செவ்வாய், 14 ஜூலை, 2015

பூண்டி ஆற்று ஸ்வாமிகள்
ஒரு நாட்டை ஆளும் மன்னர் தன் பணி நிமித்தம் எல்லா இடங்களுக்கும் சென்று நிறை குறைகளைக் கண்டறிவது இயலாத ஒன்று.அது போன்ற சந்தர்ப்பங்களில் தன் அந்தஸ்துக்குச் சமமான பிரதிநிதிகளை(மந்திரிகளை)குறிப்பிட்ட இடத்துக்கு அனுப்பி தகவல்களை அறிந்து வரச் சொல்வார்.இது அரசாட்சிக்கு மட்டுமில்ல...ஆன்மிகத்துக்கும் பொருந்தும்.இங்கே மன்னன் என்பவன் மகேசனுக்கு சமம் மந்திரி என்பவர் மகான்களுக்குச் சமம்.மேலே சொன்ன உதாரணத்தைப் போல் தன் ஒருவனால் மட்டும் குடிமக்களைப் பாதுகாக்க முடியாது என்று கருதியோ என்னவோ மகான்களைத் திக்கெங்கும் அவதரிக்க வைத்தான் ஆண்டவன்.இறைவனிடம் மக்கள் வேண்டும் வரங்களை தங்களின் தவ பலத்தால் வழங்கினார்கள் மகான்கள்.அவர்களது பிணிகளைத் தீர்த்தார்கள்.இவரிடம் போ...உனது பிரச்சனை தீரும் என்று பகாவனே சில மகான்களை அடையாளம் காட்டி அனுப்பி வைத்த நிகழ்வுகளையும் நம் புராண வரலாற்றில் படித்து இன்புறலாம்.இந்திரியங்களை அடக்கி ஆண்ட மகான்கள் இந்தியாவில்தான் பெருமளவில் பிறப்பெடுத்தார்கள்.உலகளாவிய ஆன்மிகத்தில் இந்தியாவுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம்.இந்த மண்ணில் நிகழ்ந்த இதிகாசங்களும் புராணங்களுதான் ஆன்மிகத்தின் தேவையையும் அவசியத்தையும் அனைவருக்கும் அடிகோடிட்டுக் காட்டின.உதாரணத்துக்கு ராமாயணத்தையும் மகாபாரத்தையும் சொல்லலாம்.
ஆன்மிகம் என்பது தினமும் கோயிலுக்குப் போய் தொழும் கடவுள் வழிபாடு மட்டுமல்ல..கருணை தொண்டு பரோபகாரம் போன்ற நற்சிந்தனைகளை நம் சிந்தையில் கொள்ள வேண்டும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.அதுவே சிறந்த ஆன்மிகம்.இப்படிப்பட்ட நற்குணங்களுடன் வாழ்ந்து முக்தி அடைந்தவர்கள்தான் மகான்கள்.இறப்பு என்பது இவர்களது தேகத்துக்குத்தானே தவிர ஆன்மாவுக்கு அல்ல.இன்றும் பல அதிஷ்டானங்களில் இவர்கள் சூடசுமமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.உள்ளன்போடு தன்னைத் தேடி வரும் பக்தர்களை ஆசிர்வதித்து அருள்கிறார்கள் அவர்களுடன் பேசுகிறார்கள்.மகான்களில் பலர் கருவில் இருந்து உருக் கொண்டதாகத் தெரியவில்லை.அப்படி என்றால் எவ்விதம் இந்த பூமிக்கு வந்தார்கள் இவர்களுக்கு ஜனன ஜாதகம் கிடையாதா?ஆன்ம பலத்தை இவர்கள் அடைந்த ரகசியம் புரியாதா?இப்படிப் பல கேள்விகள் விடை தெரியாத புதிர்தான்!ஷீரடி பாபா திடீரென ஒரு நாள் ஷீர்டி கிராமத்தில் வேப்பமரத்தடியில் தோன்றியதாக அவரது திவ்ய சரித்திரம் சொல்கிறது.பூண்டி ஆற்று ஸ்வாமிகளும் அப்படித்தான்!
மிக சமீப காலத்தில் ஸித்தி ஆன சித்த புருஷர் பூண்டி ஸ்வாமிகள்.1978-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் நாள் வளர்பிறை திரயோதசி கூடிய அனுஷ நடசத்திரத்தன்று காலை சுமார் 9.40 மணிக்கு கலசப்பாக்கத்துக்கு அருகில் உள்ள பூண்டி கிராமத்தில் முக்தி ஆனார் இவர்.மூன்று நாட்கள் பக்தர்களின் அஞ்சலி தரிசனத்துக்குப் பின் இவரது உடல் ஆகம விதிப்படி பதும ஆசனத்துடன் சமாதி கண்டது. ஸ்வாமிகளின் உடலை சமாதிக்குள் இறக்கிய பின் அவரது தேகத்தைச் சுற்றி மூட்டை மூட்டையாக விபூதி,தங்கம்,வெள்ளி,நவரத்தினங்கள் மற்றும் நறுமணப் பொருட்களை இட்டு நிரப்பினார்கள் அவரது பக்தகோடிகள்.நடமாடும் தெய்வம் என்று நாமெல்லாம் போற்றி வணங்கும் காஞ்சி மகா பெரியவரால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டவர் இந்த பூண்டி ஸ்வாமிகள்.
பூண்டி ஆற்று ஸ்வாமிகள் என்பது பிற்பாடு வந்த பெயர்.அதற்கு முன் வரை இவர் அழுக்குச் சாமி என்றும் மூட்டைச் சாமி என்றும் பக்தர்களால் அழைக்கப்பட்டு வந்திருக்கிறார்.அதற்குக் காரணமும் உண்டு.முதன் முதலாக ஸ்வாமிகள் கலசப்பாக்கத்துக்கு(திருவண்ணாமலை-வேலூர் சாலையில் வரும் ஊர்)வந்தபோது ஓர் அழுக்கு மூட்டையுடன் காணப்பட்டாராம்.தவிர உடலில் ஒன்றன் மேல் ஒன்றாக பல விதமான அழுக்குச் சட்டைகளை அணிந்திருந்தாராம்.அதிலிருந்து இவரை இந்தப் பெயர்களிலேயே அழைக்க ஆரம்பித்தார்கள்.ஆற்று ஸ்வாமிகள் என்று இவரை பக்தர்கள் அழைக்க ஆரம்பித்ததற்கு ஒரு தனிக் கதை உண்டு.அது 1943-ஆம் வருடம்...கலசப்பாக்கம் ஆற்றில் அப்போது தண்ணீர் இல்லை.எனவே சுட்டெரிக்கும் ஆற்று மணலில் அமர்ந்து தவம் புரிய ஆரம்பித்தார் ஸ்வாமிகள்.சூரியனின் வெம்மையான கிரணங்கள் ஸ்வாமிகளைப் பாதிக்கக் கூடாது என்று விரும்பிய உள்ளூர்க்காரர்கள் சிலர் இவர் அமர்ந்திருந்த இடத்துக்கு மேலே நிழல் விழும் வண்ணம் ஒரு கூரையை அமைத்தனர்.இவர் அமர்ந்த நேரமோ என்னவோ...கலசப்பாக்கம் பகுதியில் திடீரென பேய் மழை பிடித்துக் கொண்டது.எங்கெங்கோ கொட்டிய நீரெல்லாம் வடிகால் தேடி கடைசியில் இந்த ஆற்றில் கலந்தது.விளைவு ஆற்றின் இரு கரையெங்கும் தொட்டுக் கொண்டு பிரவாகம் எடுத்து ஓடியது வெள்ளம்.ஸ்வாமிகளுக்குப் போட்டிருந்த கூரை வெள்ளத் தோடு அடித்துக் கொண்டு போய் விட்டது.மழை ஓரளவு விட்ட பிறகு உள்ளூர்க்காரர்கள் சிலர் ஓடி வந்து ஸ்வாமிகள் அமர்ந்திருந்த இடத்தை ஆராய்ந்தனர்.அங்கே கூரையும் தெரியவில்லை ஸ்வாமிகளையும் காணவில்லை.பதைபதைத்துப் போனார்கள்.ஸ்வாமிகள் ஜல சமாதி ஆகி விட்டதாகத் தீர்மானித்து விட்டார்கள்.
மூன்று நான்கு நாட்கள் ஓடின. கலசப்பாக்கம் ஆற்றில் திரண்ட வெள்ளம் மெள்ள வடியத் தொடங்கியது. அப்போது ஆற்றங்கரைக்கு வந்த விவசாயி ஒருவர்.ஸ்வாமிகள் அமர்ந்து தவம் செய்த இடத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.அங்கே-ஸ்வாமிகளுக்கு நிழல் தருவதற்காகப் போடப்பட்டிருந்த கூரையின் ஒரு பகுதி மணலில் குத்திட்டு நின்றிருந்தது.அட ஸ்வாமிகளுக்கு மேலே இருந்த கூரை ஆயிற்றே இது?என்று சந்தேகப்பட்டு அங்கே பள்ளம் பறித்தார்.என்னே ஆச்சரியம்...ஆற்றின் உள்ளே சில அடி ஆழத்தில் ஸ்வாமிகள் எந்த நிலையில் அமர்ந்து நிஷ்டையைத் தொடங்கினாரோ.அதே நிலையில் அப்படியே காணப்பட்டார்.பரம சந்தோஷம் அடைந்த அந்த விவசாயி ஊருக்குள் ஓடிப் போய் விஷயத்தைச் சொல்லி அனைவரையும் கூட்டி வந்தார்.பிறகு ஸ்வாமிகளை அவரது நிஷ்டை கலையாமல் மெள்ள வெளியே தூக்கி வந்து கரையில் அமர்த்தினார்கள் ஊர்க்காரர்கள்.வெள்ளத்தோடு போய் விட்டார் என்று கருதப் பட்டவர்.அப்படியே உருக்குலை யாமல் மீண்டு வந்திருக்கிறார் என்றால் இவர் சாதராணப் பிறவி அல்ல என்று தீர்மானித்து அவருக்கு அபிஷேக ஆராதனை செய்தனர்.
கலசப்பாக்கத்துக்கு ஸ்வாமிகள் வந்த ஆரம்ப நாட்களில் ஊர் எல்லையில் இருக்கும் அடர்ந்த புதருக்குள் சென்று அமர்ந்து அங்கே நிஷ்டையில் கூடி விடுவது வழக்கம். இவர் இருக்கும் இடத்தை எவராலும் கண்டுபிடிக்க முடியாது; அவரது தவத்துக்கும் தொந்தரவு இருக்காது.கலசப்பாக்கத்துக்கு ஸ்வாமிகள் வந்த சில நாட்களுக்குப் பின் ஒரு நாள் கிராமவாசிகள் இருவர் இவரிடம் வந்தனர்.இருவருமே நண்பர்கள்.ஏதோ ஒரு பிரச்சனையைச் சொல்லி அதற்குத் தீர்வு கேட்டனர்ஸ்வாமிகளிடம்.வந்தவர்களில் ஒருவனை உன்னிப்பாகக் கவனித்த ஸ்வாமிகள்.நீ மண்ணில் போகப் போகிறாயப்பா என்றார்.ஆனால் அந்த இருவருக்கும் இதன் பொருள் அப்போது விளங்கவில்லை, அங்கிருந்து கிளம்பிப் போனார்கள்.மறுநாள் காலை அந்த இருவரின் ஒருவன் இறந்து விட்டான். அவனைப் பார்த்துதான் ஸ்வாமிகள் மண்ணில் போகப் போகிறாய் என்று முதல் நாள் குறிப்பால் சொல்லி இருக்கிறார்.இதன் விளக்கம் பிறகுதான் இன்னொருவருக்குப் புரிந்தது.இப்படி ஸ்வாமிகளின் சித்து விளையாட்டுகள் ஏராளம் நிகழ்ந்துள்ளன.பூண்டி ஆற்று ஸ்வாமிகளின் சமாதித் திருக்கோயில் அமைந்திருக்கும் இடம் அருகே முன் காலத்தில் ஒரு ஒட்டுத் திண்ணை வீடு இருக்கும்.இந்தத் திண்ணைதான் ஸ்வாமிகளின் குடியிருப்பு.1960-ஆம் ஆண்டு முதல் அவர் சமாதி ஆன1978-ஆம் ஆண்டு வரை சுமார் 19 வருடங்கள் இந்தத் திண்ணையை விட்டு நகராமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தார் ஸ்வாமிகள்.இவர் மல ஜலம் கழித்தோ குளித்தோ எவரும் பார்த்ததில்லை.இதே இடத்தில் அமர்ந்த வண்ணம்தான் தன்னைத் தேடி வந்த பலரது பிரச்சனைகளையும் தீர்த்தாராம்.
அந்தக் காலத்தில் இந்த வீட்டுக்கு எதிரே இருக்கும் டீக்கடைக்காரர் தினமும் காலை வேளையில் டீ கொண்டு வந்து கொடுப்பார்.பெரும்பாலும் எதையும் வாங்கிச் சாப்பிடும் வழக்கம் ஸ்வாமிகளுக்கு இல்லை.எனவே அந்த டீக்கடைக்காரரே தான் கொண்டு வந்த டீயை ஸ்வாமிகளின் வாய்க்கு அருகே வைத்து சாப்பிட வைப்பாராம்.இதுபோல் பக்தர்கள் கொண்டு வரும் உணவுப் பண்டங்களை தான் விரும்பினால் மட்டுமே உண்பாராம்.வாழைப்பழம் போன்றவற்றை பக்தர்கள் தோலை உரித்துக் கொடுத்தால் ஒரு வாய் சாப்பிட்டு விட்டு அப்படியே அதை ஒரு மூலையில் தூக்கி எறிந்து விடுவாராம். இப்படித் தூக்கி எறியப்பட்ட பழக் குவியல்களும் உணவுப் பொருட்களும் ஒரு இடத்தில் குவிந்திருக்கும். ஆனால் அதில் இருந்து எந்த விதமான ஒரு தூர்நாற்றம் வராது.மாறாக சுவையான ஒரு மணம் வீசிக் கொண்டிருக்கும்.பக்தர்கள் சிலர் ஸ்வாமிகளின் வாயில் சிகரெட்டை வைத்து தீக்குச்சியால் பற்ற வைப்பார்கள்.அதை ஒரு இழுப்பு இழுத்து விட்டு தூக்கி எறிந்து விடுவார்.அவரது வாயில் இருந்து புகை வெளியே வராது.இத்தகைய பக்தர்களுக்கு வேறு ஒரு சிகரெட்டையோ பீடியையோ தருவார்.அதை ஸ்வாமிகளின் பிரசாதமாகக் கருதி எடுத்துச் செல்வார்கள்.
ஸ்வாமிகளின் மகிமைகளைப் பற்றி அறிந்த ஒரு பெண்மணி சென்னையில் இருந்து புறப்பட்டு கலசப்பாக்கம் வந்தார்.வருகின்ற வழியில் சில திருடர்கள் இந்தப் பெண்மணியை வழி மறித்து மிரட்டி அவர் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்களை எல்லாம் களவாடிச் சென்று விட்டனர். ஏதடா...ஸ்வாமிகளைப் பார்க்க வந்திருக்கும் இடத்தில் இப்படி ஆகிப்போச்சே?என்று அந்த பெண்மணி அழாத குறைதான்.என்றாலும் ஸ்வாமிகளைத் தேடி ஊருக்குள் வந்திருக்கிறார்.அப்போது ஸ்வாமிகள் ஆற்றங்கரையில் இருந்தார்.களவு போன நகைகளை வேண்டி ஸ்வாமிகளின் திருப்பாதங்களில் விழுந்து புலம்பினார்.அதுவரை மவுனமாக இருந்த மகான் விடு...அழுது புலம்பாதே...கலசப்பாக்கத்தில் ஒருவன் இருக்கிறான்.அவனிடம் போய் நான் கேட்டதாகச் சொல்லி ஒரு இரும்புக் கம்பி வாங்கிக் கொண்டு வா...என்று அந்த ஆசாமியின் பெயர் சொல்லி அனுப்பினார்.
தங்க நகைகள் களவு போனதற்கும் இரும்புக் கம்பி வாங்கிக் கொண்டு வருவதற்கும் என்ன தொடர்பு என்கிற சிந்தனையுடனேயே.ஸ்வாமிகள் சொன்ன ஆசாமியிடம் போய் விஷயத்தைச் சொன்னார். அவரும் ஒரு கம்பியை கொடுத்து அனுப்பினார்.அதை பவ்யமாக எடுத்து வந்து ஆற்றில் உலவிக் கொண்டிருந்த ஸ்வாமிகளிடம் கொடுத்தார் பெண்மணி.அந்தக் கம்பியைத் தன் கையில் வாங்கி மேலும் கீழும் பார்த்து விட்டு அடுத்த விநாடியே பெண்மணிடம் கொடுத்தார் மகான்.அதைக் கையில் வாங்கிய பெண்மணியின் விழிகளில் பிரகாசம்.தன் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை.போம்மா போ...இது இப்ப இரும்பு இல்லே.சொக்கத் தங்கம்.புலம்பாம பத்திரமா வீடு போய்ச் சேர் என்று அனுப்பி வைத்தார்.அதுபோல் கை வேறு கால் வேறாகப் பிரித்துக் காண்பிக்கும் ஹடயோகக் காட்சியில் ஒரு சுடுகாடு அருகே ஸ்வாமிகள் இருந்தபோது இதைப் பார்க்க நேர்ந்த கிராமவாசிகள் சிலர் திகைத்துப் போய் விட்டனர்.பிறகு சிறிது நேரத்தில் அவை அனைத்தும் ஒன்றானபோது வியந்திருக்கிறார்கள்.
திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் ஏராளமான குடில்கள் உண்டு.1963-ஆம் ஆண்டு வாக்கில் அங்கே தங்கி இருந்தார் திருமதி தலையார்கான்(பார்ஸி)சித்தர்கள் சமாதிகளைக் கண்டு தரிசிப்பதற்காக இந்தப் பெண்மணி இங்கு தங்கி இருந்தார்.அப்போது அவரது குடிலில் இருந்து விலை உயர்ந்த தங்கம் மற்றும் பிளாட்டினம் நகைகள் ஒரு நாள் திருடு போய் விட்டன.உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அந்த அம்மையார் தன் புகாரைத் தெரிவித்தார்.உயர்ந்த இடத்தில் செல்வாக்கு பெற்றவர் இந்தப் பெண்மணி என்பதால் ஏழு பிரிவுகளாக போலீஸ் படை சென்று திருவண்ணாமலையின் சுற்று வட்டாரக் கிராமங்களை முற்றுகையிட்டு திருட்டுக் கும்பலை சல்லடை போட்டுத் தேடியது.
இந்த ஏழு பிரிவில் அரக்கோணம் காவல் நிலையத்தில் சப இன்ஸ்பெக்டராக இருந்த சுந்தரவரதன் குழுவினரும் ஒரு பிரிவினர்.ஒரு ஹெட் கான்ஸ்டபிள் மற்றும் இரு கான்ஸ்டபிள் ஆகியோருடன் திருட்டுக் கும்பலைப் பிடிக்கப் புறப்பட்டார் சுந்தரவரதன்.அரக்கோணத்தில் இருந்து கிளம்பி போளூர் வந்ததும்.ஒரு கான்ஸ்டபிள் சுந்தரவதனிடம் சார்...பக்கத்திலேயே ஒரு சாமீ இருக்கார்.ரொம்ப ராசியானவர்.அவரைப் பார்த்துவிட்டுப் போனா குற்றவாளியை நாம் பிடிச்சுடலாம் என்றார்.அதன்படி இவர்கள் நால்வரும் போகிற வழியில் பூண்டி ஸ்வாமிகளைத் தரிசித்தனர்.மகானை ஏற்கெனவே அறிந்த கான்ஸ்டபிள்.அவரது வாயில் ஒரு சிகரெட்டை வைத்துப் பற்ற வைத்தார்.அதை வழக்கம்போல் ஒரு இழப்பு இழுத்து விட்டுத் தூர எறிந்தார்.பிறகு வேறு ஒரு சிகரெட்டைக் கொடுத்து போ போ...போற காரியம் நல்லா முடியும் என்றார்.பிறகு அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு திருவண்ணாமலை வந்தனர்.குற்றவாளியைப் பிடிக்க இவர்களுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்ட தானிப்பாடி என்கிற கிராமத்துக்கு வந்தனர்.அந்த ஊரில் கேடி கட்டய்யன் என்பவன் போலீஸ் பதிவேட்டில் இடம் பெற்ற திருடன்.ஆகவே அவனது வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தலாம் என்று அங்கே சென்றனர் போலீஸார்.இவர்கள் போனபோது மாலை ஐந்து மணி இருக்கும்.கட்டய்யனின் மனைவி மட்டும் அப்போது வீட்டில் இருந்தாள்.புருஷன் எங்கேம்மா?என்று சுந்தரவரதன் விசாரணையை ஆரம்பிக்க...அதற்கு அவர் வயல் வேலைக்குப் போயிருக்காரு.வர்றதுக்கு ராவாயிடும் என்று சொன்னாள்.அப்போது ஸ்வாமிகளிடம் சிகரெட் வாங்கிய கான்ஸ்டபிள்.தம் அடிப்பதற்காகத் தனியே ஒதுங்கி வீட்டின் கொல்லைப் பக்கம் ஒரு வைக்கோல்போர் அருகே வந்தார்.
வீட்டின் உள்ளே பல வகையிலும் சோதித்த குழுவினர்.சந்தேகப்படும்படியாக அங்கே எதுவும் இல்லை என்று முடிவெடுத்து வெளியே வந்தனர்.வந்தவர்கள் தங்களுடன் வந்த கான்ஸ்டபிளை மட்டும் காணாமல் தேடிக் கொண்டிருந்தார்கள்.அதே நேரம் சப்இன்ஸ்பெக்டர் தன்னைக் கவனித்து விடப் போகிறாரே என்கிற பயத்தில் சிகரெட்டைப் பற்ற வைத்து ஒரு இழுப்பு இழுத்தார் கான்ஸ்டபிள். அப்போது அவர் திடுக்கிடும்படியான ஒரு சம்பவம் நடந்தது.அதாவது வைக்கோல்போர் திடீரென அசைய ஆரம்பித்தது.இந்த நேரம் பார்த்து சுந்தரவரதனும் அவரது குழுவினரும் இங்கே வந்து விட்டனர். இவர்களைப் பார்த்த மாத்திரத்தில் சிகரெட்டைப் பட்டென்று கிழே போட்டு அணைத்து விட்ட கான்ஸ்டபிள் சார்...இந்த வைக்கோல்போர் மெள்ள அசையுது சார் என்றார்.அவ்வளவுதான்.... சந்தேகப்பட்டவர்கள் பரபரவெனச் செயல்பட்டு வைக்கோல்போரைப் பிரிக்க முற்பட...உள்ளே கேடி கட்டய்யன் மறைந்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.பிறகென்ன...அவனைப் பிடித்து முறைப்படி விசாரிக்க...பார்ஸி பெண்மணியிடம் திருடியது தானே என்பதை ஒப்புக் கொண்டான் நகைகள் மீட்கப்பட்டன.
பாத்தீங்களா சார்...பூண்டி சாமீ கொடுத்த சிகரெட்டைப் பத்த வைக்கறதுக்காகத் தோட்டத்துப் பக்கம் மட்டும் நான் போகலேன்னா ஒரு திருடனை இந்நேரம் கோட்டை விட்டிருப்போம்.அதான் சாமியே ஆசிர்வாதம் பண்ணி இந்த சிகரெட்டை என்னிடம் கொடுத்திருக்கிறார் போலிருக்கு என்று சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிள் உற்சாகம் பொங்கச் சொல்லி இருக்கிறார்.அதே போல் திரும்பும்போது பூண்டிக்கு இந்தக் குழு மீண்டும் வந்தது.சிகரெட் கான்ஸ்டபிளைப் பார்த்த பூண்டி மகான் என்னப்பா...போன காரியம் நல்லபடியா முடிந்தா?என்று கேட்க... அந்த போலீஸ் படையே மகானின் கால்களில் விழுந்து ஆசி பெற்றது.ஸ்வாமிகளின் சமாதி திருக்கோயில் கருங்கல்லால் வடிக்கப்பட்டுள்ளது. பலிபீடம் நந்திதேவர் முன்புறம் இருக்க...கருவறையில் லிங்கத் திருமேனியுடன் அதிஷ்டானம் அமைந்துள்ளது.கருவறைக்கு வெளியே இரு பக்கமும் விநாயகர் மற்றும் முருகப் பெருமானின் திருவடிவங்கள் கருவறையில் முன்புறம் லிங்கத் திருமேனி பின்புறம் திருவாசியுடன் ஸ்வாமிகளின் திருவுருவம்.இடக்காலை மடித்து வைத்து வலக் காலைத் தொங்க விட்டபடி சின்முத்திரை காண்பித்து ஸ்வாமிகள் அருள் புரிந்து வருகிறார்.ஸ்வாமிகளின் உற்ஸவர் விக்கிரகமோ நம்மை எல்லாம் ஆசி புரியும் வண்ணம் அமைந்துள்ளதுஸ்வாமிகளுக்கு உடன் இருந்து பணிவிடை செய்த சுப்பிரமணிய சாமி என்பவர் இப்போதும் இங்கே வசித்து வருகிறார்.ஸ்வாமிகளின் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமான அவரது பக்தர்கள் இன்றைக்கு அவரது திருச்சந்நிதி தேடி வந்து தங்களது மனக் குறைகளைக் கொட்டி விட்டுச் செல்கிறார்கள்.அந்தக் குறைகளைத் தானே களைந்து அவர்களைக் காத்து வருகிறார் இந்த அற்புத மகான்!

கருத்துகள் இல்லை: