புதன், 28 ஆகஸ்ட், 2013

தஞ்சாவூர் ஜில்லா நாகப்பட்டினத்தருகில் உள்ள காரப்பிடாகை என்னும் கிராமத்தில் பிறந்தவர் பாலகிருஷ்ண ஐயர். அவர் திருவிடைமருதூர் மஹாதான தெருவில் ஒரு மளிகை கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். 1949 ஆம் வருஷம் முழுவதும் (அநேகமாக) காஞ்சி ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் திருவிடைமருதூரில் தங்கி இருந்தார்கள். அப்போது சிறு பையனாக இருந்த அவர் புதல்வர் ஸ்ரீ ரமணி, தீவிர ஆச்சாரிய பக்தராய் இருந்த தன் தந்தையுடன் ஸ்ரீ ஸ்வாமிகளை பல தினங்கள் தரிசித்து வந்தார்.

ஒரு நாள், ஸ்ரீ ஸ்வாமிகள் பாலகிருஷ்ண ஐயரிடம் 'கடைகளை ஞாயிற்று கிழமைகளில் வியாபாரிகள் மூடி விடுகிறார்களே? அன்று, அவசரமாக பொருள்களை வாங்க வேண்டியவர்கள் என்ன செய்வார்கள்? நீ உன் கடையை வியாழ கிழமைகளில் மூடி விட்டு, ஞாயிற்று கிழமைகளில் திறந்து வையேன்' என்று கூறினாராம். ஸ்ரீ பாலகிருஷ்ண ஐயர் அப்படியே செய்தார். பிறகு ஸ்ரீ பாலகிருஷ்ண ஐயர் அவர்களும் குடும்பத்தினரும் ஸ்ரீ ஸ்வாமிகளை தர்சித்து வந்தனம் செய்யும்போதெல்லாம் பெரியவாள் 'குருவாரம்' என்பார்.

ஸ்ரீ ரமணி பள்ளியில் படித்து, கல்லூரியில் பி.காம் பரிட்சையில் வெற்றி அடைந்த பின் டாட்டா நகரில் சில ஆண்டுகள் உத்தியோகம் இருந்து வந்தார். தமிழ் நாட்டில் வேலை கிடைத்தால் பெற்றோருடன் இருக்கலாம் என்ற எண்ணத்தில் ஒரு சமயம் மனக்கலக்கம் அடைந்த ரமணி 1969-70 இல் ஒரு நாள் காலையில் சின்ன காஞ்சிபுரத்தில் தங்கியிருந்த ஸ்ரீ மஹா ஸ்வாமிகளை தர்சித்து வந்தனம் செய்த போது காலை மணி சுமார் 7.30 இருக்கும். ஸ்ரீ பெரியவாள் ஜபம் செய்ய ஆரம்பிக்கும் சமயம், அணுக்க தொண்டர்கள் கூட அவர்களின் அருகில் செல்லக்கூடாது என்பது தெரியாது வந்தனம் செய்து எழுந்தபின் ஸ்ரீ பெரியவாள் அருகில் ரமணியை உட்காரும்படி சைகை செய்தார்கள். தர்சனத்திற்கு வந்திருந்த பக்தர்களை அருகில் செல்ல வேண்டாம் என எச்சரித்தனர். ரமணியும் மூன்று முறை எச்சரித்தனர். ரமணி எழுந்து செல்ல எத்தனித்த பொழுது (இவை யாவும் ஜபம் ஆரம்பிக்கும் சில நிமிடங்கள் முன் நிகழ்ந்தவை) பெரியவாள் அவரை எழுந்து செல்ல வேண்டாம் என்பது போல் சைகை செய்தார்கள்.

ரமணி ஒளிவீசும் அவர் திருமுகத்தை பார்த்தபடி இருந்தார். அவர் கண்களில் நீர்த்துளிகள் வழிந்து கொண்டு இருந்தன. ஒரு மணியானது. ஜபம் முடிந்தது. ரமணி மறுபடியும் வந்தனம் செய்து 'பெரியவா அனுகிரகம் எப்பவும் இருக்க வேணும்' என்று பிரார்த்தித்தார். அன்று அவர்கள் புன்முறுவலுடன் ஆசீர்வதித்ததாலும் பெற்ற தர்சனத்தின் பயனாலும் சிறிது காலத்துக்கு பின் சென்னையில் பாண்ட்ஸ் கம்பெனி நிறுவனத்தில் நல்ல உத்தியோகம் பெற்று பல ஆண்டுகள் பணியாற்றி வந்தார்.

பின்னர் ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் காஞ்சியிலோ, தமிழ் நாட்டின் மற்ற இடங்களிலோ முகாமிட்டு இருக்கும்போது ஆங்காங்கு சென்று ரமணி ஸ்ரீ ஸ்வாமிகளை தர்சித்து வருவார். 1984 ஆம் ஆண்டு முதல் 1994 வரை காஞ்சியில் மாதமிரு முறைகளேனும் ஸ்ரீ மஹா பெரியவாளை இவர் தர்சிக்க தவறியதே இல்லை. ஸ்ரீ ஆச்சார்யாளின் விருப்பப்படி ஏற்பட்ட கங்கை கொண்ட சோழ புரத்தில் ஸ்வாமிக்கு பிரதியாண்டு அன்னாபிஷேகம், ஸ்ரீ மடத்தில் வருடாவருடம் நடைபெறும் வியாச பூஜை, குரு ஸ்வாமிகளின் ஆராதனை சமயங்களில் தன்னால் ஆன கைங்கர்யங்களில் ஈடுபட்டுக்கொண்டு திரு. ரமணி அடிக்கடி காஞ்சிபுரம் அடைந்து ஸ்ரீ மஹா ஸ்வாமிகளின் பிருந்தாவன தர்சனமும், இரு ஆச்சார்ய ஸ்வாமிகளின் தர்சனமும் செய்து வருவார்.

கருத்துகள் இல்லை: