சனி, 29 செப்டம்பர், 2018

நாட்டு கவுண்டர், வெள்ளாள கவுண்டர் வேறு வேறா? தெளிவாக பலர் விளக்கியும் மீண்டும் மீண்டும் இது தீர்ந்தபாடில்லை.
 

இதன் நிலைபாடு : சேர நாட்டில் காடுகளை அழித்து நகர்/காணிகளை அமைத்த வெள்ளாளர் காமிண்டன் பட்டம் கட்டிகொண்டு குடிசாதிகளை காத்தனர். பட்டம் என்பது ஒருவருக்குரியது. நாளடைவில் பட்டம் கட்டிகொண்டவரின் பங்காளிகள் பெண் கட்டி பெண் எடுத்த மாமன் மைத்துனர்கள் காமிண்டன் பட்டம் சூட்டி கொண்டனர். ஊரை உருவாக்கிய போது அதனை நிர்வகிக்கும் பொருட்டு ஊர் கவுண்டர் என்று ஒருவரை நியமித்தனர். இதேபோல பண்ணாடி, கொத்துக்காரர் எல்லோரும். நான்கைந்து கிராமம்/ஊரை சேர்த்து ஒரு காணியை நிர்வகிக்கும் பொருட்டு ஒரு காணியாள கவுண்டரை நியமித்தனர். இந்த காணியாள கவுண்டர் வெள்ளாளன் தான். இரண்டு மூன்று காணிகள் சேர்ந்து வளநாடு என்று அறியப்படும். ( அண்ணமாரின் பொன்னிவளநாடு போல ). இதனை நிர்வகிக்க நியமிக்கபடும் வெள்ளாளன் பட்டக்காரன்/நாட்டார்.

இந்த வளநாடுகள் இரண்டு / மூன்று/நான்கு சேர்ந்து ஒரு பெரிய வளநாடாக நிர்வகிக்க பட்டது. ( காங்கேய நாடு 5 வளநாடுகளை கொண்டது.
1. காடையூர் முழுக்காதன்,2.காங்கேயம் செங்கன்னன்,
3.ஆனூர்(பழையகோட்டை) பயிரன் / வள்ளியரச்சல் பில்லன்,
4.பாப்பினி தோடை,
5. வீரசோழபுரம் கன்னந்தை நிர்வாகம்).
இது பெரிய நாட்டார்/ பெரிய பட்டக்காரர் நிர்வாகம்(காங்கேய நாட்டுக்கு மேல உள்ள ஐந்தில் முழுக்காதன்/செங்கன்னன்/பயிரன் மாறி மாறி பெரியபட்டம் கட்டினர்). இதுவும் வெள்ளாளன் தான். கொங்க தேசத்தின் 24 நாடுகள் இதன் படி தான். இந்த 24 நாட்டை நிர்வகிப்பது மூவேந்தரில் ஒருவர். நிர்வாகம் சார்ந்தவரை மட்டும் தான் நாட்டார்/நாட்டான்/நாட்டாமை காரன் (நாட்டு ஆளுமை காரன்)  என்று குறிப்பிடுவர்.

அன்றைய நாளில் வெள்ளாளர் பட்டம் கட்டிகொண்டது முதலில் 

1.கீகரை பூந்துறை ( நாமக்கல் ,ஈரோடு காவேரிக்கு கிழக்கு) ,
2.மேகரை பூந்துறை ( அவல் பூந்துறை , நசியனூர் சுற்றிய பகுதி),
3.காங்கேய ( காங்கேயம் ,வெள்ளகோவில்,முத்தூர், காடையூர் , நத்தகாடையூர் இப்படி 14 காணி).

4. தென்கரை ( தாராபுரம் வடக்கு,மூலனூர், புதுப்பை, ஊதியூர் ......) 
 

இங்கு பட்டம் வெள்ளாளருக்கு முதலில் கட்டினர். பின் வேடுவரிடம் இருந்து வாங்குதல் , மன்னனிடம் பெறுவது என்று மீதமும் பட்டம் கட்டி பட்டக்காரனாக / நாட்டாராக வெள்ளாளர் கொங்க நாடு முழுக்க மாறினர். முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த பட்டக்காரர்/நாட்டார் அந்தஸ்த்து காலத்துக்கு காலம் மாறிவிடும். ஆட்சி மாற்றம் அடிக்கடி நிகழும்.

நாட்டான் என்பது அண்ணன்,  காணியாளன் என்பது தம்பி. இது தான் வித்தியாசம். பொங்கலூர் நாட்டின் நாட்டாரில் வருவது கொடுவாய் ஓதாலன். அதில் ஒருவருடைய மகன் 2பேர் தம்பி 3பேர் பங்கிட்டு கொண்டது தான் குண்டடம், நிழலி, கண்டியன்கோவில்......., இவர்கள் 5 பேரும் காணியாள கவுண்டர்கள். நாட்டாரின் மகன் காணியாளனாக உள்ளான். இப்படி நமக்குள் ஒருவருக்கு பயன்படுத்திய வார்த்தை நாளடைவில் அந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தினர். உதாரணமாக இன்றும் சில கூட்டங்கள் தங்களை பட்டக்காரர் பங்காளிகள் என்று சொல்வதை காணலாம்.

சில தரவுகள்,

1. கன்னிவாடி கன்னகுல ஆதினத்தின் தலைவரான முத்துச்சாமி கவுண்டர், மோரூர் நாட்டுகவுண்டரான சூரிய காங்கையனின் மகன். இந்த வழி தோன்றல் கன்னிவாடியன் கூட்டம். [கன்னகுல பட்டயம்].

2. சென்னிமலையில் ஈஞ்கூர் ஈஞ்ச குலத்தவரின் கட்டளை மடத்தின் பெயர் ஈஞ்சகுல நாட்டுகவுண்டர் மடம்.

3.இறையமங்களம் கன்னகுலத்தவர் கோவிலில் பொறிக்கபட்டுள்ளது , #கொங்கு_நாட்டு_வெள்ளாளர் சங்கம்.  நாட்டு கவுண்டர் கோவில்.

4. பரஞ்சேர்வழி விழியகுலத்தவர் கீகரை பூந்துறை நாட்டில் அதிகாரம் நாட்டு கவுண்டர் ஆயினர்.

5. பின்பு பருத்திபள்ளி செல்லகுலத்தில் பெண்ணெடுத்து மல்லசமுத்திரம் வளநாட்டை சீராக பெற்று நாட்டு கவுண்டராக விழியகுலத்தவர் மாறினர்.

6.கன்னகுலத்தவர் பாண்டியரால் மோரூர் நாட்டுகவுண்டராய் நியமனம் செய்யபட்டனர். அதற்கு முன்பு மோரூர் நாட்டார் ஆந்தை குலத்தவர். நாட்டார் காலத்துக்கு காலம் மாறும் பதவி.

இப்படி பல உண்டு.,

கீழே தீரன் சின்னமலை கவுண்டர் கிரயம் செய்த பட்டயம் பிரதி உள்ளது. இதில் குறிப்பிடபடும் நாட்டுகவுண்டடரெல்லாம் வெள்ளாளன் அல்லாது யார்?

தென்னிந்திய வர்ணாசிரம கோட்பாட்டின் படி நாட்டார் என்றாலே வெள்ளாளர் (சத்திரியர்) என்று பொருள். நிறைய இடத்தில் பிராமணர் நாட்டார் நகரத்தார்.... என்று வரும்.

   கீகரை ஏழுகரை நாடுகளை (வளநாடு) நிர்வகித்த 8 குலத்தவர் நாட்டு என்று சேர்த்து கொண்டனர். நாட்டு வெள்ளாளர், நாட்டு கவுண்டர் என்று முற்சேர்க்கை. நமது பக்கமும் இது உள்ளது. ஊர் பெரிய வீட்டுகாரரை நாட்டு / நாட்டுதுரை என்று அழைப்பர். வெள்ளைக்காரன் சாதிவாரி கணக்கெடுப்பு செய்து, கீகரையில் நாட்டர் குலமாக இருந்த 8 குலத்தை நாட்டுகவுண்டரென குறிப்பிட்டான்.  நாம் நம்மோடு இருந்த நாட்டார் குலங்களை மறந்து போனோம்.

நமக்குள் சண்டை மூட்டுவதே சிலருக்கு எண்ணம். தெரியாததை தெரிந்தவர்களிடம் கேட்கலாம். நாமளே முடிவு செய்வது தவறாக கூட இருக்கலாம்.

திருமணம் முடிந்த பின் நாட்டுகல் வழிபடுபது நம் சடங்கு. இது 24 நாட்டுகவுண்டர்களாக பாவிக்கபடும் கல். மங்கல வாழ்த்து நாட்டார் சபை புகுதலை சொல்லும். இந்த நாட்டார் சபை 79 வெள்ளாள கவுண்டரை உடையது. ( கல்லிடைபாடி கல்வெட்டில் எழுவத்தொன்பது வளநாட்டு சபையை சேர்ந்த கன்னந்தை என்று குறிப்பு உள்ளது. கன்னந்தை குலம் நாட்டு கவுண்டரில் ஏது? நாட்டார் சபையில் எப்படி?)

ஊருக்கு ஊர் சம்பிரதாய வழக்கு வேறுபடும். இதே காங்கேயத்தில் நாங்கள் செய்யும் சீர் , தாராபுரத்தில் வேறு படுகிறது. பொள்ளாச்சி, உடுமலை பக்கம் நிறைய வித்தியாசம். வேறு வேறு சாதியென பிரித்து கொள்ள வேண்டுமா?

ஆறு தாண்டி பெண் கொடுக்கும் வழக்கம் நம்மிடம் முன்பு கிடையாது. காவேரி மட்டுமல்ல, அமாராவதி,நொய்யல் கூட அடங்கும்.

கீழே உள்ள படத்தில் குறிப்பிட்ட படி நான் நாட்டு கவுண்டர் வகையறா. ஆனால் நான் வெள்ளாளன். 🙂. எப்படி?? வேறு சாதி என்றால் நானும் வேற சாதி தான். எங்களோடு மணவினையும், அன்னம் தண்ணீர் பொழங்காட்டியும் பரவாயில்லை.



கருத்துகள் இல்லை: