சனி, 29 செப்டம்பர், 2018

இந்து  சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்குச்
                            சிலக் கேள்விகள்

1927ம் வருடம் தொடங்கி கோயில், இந்து சமய அறக்  கட்டளைகள் தமிழக அரசுக் கட்டுப்பாட்டில் வரத் தொடங்கின. 1947ம் வருடம் சுமார் 100 கோயில்களைத் தன் பிடியில் வைத்திருந்த  அரசு  தற்போது 38,000 கோயில்களுக்கு  மேல்  தன்   இரும்புப் பிடியில் வைத்துள்ளது. கோயில்களின் சிறப்பான நிர்வாகத்திற்காகத்தான் அவற்றை எங்கள் வசம் வைத்துள்ளோம் என்று சொல்லும் அரசும், கோயில்களில் அறநிலையத்துறை அதிகாரிகளாக நிர்வாகம் அரசு ஊழியர்களும், இவர்கள் இந்தக் கோயில்களைத் தம் வசம் வைத்துள்ளதை ஆதரிப்பவர்களும் கீழ்கண்ட கேள்விகளுக்குத் தெளிவான, நேரடியான விடை அளிக்க வேண்டும்:

1.  இந்திய அரசியல் சட்டப்படி எல்லா மதத்தினருக்கும் (மைனாரிட்டி சமூகங்கள் உள்பட) ஒரே மாதிரியான  அடிப்படை வழிபாட்டு, நிர்வாக உரிமை கொடுத்துள்ள போது, இந்து சமய கோயில்கள், மடங்கள், அறக்கட்டளைகளை, அவற்றின் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் மட்டும் ஏன் அரசு எடுத்துக்கொள்கிறது? மிக அதிக அளவில் தற்போது பெருகியுள்ள சர்ச்சுகள், மசூதிகள் அவற்றின் சொத்துக்கள், ஆகிவற்றை ஏன் நிர்வகிக்கக் கூடாது?

2.  ஹிந்து சமயத் திருமடங்கள் தனி மத உட்பிரிவைச் சேர்ந்தவை என்று உச்ச நீதி மன்றதின் அரசியல் சாசன அமர்வு சொன்ன பிறகும் (1954) இந்து சமய அறநிலையத்துறை எப்படித் திருமடங்களைக் கட்டுப்படுத்துகிறது. உதாரணம் - திருப்போரூர் சிதம்பரம் ஸ்வாமிகள் மடத்திற்கு அரசு வேலைக்காரனானக் காஞ்சிபுரம் உதவி ஆணையரைத் தக்காராக  7 வருடங்களாக வைத்துள்ளது.

3. கோயில்களின் வழிபாட்டு உரிமைகளில் குறுக்கிட, அரசுக்கு அறநிலையத்துறைச் சட்டத்தில் எந்த இடமும் இல்லாத போது, எப்படி  அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில் பாலாலயம், கும்பாபிஷேகம், திருவிழாக்கள் போன்றவற்றை முடிவு செய்கிறார்கள் ?

4. கம்ப ராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் எரிக்க வேண்டும் என்று மேடைதோரும் பேசிய நாஸ்திகன் அண்ணாதுரை இறந்த தினத்தன்று (பிப்ரவரி 3ம் தேதி) கோயில்கள் உள்ளே இலை போட்டு  அன்னதானம் எந்த ஆகம  விதியின் கீழ் நடக்கின்றது ?  கோட்ஸே தூக்கில் போடப்பட்ட தினத்தில் காந்தி ஆச்ரிமங்களில் அன்னதானம் செய்ய அரசு உத்தரவு  போடுமா? இந்திரா  காந்தி நினைவு  நாளன்று  சீக்கியர்கள்  தங்கள் குருத்வராவில் அன்னதானம்  செய்ய வேண்டும் என்று அரசு  உத்தரவு போட முடியுமா ?

5.  அறநிலையத்துறைச் சட்டம் பிரிவு 25-A ன் படி அறங்காவலராக  இருப்பவர் கோயில் இருக்கும் இடத்தில், அந்த ஊரில்  நல்ல  நடத்தை உள்ளவர், நன்மதிப்பு உள்ளவர் என்ற பெயர் பெற்றிருக்க  வேண்டும்.  கோயில் நிர்வாக விஷயத்தில் கவனம் செலுத்த ஆர்வமும்,  வேண்டிய அளவு நேரமும் உள்ளவராக இருக்க வேண்டும். அப்படி இருக்கையில்,   அறநிலையத்துறை ஊழியர்கள் எந்தத் தகுதியின் அடிப்படையில் கோயில் தக்காராக உள்ளனர்?

6. அறநிலையத்துறைச் சட்டம் 47ம், 49ம் கண்டிப்பாக இந்து சமயக் கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும், ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு  தலித் அறங்காவலர், ஒரு பெண் அறங்காவலர் நியமனம் செய்யப்பட வேண்டும்  என்று சொல்லும் போது 2011ம் ஆண்டிலிருந்து அவ்வாறு செய்யாமல் தலித்துகளுக்கும்  பெண்களுக்கும் அறநிலையத்துறை ஏன் வஞ்சனை செய்கிறது ?

7. அறநிலையத்துறைச் சட்டப்படி கோயில் கட்டமைப்புகளை அப்படியே வைத்துப் பாதுகாக்க வேண்டும். அவற்றை மாற்றவோ, புதிதாக ஏதும் கட்டவோ கூடாது என்று சொன்னப்  பிறகு, விதிகளை சட்டத்திற்கு மாறாக மோசடியாக இயற்றி, புதிய கோபுரம், மண்டபம் கட்டுதல், பழைய கோபுரம், மண்டபங்கள், கோயில் கதவுகள், தூண்கள்  பழுது என்று சொல்லி அவற்றை அகற்றி விற்பனை செய்தல், புதிய சிலை செய்தல் அவற்றில் தங்கம் சேர்க்கிறேன் என்று மோசடி செய்தல் - இவையெல்லாம் எந்த சட்டத்தின் கீழ் அறநிலையத்துறை அதிகாரிகள் செய்கிறார்கள் என்று காட்ட முடியுமா ? 

8. திருக்கோயில் கோபுரங்களுக்கு, கொடிமரங்களுக்குத் தங்க முலாம் பூசுதல் - தங்கத் தேர், வெள்ளித் தேர், தங்கத் தொட்டில்செய்தல் -  பணம் கட்டினால் -  இந்தத்  தேர்களில் சுவாமி பவனி - எவை எல்லாம் எந்த ஆகம  அடிப்படையில் - எந்த அறநிலையத்துறைச் சட்டப் பிரிவின் கீழ் செய்தார்கள் என்று  காட்ட முடியுமா?

9. எந்த ஆகமத்தின் கீழ் நீங்கள் கோயில் உள்ளே அலுவலகங்கள், கழிப்பறைகள் எல்லாம் கட்டிக்கொண்டு கோலோச்சுகிறீர்கள்? கோயில் உள்ளே இவைகள் எல்லாம் கட்டக் கூடாது என்பதை அறநிலையதுறைச் சட்டமும், தமிழ்நாடு கோயில் நுழைவுச் சட்ட விதிகளும் சொல்கின்றனவே? உங்கள் துறையில் உண்மையில் சட்ட அறிவு உள்ளவர்கள் இருக்கின்றார்களா? அப்படி இருந்தால் அந்த அறிவு - சட்டத்தை மீறுவதற்காகவா?

அறநிலையத்துறையின்  கோயில் நிர்வாக இலட்சணம்:

10. சென்னை ttk சாலையில் தீனதயாளன் வீட்டுக் கிடங்கில் கிடைத்த  200க்கும் அதிகமான கோயில் சிலைகளை இவர்கள்  அடையாளம் காட்டவில்லை - காரணம் இந்தக் கோயில் சிலை என்று அடையாளம் காட்டினால், சிலை காணாமல் போன போது - போலீசிடம் புகார் கொடுக்கவில்லை என்ற உண்மை வெளிப்பட்டு விடும். இப்பொழுது தெரிகிறதா? சிலைக் கடத்தலுக்கு யார் முழு உடந்தை என்று?

11. 1986  ஆண்டிலிருந்து தற்போது வரை சுமார் 50000 ஏக்கர்கள் கோயில், கட்டளை விளை நிலங்கள் காணவில்லை. தற்போது உள்ள 4.75 லட்சம் ஏக்கர் நிலங்களில் சுமார் 2.5 லட்சம் ஏக்கர்கள்- ஆக்கிரமிப்பில் உள்ளன அல்லது பல வருடங்களாகக் குத்தகைப் பணம் வரவில்லை. இவர்களுடைய கொள்கை குறிப்பில் ஒரு போதும் நஞ்சை நிலங்கள் குத்தகை வசூல் எவ்வளவு, புஞ்சை நிலங்கள் வசூல் எவ்வளவு, கிராமப்புற மனைகள் வசூல் எவ்வளவு, நகர்ப்புற  மனைகள் குத்தகை வசூல் எவ்வளவு  - என்றெல்லாம்  போட மாட்டார்கள். மேலும் ஒரு ஆண்டு வசூல் எவ்வளவு என்று போடுவதற்கு அவர்களுக்குக் கூடக் கூச்சமாக உள்ளது. அவ்வளவு குறைவான  வசூல். அதானால் மூன்றாண்டு வசூல்  தொகையைத் தான்  குறிப்பிடுகிறார்கள்.  வருடம்தோறும் ரூ. 6000 கோடி வர வேண்டிய கோயில் நிலங்கள் வருமானம், ரூ 120 கோடி கூட  வருவதில்லை. அதாவது வர வேண்டிய தொகையில் 2 சதவிகிதம் கூட வருவதில்லை. இப்படி 2 % குறைவான வசூல் தான் 40 வருடங்களாக இருக்கிறது. இதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் என்ன விளக்கம் அளிக்க முடியும்? 

• 33,000 ஏக்கர் நிலங்கள் உள்ள  வேதாரண்யம் ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் கோயில் நிலங்களில் 30000 ஏக்கர்கள் ஆக்கிரமிப்பில். கோயில் நிலங்களை அளவீடு செய்ய கோரிக்கை வைக்கிறார் நேர்மையான செயல் அலுவலர். கோரிக்கையை  குப்பையில் போடுகிறார் நாகை மாவட்ட ஆட்சியர். மாவட்ட ஆட்சியர் மீது  ஆணையர் அனுமதி பெற்று வழக்குத் தொடுக்கிறார் நேர்மையான  அலுவலர். பிறகு அந்த வழக்கைத் திரும்பப் பெற ஆணையர் அலுவலக  அதிகாரிகளே அவருக்கு ஏன் அழுத்தம் கொடுத்தனர்?

•  திருச்செந்தூர் அருகில் உள்ள உவரி ஸ்ரீ சாஸ்தா கோயில் நிலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட  கார்னெட் என்னும் விலைமதிப்பு மிகுந்த கற்களை எடுத்தக் கொள்ளையன் மீது மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்த உதவி ஆணையரை மிரட்டி அன்றைய ஆணையர் வழக்கினை ஏன் திரும்பப் பெறச் செய்தார்?

• புதுக்கோட்டை அரசர்கள் அந்த மாவட்டக் கோயிலுகளுக்கு வழங்கிய 105,,000 ஏக்கர் நிலங்கள் எங்கே ?

•  தஞ்சை இராஜா சத்திரம் ஒர் இந்து சமய நிறுவனம். இதற்குச் சொந்தமான 33,000 ஏக்கர் நிலங்களை தஞ்சை மாவட்ட ஆட்சியர் இந்துக்களுக்கு எந்த பயனும் இன்றி வைத்திருப்பதை எதிர்த்து ஏன் உங்கள் துறை நடவடிக்கை எடுக்கவில்லை ?

• கரூர் நகரமும், அதைச் சார்ந்தப் பகுதிகளிலும் உள்ள 850 ஏக்கர் நிலங்கள் கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரருக்குச்  சொந்தம். அவற்றை மீட்க 30 வருடங்களுக்கு முன்பு உங்கள்  துறை வழக்கு போடுவதாக பாவலா காட்டிவிட்டு இப்போது வழக்கை கைவிட்டு விடலாம் என்று சொல்லுவது ஏன் ?

• மதுரை நகரில் வண்டியூர் தெப்பக்குளம் அருகில் 50 ஏக்கர்கள் - ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரருக்குச் சொந்தமானவை - உச்ச நீதி மன்றத் தீர்ப்பிற்கு பிறகும் ஏன் மீட்கவில்லை ?

• சிறுமலைப் பகுதியில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 3000 ஏக்கர் நிலங்களை ஏன்
கையகப் படுத்தவில்லை? 

• அறநிலையத்துறை கைக்குச் செல்லும் முன் திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலுக்கு 6300 ஏக்கர்கள் சொந்தம்.
தற்போது 2000க்கும் குறைவான ஏக்கர்களே உள்ளன.

• அதே போல் வடுவூர் ஸ்ரீ இராமர் கோயிலுக்கு இருந்த 5000 ஏக்கர்கள் தற்போது எப்படி 50 ஏக்கர்களாக சுருங்கின?

 12. அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில்  பணத்தை  வெளிப்படையாகக்  கொள்ளை அடித்த காட்சிகள்

• திருவேற்காடு  திருக்கோயில் பணத்தை எடுத்து அறநிலையத்துறை  மந்திரிக்கு ஒரு டோயோட்டா இன்னோவா காரும், அவர் உதவியாளருக்கு மற்றொரு இன்னோவா காரும் வாங்கியுள்ளனர்.

• ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் பணத்தில் வாங்கப்பட்ட காரை அமைச்சர் மகன் பயன் படுத்தி வருகிறார்.

• ஏற்கனவே அறநிலையத்துறை ஆணையர் உபயோகத்திற்காக ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் பணத்தில் கார் வாங்கப் பட்டுள்ளது.

• அமைச்சருக்கு கூடுதல் ஓட்டுநராக ஒருவர் நியமிக்கப்பட்டு அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இருந்து அவருக்கு சம்பளம் அளிக்கப்படுகிறது.

• மாங்காடு ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயில் பணத்தில் வாங்கப்பட்ட காரைத்தான் அறநிலையத்துறை ஆணையர் பயன்படுத்துகிறார்.

• அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் காரைப் பயன்படுத்திகிறார்.

• இந்தக் கார்களுக்கானப் பெட்ரோல் டீசல் செலவை கோயிலில் இருந்து மாதந்தோறும் எடுக்கின்றனர்.

• அறநிலையத்துறையின் 10 ஓட்டுனர்கள் மேல் இருக்கின்றனர். இவர்களுள் ஒருவரைத் தவிர மற்றவர் எல்லோரும் கோயில் ஊழியர்கள். கோயில் பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு அறநிலையத்துறை அதிகாரிகளுக்குக் கார் ஓட்டுகின்றனர்.

• சென்னை ஆணையர் அலுவலகத்தில் 12 தட்டச்சு எழுத்தர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கோயில் பணியாளர்கள். கோயில் கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள். புதிதாகச் சங்கம் அமைத்து உங்கள் உரிமைகளுக்கு போராடுகின்றீர்களே?   2 வருடங்கள் ஒருவர் ஒரே இடத்தில் தொடர்ந்து பணி புரிந்தால் அவரை அந்த அலுவலகத்தில் நிரந்தர பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற அரசுச் சட்டப்படி அவர்களை அறநிலையத்துறை ஊழியர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்று உங்கள் சங்கம் சார்பில் போராடுவீர்களா?  இந்தத் தட்டச்சர்களோடு ஸ்ரீ கபாலி கோயில் ஊழியர்கள் இருவரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒருவர் ஆணையர் அலுவலகத்தில் பல வருடங்களாகப் பணி புரிகிறார். ஒருவர் கோட்டையில் அறநிலையத்துறை அலுவலகத்தில் வேலை செய்கிறார்.

• திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீ சங்கரநாராயணர் கோயில் பணம் ரூ. 80,000/- எடுத்து ஆணையர் அலுவலகத்தில் செராக்ஸ் யந்திரம் வாங்கி உள்ளனர். 

• சென்னையில் மூன்று கோயில்களில் இருந்து பணம் எடுத்து ஆணையர் அலுவலகத்தில் உள்ள தணிக்கைப் பிரிவிற்கு குளிர் சாதன வசதி செய்து கொண்டுள்ளனர்.

• வடபழனி ஸ்ரீ முருகன் கோயில் பணத்தை எடுத்து  ஆணையர் அலுவலகத்தில் கழிப்பறைகள் கட்டியுள்ளனர். திருத்தணி கோயில் பணத்தை எடுத்து ஆணையர் அலுவலகத்தில் கூட்ட அரங்கு, நூலகம், வரவேற்பறை கட்டியுள்ளனர்.

• ஆணையர் அலுவலகத்தில் கணினிகள் வாங்கப் பழனி கோயில் பணம் ரூ.  15.00 லட்சம் அறநிலையத்துறை அதிகாரிகளால் சட்ட விரோதமாக கையாடல் செய்யப்பட்டுள்ளது.

• தஞ்சை இணை ஆணையர் அலுவலகச் செலவிற்காக திங்களூர் என்ற கிராமத்தில் உள்ள கோயில் பணத்தில் இருந்து ரூ. 50,000 கையாடல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் (ஸ்ரீ நாச்சியார் தேவஸ்தானம்) ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கோயில், திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயில், மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபாலஸ்வாமி கோயில், திருவாரூர் ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கோயில் இது போன்ற 45 கோயில்களில் செயல் அலுவலர் நியமனம் செய்யப்பட்டு நிர்வாகம் செய்யப்பட்டு வந்ததை மாண்புமிகு உச்ச நீதி மன்ற அமர்வு 10.02.1965 தேதி வெளியிட்டத் தீர்ப்பின் மூலம்  தடை செய்துவிட்டது. தற்போது எந்த அதிகாரத்தின் பேரில் அங்கு அறநிலையத்துறை  -  செயல்  அலுவலர்களை வைத்து நிர்வாகம் செய்கிறது என்று உங்களால் காட்ட முடியுமா ?


கருத்துகள் இல்லை: