திங்கள், 16 செப்டம்பர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 34 ॐ

சிவகங்கைக் குளத்தருகே இருக்கும் இடங்களைப் பற்றி  கேட்டதில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பூஜை செய்த சக்கரமும், சன்னதியும் இருப்பதாய்க் கூறினார். சிவகங்கைக் குளத்தின் வட கரையில் நவலிங்கத்துக்கு அருகே இருப்பதாய்ப் பின்னர் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.

அடுத்து தீட்சிதர்கள் பத்தின கேள்வி? தீட்சிதர்கள் முகலாயர் படை எடுப்பின் போது உயிர்த் தியாகம் செய்ததும் நடராஜரைத் தூக்கிக்கொண்டு போய் ஒளித்து வைத்ததும் பற்றிக் குறிப்பு க்களைத் தேடி ஆராய்ந்தபோது "திண்ணை"யில் அரவந்தன் நீலகண்டன் எழுதி இருப்பதைப் படித்தேன். மாலிக்காஃபூர் படை எடுப்பு நேர்ந்த சமயத்தில் இது நடந்ததாயும் இது பற்றி அமீர் குஸ்ரூ தாரிக்-இ-அலை விவரமாக எழுதி இருப்பதாயும் அவர் சொல்லி இருக்கிறார். மேலும் சிதம்பரம் தீட்சிதர்கள் பத்தி ஒரு தனிப்பதிவும் வர இருப்பதால் இந்த விஷயத்தை இதோடு நிறுத்திக் கொள்கிறேன். அடுத்து நாம் காண இருப்பது "ரஜ சபை" என அழைக்கப்படும் ஆயிரக்கால் மண்டபம். சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப் பட்டதாய்ச் சொல்லப்படுவதற்கான சரித்திரக் குறிப்புக்கள் இருந்தாலும் இந்த ரஜ சபை மிகவும் பழமை வாய்ந்தது என்றும் சொல்கிறார்கள். இந்த ஆயிரக் கால் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு தான் ஆதி சேஷனின் அவதாரம் ஆன பதஞ்சலி முனிவர் தன்னுடைய சிஷ்யர்களுக்குப் பாடம் கற்பித்தார் எனவும் இங்கே தான் மகாபாஷ்யம் எழுதினார் எனவும் சொல்லப்படுகிறது. இதைத் தவிர கம்பர் தன்னுடைய ராமாயாணத்தை அரங்கேற்றியதும் தில்லை தீட்சிதர்களுக்கு முன்னிலையில் இந்த ஆயிரக்கால் மண்டபத்தில் தான். சேக்கிழார் பெரிய புராணம் அரங்கேற்றம் நடத்தியதும் இங்கே தான். மேலும் மாணிக்க வாசகர் பெளத்தர்களை வாதில் வென்றதும் நடராஜர் அருள் பெற்றதும் இங்கே தான் எனக் கூறப் படுகிறது. கம்ப ராமாயணம் அரங்கேறியது பற்றிய சந்தேகம் சிலருக்கு. நானும் ஸ்ரீரங்கத்தில் அரங்கேறியதாய்த் தான் படித்திருக்கிறேன். என்றாலும் என்னிடம் உள்ள குறிப்புக்களில் இங்கே சிதம்பரம் தீட்சிதர்களிடம் அங்கீகாரம் பெறவும் கம்பர் இங்கே தன்னுடைய ராமாயணத்தைப் பாடியதாயும் கூறுகிறது. ஆகவே தான் அதை எழுதினேன். அடுத்து கோபுரங்களுக்குச் செய்த பணிகளைப் பற்றியும் தீட்சிதர்கள் பற்றியும் தெரிந்து கொள்ளும் முன்னர் சிதம்பரம் நகரின் முக்கியத்துவம் பற்றி ஒரு விளக்கம்.

வைஷ்ணவர்களுக்குக் கோயில் என்றால் அது ஸ்ரீரங்கத்தையே குறிக்கும். அங்கே ரங்கராஜனாக அருள் பாலிக்கிறார் விஷ்ணு. சைவர்களுக்கோ கோயில் என்றால் அது சிதம்பரம் மட்டுமே. இந்தப் பிரபஞ்சத்தின் ஐந்து ஆதார சக்திகளில் "ஆகாயம்" சிதம்பரம் தான். இந்தப் பிரபஞ்சமே "விராட புருஷன்" எனக் கூறப்படும் அந்த மகா சக்தியிடம் அடக்கம் என்றால் அந்த விராட புருஷனின் இருதயத்தின் மத்தியப் பகுதி சிதம்பரம் ஆகும் எனக் கூறப்படுகிறது. குன்டலினி யோக சாஸ்திர ஆதாரங்களில் இது "அனஹதா" எனக் கூறப்படுகிறது. சிவன் கோவில்களின் தலைமைப் பீடமாகக் கருதப்படுகிறது. மற்றச் சிவன் கோவில்களில் சிவனின் மற்ற சக்திகள் வியாபித்திருப்பதாயும் இங்கே தான் ஆத்ம சக்தி இருப்பதாயும் தினம் இரவு அர்த்தஜாம பூஜை முடிந்ததும் எல்லா சக்திகளும் இங்கே வந்து ஒடுங்குவதாயும் கூறுகிறார்கள். ஐந்து சபைகளில் இது "கனக சபை" . மற்றதில் திருவாலங்காட்டில் "ரத்ன சபை" மதுரையில் "வெள்ளி சபை", திருநெல்வேலியில் "தாமிர சபை", திருக்குற்றாலத்தில் "சித்திர சபை". இந்தத் திருக்குற்றாலத்தில் சித்திர சபை பரமரிப்புக் குறைவால் சித்திரங்கள் அழியும் நிலையில் உள்ளது. நடராஜரும் அங்கங்கே கொஞ்சம் தழும்புகளோடவே காணப் படுகிறார். சிவனின் முழு சக்தியும் நடராஜ ஸ்வரூபத்தில் இங்கே பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறது. மனித உடலில் இதயம் எவ்வளவு முக்கியமோ அப்படி சிதம்பரம் கோவில் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் நடராஜர் முழு உருவத்துடன் இங்கே ஜீவனுடன் விளங்கிக் கொண்டிருப்பதாயும் இந்த ஸ்வரூபத்தை "அம்சி" எனச் சொல்கின்றனர். மற்றச் சிவன் கோவில்களின் லிங்க ஸ்வரூபம் அவ்வாறு இல்லை எனவும் அவை "அம்சரூபா" எனவும் அழைக்கப் படுவதாயும் சொல்கின்றனர்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி, அருணாசலம் நினைத்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, காஞ்சியில் வாழ்தால் முக்தி  என்று சொல்லப்படும் வரிசையில் சிதம்பரம் நடராஜ தரிசனமே முக்தி எனச் சொல்லப்படுகிறது.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

கருத்துகள் இல்லை: