ஞாயிறு, 22 மார்ச், 2020

பிராமண ரத்னா அட்சய பாத்திரமாகிய அன்னதானசிவன்

பலவருடங்களாக ஒரு பிரசாரம் நடக்கிறது….

தமிழ் மொழிக்கு பாரத தேசத்தின் விடுதலைக்கு சமூக நல்லிணக்கத்திற்க்கு பொதுவாழ்க்கைக்கு, ஜாதி வேறுபாட்டிற்க்கு அப்பாற்பட்டு மனித குல உயர்வுக்கும் கூட பிராமண குலத்தின் பல பெரியோர்கள் ஆங்காங்கே செய்துவந்த எத்தனையோ நற்பணிகள் மறைக்கப்பட்டு... பிராமண எதிர்ப்பு மற்றும் வெறுப்பு என்னும் நச்சுப்புகை பகையாக, அரசியல், ஊடகம், எழுத்து, பேச்சு மூலம் பரப்பப்படுகிறது.
பிராமணர்கள் இந்த தேசத்தில் வாழக்கூடாத விஷக்கிரிமிகள் போலவும் சுயநலம் கொண்ட இனவெறியர்கள் என்றும் விஷமிகள் பொய்யை பிரசாரம் செய்து வருகிறார்கள். பிராமணர்கள் ஆற்றிய அறவாழ்வின் சுவடுகள், தியாகங்கள், தொண்டுகள்,செயற்கரிய சேவைகள் மறக்கடிக்கப்படுகின்றன. அந்த பிராமண துவேஷிகளின் கூற்றுகளை மறுத்துரைக்கவும், இந்த கருத்துலக  தோழர்கள், மானமிகுகள், உடன் பிறப்புகள் எனச் சொல்லிக்கொள்ளும் “மயக்க வா(வியா)திகள்” எல்லோருக்கும் புரியவைக்கவும்… தமிழ் மொழி, தேசம், மனிதகுல வளர்ச்சி என அத்தனை துறைகளிலும் பிராமண பெரியோர்கள் பலர் தன் உடல் பொருள், ஆவி, என தியாகம் செய்து வந்த,வருகின்ற அறப்பணிகளை அடையாளம் காட்டி அந்த பெரியோர்களை “பிராமண ரத்னாக்களை”ப் பற்றிப் பதிவு செய்யும் பகுதியாக “பிராமண ரத்னா” என்னும் சிந்திக்கவைக்கும் சிந்தனைப் பகுதி...

சின்னஞ் சிறுவயதில் செயலதுவோ பெரியதுவாம்
செவியில் ஒலித்ததுமே சிலுசிலுத்துப் போகுதடா
அன்னதான சிவம் அறமேற் கொண்டதுவோ
அதுவல்லோ தேப்பெருமாள் நல்லூரின் அழியாப்புகழ்

“சான்ஸே இல்லப்பா” என சுத்த தமிழில் 21 ஆம் நூற்றாண்டு தலைமுறையின் உதடுகள் உச்சரிக்கும் இவரைப் பற்றிய செய்திகளைக் கேட்டால்... ஆம்! நம்ப முடியாது தான், தன்னலம், சுயமுன்னேற்றம், இவையே மூச்சுக்காற்றாகக் கொண்டு அப்படி வாழ்வதே வாழ்க்கை....  பொதுநலம், தியாகம் என்பதெல்லாம் முட்டாள்தனம் என வாழ்க்கையை வகுத்துக்கொண்டுள்ள இன்றைய மனிதர்களுக்கு நம்ப முடியாதது தான். “ஒரு நாய் பட்டினி கிடந்தால் அந்த நாய்க்கு உணவிடுவதே என் மதம். அந்த நாயே என் கடவுள்.” என்றார் விவேகானந்தர்... இப்படிப்பட்ட மனிதாபிமானம் கொண்ட மதத்திற்க்கு, தேசத்து மக்களுக்கு இன்றைக்கு சிலர் மனிதாபிமானம் பற்றி போதிக்கிறார்கள்.


பிறப்பு, இளமைக்காலம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேப்பெருமாள்நல்லூர் என்னும் சிற்றூர். பிராமணர்களில் அஷ்டஸகஸ்ரம் என அழைக்கப்படும் பிரிவினர் அதிகம் உள்ள ஊர்.


     தமிழ் இலக்கியம் பதிவுசெய்துள்ள உதியஞ் சேரலாதன் எப்படி மஹாபாரத போரில் கௌரவ, பாண்டவ என இரு படைகளுக்கும் உணவு படைத்தானோ அப்படி யார் எவர் என ஜாதி, மொழி, இனம், ஊர், ஏதும் பாராது கோயில்களுக்கு விழாக்காலங்களில் இறையருள் பெற வரும் மக்களுக்கு இல்லையென சொல்லாது அன்னதானம் செய்து அதற்கென்றே தனது உடல் பொருள் ஆவியை தந்தவர் அன்னதான சிவன்.


     1852 இல் அசுவத நாராயண சாஸ்திரியார், லக்ஷ்மி அம்மாள் தம்பதிக்கு பிறந்த இராமசாமி என்னும் சிவனுக்கு அன்னம்மாள் என்னும் சகோதரி மற்றும் சுப்ரமணிய சாஸ்திரி என்னும் சகோதரர் உண்டு.


     தேப்பெருமாள் நல்லூர் சிவன் கோவிலில் உள்ள தக்ஷிணாமூர்த்தியிடம் இவர் குழந்தை பருவம் முதல் கொண்ட பக்தி வியப்புக்குரியது. உள்ளூர் ஆரம்ப பாடசாலைக்கு சரிவர செல்லாமல் சிலேட்டில் பூக்களை கொண்டு சென்று தக்ஷிணாமூர்த்திக்கு ஸமர்பிப்பார்.


     உள்ளூர் காளியாட்டத்திருவிழாவின் போது தண்ணீர் பந்தல் அமைக்க படிக்கும் காலத்தில் துவங்கிய சிவனின் தயை... பின்னாளில் அன்னதான சிவனாக்கியது.


     வேத அத்யயனம் செய்து வந்தாலும் பின்னர் வைதீகத்துக்கு வரவில்லை. திருவிடைமருதூர் செட்டியார் சத்திரத்தில் தங்கும் யாத்ரீகர்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் தலைமை சமையல்காரர் வேலை.. மாத சம்பளம் மூன்று ரூபாய் உணவு வசதி உண்டு.


     உணவு தயாரித்தவுடன் சிறிது கிண்ணத்தில் சாதத்தினை எடுத்து வைப்பார் எல்லோருக்கும் உணவு வழங்கியபின் மீண்டும் குளிப்பார் கால் நடையாகவே தேப்பெருமாள்நல்லூர் சிவன் கோவிலுக்கு வருவார் தக்ஷிணாமூர்த்தி சன்னதிக்கு நிவேதனம் செய்வார் பின் தனது வீட்டில் உணவு உண்பார்.


     சிலசமயம் நேரம் ஆகி சாதம் கெட்டுவிடக்கூடாது என்பதால் சிறிது நீர் சேர்த்து சாதத்தினை எடுத்துவந்து தக்ஷிணாமூர்த்திக்கு சமர்பிப்பார். அதனை காணும் சிலர் பழைய சாதத்தினை சிவன் நிவேதனம் செய்வதாக எண்ணி “பழையசோற்று சிவன்” என அழைப்பதுண்டு.


     ருசியான பழத்தினை ஸ்ரீ ராமனுக்கு சமர்பிக்க எண்ணிய சபரி சுவைத்துப்பார்த்து பழங்களை கொடுத்தாலும் அந்த எச்சில் பழத்தின் பின்னால் உள்ள பக்திக்காக ஸ்ரீ ராமன் ஏற்றான். அப்படி சிவனின் நீர் கலந்த அன்னத்தின் பின்னால் உள்ள பக்திக்காக தக்ஷிணாமூர்த்தி அந்த அன்னத்தினை ஏற்றார் போலும்.


     இருபத்தைந்தாவது வயதில் சிவகாமி என்னும் தர்மவதியை பெற்றோர்கள் ஏற்பாட்டில் மணந்த சிவனுக்கு உண்மையில் அவரது தர்ம வாழ்க்கைக்கு உதவும் சகதர்மிணியாகவே இருந்தார்.


அன்னதானம்


    தேப்பெருமாள்நல்லூர் பெருமாள் சன்னதியில் சித்திரை மாதம் நடைபெற்றுவந்த வஸந்தோத்ஸவத்தின் போது ஸம்ப்ரதாய நாட்டிய நாடகங்கள் நடைபெறும்.  உலகப் புகழ் பெற்ற அந்த நாடகங்களை காண பல ஊர் மக்கள் வருவது வழக்கம். அவர்களுக்கு அன்னதானம் செய்யவேண்டும் என தோன்ற ராமசாமி தனது பூர்வீக சொத்தினை விற்று ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஸ்ரீ ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி சமேத வரதராஜர், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹர் சன்னதி உத்ஸவத்தில் தனது முதல் அன்னதானத்தினை துவங்கினார்.


     பெருமாள் சன்னதியில் ராமசாமி ஆரம்பித்த அன்னதானம் பின்னாளில் அவரை அன்னதான சிவனாகியது 50 வருடம் அவரது அன்னதான பணி தடையின்றி வளர்ந்து தமிழகத்தின் பல ஊர்களில் கோயில் திருவிழாக்களில் நடந்தது.


     சில பாத்திரங்களுடன் முதல் நாள் இரவு செல்வார் சிப்பந்திகள் வருவார்கள். முதல் நாள் மாலை வரை அன்னதானத்திற்கான எந்த அறிகுறியும் தெரியாத அந்த இடத்தில் மறுநாள் காலை ஆயிரக்கணக்கானவர்களுக்கு அன்னதானம் என்றால் யாருக்கும் வியப்புதான்.


     சிவன் உபயோகித்த சமையல் பாத்திரங்கள் பல கும்பகோணம் ஸ்ரீ காஞ்சிமடத்தில் இருந்தது.


     சிவன் அவர்களின் வருடாந்திர அன்னதான நிகழ்ச்சிகள் - சித்திரை மாதம் நாகைப்பட்டினம் மாவட்டம் திருச்செங்காட்டாங்குடி அமுது படையல் திருவிழா. வைகாசியில் தேப்பெருமாள் நல்லூர் வசந்தோத்ஸவம், நன்னிலம் தாலுகா பூந்தோட்டம் அருகேயுள்ள திருமாளகரம் திருவிழா.  ஆனி மாதம் காரைக்காலில் மாம்பழத்திருவிழா. ஆடி மாதம் சங்கமுகம், ஆடி அமாவாசை மயிலாடுதுறை அருகே பூம்புகாரில்.  ஐப்பசியில்    மாயூரம் (மயிலாடுதுறை) துலாஸ்நானம், கார்த்திகையில் திருநாகேஸ்வரம் கார்த்திகை சோமவாரத்திருவிழா, மார்கழியில் நாச்சியார் கோயில் தெப்பம், தை மாதம் எண்கண் புஷ்யம் திருவிழா, மாசியில் கும்பகோணம் மகம், திருவைகாவூர் சிவராத்திரி பங்குனியில்  எட்டுக்குடியில் உத்திரம். மற்றும் பல இடங்களில் நடந்த திருவிழாக்கள்... என அவர் சேவை தொடரும் ...


அட்சய பாத்திரமானார்


    யாரிடமும் சிவன்  காசு பணம் என வாங்கமாட்டார், அன்னதானத்துக்கு “இந்த இடத்துக்கு இந்த பொருள்களை அனுப்பி வை” என உத்தரவிடுவார், அதே சமயம் அவரவர் தகுதி வசதி தெரிந்து வாங்குவார். ஒருமுறை இரண்டு மூட்டை அரிசி அனுப்பி வைத்தவரிடம் உன் குடும்பம் பெரியது ஒருமூட்டை போதும் என்றாராம். 


     ஒருமுறை ஸமாராதனைக்கு ஊறுகாய்க்கு நெல்லிக்காய் பத்து வண்டியில் வந்ததாம். இரண்டு நாளில் தீர்ந்துவிட மேலும் பத்துவண்டியில் நெல்லிக்காய் வந்ததாம்.


     விறகு நூறு வண்டி, உணவு பரிமாறப்பட்ட இடத்தினை உடனடியாக சுத்தம் செய்வது சிவனின் தூய்மையான குணத்துக்கு அடையாளம். சுத்தம் செய்ய துடைப்பம் மட்டும் இரண்டு மாட்டுவண்டியில் வந்ததாம்.

     திருச்சி திருவானைக்கா கோயில் தாடங்க பிரதிஷ்டையின் போது ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது என்றால் யோசித்துக்கொள்ளுங்கள்.


     அவரின் மனதின் விசாலம் மற்றும் தூய்மை தன்னலம் பாராத தன்மை இவற்றினால் கவரப்பட்ட பல நூறு செல்வந்தர்கள் அவரின் வாக்குக்கு கொடுத்த மரியாதை இன்றைக்கு நினைத்துக்கூட பார்க்கமுடியாத செயல். ஆம் அது சிவன் ஸமாராதனை.


     பரிமாற பாத்திரங்களை அந்தந்த இடங்களில் வாங்கி பின் பணி முடிந்தவுடன் ஏலம் விட்டு அதன் மூலம் சிப்பந்திகளுக்கு சம்பளம் கொடுத்து, உணவு மீதம் இல்லாமல் பார்த்துக்கொள்வதுடன் யாருக்கும் இல்லை என சொல்லாது உணவளித்து, தயிர் ,நெய் மீதமானால் அவற்றினை பீப்பாய்களில் நிரப்பி...  கெடாமல் இருக்க குளத்துக்குள் குளிர்ந்த நீரில் மூழ்க வைத்து ... பாதுகாத்து பின் பயன்படுத்திக்கொள்வது அவரின் சிக்கன நடவடிக்கை.


     உணவு தயாராகும் போதே அதனில் ஏதும் குறை இருக்கிறதா என வாசனையின் மூலம் அறிந்து “டேய்! சாம்பாருக்கு இரண்டு முறம் மல்லி சேர்க்கணும், ஒரு முறம் உப்பு சேர்க்கணும்” என சிவனிடமிருந்து உத்தரவு வரும்.

 ஸமாராதனையில் உண்டவர்கள் எழுந்தவுடன் அவர்கள் உண்ட எச்சில் இலையின் மீது விழுந்து புரளுவது சிவனின் வழக்கம். கரூர் அருகே உள்ள நெரூரில் சதாசிவ பிரம்மேந்திரர் ஆராதனை (நினைவு) தினத்தில் பலதரப்பட்ட மக்கள் உண்ட இலைகளின் மீது பிரார்த்தனை செய்துகொண்டவர்கள் உருள்வது இன்றும் நடைபெறுகிறது. எனவே சிவனின் இந்த செயல் அவர் மன அடக்கத்துக்கு செய்த செயல். சாதாரண மனிதர்களின் புரிதலுக்கு அப்பாற்பட உயர்ந்த நிலையை அடையும் நிலை அதை புரிந்துகொள்ள எல்லாராலும் முடியாது.    


      எல்லோருக்கும் உணவு அளித்துவிட்டு தான் மட்டும் யாரோ ஒரு அன்பரின் வீட்டிற்க்கு சென்று மோர்சாதம் சாப்பிடுவார், அப்படி செல்லும் வீடுகளில் பிராமணர் அல்லாதவர்கள் வீடும் உண்டு.


     வயது முதிர்ந்த பிறகு மாட்டு வண்டியில் பயணம், அதுவும் வண்டிக்காரனுக்கு கட்டளை -  என்ன தெரியுமா? மாட்டை அடித்து விரட்டி ஓட்டுவதோ அல்லது தார் குச்சி போடுவதோ கூடாது என்பார். சில சமயம் மாட்டுவண்டியின் பின் தானே நடந்தும் செல்லுவார் அதிக தூரம் பயணித்ததால் மாட்டிற்கு துன்பம் கூடாது என எண்ணிய மகாத்மாதான் சிவன்.


     மனைவிக்கு உடல்நிலை சரியில்லை உடனே வரவும் என செய்தி , ஸமாராதனை முடிந்தவுடன் வருகிறேன் போகிற உயிரை பிடிக்கவாடா முடியும்? இத்தனை பேருக்கும் சாப்பாடு போடவேண்டாமா... ஸமாராதனை முடிந்து சிவன் சென்றபோது அவரது தொண்டிற்க்கு, கொள்கைக்கு, தியாகத்துக்கு உற்ற துணையாய் இருந்த தர்ம பத்னி சிவகாமி தீர்க்கசுமங்கலியாய் பிரிந்திருந்தார். தன்னலம் பாராத சிவனுக்கு சுயநலம் பாராத சிவகாமி என்னே பொருத்தம்!!!!


.    பலர் அறியாத செய்தி, சிவன் நன்றாக ஜோதிடம் பார்க்கக்கூடியவர். அவரிடம் ஜோதிடம் பார்த்து  அவர் கூறியபடியே நடந்து  பலனடைந்தவர்கள் பலர்.

    1852 இல் பிறந்து தனது 87வது வயதில் 19/5/1939 இல் இறைவனடி சேர்ந்த கலியுக பீமன் அன்னதான சிவன் பற்றி அவரது நூற்றாண்டு விழாவின் போது... .


     “தேப்பெருமாள்நல்லூர் அன்னதானசிவன் .. உலகில் பிறக்கும்போது எப்படி தனக்கு என்று உடமை ஏதுமின்றி பிறந்தாரோ அது போல வாழ்நாள் எல்லாம் வாழ்ந்திருந்தவர். மேலே ஆகாசம், கீழே பூமி, சுற்றிலும் காற்று, தண்ணீர், பறவைகள், மனிதர்கள், இடுப்பில் ஒரு கந்தல், தோளில் ஒரு சவுக்கம், வயதான பிறகு ஊன்றிக்கொள்ள கையில் ஒரு தடி, இவ்வளவுதான் அவருடய உடமைகள்! சில அபூர்வ மனிதர்களைப் போல முகவெட்டு “பெர்சனால்டி” என்று சொல்வதற்கும் அவரிடம் ஒன்றுமில்லை.


     ஆயினும் அந்த அதிசயமனிதர் தமது வாழ்நாளில் லட்ச லட்ச லட்ச மக்களுக்கு அறுசுவை உண்டி அளித்திருக்கிறார் என்றால் அந்த அற்புதத்தினை என்னவென்று சொல்வது. --  (கல்கி 25/5/1952) 


     ஓயாத உழைப்பு... உழைப்பு... சரியாக நேரத்துக்கு வேண்டிய உணவு கூட உண்ணாத உழைப்பு... காலத்தின் கைகளில் ஸ்ரீ சிவன் உடல் தளர்ந்தது.

      “மாமா உங்களது அந்திம கைங்கர்யத்தினை நான் செய்ய அனுமதிக்கவேண்டும்”.. சகோதரியின் மகன் பிரார்திக்க...


     எனது ஈமக்கிரியைக்காக யாரிடமும் நீ கைநீட்டி பணம் வாங்கக்கூடாது உன்னிடம் உள்ள பணத்தினை கொண்டே செய்யவேண்டும் அப்படி என்றால் அனுமதி தருகிறேன்...


     ஆஹா! என்ன ஒரு உயர்ந்த சிந்தனை. தன்னலம் சிறிதும் இல்லாது தான் செய்யும் அன்னதானத்துக்கு கூட யாரிடம் பல் இளித்து கேட்காது, தன் சுயமரியாதையும் விட்டுக்கொடுக்காது, கருணை கூடிய அதிகாரத்தில் “இதை இதை அனுப்பி வை” என கட்டளையிட்டு அப்படி அவர் கேட்பதே தாங்கள் செய்யும் பாக்கியம் என மிட்டா மிராசுகள் செல்வந்தர்கள் தனவந்தர்களை நினைக்க வைத்தவர் அல்லவோ சிவன். 

 

      சிவனின் காலத்துக்குப் பிறகும் பல தர்ம காரியங்கள் நடந்தன. அவருடன் பணியாற்றிய அந்தரங்க பக்தர் ஸ்ரீ ஏ.கிருஷ்ணஸ்வாமி ஐயரால் தேப்பெருமாள்நல்லூரில் அன்னதானசிவன் ஹரிஜன் எலிமெண்டரி பள்ளிக்கூடம் துவங்கினார் அதில் 110 ஹரிஜன மாணவர்கள் படித்தனர்.

     இவர்களின் பகல் உணவுக்காக அறக்கூழ் சாலை அமைக்கப்பட்டது

குடந்தையில் 28/5/53 இல் தாயற்ற அல்லது உணவு பெற முடியாத குழந்தைகளுக்கு  “அன்னதான சிவன் சிசு நலவிடுதி” ... தேப்பெருமாள் நல்லூரில் சிவன் இலவச வாசக சாலை..

 அன்னதான சிவன் ஞாபகார்த்த சங்கம் 19/10/1952 இல் சிவன் நூற்றாண்டின் போது மழையின்மையால் ஏற்பட்ட பஞ்சத்தினால் பாதிக்கப்பட்ட வடஆற்காடு மாவட்டம் வாலாஜா தாலுக்கா செங்காடு கிராமத்தில் ஸ்ரீ கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் உதவும் பணிகள் கி.வா.ஜ. போன்ற பிரபலங்கள் பலர் போற்றும் வகையில் துவக்கிவைக்கப்பட்டு நடந்தது..

 

     தேப்பெருமாள் நல்லூரில் சிவனை நினைவுகூற ஒரு சிலையோ மணிமண்டபமோ இல்லை ... ஆனால் இன்று அவரது உறவினர் நடத்தும் அன்னதானசிவன் முதியோர் இல்லம் சிவனின் சிந்தனையை தாங்கி நிற்கிறது. தேப்பெருமாள் நல்லூர் சிவன் கோயில் சன்னதியில் தட்சிணாமூர்த்தியை சேவிக்கும்போது நமக்கு அன்னதானசிவனின் ஞாபகம்தான் மேலோங்குகிறது.


     ஆம்! அன்னதான சிவன் என்னும் மகான் செய்த பணிகளை எண்ணும்போது அவர் உருவம் மனித மனங்களில் சிலையாக வருகிறது., அந்த மனங்களே அவருக்கு மணிமண்டபம்.


       தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி என்னும் மஹாகவி.


     பல லட்சம் தனிமனிதர்களுக்காக அவர்களுக்கு பசிப்பிணியை போக்கவே தன் வாழ்வை அற்பணித்தார் தேப்பெருமாள் நல்லூர் அன்னதானசிவன்... என்னும் ஏழை பிராமணன்.  


       சொன்னதானம் செய்திடினும் சேர்விலாது புகழோங்கும்

        என்னதானம் செய்திடினும் ஏழையெளியர் பசிதீரும்

        அன்னதானம் செய்வதுவே அரியபெரிய தானமதாம்

        அன்னதானம் செய்த சிவன் அன்பு வாழ்க வாழியவே 

 1&2 அன்னதான சிவனின் ஆத்மார்த்த தெய்வம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மற்றும் ஸ்ரீ அன்னதான லிங்கம்     -   தேப்பெருமாள் நல்லூர் சிவன் சன்னதி

                                                    




3) அன்னதான சிவன் நினைவாக ஹரிஜன குழந்தைகளுக்கு கல்வி அறிவு வளர அவரது நூற்றாண்டு 1952 இல் விஸ்வநாத ஐயரின் தந்தையால் துவக்கப்பட்டு  1954 இல் அரசு அங்கீகாரம் கிடைத்து. ஹரிஜன கல்வி மேம்பாட்டு தொண்டு செய்து பின் விஸ்வநாத ஐயரால் பலவருடம் நடத்தப்பட்டு பின்   வேறு ஒருவரால் அரசு உதவி பெரும் பள்ளியாக இன்றும்  நடந்துவரும் துவக்கப்பள்ளி.

                            

     
.
4) அன்னதான சிவனுடைய திருமாளிகை (வீடு).தற்சமயம் இந்த கிரஹம் அவர் உறவினர் வசம்  உள்ளது.

      அன்னதான சிவன் பற்றிய பாட்டு


அன்னதான சிவத்தின் புகழ் யாரால் சொல்ல முடியும்

யாரால் சொல்ல முடியும்


அவரைப்போல அன்னமிட்டால் அன்றே துன்பம் ஒழியும்

அன்றே துன்பம் ஒழியும்

என்னதானம் செய்திட்டாலும் இந்த அன்னதானம்


இந்த அன்னதானம்

இவைகளிலே மிகப்பெரிதாய் இதனால் பெய்யும் வானம்

என்ன தானம் செய்திட்டாலும் இந்த அன்னதானம்

இந்த அன்னதானம்

அன்னதான சிவத்தின் புகழ் யாரால் சொல்ல முடியும்
(சென்னை பல்லாவரம் அன்னதான சிவன் அறக்கட்டளை பள்ளியில் உணவு உண்ணும் முன்  அவர் மீது மாணவர்கள் பாடும் பாடல் - நினைவுகூறி பாடிகாட்டியவர் தேப்பெருமாள் நல்லூர் வே. ஆண்டவன் மாமா )

கருத்துகள் இல்லை: