுத்திய பூந்தானம் அடியார்,

அவள் நின்றிருக்கும் ஆல மரத்தின் அடியையே இறைவனின் திருவடியாக பாவித்து, பூமாலையை அங்கேயே சமர்ப்பிக்கும்படி சொன்னார்.

மஞ்சுளாவும் அப்படியே செய்தாள்.

மறுநாள் காலையில் மேல்சாந்தி, விக்கிரகத்தின் மீதுள்ள பூமாலைகளை அகற்றும்போது, ஒரு மாலையை மட்டும் கழற்ற முடியவில்லை.

அதைக் கண்ட பூந்தானம் பக்தி பரவசத்துடன், 'மஞ்சுளாவின் மாலை என்றால், அதுவும்  விழட்டும்’ என்றார்.

உடனே மாலை கீழே விழுந்தது,

அதனால், அந்த ஆலமரம் உள்ள இடம் பூஜைக்குரியதானது. அதை 'மஞ்சுளால் தரை’ என்பர்.

அன்னப்ராசனம்

குருவாயூரில் எல்லா நாட்களிலும் அன்னப்ராசனம் எனப்படும் சோறு ஊட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்குக் குழந்தை பிறந்தால், இங்கு வந்து சோறு ஊட்டுவதாக வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் இந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர்.

தவிர, குருவாயூரப்பனின் சந்நிதியில் சோறு ஊட்டினால், குழந்தைகள் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வளர குருவாயூரப்பன் அருள் புரிவான் என்பது நம்பிக்கை.

அடிமை கிடத்தல்

அடிமை கிடத்தல் என்றொரு பிரார்த்தனை யும் இங்கே உண்டு. குழந்தைகளை பகவானின் குழந்தையாக பாவித்து, நடையில் கிடத்திவிட்டுத் திரும்புவர்.

பின்பு மற்றொருவர் மூலமாக குழந்தையை எடுத்து வரச் செய்வர்.

அதற்கான காணிக்கையை உண்டியலில் செலுத்துவர். இதற்கு அடிமை கிடத்தல் அல்லது நடை தள்ளுதல் என்று பெயர்.

மூலவருக்கு முன்புறம் தென் பகுதியில் வாணலி போன்ற பெரிய பாத்திரத்தில் குந்துமணிகள் இருக்கும். பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்திய பின், தங்கள் குழந்தைகளின் கைகளால் அந்தக் குந்துமணிகளை வாரி எடுக்கச் செய்து, மீண்டும் அதிலேயே போடச் செய்வர். இதனால் குழந்தைகள் துறுதுறுப்புடன் திகழ்வர் என்பது ஐதீகம்.

ஆள் ரூபம் சமர்ப்பித்தல்’

அங்கங்களில் நோய் நொடி உள்ள பக்தர்கள் தங்களது குறை தீர்ந்தால், குறிப்பிட்ட கண், கை, கால் போன்ற அங்கங்களை மரம், வெள்ளி மற்றும் தங்கம் போன்றவற்றில் செய்து சமர்ப்பிப்பதை 'ஆள் ரூபம் சமர்ப்பித்தல்’ என்பர்.

ஞானப்பானை

மனிதப்பிறவியின் அர்த்தத்தை மிக அழகாய்ச் சொல்லும் இந்தக் கவிதையிலிருந்து சில துளிகள்:

"எத்ர ஜென்மம் மலத்தில் கழிஞ்ஞதும்

எத்ர ஜென்மம் ஜலத்தில் கழிஞ்ஞதும்

எத்ர ஜென்மங்ஙள் மண்ணில் கழிஞ்ஞதும்

எத்ர ஜென்மங்ஙள் மரங்ஙளாய் நின்னதும்

எத்ர ஜென்மங்ஙள் மரிச்சு நடன்னதும்

எத்ர ஜென்மங்ஙள் ம்ருகங்ஙள் பஷுக்களாய்"

மானிடப் பிறவி அரியது. முன்பு புழுவாய், பூச்சியாய், மிருகங்களாய், மரங்களாய், பல ஜன்மங்களை எடுத்து பின்னர் இப்போது கிடைத்திருக்கிறது இந்த மனிதப் பிறவி. குறுகிய காலம் மட்டுமே இருக்கும் இந்த வாழ்க்கையில் நாம் பகவானது திருநாமத்தை உச்சரிக்காமல் இருக்கின்றோமே? என்று ஆச்சர்யப்படுகிறார் பூந்தானம்.

"இன்னலேயோளம் எந்தென்னறிஞ்ஞிலா
இனி நாளேயும் எந்தென்னறிஞ்ஞிலா
இன்னீக்கண்ட தடிக்கு வினாசவும்
இன்ன நேரம் என்னேதுமறிஞ்ஞிலா"

நேற்று வரை என்ன நிகழ்ந்தது  என்று  அறியவில்லை, இனி நாளை என்ன நடக்கும் என்றும் தெரியவில்லை, இன்றிருக்கும் இந்த சரீரத்திற்கு அழிவு எந்த நேரத்தில் என்றும் அறிவதில்லை.

"நம்மெயொக்கேயும் பந்திச்ச ஸாதனம்
கர்மம் என்னறியேண்டது முன்பினால்
முன்னில் இக்கண்ட விஸ்வம் அசேஷவும்
ஒன்னாயுள்ளொரு ஜ்யோதிஸ்வரூபமாய்"

நம் அனைவரையும் இந்த உலகத்தில் கட்டி இருப்பது கர்மமே என்பதை அறிய வேண்டும். ப்ரளயத்தில் நாம் காணும் இந்த உலகமெல்லாம் ஒன்றேயான ஒரே ஜோதிஸ்வரூபத்தில் ஒடுங்குகின்றது.

க்ருஷ்ண க்ருஷ்ண முகுந்தா ஜனார்த்தனா
க்ருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே
அச்யுதானந்த கோவிந்த மாதவா

சச்சிதானந்த நாராயணா ஹரே!!!

1640 ஆம் ஆண்டில் பூந்தானம் இந்த உலகத்தை விட்டு வெளியேறினார்.

ஒரு நாள் கிருஷ்ணன் பூந்தானத்தை ‘என்னிடம் வா’ என்று அழைத்தார்.

மிகுந்த சந்தோஷமடைந்த பூந்தானம், வீட்டில் உள்ளவர்களிடம்,

நாளை விஷ்ணுதூதர்கள் நம் இல்லத்திற்கு வருகிறார்கள். வீட்டை நன்கு அலங்கரியுங்கள்; யாரெல்லாம் கிருஷ்ணனைக் காண வருகிறீர்கள் என்று கேட்டார்.

அவர் சொர்க்கத்திற்கு புறப்படுவதாக அறிவித்தபோது, தன்னுடன் சேர விரும்பும் எவரையும் அவர் அழைத்தார்.

இதை கிராம மக்கள் அனைவரும் மறுத்துவிட்டனர்.

எப்போதும் கிருஷ்ணனை நினைத்து அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என அவ்வூர் மக்கள் நினைத்தார்கள்.

இறுதியில், நோய்வாய்ப்பட்ட மனைவி மற்றும் பராமரித்த ஒரு வேலைக்காரி ஆகியோரோடு பரலோக பதவி அடைந்தார்.

இவர் "ஞானப்பான", "சந்தானகோபாலம்", "ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்", "குசேல விருத்தம்", "சுபத்ரா கரணம்", "108 ஹரி" "கனசங்கம்" போன்ற பல பக்தி பாடல்களை பாடி மலையாள மொழியின் புண்ணிய பெருமையை வளர்த்துள்ளார்.

சந்தான கோபாலம் என்ற நூலை எழுதிக் கொண்டிருந்த போது பகவானது இருப்பிடம் ஆகிய வைகுண்டத்தை வருணிக்க முனைந்தார்.

எவ்வளவு வியந்து, புகழ்ந்து எழுதிய போதிலும் அவருக்கு மன நிறைவு உண்டாகவில்லை. அன்று இரவு தூங்கும் போது தெய்வீக கனவு ஒன்றைக் கண்டார்.

அதில் அவர் வைகுண்டம் சென்று இருந்ததாகவும், அங்கு உள்ள பக்தர்கள் எல்லாம் முன்னாளில் பூலோகத்தில் அவரது பாகவத பாராயணம் கேட்டு பரகதி அடைந்தவர்களாகவும், அவர்களின் வேண்டுகோளின் படி வைகுண்டத்திலும் பாகவத பாராயணம் செய்து எல்லோரையும் பரவச படுத்தியதாகவும் கனவு கண்டார். கனவில் கண்டது போலவே வைகுண்டத்தை தனது நூல் ஆகிய சந்தான கோபாலத்தில் பாடி வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: