திங்கள், 4 ஏப்ரல், 2016

ஆந்திராவில் உள்ள மட்டப்பள்ளியில் லட்சுமி நரசிம்மர் கோயில் இருக்கிறது. இந்த கோயில் இருக்கும் வனப் பகுதியில் காட்டுவாசி ஒருவர் வாழ்ந்து வந்தார்.
அவருக்கு மட்டப்பள்ளி பகவான் மீது மிகுந்த பக்தி உண்டு. கோயில் இருக்கும் இடத்திலிருந்து நீண்ட தூரத்தில் அவரது வீடு இருந்தது.ஒருநாள் பகவானைப் பார்க்கும் ஆவலில் அரிசி,பருப்பு,காய், கனிகள் ஆகியவற்றுடன் இரண்டு நாட்கள் மிகவும் சிரமப் பட்டு நடந்து கோயிலுக்கு வந்த போது நடை அடைக்கப்பட்டு இருந்தது.சுவாமியை காணமுடியாத வருத்தத்தில் காட்டுவாசி, கோயில் முன்பு உள்ள மண்டபத்தில் படுத்துவிட்டார். அவர் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த போது கோயில் பட்டாச்சார்யார் வந்து எழுப்பினார்.“யாரப்பா நீ? எழுந்திரு. எங்கிருந்து வந்திருக்கிறாய்?” என அன்புடன் கேட்டார்.காட்டுவாசி தன்னைப் பற்றிய விபரங்களை கூறினார். பட்டாச்சார்யார் அவனிடம், “ நீ இங்கே காத்திருக்க வேண்டாம்.இப்போதே நடை திறந்து சுவாமியை உனக்கு காட்டுகிறேன். உள்ளே வா.” என்றார்.காட்டுவாசியும் உள்ளே செல்ல,அவன் கொண்டு வந்த பொருட்களை சுவாமிக்கு நைவேத்தியம் செய்து, சடாரி வைத்து தீர்த்தம் கொடுத்தார்.சுவாமியை தனிமையில் மிக அருமையாக தரிசத்ததில் காட்டுவாசிக்கு மிகுந்த ஆனந்தம் ஏற்பட்டது. பின்னர் பட்டாச்சார்யார்,தம்பி! இன்று இரவு நீ கோயிலுக்குள்ளேயே தங்கிவிடு. நான் காலையில் நடை திறந்த பிறகு போனால் போதும். இரவில் இந்த காட்டில் கள்ளர் பயம் உண்டு.எனவே இங்கேயே தங்கியிரு.” என்றார்.
காட்டுவாசியும் சம்மதித்தார். மறுநாள் பட்டாச்சார்யார் கதவை திறந்தார். அங்கு ஒருவர் அழுக்கடைந்த ஆடையுடன் குளிக்காமல் படுத்திருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்து திட்டினார். “ கோயிலுக்குள் எப்படி வந்தாய்?” என்று கத்தினார்.ஒன்றும் புரியாத காட்டுவாசி, “சுவாமி நீங்கள் தானே எனக்கு சுவாமியை தரிசனம் செய்வித்து வைத்தீர்கள். நைவேத்தியம் செய்தீர்களே நினைவில்லையா?” என்றார் அப்பாவியாக.பட்டாச்சாரியார் அவசர அவசரமாக சன்னதிக்கு சென்றார். சன்னதி பூட்டப்பட்டிருந்தது. உள்ளே காட்டுவாசி சொன்னது போலவே நைவேத்தியம் செய்யப்பட்டிருந்தது. அவருக்கு ஆச்சரியம்.பகவானே நேரில் வந்து அந்த காட்டுவாசிக்கு அருளியிருக்க வேண்டும்’ என அவருக்குப் புரிந்து விட்டது. சன்னதிக்குள் நைவேத்தியம் செய்யப்பட்டதைத் தவிர மற்றதெல்லாம் முதல்நாள் எப்படி இருந்ததோ அப்படியே இருந்தது.பெருமாளின் கருணையை எண்ணி அவர் ஆனந்தம் அடைந்தார்.
இத்தனை காலமும் பூஜை செய்த தனக்கு காட்சி தராமல்,எவ்வித ஆச்சாரமும் இல்லாமல், பக்திக்கு முதலிடம் தந்து வந்த அந்த பாமரனுக்கு காட்சி தந்த பெருமாளின் கருணையை வியந்தார்.இப்போதும் இந்த நிகழ்ச்சி குறித்து, மட்டப்பள்ளி கோயிலில் சொற்பொழிவு,கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.ஆந்திராவில் உள்ள மட்டப்பள்ளியில் லட்சுமி நரசிம்மர் கோயில் இருக்கிறது. இந்த கோயில் இருக்கும் வனப் பகுதியில் காட்டுவாசி ஒருவர் வாழ்ந்து வந்தார்.அவருக்கு மட்டப்பள்ளி பகவான் மீது மிகுந்த பக்தி உண்டு. கோயில் இருக்கும் இடத்திலிருந்து நீண்ட தூரத்தில் அவரது வீடு இருந்தது.
மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
நரசிம்மனே தாய்; நரசிம்மனே தந்தை
சகோதரனும் நரசிம்மனே; தோழனும் நரசிம்மனே;
அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனே;
எஜமானும் நரசிம்மனே; எல்லாமும் நரசிம்மனே;

கருத்துகள் இல்லை: